கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை – 7)

இதற்கு முன்..

அவர் உணர்வுகளால் தகித்திருந்தார்.

“தலையை எல்லாம் கொடுக்க வேண்டாம்ண்ணே. தலையை பயன்படுத்தனும். அவர்களின் விடிவிற்கு எது சரின்னு பார்க்க ஒரு தலைமையை தேர்ந்தெடுத்து, எந்த அரசியல் நிறமும் சேர்த்துக் கொள்ளாத ஓர் தலைமையின் கீழ் நின்று; அவசியமெனில் எல்லோரும் புறப்படத் தயாராகனும்.

அப்படி ஒரு தலைமை வேண்டுமே முதலில்!! என்று யோசனை வரலாம், வருமெனில்; போகும் நூறு பேரில் ஒருவரை தேர்ந்தெடுப்போம். உடனிருக்கும் ஆயிரம் பேரில் ஒருவரை நம்பி நிற்கவைப்போம். அவர் கீழ் பணியாளனாக நிற்பதற்கு பதிலாக இணையாக நின்று தோள் கொடுப்போம்.

தோள் கொடுப்போர் அவருக்கு நிகராக நின்று சிந்திப்போம், எது நம் தமிழரின் மதிப்பினை கூட்டுமோ, எது நமக்கு நம் செல்வாக்கினை, நிலையான ஒரு பிடி மண்ணினை மீண்டும் பெற்றுத் தருமோ, அடிமை நிலையிலிருந்து எது நம்மை நிலைமாறச் செய்யுமோ, இரண்டாம் பட்ச இடத்தை தூக்கி எறிந்துவிட்டு தனக்கான சுதந்திரத்தோடு வாழ,  எந்த நிலைப்பாடு  நம்மை மாற்றித் தருமோ, வாழ்விக்குமோ, நம் விடுதலைக் காற்றினை சுவாசிக்க எது தக்க வழிவகையின செய்யுமோ; அதற்கென சிந்திக்கனும். புதிய உத்திகளோடு நாம் நம் பழைய இடத்தினை அடையனும். அதற்கு தலை வேணும்ண்ணே”

“அப்போ நாமோ பழையமாதிரி இல்லாம மாறிட்டோம்ங்றியா?”

“கண்டிப்பா. நிறைய இடத்தில் நாம் மாறிவிட்டோம். எத்தனை அந்த மாற்றம் நமக்கு நல்லது செய்கிறது, கெட்டதாக அமைகிறது என்பதை விட, அதனால் நாம் இழந்தவை எத்தனை, என்னென்ன என்று யோசித்தால் கவலை வந்துவிடுகிறது.

எப்போ; வெள்ளைக்காரனின் வாழ்க்கை நமக்கு உயர்வாக பட்டுவிட்டதோ; அன்றிலிருந்தே சிறுமை பட்டுப் போனோம்ண்ணே. ஆங்கிலத்திற்கு ஆசைப் பட்டு தமிழை விற்கும் கயமைத் தனத்தை வேறெந்த இனமும் இத்தனை வேகமாக செய்திருக்காது.

வாட்சை தமிழென்றும், பக்கெட்டை தமிழென்றும், ஷூவை தமிழென்றும், லோன் தமிழென்றும், கரண்ட் தமிழென்றும், லெட்டர் தமிழென்றும், லெப்ட்டும் ரைட்டும் சரியென்று நினைத்தும் வளரும் குழந்தைகளுக்கு கைகடிகாரம், வாளி, பாதுகை, கடன், மின்சாரம், கடிதம், இடது, வலது என்று சொல்லித்தந்தால் என்ன மானம் குறைந்தா  போய்விடும்?

ஆனால், இனி ‘எல்லோரும்’ அப்படி தெரிந்துக் கொள்ளவோ பழக்கி விடவோ தூய தமிழில் பேச தன்னை தயார்படுத்தவோக் கூட மீண்டும் ஒரு பிறப்புதான் தேவை என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டதே; அது நம் குறை தானே???

தொலைக்காட்சி நாம் கண்டுபிடிக்கவில்லை போகட்டும், ரேடியோ நாம்கண்டு பிடிக்கவில்லை போகட்டும், கார் பஸ்சு ஏரோபிளேன் நாம் கண்டுபிடிக்கவில்லை போகட்டும், நன்றி வணக்கம் மன்னிப்பு போன்ற சொற்கள் கூட அற்றுப் போன ஓர் இழி பிறப்பா நாம்?

வாட்ச் கட்டு, டீ.வி போடு, போன் கொடு, பக்கெட்ல ஊத்து, அண்ணாக்கு பாய் சொல்லு, மாமாக்கு கிஸ் பண்ணு…னு’ இப்படி ஆங்கிலத்தை கலந்து கலந்து மழலையில் சிரிக்கும் பார்க்கும் தவழும் போதிலிருந்தே நாம் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை கெடுத்துவிட்டால், பிறகு தமிழில் இதற்கெல்லாம் என்ன வார்த்தையென்று எப்படி அவர்களுக்கு சரியாக தெரியவரும்ண்ணே?”

“ஏன்பா அதுக்குன்னு தொலைபேசியில் பேசு, மகிழுந்தில் போ’ கார்மேகம் சூழ்ந்து மழை பெய்யும் நேரம்’ என்றெல்லாம் பேசினால்; கேட்கிறவன் சிரிப்பானேப்பா!!!”

