
குவைத் விமான விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்த போது.. (அம்மாவும் மனைவியும் மகனும் கூட என் பயணத்தில்..)

கிராமிய பாடகி திருமதி சின்னப்பொண்ணு குத்துவிளக்கேற்ற, இந்திய தூதர் மேதகு. அஜய் மல்கோத்ரா கைதட்டி ஆரவார படுத்திய போது..

நிகழ்த்துக் கலை மூலம் தன் சமூக சிந்தனைகளை பாடல்களாக பாடுகிறார் இசையமைப்பாளர் திரு ஆதி, இடையே கவிஞர்கள் நிலவனும், விருதை பாரியும் அவரின் பாடல்களுக்கு பெருமை சேர்க்கின்றனர்..

கிராமத்து பாடலை நகரத்திற்குக் கொண்டுவரும் சிறப்புப் படகி திருமதி. சின்னப்பொன்னுடன் சங்கமம் குழுவினரின் நடனுமும்..

சிறப்புக் கவிஞர் திரு. யுகபாரதியின் தலைமையில் 'கற்பனை மட்டுமல்ல கவிதை' எனும் தலைப்பில் ஆறு பேர் கவிதை பாடிய கவியரங்கத்தில் வித்யாசாகரும்...

எனை கண்டதும் நட்பு எனை பார்த்தது; சிரித்துக் கொண்டே கிளிக்கினேன், நட்பு கவிதையாய் சிரித்துக் கொண்டது..

திரு. மகேந்திரன் சேது, திருமதி. செம்பொன் மாரி கா. சேது, திருமதி.சின்னப்பொண்ணு, வித்யாசாகர், மழலை.முகில்வண்ணன் வித்யாசாகர், திரு. யுகபாரதி, ஐயா திரு. செம்பொன் மேரி கா. சேது, திரு. திரையிசை தென்றல் ஆதி
தமிழ்மொழி அக்கறை, தமிழர் ஆரோக்கியம், தமிழினத்தின் வளர்ச்சி சார்ந்த வாழ்வியல் மாற்றங்கள் என பங்காற்ற வேண்டிய இடங்களிலெல்லாம் மௌனித்து, முழு ஈடுபாடு காட்ட திராணியின்றி அவைகளை வார்த்தையால் மென்று, தனை வளர்த்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில்; தெருக்கள் பல சுற்றி தமிழர்களை திரட்டி, வசதியான வீடுகளை தட்டி, அவர்களின் உள்ளத்தின் ஈரத்திலிருந்து விழாக்களின் மூலாதாரத்தை பெற்று, நட்புசார் பற்றாளர்களின் பலத்தினால் எழுந்துநின்று, துணிந்து விழாக்களை எடுக்கிறது; உலக வயல்களில் தமிழை தமிழர் சிறப்பினை பரப்பத் தவிக்கும் ‘குவைத்தின் கவிஞர் சங்கங்களும் இதர பிற தமிழ் மன்றங்களும்.
அவ்வழியில், தன் உழைப்பின் மூலதனமாக பெரிய ஒரு விழாவின் வெற்றியை குவைத்தில் கண்டிருக்கிறது வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம்.
ஐயா திரு செம்பொன் மாரி கா.சேது அவர்களின் தலைமையில், பொறுப்பாளர்களின் உழைப்பில், தோழமை உறவுகளின் பங்களிப்பில் கிடைத்த மகத்தான வெற்றியிது என்பதை; மணி பதினொன்று வரை அமர்ந்திருந்த அரங்கம் நிறைந்த கூட்டம் உற்சாகத்தோடு கைதட்டி நிரூபித்தது.
தாளா குளிரிலும், கருக்கும் வெய்யிலிலும், வீசும் மண் காற்றிலும் தனை வருத்தி, உறவுகளை ஊரில் விட்டுவிட்டு குடும்பத்தின் தீபமாக இங்கே தனித்து நின்று எரியும் உழைப்பின் சுடர்களின் முகத்தில் சந்தோச வெளிச்சமாய் பரவ ‘குத்துவிளக்கேற்றி ‘பரதமாடி ‘பாட்டுபாடி ‘கவி படித்து ‘ஆட்டம் போட்டு ஒரு புது உலக குதூகலமாய் கடந்துபோனது இந்த ஐந்தரை மணிநேர தேனிசை திருவிழா.
