இருமுடி கட்ட புறப்படுகையில்
எதிர்வீட்டு விதவை அக்கா
எதிரே வந்தாள் –
தீட்டுப் படவே-யில்லை ;
தங்கை தலை ஊத்திக் கொண்டாளாம்
வெளியே சென்று வீடு வருகையில்
மறந்து வந்து –
அண்ணாயெனக் கட்டிக் கொண்டாள்
தீட்டுப் படவே-யில்லை ;
நண்பர் –
ரஃபியின் மனைவிக்கு
குழந்தை பிறந்ததாய் சொன்னார்கள்
தூர நின்று பார்த்து வரலாமென்று சென்றேன் –
‘உள்ளே வாங்கண்ணா;
என் குழந்தையை தூக்கி பாருங்கண்ணா’ என்றாள்
தூக்கி பார்த்து முத்தமிட்டேன்
தீட்டுப் படவே-யில்லை;
என் காலையே சுற்றிவந்த
நாய்குட்டி இறந்துவிட்டது
கொண்டு போய் எங்கள் வீட்டுத்
தென்னை மரத்தடியில் புதைத்துவிட்டேன்
தீட்டுப் படவே-யில்லை;
என் நிழல் போல்
என்னோடிருக்கும் மனைவியை
நாற்பது நாள் தொடவேயில்லை
நாற்பத்தோராவது நாள் –
இருமுடி கட்டி எழுந்து நிற்கையில்
காலில் விழுந்து கும்பிட்ட போது
ஒரு சொட்டுக் கண்ணீர் – பாதத்தில் விழுந்து
‘பார்த்து போயிட்டு வாங்க’ என்றது;
தீட்டுப் படவே-யில்லை;
தீட்டுகளை எல்லாம்
மிதித்து துவைத்து –
தூர எறிந்துவிட்டு ஐயனிடம் சென்று
பதினெட்டு படி மிதித்து கீழிறங்கி
வந்த போது புரிந்தது –
தீட்டு யாரிடத்திலுமில்லை –
பார்ப்பதில் மட்டுமே இருந்தது!
————————————–
வித்யாசாகர்