திருநெல்வேலி அல்வாவும் பலகோடி பணமும்!!

ள்ளியில் கட்டுரை போட்டியிலோ ஓவியப் போட்டியிலோ கலந்துக் கொள்ளும் ஒரு மாணவனை அழைத்து ‘இந்தா நீ உலகத்தின் முதல் விருதினை பெற்றாய்’ என்று கையில் கொடுத்தால் அந்த மாணவனின் முகத்தில் எத்தனை வெளிச்சங்கள் சிரிப்பாய் பிரகாசிக்குமோ அப்படித் தான் பிரகாசித்தான் இனியன். தமிழினியன் அவன் முழு பெயரென்றாலும் இனியனென்றே நண்பர்கள் அழைத்துக் கொண்டு அவன் பின்னால் ஓடினார்கள்.

இனியனுக்கு வாழ்வின் அத்தனை வெற்றிகளும் உள்ளங் கையில் விழுந்து கிடப்பதாய் ஒரு சந்தோஷம், வானத்தையும் பூமியையும் மாறி மாறி பார்க்கிறான், எதை விலைக்கு வாங்குவது வானத்தையா பூமியையா என்று சிந்தித்திருப்பான் போலும். அப்படி ஒரு துணிவு, துடிப்பு, துள்ளல், அவனுக்குள் இன்று.

“வா.. வா… எல்லோரும் வாங்க.., இன்னைக்கு எல்லாருக்கும் விருந்து இருக்கு.., அதும் எங்க தெரியுமா ஐந்து நட்சத்திர விடுதியில விருந்து” சத்தம் போட்டு கத்தினான் இனியன்.

அப்படி என்ன தான் நிகழ்ந்து விட்டது இவனுக்கென்று திகைத்துபோய் பார்க்கிறார்கள் அவனுடைய நண்பர்களெல்லாம். இனியனொன்றும்  அத்தனை சாதாரணமானவன் அல்ல. வீண் பேச்சி பேசியோ வெட்டியாக அரட்டை அடித்தோ திரிபவனல்ல. இக்கால இளைஞர்களுக்கு முன்மாதிரி இளைஞன். சுருக்கமாக சொன்னால் திரைப்படங்களில் நடித்திடாத ‘வாழும் கதாநாயகன் என்று சொல்லலாம் இனியனை.

“இனியா.. இனியா.. சொல்லுடா.. என்னடா ஆச்சு அப்படி, (இ)தோ பார்.. இனியும் நீ சொல்லலைன்னா நாங்க எல்லாம் திரும்பிப் போய்டுவோம். அப்புறம் நீ தான் எங்களை தேடி தேடி வந்து சொல்லணும்”

“சொல்லக் கூடாதுன்னு இல்லடா, சொன்னா நம்புவீங்களா, நான் ஒரு பெரிய கோடீஸ்வரன் ஆகப்போறேன் ரவி, என்னால இனி எதையும் அப்படி சொடுக்கினா வாங்கிட முடியும்”

நண்பர்கள் திகைத்தார்கள். என்ன ஆச்சு இவனுக்கு. ஏதேனும் கனவு கினவு காண்பதாக நினைத்து பெனாத்துகிறானா அல்லது லாட்டரி கீட்டரி ஏதாவது… “ஹா..ங்………… எனக்கு தெரிஞ்சி போச்சு………..”

“இனியா எனக்கு தெரிஞ்சி போச்சு”

“என்ன தெரிஞ்சி போச்சு மலர்?”

“உனக்கு நம்மூரு பம்பர் லாட்டரி அடிச்சு போச்சி……..”

“அடப்போடா… அதலாம் எப்பவோ நிறுத்தியாச்சி தெரியாதா”

“அப்போ..,  இன்னைக்கு ஏப்ரல் பூல்…..”

“ச்ச ச்ச.. நான் சொல்வது சத்தியம், இன்னும் இரண்டே நாள்ல நான் தான் நம்ம ஊர்லையே ஏன் தமிழகத்துலையே இந்தியாவிலேயே பேசப்பட போற முதல் ஆளாக போறேன்”

“டேய்.. ரவி.. மலர்.. வாசு.. வாங்க போலாம். இவனுக்கு ஏதோ ஆயிடுச்சி..டா”

“நில்லு மணி, இங்க பார்.. ஐம்பது மில்லியன்.., ஐம்பது மில்லியன் டாலர்.., நம்மூரு பணம் எவ்வளவு தெரியுமா ‘இருநூற்றி இருபத்தொன்பது கோடியே, எழுபத்தொன்பது லட்சத்து, தொன்னூற்றியொன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து ஐம்பத்துநாலு ரூபா இருபத்தியிரண்டு பைசா..”

