கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 5)

இதற்கு முன்…

வர் சற்றும் சலிக்காமல் சவால் விட்டவராகவே எதிரே நின்றிருந்தார். நான் மனதை அடக்கிக் கொண்டு –

“அப்படி இல்லைண்ணே. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் கற்பனை பண்ணிக்க  இது சமயமில்லைண்ணே. அங்கே எத்தனை உயிர்கள் செத்து மடிந்துக் கொண்டிருக்கு அது உங்க கண்ணையே உருத்தலையா???”

“விடு தம்பி விட்டுட்டு சீட்டு வாங்குற வழிய பாரு, என் வாயக் கிளராத, ஏதோ எப்பவும் வர, தம்பியாச்சேன்னு பார்க்கிறேன், இவனுங்க எடம் புடிச்சானுங்கனா நாளைக்கென்ன எனக்கு வீடு போட்டா தரப் போறானுங்க இலங்கையில? போவியளா…” என்னால் இந்த சுயநலத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அண்ணனாவது மண்ணாவது எழுந்து சட்டையை பிடித்துக் கொண்டேன்.

“யோவ்… யோவ்.. மனுசனாயா நீ? மனுசனா நீ? சிந்திக்கவே தெரியாம, வரலாறே புரியாம, உன்னை எல்லாம் பெரியமனுசன்னு சொல்லிக்கவே வெட்கமாயிக்கு. ஒரு இனத்தோட பற்றுன்னு எதனா இருக்கா உனக்கு? உலகமெலாம் ஆளும் தேசங்களுக்கு மத்தியில ஒரு துண்டு மண்னை ஒரு தமிழன் ஆண்டான்னா அது எப்படி இருக்கும்னு காட்றதுக்கான ஒரு போர்-யா அது. ஏன்; என் பாட்டன்முப்பாட்டன் ஆண்ட மண்ணுல கொஞ்சத்தை தமிழருக்குன்னு கொடுத்தா இந்த உலகம் என்ன சுருங்கியா போயிடும்????  “

“தோ பார், இதலாம் என்கிட்ட வாணாம், முதல்ல நீ சட்டையில இருந்து கையை எடு, எடுய்யான்னா!!!!!!!! நான் என்ன டை கட்டிக்குனு தனியா உட்கார்ந்திருக்கேன்னு நினைச்சியா??? நான் மோசமானவன் பார்த்துக்கோ. ஒரு போன் பண்ணா போதும் தெருவெல்லாம் ஆட்டோ வந்து நிக்கும் பார்க்குரியா, பார்க்குரியா..” அவர் எகுறி குதித்தார் வானத்திற்கும் பூமிக்குமாய்.

“ச்சி … அற்ப மனிதனே” வாயாற சொல்லியே விட்டேன்.

“என்ன அற்ப மனிதனே???????? நீ என்ன தெய்வ பிறவியா? எவன பத்தியோ சொன்னா உனக்கேய்யா இப்படி கோபம் பொத்துக்குனு வருது? இப்படி எவவனுக்கோ வக்காலத்து வாங்கித் தான் தமிழ்நாடு இப்படிக் குட்டிச்சுவுரா போயிடுச்சி”

அவர் கோபப் பட்டாலும், ஒருபுறம் மிகக் கலவரப் பட்டும் போனார். சட்டையைப் பிடித்திருக்கக் கூடாது தான். வயதானவர் வேறு. கோபத்தாலா அல்லது பயத்தாலா தெரியவில்லை, கைகால் சற்று படபடத்து ஆடியது அவருக்கு. பேச வார்த்தைகள் முழுதாக வராமல் சட்டையை பிடித்துவிட்ட அவுமனத்தில் மட்டும் கொதித்துப் போனார்.

