சிறகில்லாத பறவையாய் நாட்கள்
உறவுகளின் தூர கால – இடைவெளியில்
சிக்கித் தான் போகின்றன;
கொட்டும் பனிச் சாரலாய் சிந்தும்
வியர்வை ரத்தத்தின் –
வாசம் நுகராத வீதிகளில்
உறவென்னும் ஒற்றை சொல்
சிறகு முளைத்துப் பறந்த வேகம்
மரணத்தில் முட்டும் போதே –
உயிர் வரை வலிக்கிறது; உறவு!
வருவதும் போவதும் தான்
அர்த்தமெனில் –
வாழ்வதற்கு நட்பொன்று போதும்;
வாழ்தலின் உச்சத்தில் –
ஏக்கங்களில்லாது எரிந்து போகவும்
எறிந்த சாம்பலில் உயிர்கொள்ளும் வேராகவும்
எட்டிய தூரம் பதிந்து வைக்கவும் –
நட்பும் நெருங்கி உறவென்றானதை மறுப்பதற்கில்லை;
வாழ்தலும் –
சாதலும் –
காலவேகத்தில் கடந்து விட்ட நிகழ்வுகளாய்
பதிந்து விட்ட போது கூட –
திரும்பிப் பார்க்க உயிரொன்று பூக்கிறது
நட்பின் மீது நீட்டி எழுந்து நின்ற உறவாய்!
‘அப்பா..’ என்றழைக்கையில்;
ஆம்! சிலிர்த்துத் தான் போனேன் –
உறவு உயிர்வரை போலும்!
——————————————–
வித்யாசாகர்