குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!
இரத்தம் சுடும் உறவிருந்தும்
ஒதுங்கி நின்ற தமிழகத்தில் –
யுத்தம் புகும் உணர்வூட்டியவன்!
தொப்புள் கொடி உறவறுத்து
ஈழத் தமிழ் இனத்திற்காய் –
தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்!
யார் குற்றமும் பகிராமல்
என் போன்ற இளைஞன் குற்றமென
நெற்றி பொட்டில் நெருப்பெய்தி அறிவித்தவன்!
தமிழர்கள் எங்கோ கொன்று குவிக்கப் படுவதை;
செய்தித் தாள், வார இதழ், வானொலி, தொலைகாட்சி,
இணையமெல்லாம் தலைப்பு செய்தியாகி
சூடு சொரணையோடு
எல்லோரையும் – திரும்பிப் பார்க்க வைத்தவன்!
குடும்பத்தின் பெயர்
தேசத்தின் விலாசம்
என் மக்களின் எல்லை –
ஈழம் வரையென எரிந்து கருகி கர்ஜித்தவன்!
தன் உயிர் சுட்ட
நெருப்பின் அனலில் அவன் முகம் பொசுக்கி
நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
படம் வரைந்துக் கொள்ள – உயிர் மை கொடுத்தவன்!
ஏது செய்தும்; என்ன செய்வோம்
ஈழம் விட்டெங்கோ சென்று –
இனி அவன் நினைவு நாளில்
மறவாமலொரு மாலை போட்டு – நினைவு கொள்வோம்!
———————————————————-
வித்யாசாகர்
//தன் உயிர் சுட்ட
நெருப்பின் அனலில் அவன் முகம் பொசுக்கி
நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
படம் வரைந்துக் கொள்ள – உயிர் மை கொடுத்தவன்!//
இனி… அவன் படத்தை பார்க்கும்போதெல்லாம் அவன் பற்றியெரிந்த வாசம் நினைவில் வரும்….
LikeLike
நினைவில் வரணும். அவனின்; உயிர் விட்டதற்கான அவசர அவசியம் இன்னும் நிறைய பேருக்கு புரியத் தான் வேண்டியுள்ளது. எல்லோருக்கும் புரிந்துவிடுமெனின், இனி உயிர்விட இருக்கும் முத்துக் குமாரர்களையும் உறவுகளையுமாவது காத்துவிடலாம்!
LikeLike