இனியன் நீட்டி சொல்லி மூச்சு விடுவதற்குள் வாய்பிளந்து ஓடி வந்தார்கள் நண்பர்களெல்லாம். படக்கென அந்த தாளை மடக்கி சட்டை பையில் போட்டுக் கொண்டான் இனியன்.

“நான் சொல்றதை கவனமா கேளுங்க. இது, என்னோட பணம் மட்டுமில்ல, உங்களோட பணமும் கூட”

“என்னடா இனியா, உனக்கு ஒன்னும் ஆயிடலியே என்னென்னவோ சொல்ற, ஏதேதோ காட்டுற எங்களால நம்பவே முடியலேயேடா”

“முதல்ல நானும் நம்பலடா ரவி, பொய்யின்னு தான் விட்டுட்டேன், பிறகு தான்…. ‘இங்க பார் என்னோட பேர்ல செக்கு, வங்கியில போட்டு எடுக்க சிபாரிசு கடிதம்ன்னு எல்லாம் அனுப்பினாங்க, அதனால தாண்டா நானே நம்பினேன்..”

“எங்கருந்து வந்திருக்கு, யார் அனுப்பினா, எதையுமே விவரமா சொல்ல மாட்டேன்றியேடா  இனியா, சரியா சொன்னா நாங்களும் அதை யார்கிட்டையாவது கேட்டு உறுதி படுத்துவோம்ல”

“அதலாம் விடு மணி.. ஒரு கனவு போல இருக்கு தெரியுமா. ஒரு புத்தகம் வாங்க, கல்லூரி கட்டணம் அடைக்கன்னு எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டிருப்போம் அதுக்கெல்லாம் ஒரு விடிவுடா இது. எப்படின்னெல்லாம் கேட்காதிங்க, உடனடியா எனக்கு பணம் வேணும் ‘ஒரு லட்சத்தி முப்பத்தி ஐந்தாயிரம் வேணும்’ யாராவது ஏற்பாடு பண்ணுவீங்களா”

“ஒரு லட்சத்தி முப்பத்தி ஐந்தாயிரமா?????” நண்பர்கள் வாய் பிளந்து நின்றார்கள். மணி, மலர், ரவி, அழகன், இனியன் எல்லோரும் கல்லூரி முடித்து வேலை தேடி அலைந்து ஏதும் சரியாக கிடைக்காததால் பகுதி நேர ஊழியர்களாக கிடைக்கும் இடங்களில் கிடைக்கும் வேலைகளை செய்துவரும் லட்சிய இளைஞர்கள்.

இவர்களில் இனியன் எப்போதுமே சமூகம் பற்றியும் தன் பெற்றோர் பற்றியும் சிந்தித்து எதையேனும் வாழ்வின் கடைசி நாளிற்குள் சாதித்தே ஆகவேண்டுமென லட்சிய கனவுகளோடு வாழ்பவன். அப்படிப்பட்ட இனியனின் சொல்வதை யாராலும் நிராகரிக்க முடியாமல் பணம் திரட்டுவதற்கான வழியை யோசிக்கிறார்கள்.

“இனியா நான் எப்படின்னா அப்பா கிட்ட பேசி தங்கச்சி கல்யாணத்துக்கு வைத்திருக்கிற பணத்துல ஒரு ஐம்பதாயிரத்தை வாங்கி தரேன் “

“நான் கூட எங்க வீட்ல பேசி ஒரு இருபதாயிரம் வாங்கிக் கொடுப்பெண்டா இனியா” மற்றொருவன் பதினைந்தும், மீதம் ஐம்பதாயிரத்தை மட்டும் இனியன் தயார்  படுத்திக் கொள்ளவேண்டுமென்றும் முடிவெடுத்தார்கள்.

“மச்சி இங்க பாருடா..உன் மேல நம்பிக்கை இல்லாமலெல்லாம் இல்லடா, நீ என்ன சொன்னாலும் செய்வோம். ஆனா என்ன பண்ண போற, எப்படி இதலாம் நடக்கும்னு சொல்வியா?” ரவி கேட்டான்.