ஒரு சிறு  அறை,  ஒரு கணினி மட்டும் வைத்துக் கொண்டு தூரத்திலிருக்கும்  விமான போக்குவரத்து அலுவல்கள் மூலம் தொடர்பு கொண்டு, உள்ளூரில் கொஞ்சம் கூடுதலான விலை வைத்து, விமானப் பயண சீட்டு பதிந்தும் வாங்கியும் கொடுத்து தொழில் செய்யும் ஒரு சாதாரண லட்சியமே இல்லாத ஒரு மனிதர் இவர். இவருக்கு என் ஈழம் சார்ந்த பேச்சு அத்தனை ஈடுபாடினைத் தரவில்லை என்பது முன்பிளிருந்தே புரியாமலில்லை. என்றாலும், பேச்சுக்கு பேச்சு விடமுயாமல் சட்டை பிடிக்கும் வரை போச்சே என்று எண்ணினேன். கடைக்கு வந்ததும் வா சத்யான்னு வாஞ்சையா வரவேற்று வீடு சவுகரியம் விசாரித்து, உடனே ஓடி போய் தேனீர் வாங்கி வந்து, மேஜை மேல் இருக்கும் மின் விசிறியை கூட என் பக்கம் திருப்பி வைக்கும் மனிதர்.

வருமானம் குறைவு, வந்ததை தின்று காலத்தை போக்க கணினியும் ஒரே ஒரு டை’யும் கட்டிக் கொண்டு சோத்துக்கு நாட்களை கழிக்கும் பிழைப்பு. நான் வேறு இடையில் வந்து சட்டையை பிடித்து மிரட்டி விட்டதும் அவரால் தாள முடியவில்லை. அவரை என்னுடைய கோபம் சற்றிற்கு அதிகமாகவே பாதித்திருக்கவேண்டும் போல் தெரிந்தது. படபடத்துப் போனார். கோபத்தில் பயத்தில் கண்கள் கொஞ்சம் சிவந்தே போனது.

கொஞ்ச நேரம் அவர் விருப்பத்திற்கு வாய்க்கு வந்தவாறு ஏதேதோ பேசினார். நான் அதை செய்வேன் இதை செய்வேன், குத்திப் போடுவேன் வெட்டிச் சாய்ப்பேன் என்று குதித்தார். நான் சற்று யோசித்தேன், அவரின் அவஸ்தையை பார்த்து சுதாரித்துக் கொண்டேன்.

ஆரம்பமே தெரியவில்லை அவருக்கு, ஈழம் என்றாலே என்னவென்று தெரியவில்லை அவருக்கு.  என் உறவுகள் என்றாலே யார் என்று கேட்கும் ரக மனிதர்.

இலங்கைப் பிரச்சனை தானே’ என்று தெரிந்தவர்களுக்கு, ஈழம் என்று தெரியாதவர்களுக்கு, ஈழம் அந்நியமாகத் தானே இருக்கும்.

பிறகு, இவரிடம் கோபப் பட்டு பயனில்லை. நான் செய்ததுதான் தவறு. அவர் பாவம். இப்படி தவித்து போனாரே!!. நான் தான் உணர்ச்சிவயப் பட்டுவிட்டேன் என்று நினைத்துக் கொண்டு, என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு –

அவர் கத்தியடங்கும்வரை அவர்முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டேன். அவர் வெளியே போய் ஒரு ஐந்து நிமிடம் கழித்து வந்து என் எதிரே நின்றார். நான் எழுந்து நின்று அண்ணா மனதார மன்னித்து விடுங்கள் என்றேன்.

அதற்குள், சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தெல்லாம் ஓடிவந்து கதவுதிறந்து என்ன என்ன என்றார்கள். அதலாம் ஒன்றுமில்லை நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்றார்  அவர். அப்போ தான் அவரை புரிந்தது. அவர் வேண்டுமெனில் இவன் இப்படி செய்தான் சட்டையை படித்து அடித்தான் என்று சொல்லி இருக்கலாமே, செய்யவில்லையே.

நாம் தான் அவசரப் பட்டுவிட்டோமோ என்று எண்ணி, அமைதியாக அவரையே பார்த்தேன். அவர் என்னையே பார்த்து முறைத்தார்.

“பரவாயில்லைண்ணே விடுங்கண்ணே..” என்றேன்.

