ஒரு கடல் தாண்டிய
வனம் தான் –
நான் வசிக்கும் காடு..
ஒற்றுமை எனும்
கடல் தாண்டிய வனம் அது.
சுயநல மரங்களும்
மனிதரை விட அதிகம்
மிருகங்களும் வாழும் காடு அது.
மிருகங்களை தின்று
மனிதர்கள் வாழும்
அந்த வனத்தில் – கடவுளுக்கே
பஞ்சமெனில் பாருங்களேன்!!!!!!!
அங்கே –
மழைக் கூட
லஞ்சமும் ஊழலுமாகத் தான்
பொழிகிறது.
பொறாமையும்
ஒருவரை ஒருவர் அழிக்கும்
வஞ்சமும்,
இடிபோல் இரக்கமற்ற வானில்
தினமும் இடித்துக் கொள்கின்றன – அந்த
வனப் பகுதியில்.
காவலுக்கு திருடர்களும்
நிற்கிறார்கள்,
ஆள்வதற்கு அங்கே
மனிதரையும் கொள்கிறார்கள்,
பணம் மட்டுமே காய்த்து
பிணங்களின் மீது புழுத்துக் கிடக்கும்
வனமது. கொடூர வனம்.
செல்வங்கள் தெருவெல்லாம்
கொட்டிக் கிடக்கின்றன அங்கே,
ஆனால் அவைகளை எல்லாம்
மிருகங்கள் எடுத்து
கக்கத்தில் வைத்துக் கொண்டு அலைவதில்
மனிதர்களுக்கங்கே –
தண்ணீர் கூடக் கிடைப்பதில்லை.
இதில் வேறு –
மிருகங்களின் முதுகில்
தழும்புகளும் உண்டு,
ஜாதி மதம் இனம் எனும்
பெரிய பெரிய தழும்புகள் அது.
மனிதனின் தேவைக்கென்று
எண்ணிச் செய்த கத்தியில் –
மிருகங்களே இங்கு
அறுபடுகின்றன;வேற்றுமையினால்
அறுபட்ட இடமெல்லாம்
இன்று சுயநல ரத்தம் பொங்கி
மனித உயிரை மொத்தமாய் குடிக்குமளவில்
தாகம் கூடிவிட்டதிந்த மிருகங்களுக்கு.
நான் இவைகளை எல்லாம்
பார்த்தவாறு –
உலக புள்ளியின் ஓரத்தில்
வெறித்துப் போய் நிற்கிறேன்,
என்னைப் போல் இன்னும் சிலர்
ஆங்காங்கே –
எனை கடந்தும் கடக்காமலும்
திரிகின்றனர்.
ஒரு கட்டத்தில்
நானே கூட
மனிதனா ?
மிருகமா?
தெரியவில்லை,
சிலநேரம் மனிதர்கள் என்னிடம்
பகையாடுகின்றனர்,
சிலநேரம் மிருகங்களும்
உறவாடுகின்றன..
மனது; வாழும் இரத்தத்திலிருந்து
வற்றிப் போய் –
வெளிறிய முகத்தின்
கீறல்களாய் வெளிப்படுகின்றன.
என்னசெய்வது?
என்னசெய்வது?
அந்த ஒற்றுமை எனும் கடலை தாண்டி
ஏனிந்த வனத்திற்கு –
வந்தோமோ எனும் கவலையில்
வனம் ஒரு வதையாகவே நகர்கிறது எனக்கு!!!!!!
————————————————————————
வித்யாசாகர்
வருத்தத்தைக் கடந்து வந்து, நம் தவறுகள் நம் கண்களுக்கு, அறிவுக்குப் புலப்படுமெனில் அதிலிருந்து நம்மை விலக்கி; நம்மோடுள்ளவரையும் காத்துக் கொள்வோம் என்று சொல்வதற்கே இக்கவிதை…
LikeLike
தவறுகளைக் கூட நமை திருத்தும், செதுக்கும், உளியாக எடுத்துக் கொள்வோம். இங்கே, செதுக்குக்குகையில் வெட்டிய சில இடங்களே கவிதையில் காயங்களாய் வலிக்கிறது..
உலகை நேர்கொண்டு திட்ட முடியாமைக்கு தன் முகம் பார்த்து; வெட்கிக் கொள்ளும் வேளையிலும் பயணிக்கிறோம் தானே???
LikeLike
சிந்தனையில் தைத்த முட்களின் கூர்மையை
வந்துதித்த வார்த்தையில் விளங்குது
மந்தையென நம்வாழ்வு மலிஞ்சுபோச்சே தோழா!
சந்தையில் வந்துவிட்ட காய்கறிகளாய்
சிந்தையில் வரும் எண்ணங்களும்
விந்தையான விலைகளில் விரிந்து கிடக்குதே!
கண்டதையும் கேட்டதுகளையும் கவனித்து
செந்தமிழ் துணை கொண்டு செதுக்கினாயே சவுக்கடி!
உண்டவர் கொள்ளட்டும் ஒற்றுமை வேள்வி!
வலியில் பங்கு கொள்ளும் நிலா
LikeLike
என் தோள் சாயும் முன்னே தாங்கி நிற்கும் தோழமையின் சந்தம் மாறாத கருத்துக்களில் நிறைந்தேன் என்றாலும், எத்தனைப் பேருக்குப் புரியுமோ என் உள்ளம தாங்கிய என் சமுகம் குறித்த இந்த வலி தோழி!!!!!!!!!
LikeLike