இனியன் ஒரு நொடியும் தாமதிக்கவில்லை. தன் கைப்பையில் வைத்திருந்த கோப்புகளை எல்லாம் எடுத்துக் காட்டினான். எல்லோரும் கையெழுத்திட்டு அங்கீகரிக்கப் பட்ட காசோலை மற்றும் இதர படிவங்களையும் மின்னஞ்சல் மடல்களையும் எடுத்து அவர்கள் முன் போட்டு, ஏதோ இணைய லாட்டரியில் பணம் அடித்திருப்பதாகவும், அந்த தொகை மிகப் பெரிய தொகை என்பதால் பேங்காக் வங்கியில் வந்து எடுத்துக் கொள்ள சொல்லி பேங்காக் வங்கியிலிருந்து அழைத்து பேசியதாகவும், பேங்காக் போக இனியனுக்கு கடவுச்சீட்டு அதாவது பாஸ்போர்ட் இல்லாததால் அவர்களே ஒரு உலகவர்த்தக மையம் ஒன்றினை தொடர்புகொண்டு பணம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பதாகவும், தற்போது அந்த உலகவர்த்தக மையத்தின் மூலம் பரிந்துரைக்கப் பட்ட வக்கீல் ஒருவர் இவனை பலமுறை அழைத்து பேசி அநேகம் நாளைக்கே பணம் இவனுடைய இந்திய வங்கிக் கணக்கிற்கு மாறிவிடும் என்று சொன்னதாகவும், அதற்க்கு முன் இவ்வளவு முன்தொகை இடவேண்டுமென்றும் தவிர இதர செலவெல்லாம் சேர்த்து இரண்டு லட்சம் வரை கட்டவேண்டுமென்றும், அவன் முடிந்தவரை தயார் செய்து விட்டதாகவும் மீதம் இவ்வளவு பணம் தேவைபடுகிறதென்றும் சொல்லிமுடிக்க நண்பர்கள் எல்லோரும் அமைதியாக அவனையே பார்த்தார்கள்.

“ஏண்டா… யோசிக்கிறீங்க, எந்த பணமா இருந்தாலும் பரவாயில்லைடா, கொண்டுவாங்க, இன்னும் இரண்டே நாள், இரண்டே நாள்ல திருப்பிடலாம், இந்த பணம் மட்டும் கிடச்சுட்டா நாமேல்லோருமே கோடீஸ்வரன்களாயிடுவோம்..”

“இதப் பாரு மச்சி, உனக்கு உதவி செய்ய எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும்  கிடையாதுடா, ஆனா இரண்டு லட்சம்!!! யோசி, நன்றாக சிந்தித்து பார், வெறும் இரண்டு லட்சம் வாங்கிக் கொண்டு இவ்வளவு பெரிய தொகை தருவது சாத்தியமா?” ரவி கேட்க

“ஆமாண்டா இனியா, இணையத்துல இப்படி எல்லாம் நிறைய திருட்டுத்தனம் நடக்குதுடா, உண்மையான சான்றிதழ் மாதிரியே கல்லூரி சான்றிதழ் முதற் கொண்டு அச்சடிச்சி தராங்கடா.., எதுக்கும் வேற யாரையாவது நல்லா தெரிந்தவங்களை கேட்டுக்கடா” மலர் கெஞ்சினான்