நவம்பர் 19 வெள்ளியன்று மாலை 5.30 மணிக்கு குவைத்தின் இந்திய தூதர் மேதகு ஐயா திரு.அஜய் மல்கோத்ரா அவர்களின் முன்னிலையில் பிரபல கிராமிய பாடகி திருமதி சின்னப்பொன்னு அவர்கள் குத்துவிளக்கேற்ற, உடன் பிரபல பாடலாசிரியர் திரு. யுகபாரதி மற்றும் சிறந்த நிகழ்த்துக் கலைஞரும் இசையமைப்பாளருமான ‘திரையிசை தென்றல் திரு. ஆதி அவர்களும் கைதட்டி ஆரவாரப் படுத்த விழா இனிதே துவங்கியது.
அடுத்து அரங்கம் நிறைந்த இனிய குரலாக தமிழ் தாய் வாழ்த்து பாடி முடிய, இளந்தேவதை செல்வி.மானசா மலர்வண்ணன் தன் பரத நாட்டியத்தால் வந்திருந்தவர் பார்வையிலெல்லாம் நம் தமிழர் வாழ்ந்த அழகை நினைவு படுத்தி ‘ஜோ..வென பெய்த மழைபோல் கொட்டிய கைத் தட்டல்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தார்.
அதை தொடர்ந்து சங்கமம் குழுவினரின் ஆடல் பாடல்களும், பாடகர்கள் ராமகிருஷ்ணன், கணேசன், முருகானந்தம், கங்கேஸ்வரன், ராணிமோகன், ஜெயசீலன், மகேந்திரன், பாஸ்டின், ராதிகாசெல்வம், சண்முகம் போன்றவர்கள் பாடிய பல திரைப்படப் பாடல்களும்; இசையமைப்பாளர் திரு. ஆதி அவர்கள் பாடிய சமூகப் பாடல்களும், கிராமிய பாடகி திருமதி.சின்னப் பொன்னு பாடிய ‘மகள் எழுதும் கடிதம் போன்ற பாடல்களும், கூட்டத்தை, அரங்கத்தை விட்டு வெளியேறாமல் அமரவைத்ததை, விழாவிற்கு வந்தவர் நிச்சயம் நினைவில் கொண்டிருப்பர்.
பொதுவாக அரபுதேசத்தை பொருத்தவரை, வாரத்தில் ஒருநாள் கிடைக்கும் விடுமுறை வெள்ளிக் கிழமை விடுமுறை. தன்னை அடுத்தவாரத்திற்கு தயார்படுத்திக் கொள்ள உதவும் ஒற்றை நாளிது. இதில் ‘சொந்தக்காரர் ஒருவர் பக்கத்து ஊரில் வேலைக்கு வந்திருக்கிறார் என்றாலே, சென்றுப் பார்க்க சோம்பலுறும் மனநிலை தான் ‘வியர்வையில் நனைந்த அந்த உழைப்பாளி வர்கங்களுக்குரியது. அவர்களை அழைத்து கவியரங்கம் நடத்துகிறோம் என்று சொன்னால் கிண்டலாய் சிரிக்கத் தான் செய்வார்கள். ஆனால் –
ஆறுபேர் கவிதை படித்து நடுவர் யுகபாரதி தலைமையுரை வாசிக்கும்வரை அரங்கத்தின் அத்தனைபேரும் கவிதைகளில் கட்டுண்டு கிடந்ததனர் என்றால், கைதட்டி கவிதைகளை ஏற்று ஆரவாரப் படுத்தியதென்றால், அது அந்த ஆறு கவிஞர்களுக்கும், கவியரங்கத் தலைமையேற்ற பாடலாசிரியர் யுகபாரதிக்கும் கிடைத்த மரியாதை மட்டுமின்றி, குவைத்வாழ் தமிழ் மக்கள் ‘அத்தனை தமிழ்ப் பற்றும், இனப்பற்றும், கவிதை ரசனையும் மனதில் பூரிக்க வாழ்ந்துக் கொண்டுள்ளனர் என்பதும் ஒரு பெரிய உண்மை.
