எம் சுவாச மூச்செலாம்
வெடிகுண்டு நெடியில்
விசமேறிப் போயிருந்தும் –
விடுதலைக்கென்றே உயிர்சுமந்துத் திரிகிறோம்:
தெருக்கள் நெடுகிலும் உலாவந்த
எம் சின்னஞ்சிறு குழந்தைகளெல்லாம்
வீழ்ந்த குண்டுகளில் சிதைந்துப் போனாலும்
தெருவின் கடைகோடி வீட்டின் –
ஒற்றை உயிருக்காய் விடுதலை கோரி நிற்கிறோம்;
பசுமை குன்றியிரா எம் தேச
நிலங்களிலெல்லாம் –
கன்னி வெடிகளே புதைந்திருந்தாலும்
எடுத்து வீசிவிட்டு மீண்டும் –
உயிர் நடவு செய்யக் காத்திருக்கிறோம்;
‘அழகிய தமிழ்’ விளைந்து செழித்த – ஈழம்
குண்டுகளை விழுங்கி –
வெடி சப்தத்தில் திணறி –
தமிழர் பலர் உயிரை குடித்து சிவந்து கிடப்பினும்
மீண்டும் தமிழரையே அங்கு விளைவிக்குமெனும்
நியதியை நம்புகிறோம்;
கண்ணிலிருந்து அகன்றிடாத
உறவுகளின் அழுகையும் கதறலும்
மெல்ல மெல்ல எமை கொன்று போட்டாலும்
ஓர் நாள் – பறக்கவிருக்கும் புலிக் கொடியின்
ஜாலம் பார்க்க –
விடுதலை விடுதலை எனும் கோசம் எழுப்பி
ஈழ தேசம் முழுதும் நிறைக்க –
வென்றதன் கண்ணீரில் வீழ்ந்தோரின்
தாகம் தணிக்க –
வாழ்வின் வருடங்கள் அத்தனையையும்
எமக்காய் அர்பணித்த எம் தலைவனின்
முகமலர்ச்சியை கண்டு –
வாழ்க தமிழ்; வெல்க ஈழம்; வளர்க எம் தேசமென
ஓங்கும் குரலொலியில் –
சொட்டிய ரத்தங்கலெல்லாம் மீண்டும்
தமிழாய் தமிழாய் பிறக்க –
உலகின் ஏதேனும் ஒரு மூலையில்
எங்கேனும் ஒரு குடிலில்
குடிலற்றுப் போயினும் –
இறந்த எம் வீரர்களின்
கல்லறை மீதாவது உறங்கி விழித்து
உயிர் பெற்றிருப்போம் வாருங்கள் உறவுகளே!
———————————————————————-
வித்யாசாகர்