“நீங்கல்லாம் எதிர்மறையாவே யோசிக்கிறீங்கடா, நான் அதுக்கெல்லாம் தயாரில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கு, வெள்ளைக்காரன் ஆங்கிலத்தில் பேசினான், ஜெனுன் பிரின்ட் சான்றிதழ் வந்திருக்கு, இன்னும் என்னடா வேணும், நம்பினா தாண்டா வாழ்க்கை.  எனக்கு இதுல நம்பிக்கை இருக்கு ரவி, முழு நம்பிக்கை இருக்கு. இது மட்டும் நடந்துட்டா, இதை வைத்து எத்தனை பேரோட கண்ணீரைத் துடைப்பேன் தெரியுமா? மொத்த ஏழ்மை இளைஞர்களையும் தத்தெடுத்துக்குவேண்டா, பெரிய பெரிய ஆளா ஆக்குவேன். நூறு இளைஞர்களை சுயமா அவுங்க கால்ல நின்னு உழைக்கிற அளவுக்கு உருவாக்கி அவர்கள் மூலமா ஆயிரம் ஆயிரம் பேருக்கு என்னால வேலை கொடுக்க முடியும்டா ரவி. எனக்கு ஒரு பெரிய கனவு இருக்குடா.. யாரும் எழ்மையா இருக்கக் கூடாது. சாப்பாடுக்காக பொய் சொல்லக் கூடாது. துணிக்காக பொருளுக்காக ஆசைப்பட்டு அடுத்தவன் பொருளை திருடக் கூடாது. என்னால அவனை மாதிரி இருக்க முடியலையேன்னு பொறாமை பட்டு வஞ்சம் வளர்த்து கொலைவரை ஒருவனை ஏழ்மை கொண்டுபோயி விட்டுடக் கூடாது. எரியுற ஏழ்மை நெருப்பு தணல் விட்டு வீட்டின் கூரைவரை எரியறதாலதான் ‘இன்னைக்கு யாரை பார்த்தாலும் கிடைக்கிறத சுருட்ட தயாராயிட்டாங்க. அதலாம் ஒழிக்கனும்னா, அவர்களுக்கு உழைப்பை கொடுக்கணும்டா, உழைத்து சுயமா சம்பாரித்துக்கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கனும். கட்டுக் கட்டா பணத்தை சுயமா சம்பாரித்து பார்த்துட்டா பிறகு பிறர் பொருள் மேல ஆசை வருமா? நம்மால் முடிந்த ஆயிரம்பேரை அப்படி உருவாக்குவோம், அந்த ஆயிரம் பேர் கிட்டயும் அவர்கள் மூலமா அதுபோல யாரேனும் ஒரு ஏழை மாணவனையாவது படிக்க வைக்க, பெரியாளாக்கி விட வாக்குறுதி வாங்கிக்குவோம், அதே கணக்குல ஒரு ஐம்பது; நூறு; வருடம் தாண்டிபாரு, அடுத்த தலைமுறைக்கு பசி இருக்குமா??  பஞ்சம் இருக்குமா?? அதுக்கு இந்த தொகை வேணும்டா.. வேணும் கண்டிப்பா வேணும்”

எல்லோர் வாயையும் தன் கனவுகளால் அடைத்தான் இனியன். நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது, அதை ஈடு செய்ய தக்க பாதையும் தேவை என்பதை மட்டும் சிந்திக்க அவகாசமின்றி போனது இனியனுக்கு. அவரவர் அவரவரால் இயன்றதை சேகரித்துக் கொடுத்தார்கள். இனியன் கடைசியாக தன் அம்மாவிடம் கெஞ்சி கேட்க, அவள் வார வட்டிவிடும் கந்துவட்டி கடையில் பேசி என் மகன் தொழில் துவங்கப் போகிறானென்று சொல்லி ஐம்பதாயிரம் வாங்கித் தருகிறாள்.

மொத்தப் பணமும் சேர்த்து இரண்டு லட்சத்தையும் அவர்கள் சொன்ன பேங்காக் வங்கிமுகவரிக்கு அனுப்பப் படுகிறது. இனியனுக்கு ஏக சந்தோஷம். எப்படியும் இரண்டு நாளில் பணம் கைக்கு வந்து விடும். எப்படியும் பத்திரிகைகளுக்கெல்லாம் தெரிந்து பேட்டியெல்லாம் எடுப்பார்கள். ஒரு பாதி தொகையை ‘பொதுசேவை மையங்களுக்கு தருவதாகவும் மீதி தொகையை வைத்து முழுக்க முழுக்க படித்து வேலை தேடும் இளைஞர்களை வைத்து தொழில் துவங்கப் போவதாகவும் பேட்டியில் சொல்லலாம்.

“மச்சான் பணம் வந்த உடனே ஒரு பெரிய கார் வாங்கி அதுல ஒரு சீட்டு முழுக்கக் பீரா வாங்கி அடுக்குறோம்டா.. ஒரு ஒரு வாரத்திற்கு சலிக்கிற வரையும் குடிக்கிறோம், ஆட்டம் போடுறோம், குடிக்கிறோம் ஆட்டம் போடுறோம்.. என்ன மச்சி சொல்ற..” அழகன் இனியனிடம் சொல்லி விட்டு திரும்பி ரவியை கேட்க..

