1
ஒவ்வொரு சொட்டு
வியர்வை துளியும் உள்ளே
ஒரு வெற்றியை யேனும்
வைத்துக் கொண்டே சொட்டுகிறது!!!
———————————————————-
2
வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில்
நிறைய பொருட்கள் இருக்கின்றன..
எல்லாம் இருந்தும்
அம்மா இல்லாத வீடு –
ஒன்றுமே இல்லாதது போல்
கண்ணீரின்றி மூழ்குகிறது;
அம்மாவை ஊருக்கு கொண்டு சென்ற விமானம்
என்று கொண்டு வருமோ மீண்டும் – அந்த
நேரில் காணும் அம்மாவின் சிரிப்பை!!
———————————————————-
3
குளிரில் உடல் சற்று நடுங்க
ஒரு குவலையில் சூடாக நீர் தருகிறார் மனைவி.
வாங்கி மேஜையில் வைத்துவிட்டு
எழுத்துக்களில் தொலைந்து போனதில்
நீரும் குளிர்ந்து போனது.
நினைவு வந்தவனாய் –
எடுத்துக் குடிக்கிறேன் தண்ணீரின் குளுமை
உடம்பெல்லாம் பரவியது..
நாவில் குளிர்ந்து நனையும்
இதே தண்ணீர் தான் –
சற்று முன்பு கொதிக்க கொதிக்க
அடுப்பிலிருந்து இறக்கிக் கொடுக்கப் பட்டது.
வாழ்க்கையின் நிறைய விசயங்களும்
இப்படித் தான் –
காலத்தின் நகர்தலில் மாறிப் போகின்றன..
எல்லாம் கடந்துவிடுகிறது!!
———————————————————-
4
வெறுமனே கிடக்கிறது
நிறைய இடங்கள்;
எதையேனும் இட்டு வையுங்கள்
இல்லார்க்கு கொடுத்தேனும் செல்லுங்கள்
நீங்கள் கொடுத்த இடத்திலிருந்து
நாளைய தலைமுறை பிறக்கலாம்,
இன்றைய தலைமுறையின்
ஒரு குடும்பமேனும் –
மானத்தோடு வாழலாம்!
இல்லார்க்கு கொடுக்கும் பணமோ பொருளோ
இருப்போரை நட்டமாக்குவதில்லை;
இல்லாரை வாழ்விக்கிறது!!
———————————————————-
5
பிறர் நலம் கருதலில்
தன் லட்சியம் கூட
மறக்கவோ;
மறுக்கவோ படுகிறது!!
———————————————————-
6
பிறருக்கு உதவ
வழி இருப்பின்;
உதவாததும் குற்றமே; எனில்
சிலருக்கு
உதவுதலும் குற்றமாகிறது!!
———————————————————-
7
கடை நிறைய
பொருட்கள் –
நிறைய விற்கின்றன;
பிடித்ததையெல்லாம் வாங்குவதற்கான
பணம் மட்டும் –
முழுமையாக இருந்ததேயில்லை.
உலகத்தின் நிறைய அமைவுகள்
இப்படித் தான் இருக்கின்றன;
எல்லாம் இருந்தும் இல்லாதவைகளாக!!
———————————————————-
8
வெகு நேரமாக
மறைத்து மறைத்துப் பார்த்து
யாரேனும் –
எந்த ஆண்களேனும்
பார்த்துவிடுவார்களோ என்று தயங்கி தயங்கி
யாரும் பார்திராதவண்ணம் அளவு தேடி தேடி
என் மனைவிக்கு உள்ளாடை ஒன்று எடுத்தேன்;
நான்காக அதை மடித்து
கைக்குள் மறைத்துக் கொண்டு
கடையின் அடித்தளத்திலிருந்து
மேல் தளத்திற்கு கொண்டுவந்து பணம் கொடுக்கப் போனேன்;
அந்த பணம் வாங்கும் ஆள்
அதை வெளியே எடுத்துப் பிரித்து
நான்கு புறமும் மேல் தூக்கி சுற்றிப் பார்த்து –
பிறகு ‘ஓ இந்த அளவா; இத்தனை விலை’ என்றார்!
எனக்குக் கூசத் தான் செய்தது
யாரையும் சுற்றி யெல்லாம் பார்க்கவில்லை
புரிதலை உள்ளாடையோடு சேர்த்து
பை’வரை நிறைத்துக் கொண்டு நடந்தேன் –
வளர்ச்சியின் மாற்றம் என்றாலும்; யதார்த்தம் வலித்தது!!
———————————————————-
9
எத்தனை துன்பம் வரினும்
இன்பம் வரினும் –
எதையும் வாழ்வின் ஒரு கட்டம் என்றே எண்ணி
வாழ்க்கையை வாழ்” என்றான் அவன்
இன்பம் வருகையில் சரி…
துன்பம் வருகையில் எப்படி???” என்றென் நான்
இன்பம் வருகையில் சிரிப்பை குறைத்துக் கொள்
துன்பம் வருகையில் கண்ணீரும் குறையும் என்றான் அவன்
சரியென்று சொல்லிவிட்டு –
அவ்வப்பொழுது கண்களை துடைத்துக் கொள்கிறேன் நான்!!!!!!!!!!
சிரிப்பு – வெகுதூரத்தில் தெரிந்தது..
———————————————————-
10
வெற்றிக்கான நிறைய இடங்கள்
வெற்றிடங்களாகவே கிடக்கின்றன இன்னும்;
நிரப்பும் வாய்ப்பு நம் கையிலும் இருக்கலாம்
நானாகவும் நீங்களாகவும் கூட இருக்கலாம்” என்றான்
எனக்குள்ளிருக்கும் அவன்;
“ஒவ்வொருவருக்கான வெற்றியும்
அவருக்காக காத்தே இருக்கின்றன –
பிறப்பவர் அத்தனை பெரும் ஒவ்வொன்றில் ஜெயிப்பவரே
என்றேன் நான் –
அப்படி என்றால் நீ என்றான் அவன்;
எனக்கு நீங்களும் நினைவிற்கு வந்தீர்கள்….
———————————————————-
வித்யாசாகர்
இதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளும் நல்லாயிருக்கு. எல்லோருக்கும் விளங்கக் கூடியதாக எழுதி உள்ளீர்கள்.
மனித வழக்கையில் நிறைய தேடல் நிரப்பபடாமலும் அமைந்துள்ளது.
LikeLike