ஏதோ ஒரு கவிதையின்
கிறுக்கலில் –
கொட்டிவிட இயலாத
உணர்வின் மிகுதியில்
நனைகிறது மனசு.
காதல் கடந்து
வாழ்க்கை கடந்து
இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து
இறக்கப் போகும் அப்பாம்மா வரை
எண்ணி அழுகிற பலரில்
என்னையும் ஒருவராய்
வைத்துக் கொள்ளுங்கள். .
யார் யாரையோ தேடி
எங்கெங்கோ அலைந்து
என்னெனவோ செய்து –
எதிலுமே நிலைக்காத புத்தி
என் தவறா தெரியவில்லை.
மனதின் போக்கு நீளும்
அத்தம் வரை –
கண்ணீரே.. கண்ணீரே.. வென
கடக்கிறேன் பொழுதுகளை
எதற்கென்றே தெரியாமல்.
இன்னும் –
என்னென்னவோ வலிகள்
எப்படி சொல்வதென்றே தெரியாமல்
கனக்கிறது உள்ளே.
அத்தனையையும்
வெளியில் சொன்னால் –
உலகம் வெகு இயல்பாய்
அவனொரு ‘சைக்கோ’ என்று
சொல்லிவிட்டு –
தன்னை சரியென்று மெச்சிய கம்பீரத்தில்
மேலேறி சென்றுவிடும்.
மனிதர் மெத்தனமாய் இருப்பது
மொத்தமும் புரிந்தும் –
போகட்டும், எதற்கோ வீண்
சிந்தனை என்று அலட்டிக்
கொள்ளாமல் விடாதலில் –
தனிமை கொன்று வீழ்த்தியும்
யாருடமே பேசுவதில்லை நான்.
உண்மையில் –
எனக்கான கவலையென்ன?
உணவோ
உடையோ
சுகமோ துக்கமோ என்றால் –
பளீரென இல்லை என்று தலையாட்டலாம்.
பிறகென்ன; ஏனிந்த
பிதற்றல் என்கிறாயா…………?
என் கவலைகள் மொத்தமும்
நீ – எனில்
ஏற்ப்பியா என் சமூகமே???
—————————————————————-
வித்யாசாகர்