நீ மூத்தவன் ஆனதையும்
நாங்கள் இரண்டாம் முறையாய் –
பெற்றோர் ஆனதையும் –
இன்று தெரிந்து கொண்டு
அவள் வயிற்றில் கை வைத்து –
செல்லமே நல்லா இருக்கீங்களா……….’ என்று
புன்னகைத்ததும் – நீ
இங்கும் அங்கும் திரும்பி பார்த்துவிட்டு
உனை கொஞ்சும் அந்த வார்த்தையில் – நான்
யாரை கொஞ்சுகிறேனோ என்று பார்த்து விட்டு
நான் வயிற்றில் இருக்கும் கையை எடுத்து – உனை
தூக்கிக் கொள்வதற்குள் –
நீ பரிதாபமாய் அவளின் வயிற்றையே பார்க்கிறாய்;
நாங்கள் கவனமாக இருப்பதற்கான
எக்-கண்ணிலும் சுண்ணாம்பு வைக்காததற்கான – எச்சரிக்கை
இதோ இந்த உன் பார்வையிலிருந்து பிறக்கிறது!