ஈழ தேசத்தின் –
கதறல்கள் காதை பிளக்கத் தான்
கையில் சோற்று தட்டேந்தி –
வாழுகிறோமோ;
எங்கும் வீசும் பிணவாடை மறந்து தான்
சேலை சுகவாடை –
நுகர்கிறோமோ;
பிள்ளை பல எரிந்து கருகிய
சாம்பலில் தான் நீயும் நானும்
பொழுது போக்கிற்காய் பேசி நடக்கிறோமோ;
ஐயோ இறைவா.. ஈழப் பிணக் காடு
கண்டால் – நீ கூட உன்னை கல்லென்றே
கல்லெறிவாயோ?
கத்தி கதறி நில்லாது வடிந்து
பூமியை நனைக்கும் கண்ணீரில் ஒரு சொட்டுக் கூடவா –
உதவ இயன்றவர்களின் இதயம் தொடவில்லை?
உள்ளமெல்லாம் உப்புக் கரித்துப் போன
அந்த அழு குரல்களை மறந்த உன்னை நானும்;
என்னை நீயும் மனிதரென்று எப்படி எண்ணிக் கொள்கிறோம்?
கணக்கும் இதயம் உடைத்து
எத்தனை எழுதி என்ன செய்ய
என் கைகளை முறித்துக் கொள்ளவா எனக் கோபம் வருகிறதே;
பிஞ்சு குழந்தையின் நைந்து போன உடலும்
தாய்மை அருந்த உடலும்
மானம் துறந்து வானம் பார்க்கும் உயிரற்ற மனிதரின் நிர்வாணமும்
மூப்பு கருகிய பிண மேடும் வேறெங்கு காண கிடைக்கும்?
வா மனிதமே நீ எவர் மனிதிலேனும் –
இன்னும் கொஞ்சம் மிச்சமிருப்பின்
எங்களை ஒருமுறை வந்து பார்க்க சொல் –
பார்த்து எங்களுக்கென்று ஒன்றும் செய்ய வேண்டாம் –
எஞ்சியவர்களையாவது காப்பாற்று!!
———————————————————
வித்யாசாகர்