‘கற்பனை மட்டுமல்ல கவிதை’ எனும் தலைப்பில் கவிஞர்கள் ராதிகா செல்வம், சலீகா சாகுல், முனு.சிவசங்கரன், நிலவன், வித்யாசாகர், விருதை பாரி என அவரவர் திறன் கொண்டு கேட்கும் காதுகளை வரிகளால் வருடினர். அதோடு, கவிதைக்கு பொய்யழகு எனும் ஒற்றை கூற்றையே அத்தனை பேரும் உடைத்தனர்.
உண்மையில் ‘கவிதைக்கு மெய்யுமழகு என்று மாற்றிக் காட்டிய பெருமை தமிழுலகில் ‘இந்த வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கத்துக் கவிஞர்களுக்கு(ம்)’ உரியது என்பதை, ‘இறுதியாக கவிஞர் திரு. யுகபாரதி பேசுகையில் அதும் கேட்க கேட்க ரசனையாக ஒவ்வொரு கவிஞர்களையும் வர்ணித்துப் பேசுகையில், தன் அனுபவங்களை எல்லாம் நம்பிக்கை நிறையும் வார்த்தைகளாக உதிர்கையில், அரங்கத்து ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஒவ்வொரு வரிக்கு வரிக்கான கரகோஷங்களும் ஆமென்று உறுதி படுத்தியது.
இடையே இந்திய தூதர் ஐயா மேதகு. அஜய் மல்கோத்ரா, கவிஞர் திரு. யுகபாரதி, இசையமைப்பாளர் திரு.ஆதி, கிராமிய இசை பாடகி திருமதி. சின்னப்பொன்னு மற்றும் இதர கலைஞர்கள் ,சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவு பேழையும், மலர்கொத்தும் வழங்கி கெளரவிக்கப் பட்டதுடன், அழகான விழா மலரும் வெளியிடப் பட்டது.
அடுத்ததாக, ஐயா திரு. ஆதி அவர்களின் தலைமையில் கவிஞர்கள் நிலவன் மற்றும் கவிஞர் விருதை பாரி சேர்ந்து நிகழ்த்துக் கலை போன்று பேசி நடிக்க ‘இசையமைப்பாளர் திரு.ஆதி முன்சென்று அவர்களின் பேச்சின் ஊடாக கலந்துப் பாடிய முற்போக்குப் பாடல்களும், காதல் பாடல்களும் கேட்போரின் நரம்பு புடைத்து, மயிர்க்கால்களை குத்திட்டு நிற்கவைத்தது. அத்தகு சிந்திக்கவைக்கும் அவரின் சமூக சீர்திருத்தப் பாடல்களை தொடர்ந்து, அன்பின் சகோதரி திருமதி. சின்னப்பொன்னு அவர்கள் மேடையேறி தன்னானே… தன்னானே… என்றது தான் தாமதம் அரங்கத்தில் விசில் பறக்க ஆரம்பமானது ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும் இயல்பாகத் தொற்றிக் கொண்டன..
இறுதியில், ஓவியக் கலைஞர் திரு.கொண்டல்ராஜ் அவர்கள், விழாவை சிறப்பிக்க வந்த சிறப்பு விருந்தினர் மூவரையுமே பாடும் போதும் பேசும் போதும் அமர்ந்திருந்த போதுமென மாறி மாறி வரைந்துக் கொடுத்து, குவைத் மக்களின் கலையுணர்வை மேலும் சற்று மேன்மை படுத்தினார்.
விழாவின் முக்கிய மற்றொரு சிறப்பு யாதெனில், நிகழ்ச்சிகளை பகுதி பகுதியாக பிரித்து, காதிற்கினிய தனது மெல்லிய குரல்களால் கம்பீர வரிகளால் தொகுத்து வழங்கிய அற்புத மங்கையர்களான திருமதி பிரியா அம்பலவாணன், திருமதி பொன்னி ராமன், திருமதி ராணி மோகன், திருமதி. ஸ்டெல்லா ஆண்டனி, திருமதி. ராதிகா செல்வம் போன்றோரும் மற்றும் திரு.மகேந்திரன் சேது அவர்களும் ஆவர்.
