1
வெற்றிடத்தையும்
வண்ணங்கள் நிறைத்துக் கொள்வதை
பார்வை அறிகிறது!
—————————————————————–
2
யாருக்காகவும் யாரும்
இல்லை என்பதே உண்மை;
ஆனால் எல்லோருக்காகவும்
எல்லோரும் இருக்க முயன்றதில்
இயற்கை;
மரணம் ஆனது!!
—————————————————————–
3
எங்கு சுற்றினாலும்
இதயம் கிடைக்கிறது,
அதில் சில இதயங்கள் மட்டுமே
நமக்காக இயங்குகிறது..
—————————————————————–
4
உணர்வுப் பூர்வமாய்
பிறரை கலைக்க முடிகிறது
மனதால் மட்டும்;
கலைந்த கோலத்திற்கு வேண்டுமெனில்
வாழ்க்கை என்று பெயர் சொல்லும்
உலகம்!!
—————————————————————–
5
ஒவ்வொரு கல்லாய் தூக்கி
வானத்தில் எறிந்தேன்.
எல்லாம் மீண்டும்
பூமியிலேயே விழுந்தது.
எங்கு சுற்றினாலும் –
இங்குதான் வரவேண்டுமெனும் நியதி –
மண் தான் நமக்கு முடிவென்னும் உண்மை –
வீழ்ந்த ஒவ்வொரு கல்லிலும் ஒட்டிக் கொண்டிருந்தது.
மண்ணினை கல்லிலிருந்து தட்டிவிடுகையில்
என் தலைகனத்தையும் சேர்த்து தட்டிவிட்டேன்…
இன்னும் விழ;
நிறைய மண் இருந்தது அந்த கல்லின் மேல்!!
————————————————————–
6
அதே டிபன் பாக்ஸ் சோறு..
அதே காலையில எழுந்து பை மாட்டிக்கொண்டு ஓடும் ஓட்டம்..
அதே வாழ்வின் பரீட்சைக்கான பயம்..
யாரையேனும் பிரிந்து வாழும் அதே பிரிவின் வலி..
அதே யாரோவின் மரணம்..
அதே என் அழுகையும் கண்ணீரும்….
ச்ச………..
வலிக்குதே!!!!!!!!
இதுதான் வாழ்க்கையா…..????
வேறென்ன??!!!
இப்பாடியே வாழ்ந்து தீர்த்து விட்டு –
உயிர் போகும் கடைசி நேரத்தில் – நம்மால் யாரேனும்
மகிழ்ந்து வாழ்ந்திருப்பார்களேயானால் –
அதையெண்ணி – கண்மூடிக் கொள்வேன்!!!
————————————————————–
7
ஒரு கடலளவு
விரிந்துக் கிடக்கிறது
மனமும்.. அறிவும்.. திறனும்..
நாம் தான் இதயம்
கையளவு போலவே –
எல்லாவற்றையும் எண்ணிக் கொள்கிறோம்!!
————————————————————–
8
ஒரு சாபம்
ஒரு வெறி
ஒரு கோபம் கொண்டேனும் கொன்றுவிடு
உனக்குள்ளும் இருக்கும் உன்னை;
பிறருக்குள் நீயிருப்பதை
உனை கடந்து நிற்கையில் அறிவாய்
எனை கொன்ற பிறகா ?
சரி, என் எனும் சுயநலத்தை அல்லது
தான் எனும் கர்வத்தை –
கொன்றபின் என்று வைத்துக் கொள்!
————————————————————–
9
மனித நாற்றங்கள்
பெருக்கெடுக்கின்றன;
சாக்கடையில் புகாமல்
மனதில் தேங்கி!!
————————————————————–
10
உயிர்கொல்லி மருந்து
தினமும் இடப்படுகின்றன;
எறும்பு கரைப்பான் எலி
பூச்சுகள் கூட இறக்கின்றன.
மனித பிணங்கள் மட்டும்
உயிர்த்தே கிடக்கிறது!
————————————————————–
வித்யாசாகர்