எவனெவனோ கேட்டானாம்
லஞ்சம்
கொடுத்தது நீயும் நானும் செய்த
வஞ்சம்,
ஊரெல்லாம் நடக்கிறது
கொள்ளை
வீட்டில் சேர்த்த சுயநலத்தின்
தொல்லை,
காலமெல்லாம் பரிதவிக்கிறான்
மனிதன்
மனிதம் மறக்கப் பட்ட
இரும்பன்,
உலகெல்லாம்
கொட்டிக் கிடக்கிறது வாழ்க்கை
எதற்கெல்லாமோ அஞ்சித் தவிக்கிறது
மனசு,
செய்யாத கொடுமைக்கு
இல்லை தண்டனை
செய்த தவறிலிருந்து
இல்லை தப்பித்தலும்,
உடம்பெல்லாம்
ஆசையும் சுயநலமும் பூசி
கடவுளை
குற்றம் சொல்லும் முன் யோசி,
ஊரெல்லாம் பெருக்காத குப்பை
உனக்குள்ளும் உண்டென்றால் கோபம் வரும்
உனக்கான வாழ்தலில் உன்னை
தேடாத உன்னாலா சாதனை வரும்?
கடவுள்
உண்டென்றும் பொய்யென்றும்
வேஷம்;
காசுக்கும்,
தனித்துக் காட்டும் பேருக்குமே
நிறையபேரின் கோசம்,
யாரொன்றும்
கேட்பாரில்லை நீதி
கேட்போரில் தான்
சரியில்லை பாதி,
கேடுகெட்டுப் போன
வாழ்க்கை,
வீடுவிட்டு போனாலும்
ஊதாரி என்பர்,
முடிவில்லா
பயணமாகவே வாழ்க்கை,
முடித்துவைக்க
மரணமொன்றே வேட்கை!
———————————–
வித்யாசாகர்
நிதர்சனமான வரிகளால் கவி வடித்து
//உடம்பெல்லாம் ஆசையும் சுயநலமும் பூசி
கடவுளை குற்றம் சொல்லும் முன் யோசி,//
நிஜத்துடன் முடித்துள்ளீர்கள்…
//முடிவில்லா பயணமாகவே வாழ்க்கை,
முடித்துவைக்க மரணமொன்றே வேட்கை!//
மிகவும் அருமை…..
LikeLike
உலகின் எத்தனையோ பரிமாணங்களில் இறந்து போகும் ஒரு நல்லவனின், ‘கடைசி ஆசை மரணமாக இருப்பதாகவே’ நிகழ்கின்றன நிறைய சமுதாய கேடுகள்.
இக்கேடுகளால் உழன்று கிடக்கும் நமக்கு ‘ஒரு உயிர் பிரியும் வலி’ ஒரு மரணத்திற்கான காரணம் இதுவுமென்றால், ‘தவறுகள் எத்தனை கொடியது என சிந்திப்பாரோ’ என்ற ஏக்கத்தில் துவங்குகிறது இந்த ‘அரைகுடத்தின் நீரலைகள்..’ எனும் புதிய தொகுப்பு!
வாழ்வின் அனுபவங்களில் முற்று பெறாவிட்டாலும், அரைகுடத்தின் சப்தமாகவேனும், தெரிந்ததை தெரிந்தவரை, தெரிந்துக் கொள்வோருக்கு மட்டும் சொல்லும் நோக்கில், ‘வாழ்ந்த அனுபவங்களும்.. ‘வாழ்விற்கான தேவை இதெலாமெனும் அனுமானமும்.. ‘வாழ்தல் பற்றி சிந்திக்கவும்.. ‘வாழ்க்கை.. பிறப்பு.. இறப்பு.. சம்மந்தமானதுமாக பேச முயற்சிக்கிறது இந்த “அரைகுடத்தின் நீரலைகள்”
புதிய தொகுப்பின் முதல் விமர்சனம் என் தம்பியினுடையது என்பதில் மகிழிக்றேன் விஜய்! மிக்க நன்றிப்பா!
LikeLike
…தோழரே! மிக அருமை…புதிய பயணம் இனிதே ஆரம்பமாயிற்று வாழ்த்துகள்!!!….தலைப்பு ஈர்த்துவிட்டது…
///உடம்பெல்லாம்
ஆசையும் சுயநலமும் பூசி
கடவுளை
குற்றம் சொல்லும் முன் யோசி///.உண்மையாய் உதிர்த்தவை…..அவரை குற்றம் சொல்ல நாம் யார்…அவரை பொருளாக பயன்படுத்துவதே மனிதனின் வேலையாகிவிட்டது…அப்படியே ஏற்று கொள்ளும் உள்ளம் என்றுதான் வருமோ?
LikeLike
மிக்க நன்றி மனோஜ். இது ஆரம்பம் தான். இன்னும் நிறைய பேசுவோம். நிறைய தெளிவு படுத்திக் கொள்வோம். அவரை புரிந்துக் கொள்ள எல்லோராலும் இயலாது. புரிந்துக் கொள்வோருக்கு மட்டுமே அவர் பெரும்பொருளாக விளங்குகிறார். உங்களின் அன்பிற்கும் பாராட்டிற்கும் மேலும் எழுதப்படும் நிறைய கவிதைகள் சமர்ப்பனமாகட்டும்!
LikeLike