இவையெல்லாம் ஒருபுறமெனில், சற்றும் முகம் சுழிக்காமல் வந்திருந்த ஆயிரம் பேர் வரையிலான ரசிக பெருமக்களுக்கு மத்தியில், சுவையான உணவகம் அமைத்து, ஓடி ஓடி தரமான தன் சேவையை செய்த புதிய ‘வீராஸ்’ உணவகத்தின் சிறப்பும் பெரிய பாராட்டுதலுக்குரியது.
ஒரு ஊரில் மழைபெய்து முடிந்தாலும், ஊரெல்லாம் அது பெய்ததின் வாசத்தை தான் வந்துபோனதன் அடையாளமாக காற்றெல்லாம் நிறைத்து வைத்திருக்கும் மழைபோல; விழா முடிவின் மனநிறைவாக எல்லோரும் சிறப்பு விருந்தினர்களோடு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மெல்ல பிரிந்து விடைபெறலாயினர். மறுநாள் விடியலில் எழுந்து வேலைக்கு போக வேண்டிய உழைப்பாளர் கூட்டம் தன் பாரத்தை சற்று சிரிப்பில் சுமந்துக் கொண்டே ஓடி வண்டி பிடிக்கத் துவங்கியது.
கடைசியில், ஒரு வீடுகட்டி புதுமனை புகுவிழா நடத்தியது போல், ஒரு திருமணத்தை சிறப்புற முடித்துவிட்டு மதியவேளையில் பாத்திரபண்டங்களை சுமந்து செல்லும் திருமண வீட்டாரை போல்; விழாவின் மகிழ்வையும் வெற்றியையும் சுமந்துகொண்டு ‘வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கத்தினர் புறப்பட, விழாவின் வெற்றிக்கான அலுப்பு மெல்ல அவர்களை வந்து தொற்றிக் கொண்டிருந்தது. யாருமில்லா அமைதியொன்று ‘அந்த அரங்கத்தின் விளக்கணைத்த உடன் அறைமுழுதும் பரவியது.
——————————————————————————————–
வித்யாசாகர்
கவிதை என்பது கற்பனை மட்டுமல்ல்………..நடந்து முடிந்த விழாவின் மகிழ் வில் உங்களுடன் நானும் மகிழ்ந்து கொள்கிறேன். பாராட்டுகள.
LikeLike
மிக்க நன்றி சகோதரி. விரைவில் விழாவிற்கான கவிதையும் ஒளி ஒலி வடிவ பதிவும் இடுகிறேன்..
LikeLike
hi,
ithai parukum polthu en tamil in mukathil ethani nal yekathin ninvu niriverithu pol terintathu.
pugaipadthai parkum pothu kavithuku itanai power ya santhosam kodukarthuku.
sethu iyya ya parkum pothu anrtu eppadi pathaneo appadiye irukanga.kavithai mari ilmaiyai.
valthukal vidya—valarvathrkum,vali katuvatharkum
nandri
lakshminathan
LikeLike
நீங்களெல்லாம் இல்லாதது தான் குறை லக்ஷ்மி. இடையே விழா ஒத்திகை பார்க்கும் நேரம் சேதையாவிடம் சொன்னேன் நீங்கள் விசாரித்ததாக. மகிழ்ந்தார். உங்களின் மறவா நட்பும் மனசும் போற்றுதலும் அன்பும் நன்றிக்கும் உரியது லக்ஷ்மி..
மிக்க அன்பும் வாழ்த்துக்களும்.. உங்களுக்கு..
LikeLike
Congradulations.It is really heart warming to note that youhave all taken great strains to make the function a grand success.Having worked in a gulf country for some time, I know the trials and loneliness..kudos..keep it up ..my best wishes to forth coming events too..Kalidoss
LikeLike
எத்தனையோ வெறுமைகளை இதுபோன்ற விழாவின் வெற்றி கொண்டுதான் போனது. உழைப்பிற்கான பலன் இது என்பது மட்டும் திண்ணம். அதிலும் இவ்விழாவிர்காக அதிக அக்கறை எடுத்து உழைத்த ஐயா சேது, நிலவன், சிவசங்கரன், தம்பி பாரி, மகேந்திரன் இதற நட்புசார் உறவுகளை போன்றோரையே சாரும்..
தாங்கின் அன்பான புரிதுணர்வு கொண்ட உணர்விற்கும் வாழ்த்திற்கும் எல்லோருமே நன்றியானோம் காளிதாஸ்..
LikeLike