1
நீ அந்த தெரு வழியே
போனாயென்று எல்லோருக்கும் தெரியும்;
எனை பார்த்தாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..
சிலசமயம் நின்று
கடையில் ஏதேனும் வாங்குவாய்
அது எல்லோருக்கும்தெரியும்;
எதற்காக நிற்கிறாய், வாங்கினாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..
தெருமுனை திரும்பி எனை பார்த்ததும்
அடிக்கடி மணி பார்ப்பாய் –
வெறுமனே அலைபேசியை காதில் வைத்து
வீணே யாரையேனும் அழைத்துப் பேசுவாய்
அவசரமோ; நேரமாகி விட்டதோ போல்
எல்லோரும் நினைப்பார்கள்;
ஆனால் நீ அடிக்கடி பார்க்கும் மணியிலும்
அவசியமில்லாமல் அழைத்த அழைப்பிலும் தான்
எனக்கான காதலை –
அவ்வளவு வைத்திருக்கிறாய் என்று
எனக்கு மட்டுமே தெரியும்!!
—————————————————————————-
2
அதெப்படியோ
நான் விரைவாக வந்தால் நீயும் விரைவாக வருகிறாய்
தாமதமாக வந்தால் –
நீயும் தாமதாமாக வருகிறாய் –
மனதிற்கு மட்டுமே
நம்மை – சரியாக தெரிகிறது போல்!!!
—————————————————————————-
3
நீ அருகில் வருகிறாய்
உன் கால கொலுசு சப்தம் என் மீதேறி
காதுகளில் புகுந்து –
உடம்பெல்லாம் பதிவாகி வெளி சென்று
கடக்கிறது என்னை உன்னோடு!
அந்த கொலுசின் சப்தத்தில்
உன் பதட்டமும் நீயும்
புரியவில்லை –
இப்போது அமர்ந்து உன்னையும்
உன் கொலுசையும்
நீ என்னை நெருங்கி ஒதுங்கி அவசரமாய் கடந்ததையும்
எண்ணிப் பார்க்கையில் புரிந்தது –
நீ என்னை நிமிர்ந்து பார்க்காவிட்டாலும்
நாளைக்கு என்னருகே வந்து உடலெல்லாம் புகுந்து
விலகி
ஓடி
தெருமுனையில் நின்று
திரும்பிப் பார்க்காவிட்டாலும்
மனதில் நினைத்திருப்பாய் என்று!!
—————————————————————————-
4
உனக்கொன்றும் நான்
அத்தனை பெரிய –
அவசியம் இல்லை தான்;
போ..
நீ பெசாவிட்டாலென்ன,
பார்க்கா விட்டால் தான் என்ன?!!!!!!
எனக்கு நீ –
வாழுமளவு வேண்டும்;
இல்லையேல் –
உயிர் பிரியுமளவேனும்!!!
—————————————————————————-
5
உன் வெளுத்த தோலோ
கருப்பு விழியோ
புது வண்ண ஆடையோ
மயக்கும் அழகோ
உன் ஆர்பாட்டமோ
உன்னிடத்தில் காமமோ
காதலோ – ஒன்றும் வேண்டாம்
தினமும் இந்த வழியில் வந்து பொ; போதும்!!
—————————————————————————-
வித்யாசாகர்
அருமையான படைப்புகள், இந்த பக்கத்தில் நான் எவ்வாறு இணைவது?
LikeLike
அன்பு வணக்கம் சம்சுதீன்..
நம் வலைதளத்தில் வலது பக்கத்தில் கீழாக பாருங்கள், அங்கே முதலில் // நம் எழுத்து பிடிக்குமா..? // என்றும், பிறகு //உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்// என்றும் இருக்கிறதில்லையா அங்கே உங்களின் மின்னஞ்சல் முகவரியை தந்து இனைந்து கொள்ளலாம். பிறகு உங்களுக்கு நம் அனைத்து படைப்புக்களும் பதிவிடும் போதே அவ்வப்பொழுது அறிய தரப் படும்.
மிக்க நன்றிகளும் அன்பும் உரித்தாகட்டும். தொடர்ந்து எழுத்துக்களால் இணைந்திருங்கள்..
LikeLike