வன்னித் தீவின் தளபதியே
நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே
ஆணையிரவில் ஆணையிட்டு –
புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா???
எல்லி நகைத்தவரிடம்
சொல்லி அடித்த வீரமே
இருபத்தைந்து ஆண்டில்
புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா???
சிங்களனாயிரம் சங்கருத்து
முல்லைத் தீவுபிடித்து
புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு
பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா???
ஈழ கனவு சுமந்து
போராட்ட நெருப்பு குழைத்து
வீரமறவர் குருதிகளந்த மண் அணை கட்டி
கிளிநொச்சியை காத்த மாவீரா – கேட்கிறதா???
அர்ப்பணிப்பு, வீரம், உறுதிக்கு வலு கூட்ட
வடப்போர் முனையில் நின்று
பரிசளிப்பு விழா நடத்தி – வீரர்களின் நெஞ்சுக்கு
பேச்சுரம் பாய்ச்சிய கட்டளை தளபதியே – கேட்கிறதா???
அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபனே;
இதயம் முழுதும் ரத்தமின்றி
பெற்ற உற்ற உறவுகளின்றி
ஒற்றை மரமாகவேனும் நிற்போம்,
நினைவில் எமை மறந்தும் ஒழிப்போம் –
உனை மறவோம் கேள்;
ஈழமுள்ளவரை நீயிருப்பாய்
உன் நினைவற்று போகும் முன்
ஈழம் படைப்போம்!
வெள்ளையப் படைக்கு சிக்குண்டு மாய்ந்த
இந்திய மரணங்களை மறந்து
ஈழத்தில் – அடிமை சங்கிலி பூட்ட புகுந்த
அமைதிப் படையென்ன –
ஆயிரம் படை வரட்டும்;
எப்படை வரினும் எம் படை வெல்லும் தினம்
உனக்கே உனக்கே உரித்த-தெம் சபதம் கேள்!!!
———————————————————————-
வித்யாசாகர்
குறிப்பு: கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட
தீபனின் இயற்பெயர்: வேலாயுதபிள்ளை பகீரதகுமார். இயக்கப்பெயர் சிவதீபன்.
இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.