“என்ன விடுங்க??????????????? லண்டன் போயிட்டு வந்துட்டா பெரிய்ய்ய்ய மயி…..ரா நீ” அந்த அரை காந்துக் கேட்கும் அளவிற்குக் கத்தினார். மீண்டும் கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன்.

“கோபப் படாதீங்க உட்காருங்க. உட்கார்ந்து பேசுங்க”

“சட்டைய புடிக்கிற.. அடிக்க வர.. நான் யாரு தெரியுமா???????????”

“தெரிஞ்சிடுச்சி. தப்புதாண்ணே சொல்றேன்ல. வேணும்னா ஒரு அடி அடிச்சிடுங்க மனசாரட்டும். அண்ணன் தானேன்னு நினைச்சிக்கிறேன்”

அப்படி சொன்னது தான் தாமதம், மனுஷன் உருகிவிட்டார்.

“இப்படிப் பேசையில மட்டும் அண்ணன்னு சொல்ற, அப்புறமா சட்டையை புதிப்ப”

“இல்லைண்ணே இனி செய்ய மாட்டேன் தப்புதான்.., மன்னிச்சிடுங்க”

உண்மையிலேயே நான் பணிவா பேசியது அவருக்கு கொஞ்சம் அமைதியை தந்ததுபோல். சற்று மௌனமாகி என்னையேப் பார்த்தார். வேகமாக வாங்கிய மூச்சு மெல்ல மெல்ல சமாதானம் கொண்டது.

நானே லேசாக புன்னகைத்தவாறு “சரிண்ணே, பயண சீட்டு கிடைக்குமா கிடைக்காதா? கேளுங்க நான் புறப்படனும்” என்றேன்.

“கிளம்பு கிளம்பு.. உனக்கு சீட்டெல்லாம் கிடைக்காது.. நீ போகலாம்”

“மன்னிச்சிடுங்கண்ணே. தவறுதான். உங்களிடம் கோபப் பட நியாயமில்லை. தமிழருக்கு தன் தமிழ் இனத்து உறவுகள் பற்றி முழுமையாக தெரியாத கதை’ என்னவோ; ஆங்கிலம் தெரியவில்லை என்று ஒரு தமிழ் மாணவனை தமிழ் ஆசிரியரே அடிப்பதற்கு சமமாக, ஆகிவிட்டது. அத்தனை நாம் ஈழத்திலிருந்து அந்நியமாகி விட்டோம்.

தமிழருக்கு தமிழரையே அந்நியமாக்கும் ஓர் அரசியல் சூழ்ச்சி சூழ்ந்த தேசத்தில் வளரப் பட்டுவிட்டோம். அதற்குத் தக்க நம் மண்ணைப் பற்றிக் கூட நமக்கு சரியாக தெரியாத ஒரு வரலாறே நமக்குப் பாடமாக்கப் பட்டுள்ளது. பிறகு, உங்களைப் போன்றோரிடத்தில் கோபப்பட்டு மட்டும் பயனில்லை தானே? ஒரு தலைமுறை மாறிப் போனப் பிறகு எல்லாம் மறக்கடிக்கவும், மறைக்கவும் பட்டுவிடுகிறது. பிறகு, உங்களிடம் இத்தனை உணர்ச்சிவசப் பட்டிருக்கக் கூடாது தான். தப்பு தான்ணே. நான் அபப்டி நடந்திருக்கக் கூடாது தான்”

மன்னிப்பென்ற வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி!! தன் தவறு தான் என்றதும், அவர் சற்று நிமிர்ந்து அமர்ந்தார். மன்னித்துக் கொள்ள கேட்டதும் ‘அட ஏம்பா என்பது போலும், அவர் என்னை என்னவோ, ஒரு குற்றவாளியை மன்னித்து விடும் நிரபராதி போலவும், அதேநேரம் சற்று உருக்கமாகவும் பார்த்தார்.