“அதுலையே இருக்காதடா அழகா, உன் பணத்துல குடிச்சாலே எனக்கு பிடிக்காது, இதுல நான் வேற வாங்கித் தருவேனா.. ஆசை தான் உனக்கு. இந்த பணத்துல ஒரு காசு கூட நமக்கு சுயதேவைக்காக எடுக்க போறதில்ல”

“நீ எடுக்காத.., எங்களுக்குக் கொடு..அதலாம் நாங்க பார்த்துக்குறோம்”

“நீங்க வேற நான் வேறையா? அதில்லடா அழகா, நான் சொல்வது அப்படியில்லை, இந்த பணம் நாம் சம்பாரித்த பணமில்லைதானே. நமக்குக் கிடைக்கப் போற பணம்தானே, அதுல பிறருக்கு கொடுக்க உரிமை இருக்கே தவிர நமக்கு அனுபவிக்க எந்த உரிமையும் கிடையாது. வேணும்னா இதை வைத்து நாமும் சம்பாதிப்போம், நம்மலால பிறரையும் சம்பாதிக்க வைப்போம், அதுக்கப்புறம் உன் பணத்துல நீ ஆட்டம் போடு நானும் கூட சேர்ந்து போடுவேன்..”

கனவுகள் சுகமாயினும், கனவுகள் நல்லதாயினும், கனவுகள் கனவுகள் தானே. இனியன் மிக நல்ல கனவு கண்டான். பணம் அனுப்பியதிலிருந்து ஒவ்வொரு நொடியும் கனவுகளோடு வாழ்வினை வெல்லும் பொழுதிற்காய் காத்திருந்தான். என்னதான் நாமாக ஆயிரம் கற்பனை லட்சியமென கோட்டைகளை கட்டிக்கொண்டாலும் ‘எது நடக்க இருக்கிறதோ அதுவே நடத்தப் படுகிறது. அந்த நியதியின் படி ஏற்பட்ட தாமதம் இனியனுக்கு மெல்ல மெல்ல பயத்தை தந்தது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடி காத்திருப்பும் வலித்தது இனியனுக்கு. நடக்கும் என்பதை தவிர வேறொன்றுமே நினைக்க தயாராகயில்லை என்றாலும் ஒரு பயம் மனதை கவ்வியது.

வாழ்வில் பொதுவாக நாம் எல்லோருமே என்னதான் திடமான நம்பிக்கை வைத்திருந்தாலும் அது சரியான நம்பிக்கையாகவும் இருத்தல் வேண்டும். இதை இனியன் சிந்திக்க தவறி விட்டான். நாட்கள் ஒன்றாய் இரண்டாய் நகர ஆரம்பித்தது. பணம் பெற்ற இடத்திலிருந்து ஒரு தகவலும் வரவில்லை. ஒரு நாளைக்கு ஆயிரம் முறை அழைத்தவன் இப்போது ஒருமுறை கூட அழைக்கவில்லை. நண்பர்கள் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார்கள். அலசி ஆராய்ந்து ‘சில இணையதளம் தரும் வசதி மூலம் தமிழகத்திலிருந்து உலகத்திற்கு எங்கு வேண்டுமாயினும் குறைந்த கட்டணத்தில் அழைக்கவும், அங்ஙனம் அழைக்கையில் பக்கத்து வீட்டு நபருக்கு அழைத்தாலும் வெளிநாட்டு அழைப்பு போல தான் அலைபேசியில் காட்டும், அழைப்பவரின் தொடர்பு எண்ணினை காட்டாது என்பதையும் கண்டுகொண்டார்கள். தகவல் அறிந்து அம்மா பதறி போனாள். பயந்தாள். ஒரு லட்சம் தங்கையின் கல்யாண பணத்தை வாங்கித் தந்த நண்பனின் அப்பா வீடுவரை வந்து சத்தம் போட்டுவிட்டுப் போனார். காவலில் தெரியப் படுத்துங்களில்லையேல் நான் தெரிவிப்பேன் என்று எச்சரிக்கை செய்தார்.

இனியனுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. எத்தனையோ மின்னஞ்சல்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தும் பதிலில்லை. அவர்கள் அழைத்த தொடர்பு எண்ணில் அழைக்க முயன்றாலும் அத்தனை எண்களுமே தற்காலிகமாக அனைத்து வைக்கப் பட்டிருப்பதா தகவல் வந்தது.

கனவெல்லாம் கண்முன் வந்து தன்னை சுட்டு எரிந்தாலும் நம்பிக்கை கொண்டான் இனியன். இன்னும் சற்று அவகாசம் கொள்ளவேண்டும்போல் எண்ணினான். எப்படியும் பணம் வந்துவிடுமென்றே நம்பினான். நடக்காது என்பதை மட்டும் அவனால் நினைக்கவே முடியவில்லை. நடந்தேயாகவேண்டுமெனும் ஒரு தீவிர சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுப் போனான். அவன் நம்பிக்கை ஒருவிதத்தில் மட்டும் வீண்போகவில்லை. மூன்று நாள் நான்காகி, நான்கு ஐந்தாகி, ஐந்து ஒரு வாரமாக கடந்த பின், வாரம் இரண்டு மூன்றாக நகர்ந்த பின் ஒரு மின்னஞ்சல் வந்தது அவர்களிடமிருந்து.

