ஒரு தெருக்கோடி முனையில்
நின்று –
திரும்பிப் பார்குமந்த
பார்வைக்காய்..,
இமைக்குள்
இருவரும் ஒளிந்து
ஒருவரை தேடுமந்த
இனிய விளையாட்டிற்காய்..,
இரவு பகல் கடந்து
சூரிய..சந்திரன் கடந்து
கடக்க இயலா –
ஒரு நிமிடக் காத்திருப்பிற்காய்..,
நினைவுகளில்
உலகம் விட்டெங்கோ சென்று
ஒருவருக்காக மட்டும் வாழுமந்த
அன்பின் தருணத்திற்காய்..,
பாதி தின்கையில்
மீதியை வைத்துவிட்டு எழுந்திருக்கும்
ஒரு பெரிய நெருக்கத்தின்
சின்ன பிரிவினொரு –
கனமான உணர்விற்காய்..,
குளிக்கையில் –
நடக்கையில் –
உறக்கத்தில் – விழிப்பில் –
திரும்பும் இடமெல்லாம் தெரியும்
ஒற்றை முகத்திற்காய்..,
ஒரே போர்வையில்
உறங்கி –
நான்கைந்து பேராய் எழ விடியும்
பொழுதிற்காய் –
காதல் காதல் காதலென
வளரும் போது கிடைக்காத காதலையெல்லாம்
வாழும் போது; வாழ்ந்தும் தீராத
வாழ்வை – சுகமாக சுவாசித்து,
ரசிக்க ரசிக்க ஆயுளேறி
இனிக்க இனிக்க இன்பமெய்தி
நற்செல்வங்கள் எல்லாம் பெற்று
நன்கு வாழ்ந்தவர் போற்ற
நாளை வாழ்பவர் போற்ற –
வருடங்களாய் காத்திருந்த காத்திருப்புகள் அத்தனையும்
நாளுக்குநாளும் மகிழ்ச்சி வெளிச்சமூட்டிட –
உறவுகளுக்குள் அன்பு பொங்கி வாழ்ந்திட
தம்பி ஆனந்திற்கும் சகோதரி உமாவிற்கும்
என் மனம் நிறைந்த திருமண நல்வாழ்த்துக்கள்!
—————————————————————————————
வித்யாசாகர்
நட்புடன் நானும், வாழ்த்தில் கலந்துகொள்கிறேன் வித்யாசாகர். உங்கள் வாழ்த்து அருமை.
LikeLike
மிக்க நன்றி உமா.., கவிதையே கவிதையை வாழ்த்துவது போல், உமாவே என் சகோதரி உமாவை வாழ்த்தியுள்ளது மகிழ்விற்குரியது. தவிர, உங்களின் கவிதைகள் மிக அற்புதம் உமா.., தொடர்ந்து எழுதுங்கள். தங்களின் கவிதைகள் பேசப் படும்.
தங்களின் வாழ்த்தை ஏற்று நன்றியை அறிவித்து உங்களுக்கும் வாழ்த்தை தெரிவிக்கிறேன்!
LikeLike