1
எனக்கும் உனக்கும் மத்தியில்
ஒரு ஆடையின் தூரம் கூட இல்லாமல்
நீ வேண்டும் – என்றேன் நான்
நிர்வாணத்தில் எனக்கு
விருப்பமில்லை – அதின்றி கேள்
வேண்டுமெனில் மரணம்வரை தருகிறேன்” என்றாய்
வாய்மூடித் தான் கிடக்கிறேன் நான்
மௌனத்தில் –
உனக்கும் எனக்குமான காதல்
ரகசியமாய் நகர்கிறது
நகர்தலில் –
நிர்வாணமும்
மரணமும்
அற்றே போனது நமக்குள்!!
————————————————————————
2
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்தாலும்
எப்படியோ சில இதயங்கள்
சந்தித்தே விடுகின்றன;
பிரிவில் வடிக்கும் –
இரு சொட்டுக் கண்ணீருக்குள் இருந்தேனும்!!
————————————————————————
3
உன்னை விட்டு தூரமாக
எல்லாமில்லை –
உனக்குள் தானிருப்பேன்,
நீ திரும்பிப் பார்க்காத இடங்களில்
தேடித் பார் கிடைப்பேன்..
————————————————————————
4
எதற்கும் கலங்கா கல்மனசு என்று
என்னவோ நாம் வேண்டுமெனில் –
பீத்திக் கொள்ளலாம்,
அன்பில் –
ஆனால் ஏமாந்துதான் போகிறது மனசு!
————————————————————————
5
அவள் லேசாகப் பார்த்தாள்;
இப்படித் தான்…….
இப்படித் தான் தோண்டப் பட்டது – எனக்கு
காதலென்னும் பெரியப் பள்ளம்;
அந்தப் பள்ளத்தில் –
உயிர் வரை வலிக்கும் வலியின் முள்
குத்தித் தான் கொண்டது எனக்கும்!!
————————————————————————
6
எல்லோர் மனதிலும் வீசும்
ஒரு காதல் அலை தான், எல்லாம்;
குடும்பமெனும் மடை கட்டிவிட்டதில்
மடை உடையாவிட்டாலும்
மடைக்குள்; மனதிற்குள்;
ததும்புகிறது காதல்!
————————————————————————
7
உனக்கான கவிதை
உன்னைப் போல் எனக்குள்
சப்தமற்றுக் கிடக்கிறது!!
————————————————————————
8
விருப்பத்தில் உயிர்பெருகிறது
காதலும்;
கவிதையும்.
அதை மெய்பிக்கவே
மௌனத்தின் சப்தம் –
வார்த்தைகளாய் கிடக்கின்றன….
————————————————————————
9
உன்னில் தோன்றும் கணமெல்லாம்;
என்னையே எனக்காய் –
பிறப்பிக்கிறாயடிப் பெண்ணே;
உனை கண்டிராத நாளொன்றில் தான்
நான் இருந்தும் இல்லாமல்
போனேனடிப் பெண்ணே!!
————————————————————————
10
நீ –
பேசும்போது தான்
எனக்கே தெரிகிறது
நீ பேசவும் நான் –
காத்திருந்திருக்கிறேன் என்று!
————————————————————————
11
காதல் பிஸ்கோத்தும்; அந்த நிலாப்பெண்ணும்
எதையோ எழுதி உன் கையில் தந்தேன்
சிரித்தாய் –
உன் சிரிப்பில் –
எனக்குக் கூட தெரிய வில்லை;
நானும் சிரிபேன் என்று!
————————————————————————
12
நான் பெரிய பெரியதாய்
நிறைய பேசுகிறேன்;
நீ சின்னதாய் –
ஒரு பார்வை மட்டும் பார்க்கிறாய்;
எப்படியோ நீ பேசினாய் என்பதில்
உயிர்த்துப் போனேன் நான்!
————————————————————————
13
கடக்கும் நாட்களின் மத்தியில்
உனக்காகவும் ஒரு பொழுது
எனக்குள் விடிந்து; எனக்குள் இருட்டினாலும்
உறங்காமல் தான்
விழித்திருக்கிறது மனசு!!