தான் அனுப்பிய பணம் கிடைத்ததாகவும், மிக்க மகிழ்வென்றும், பணத்தை பேங்காக் வங்கியிலிருந்து அந்த உலகவர்த்தக மையம் எடுத்து விட்டதாகவும், இன்னும் ஒரே நாளில் மொத்த தொகையையும் இவன் கணக்கிற்கு மாற்றிவிடுவதாகவும், உடனடியாக அதை செய்வதற்கான சம்பளமாக ரூ பத்து லட்சம் அனுப்பிவைக்க வேண்டுமென்றும் அனுப்பாவிட்டால் அனுப்பிய பணத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை என்றும் அந்த மின்னசல் கூறிமுடிய, கணினியை எடுத்து உடைத்துப் போடவேண்டும் போல் இருந்தது இனியனுக்கு.

உடனடியாக அந்த மின்னஞ்சலோடு குறிப்பிடப் பட்டிருந்த தொலைபேசி எண்ணினை கையில் குறித்துக் கொண்டு ஓடினான். ஓடி ஒரு தொலைதொடர்பு கடைக்குள்  நுழைந்து, அவசரம் அவசரமாக அழைத்தான். எதிர்முனையில் யாரோ தொலைபேசியை எடுத்து ‘ஹலோ…. திருநெல்வேலி அல்வா கடையிலிருந்து பேசுறோம் யார்வேனும்’ என்றார்கள். பகீரென்றானது இனியனுக்கு.

“என்னங்க இது பேங்காக் இல்லையா?!!!”

“பேங்காக்கா?????? ஏம்ப்பா இது பேக்கரிப்பா, திருநெல்வேலி அல்வா விக்கிற பேக்கரி, தொடர்பு எண்ணை ஒழுங்க பாரு போனை வைய்யீ………”

இனியனின் கையிலிருந்த தொலைபேசி அனிச்சையாக தவறி கீழே விழுந்துவிட்டது!

———————————————————————————————————-
முற்றும்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to திருநெல்வேலி அல்வாவும் பலகோடி பணமும்!!

  1. Tamil சொல்கிறார்:

    Thank you very much for the story and it is really very useful for the people

    மிக்க நன்றி இக்கதைக்கு. மக்களுக்கு மிகவும் பயனுள்ள கதையிது!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி தமிழ். எதை எழுதவும் உள்ளிருந்து ஒரு சப்தமெழ வேண்டும். வலி வலிக்க வேண்டும். அல்லது ஆசையாவது துளிர்க்க வேண்டும். இது வலித்ததால் எழுதிய கதை.

      நண்பர்கள் சிலர் பொய்யாக வரும் ஸ்பாம் மின்னஞ்சளினால் பாதிக்கப் படுவதை கண்டேன். ஒருவர் தன் மிகுந்த கடினப் பாட்டின் போதும் அங்கிங்கு வாங்கி இருபைந்தாயிரம் வரை அனுப்பியும் இருக்கிறார். அவரின் நம்பிக்கையை நான் குலைக்க இயலாதவனாய் அவரின் விரயத்தில் பங்கானேன்.

      அதோடு, இளைஞர்கள் இப்படி லாட்டரி, பரிசு, இன்னபிற என்றெல்லாம் மோகம் கொள்ளாது உழைப்பினால் உயர்ந்து பிறரை உழைக்கவைக்கவும் வேண்டும். எல்லோரும் வாய்ப்பிற்காகவே காத்திருந்தால் யார்தான் வாய்ப்பேற்படுத்தித் தருவது?

      வாய்ப்பிற்கு காத்திருப்பதை காட்டிலும் இயன்றதை செய்ய முயற்சிக்கையில், அதற்குத் தக்க நம்பிக்கை கொள்வதில், உழைப்பதில் ‘அந்த உழைப்பும், நம்பிக்கையும் முயற்சியும்’ நம்மை வாய்ப்பேற்படுத்தும் சாதனையாளர்களின் பட்டியலில் கண்டிப்பாக சேர்க்கிறது!