“சட்டைய பிடிச்சியா, அதான் கஷ்டமா போச்சி, ஒரு பைய இங்க என்னைய இப்படி செய்ய மாட்டான் தெரியுமா” என்றார்

“தப்பு தான்ண்ணே, விடுங்கண்ணே”

“யார்னா பார்த்திருந்தா என் மானம் மரியாதை என்னாயிருக்கும்???”

“க்குக்கும்…. பெரிய…..” என்று மனதில் எண்ணி நிறுத்திக் கொண்டேன்.

“மன்னிச்சிக்கண்ணே”

“சரி.. சரி.. விடுங்க.. அதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு..”

“வயசுல பெரியவரு தான்-னாலும் தேசத்தை பத்தி குறையா சொல்லிடவே.. கொஞ்சம் கோபமாயிடுச்சி”

“பாத்தீங்களா, இப்பயும் அதை தான் தேசம்னு சொல்றீங்க. மறுபடிக்கும் என்னையே முட்டாளாக்குறீங்க பாருங்க.., நாம இந்தியரு அவங்க இலங்கைங்க.”

இப்போ என்ன செய்வது இவரை????

யோசித்து வையுங்கள். நாளை எழுதுகிறேன்…
————————————————————————————————-
(தொடரும்)

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கொழும்பு வழியே ஒரு பயணம், நாவல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 5)

  1. யோகா.எஸ் சொல்கிறார்:

    அன்பான உறவுக்கு ஈழத் தமிழனின் கோடி வணக்கங்கள்.இது வரை காலமும் இப்படியொரு பதிவர் இருப்பதே தெரியாதிருந்தது.என்னை விடவும் அதிகமாகவே ஈழத்தை நேசிக்கும் உங்கள் உள்ளம் பல்லாயிரம் மடங்கு மேலானது!சிறியவனின் நன்றியும் வணக்கமும் உயிருள்ளவரை நீடித்திருக்கும்!நன்றி,நன்றி,நன்றி!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      என் அன்புறவிற்கு மின்ன நன்றியும் வணக்கமும். தொடர்ந்து படித்து வாருங்கள். கருத்து தெரிவியுங்கள். தவறோ வரலாற்றுப் பிழையோ இருப்பின் எடுத்துக் காட்டுங்கள். மாற்றத் தக்கதெனில் மாற்றிக் கொள்வோம். இது ஒரு கதைவடிவம் மட்டுமே, என்றாலும் உணர்ந்த அறிந்த உண்மைகளை உலகறிய செய்யும் முயற்சி… பார்ப்போம்.. கடவுள் செயல்; எல்லாம் நன்மையாகவே முடியும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது!!

      Like

  2. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 4) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

  3. munu.sivasankaran சொல்கிறார்:

    மிகவும் சிந்திக்கவேண்டியதுதான்…அவரைப் போன்றவர்களை குறைக் கூறிப் பயனில்லை.நாமே நம் வரலாறைப் படித்ததில்லையே.. .!

    கனிஷ்கர் வரலாறும் அலெக்சாண்டர் வரலாறும்,அக்பர் வரலாறும்தானே பள்ளிப்பாடத்தில்கூடப் படித்தோம்.! தமிழக வரலாறைப் பற்றி எங்கே முழுதாகப் படித்தோம்?

    எந்த தமிழச்சி சோழனைப் பற்றியும் பாண்டியனைப் பற்றியும்
    தாலாட்டும் போதும் பாலூட்டும் போதும் தன் பிள்ளைகளுக்கு கதையாகக் கூறி வீரத்தை ஊட்டினாள்..?

    இதிகாசக் கதைகளைக் கூறிக் கூறித்தானே இனமானம் குறைத்தாள்…! எத்தனை தலைமுறைகளாக
    இப்படி முனைமழுங்கடிக்கப் பட்டோம்…? மிகவும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்….! நன்றி..!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றிகளையா! உங்கைப் போன்றோரால், உரசும் குச்சியின் தீப்பொறியாக எழும் சிந்தனைகளால் உடனிருப்பவர்களும் விழித்துக் கொள்ளட்டும்! கருத்தினால் பலம சேர்த்தீர்கள் நன்றி!!

      Like

  4. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 6) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

  5. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 4) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s