————————————————————————
14
உன் சிரிப்பிற்குள் தான் மின்னியது
எனக்கான அந்த முதல் வெளிச்சம்;
அதற்காக அதையும் மறைத்து
தனிமையில் அழும் கண்ணீரில் – ஈரமாக்கி விடாதே
உன் விழிகளையும்; உன் சிரிப்பில் உதிரும்
என் புன்னகையையும்!!
————————————————————————
15
நீ உறங்கி தான் போயிருப்பாய்
நானும் உறங்குவதாகவே –
எண்ணிப் படுத்திருக்கிறேன்;
கடிகார முட்கள் எப்படியோ என் தூக்கத்தை
எனை கேட்காமலே –
கொண்டுசெல்கிறது!!
————————————————————————
16
எங்கு சுற்றினாலும்
என்னோடு தானிருக்கிறாய்…
ஒரு சின்ன நினைவாகவேனும்..
ஏதோ என் கிறுக்கலில்
அர்த்தப் படாத ஒரு
புள்ளியாக வேணும்.!!
————————————————————————
17
உன் தூக்கத்தில் தலை வைத்து
படுத்துக் கொள்ளும் துணிவெனக்கு
தலையணை போல் –
பிடிங்கிக் கொண்டாய் மனதை;
விரித்த படுக்கையில்
உனக்கான ஓரிடம் –
வெற்றிடமாகவே இருந்தது; என் மரணம் வரை!!
————————————————————————
18
யாருக்கும் தெரியாமல்
நான் கட்டிய கோட்டையில்
எல்லோருக்கும் தெரிந்தே உடைகின்றன
நீ இருக்கும் இடம்;
யாருக்கும் நான் உடைவதான
வருத்தமேயில்லை –
உனை பிரிக்கும் முனைப்பே அதிகம்!
————————————————————————
19
இரண்டு கண்ணாடிக்
குழல் போல் இதயம்
என்பதால்;
எடுத்ததும் உடைத்துவிடுகிறார்கள்,
வா இரண்டு சிலை பார்த்து உள்ளே
புதைந்துக் கொள்வோம்
நம்மை சாமி என்று கும்பிடுவார்கள்
சாமி நம்மை சேர்த்து வைக்கும்!!
————————————————————————
20
மணியொன்றும் –
அத்தனை ஆகவில்லையென்று
உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்;
ஆனால் நீ திருப்பி திருப்பி
கடிகாரம் பார்த்துக் கொண்ட தவிப்பில்
கடிகாரமுட்களின் நகரும் சப்தம் போல்
அடித்துக் கொண்ட உன் படபடப்பில்
சொட்டிய உன் ஒரு சொட்டு வியர்வை துளி
என்னை காதலால் நனைத்தே விட
நான் உனை புரிந்துக் கொண்டவனாய் விலகி
ஓரம் நின்றேன்
நீ என்னை கடந்து
தெருமுனை கடந்து
திரும்பியெல்லாம் பார்க்காமல் ஓடி
வீட்டிற்குள் மறைந்தே போனாய்.
நான் சலனமற்று நின்றேன் –
நீ ஓடிச் சென்ற உன் கால்தடம் ஒவ்வொன்றிலிருந்தும்
அழகாய் ஒரு பூ பூத்துக் கொண்டிருக்கையில் –
நீ ஒவ்வொரு பூவையாய் மிதித்துக் கொண்டு
என்னை நோக்கி மீண்டும் ஓடி வந்தாய்!!
————————————————————————
வித்யாசாகர்
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!.
LikeLike
தங்களின் அன்பான வாழ்த்தினால் மகிழ்ந்தேன். உங்களைப் போன்றோரின் வாழ்த்து எனக்கு முழு பலமாக இருக்கும் என்று மிக்க நம்பிக்கை உண்டு..
LikeLike
அழகான புதுக்கவிதைகள்.
அருமை குறுங்கவிதை வித்யா !!
LikeLike
மிக்க நன்றி சிவா சகோதரர்..
உணர்வுகளை அதன் வடிவம் பிசகாமல் வார்த்தைகளாக்க எண்ணியதில் வந்த காதல் கிறுக்கல்கள் இது..
LikeLike