      Like

  2. Manju Bashini சொல்கிறார்:

    இது கதையா??? இல்லப்பா… கண்டிப்பா இல்லை…. எல்லார் கண்ணையும் திறக்கவைக்கும் திறவுகோல் இந்த கதை….. இன்று நிறைய இடத்தில் இப்படி ஒரு சூது நடந்துக்கொண்டு தான் இருக்கிறது… பணம் சம்பாதிப்பது தவறில்லை… ஆனால் இப்படி ஒரு முகமூடி போட்டுக்கொண்டு ஏமாந்தவர் கிடைத்தால் சுருட்டும் வர்க்கத்தினர் இருக்கிறார்கள்….. இது தவறு என்று தெரிந்தும் செய்கிறார்கள்….. பணமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா?? இது வஞ்சகம் இல்லையா??? பாவம் இனியன்… ஆனால் அவனுக்கும் மூளை இல்லையா? அவன் நண்பர்கள் எல்லோருமே எத்தனை அறிவுரை சொன்னார்கள் இது பொய்யான தகவல் என்று சொல்லியும் இனியனின் கனவுக்கோட்டை இப்படி தகர்ந்தது வேதனைக்குரிய விஷயமாகிவிட்டது…. ஆனால் இதுவே நம் கண் திறக்கவைக்கும் பாடமாகிவிட்டது….

    வித்யா நீங்க இந்த கதை எழுத எடுத்துக்கொண்ட கரு என்னை வியக்கவைக்கிறது… மேம்போக்காக பார்த்தால் ரொம்ப சின்ன விஷயம்… நாளொன்றுக்கு ஆயிரத்துக்கு மேலே இலட்சத்துக்கு மேலே எத்தனையோ பேர் ஏமாற்றிக்கொண்டும் எத்தனையோ பேர் ஏமாறிக்கொண்டும் இருக்க தான் செய்கிறார்கள்… ஆனால் யாரோ ஒருவருக்கு மட்டும் இதை உடனே வெளிப்படுத்தி விழிப்புணர்வு தரனும் என்ற நோக்கம் ஏன் வரணும்?? அது தான் வித்யா நீங்க எடுத்துக்கிட்ட இந்த முயற்சி….

    கதைன்னு சொல்லி இப்படியும் ஜனங்க இருக்காங்கப்பா… உஷாரா இருங்க…. ஏமாற்றவும் செய்யாதீங்க… ஏமாறவும் கூடாது என்ற நல்ல எண்ணத்தோட நீங்கள் எழுதிய இந்த கதை மிகவும் அருமையானதாகவும் விழிப்புணர்வு தரும் வகையிலும் அமைந்தது சிறப்பு வித்யா…

    எங்களுக்கும் இதே போன்று இருமுறை ஏற்பட்டது…. ஆனால் சுதாரிச்சுக்கிட்டோம்… சும்மா வரும் பொருளுக்கு ஆசைப்படுவது முதல் தவறு… ஆசை என்ற அந்த தவறில் தான் இந்த ஏமாற்றம் தொடங்குவதும்….. ஆசை மனதில் தோன்றிவிட்டால் ஏமாற்றவும் தயங்காத மக்கள் இருக்கும் வரையில் ஏமாற ஜனங்க லைன்ல நிற்பதை மிக அருமையாய் விவரிக்கிறது வரிகள்….

    இனியன் நல்லவன்… தான் பெறும் பணத்தை தன் உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளாமல் உதவவேண்டும் எல்லோரும் முன்னேற நாம் வழிக்காட்டியாய் இருக்கவேண்டும் என்ற அவன் எண்ணத்தில் தவறில்லை…

    கடைத்தேங்காய் எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தமாதிரி என்று கூட சொல்லமுடியாது… ஏனெனில் நல்ல மனதோடு இந்த பணம் பெற நினைத்தான் இனியன்…. ஆனால் நஷ்டமானதோ இரண்டு லட்சம் 😦

    மக்களே ஏமாற்றாதீர்கள்….. மக்களே ஏமாறாதீர்கள் என்று உரக்கச்சொல்கிறது ஒவ்வொரு வரியும் வித்யா…. ஹாட்ஸ் ஆஃப் வித்யா அருமையான படைப்புக்கு….

    தொடருங்கள் இதோ போல் அருமையான படைப்புகளை….

    அன்பு பாராட்டுக்கள்பா….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மஞ்சு முயற்சித்தால் பெரிய நாவலே எழுதலாம் போல். அத்தனை திறன், உள்வாங்கும் தன்மை, சமுக அக்கறை என அத்தனையையும் சுண்டுவிரலில் வைத்திருக்கிறீர்கள்.

      ஒரு நம்பிக்கையை வீழ்த்த, அதாவது இனியனை தோர்க்கடிக்க எனக்கும் மனமில்லை தான். ஆனால் கதாநாயகர்கள் வென்றுகொண்டே தான் இருக்கவேண்டுமென்னும் கருத்து நகர்வை நாம் களைவோம். நல்லவனும் ஒரு கட்டத்தில் தோற்கிறான். அந்த தோல்வி அவனுக்கு பாடமாகிறது. அந்த பாடத்தோடு பிறகு அவன் நிச்சயம் வெல்வான் என்பது இயற்கையின் நியதி.

      நாம் அவன் தோற்ற அந்த இடத்தை மட்டும் நம் பாடத்திற்காய் கதையாக்கிக் கொண்டோம் மஞ்சு. மிக்க நன்றி தங்களின் அக்கறை மிக்க மறுமொழிக்கு!

      Like

  3. saralafromkovai சொல்கிறார்:

    படித்தவர்களே சிலநேரம் இப்படி ஏமாந்து போகிறார்கள் .எல்லாவற்றிற்கும் அதீத ஆசைதான் காரணம். ஆசை தான் கண்ணை மறைத்துவிடுகிறது. ஆழ்ந்து யோசிக்க விடுவதில்லை. கானல் நீரை கூட கடல் அலையென எண்ணி ஏமாற செய்கிறது. அழகாக சொல்லியிருகிறீர்கள் வித்யா.

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை நிருபிதீர்கள்.

    சமூகத்தை விழிக்க செய்பவனே நல்ல படைப்பாளி. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்துகொண்டுதான் இருப்பான். அதனால் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருங்கள் என்று சமூகத்தை எச்சரிக்கும் உங்கள் வரிகள் அருமை !

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      இதை முதலில் எழுதவேண்டாமென விட்டுக்கூட விட்டேன் சரளா. ஆனால், சிலர் என்னிடமே கூட வந்து இப்படியெல்லாம் மின்னஞ்சல் வருகிறதென்று கருத்துக் கேட்டார்கள். சிலர் நம்பி விடுகிறார்கள். எனக்கு தெரிந்த நல்ல விழிப்புள்ள சிலரே நம்பி பணம் அனுப்பி ஏமாறுவதை கண்டதும் தான் ‘இணைய தொடர்பு பெருகிவிட்ட இக்காலத்தில்’ இந்த ஒரு கருவைத்து இப்படி கதை செய்தால் தேவையானவரை கண்டிப்பாக சேருமென்றே எழுத முனைந்தேன். உங்களின் இந்த மறுமொழியும் அதற்கு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மிக்க நன்றி சரளா!

      Like

  4. C.Rajarajacholan சொல்கிறார்:

    வணக்கம் அண்ணா.., அனைவருக்குமே மிக மிக.. பயனுள்ள கதை. வாழ்த்துக்கள்.. அண்ணா..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வணக்கம் பா, இளைய சமுதாயம் துடித்து எழவே, கம்பீரமாக செயலுரவே இந்த எழுத்துப் பயணம் என்பதை அறிந்தவன் நீ. உனைப்போல் இளைஞர்களுக்கு இக்கதை பயனளிக்குமெனில் எழுதுவதில் மகிழ்வு கொள்வோம்.

      உழைத்து சம்பாரிக்கும் ஒரு காசும், வயிற்றிற்கு உணவை மட்டுமல்ல, மனதிற்கு உழைத்த நிம்மதியையும் தரும். வீணாக வந்த பணம் வீனாகவே போகும், அல்லது நம்மையும் சேர்த்து வீண் ஆக்கும்!

      Like

  5. வித்யாசாகர் சொல்கிறார்:

    உண்மையாக நடந்த சம்பவத்தின் செய்தி தினகரனில் வந்துள்ளது. இக்கதையில் வருவது போல் மோசடி செயப்பட்ட தகவல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    http://www.dinakaran.com/crimedetail.aspx?id=29694&id1=11

    கதைக்கு வலு சேர்க்க அல்ல; நிகழ்ந்த உண்மை சம்பவத்தின் உதாரணம் கண்டாவது மக்கள் சிலர் இப்படி ஏமாறுவதை தடுக்கலாமோ எனும் வேதனையில் பதிகிறேன்.

    நன்றி தினகரன்..

    Like

  6. Shan Nalliah சொல்கிறார்:

    Great service to Tamil World!

    Liked by 1 person

C.Rajarajacholan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s