“சிரிக்கிறவனை அடிக்கனும்ண்ணே………., தமிழரிடத்தில் தமிழில் பேசினால் ஒருத்தன் சிரிப்பான்னா அவனை உதைக்கனும். ஆனால் அவனை அடிக்கும் முன்னாடி யோசிக்கவும் செய்ய வேண்டிய கட்டாயவாதிகள் தான் நாமெல்லோரும். காரணம், அவனை அப்படி வளர்த்ததே நாம் தானே???

பிறகு சிரிக்கிறவனை திருத்துவதும் நம் கடமை இல்லையா? சிரிக்கிறவனை சிரிக்கிறவனுக்கு புரியவைத்துவிட்டால் பிறகு சிரிப்பனா?

தெருவுல குடிச்சிட்டு விழுந்து புரளும் போது சிரிக்குதே மக்கள், குடிக்கிறதை விட்டுட்டோமா? அடுத்தவன் ஒரு இனத்தையே அழிக்கிறான், உலகமே தமிழகத்தின் மௌனத்தை எண்ணி சிரித்ததே; பொங்கி எழுந்துட்டோமா? பிறகு இதுக்கு மட்டும் எங்கிருந்துண்ணே வந்தது மானமும் வெட்கமும் அசிங்கமும்???

தமிழன் தமிழில் பேசினால் ஒருத்தன் சிரிச்சான்னா அவன் சிரிக்கட்டும், அவனை முட்டாள் என்று எண்ணிவிட்டு போவோம்ண்ணே.

ஒரு ஆங்கிலம் பேசும்போது இடையில் தமிழில் பேசுறோமா? ஹிந்தி பேசுகையில் இடையில் தமிழில் பெசுறோமா? பிறகு தமிழில் பேசுகையில் ஆங்கிலம் கலந்துப் பேசுவது மட்டும் எப்படி அழகும் நாகரிகமும் ஆனது?

கேட்டால், ஆங்கிலமே பேசலைன்னா உச்சரிப்பு வராதாம். வராதுதான். அதற்குத் தனியே அமர்ந்து ஆங்கிலத்தில் மட்டும் பேசி பயிற்சி எடு. ஏன், தமிழரிடம் தமிழில் பேசிவிட்டு தனியே ஆங்கிலத்தில் பேச அவசியம் ஏற்படும் போது, துல்லியமாக தெளிந்த ஆங்கிலத்தில் பேசு; யார் அதை மறுப்பார். அதைவிடுத்து; தமிழில் ஆங்கிலம் கலந்து பேசிவிட்டு பின் தமிழுக்கே தமிழன் பயிற்சி எடுப்பது என்பது எத்தனைப் பெரிய குறை இல்லையா நமக்கு?

மொழி என்பது முக்கியம்ண்ணே. ஒரு இனத்தின் உயிர், மொழி தான். மொழி தான் நம் அடையாளம். தாய் மொழியை தாய்மொழியாக மட்டுமே கருதனும். தமிழனாகிய என் தாய்மொழி தமிழ் மட்டும்தானேத் தவிர, தமிழும் ஆங்கிலமுமல்ல’ என்று உறுதியினை மனதில் கொண்டு, தமிழரிடத்தில் பேசுகையில் நாம் தமிழில் மட்டுமே பேசவேண்டும்.

ஏன் பேசாவிட்டாலென்ன? தமிழ் பேசாவிட்டால் என்ன சோறா கிடைக்காது என்றெண்ணுகின்றனர் சிலர். சோறு கிடைக்கும், அதைத் தின்னும் நாம் தமிழராய் தின்னமாட்டோம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்று புரியாத வரை; தமிழர் தன்னை ஆதிப் பெருமைக்கு உரிய முதல் மனிதராய் எக்காலத்திலும்  அடையாளப் படுத்திக் கொள்ளப் போவதில்லை.

பல மொழி கற்றவன் பல மனிதனுக்கு சமம் என்பார்கள். வரவேற்போம். ஆயிரம் மொழி கற்போம். அந்தந்த இனத்தவரிடம் அவருடைய மொழியில் பேசுவோம். அதற்கு முன் தமிழரிடத்தில்; தமிழில் பேசுவோம்ண்ணே…

தேங்க்ஸ் என்று பல முறை சொல்லும் இடத்தில் நன்றி ஐயா, நன்றி மணி, நன்றி துரை என்று சொல்லிப் பழகட்டுமே; பற்களா கொட்டிப் போகும்?

‘சாரி’ சொல்லச் சொல்ல சாரி சொல்லத் தயாராகிறான் ஒவ்வொரு தமிழனும். மன்னித்து விடச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள்; செய்த தவறுக்காய் வெட்கி நாணிப் போவீர்கள்.

தவறுகள் திருத்தப் படனும்னா தவறை எண்ணி வெட்கப்படனும் வருந்தனும். தனை திருத்திக் கொள்ள அறிவு மனசை உறுத்தனும். தவறு செய்யக் கூடாதேன்னு உள்ளே உரைக்கனும். அப்படி உரைக்கனும்னா மன்னித்துக் கொள் என்று சொல்லிப் பாருங்கள்.

தவறு நிகழும்போதெல்லாம், மன்னித்துக் கொள் என்றே சொல்லுங்கள். அப்படி ஒவ்வொரு முறை சொல்லும் முன்பும் இனி சொல்லக் கூடாதென்றும் யோசிக்கத் தயாரவீர்கள். அப்படி யோசிக்கும் இடத்திற்கு மொழி நம்மை அழைத்துச் செல்கிறது. தமிழரினம் தமிழராய் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டுமெனில், முதலில் நாம் தமிழராய் நம் இன உணர்வோடு பண்பு மாறாது வாழனும்ண்ணே..”

“பண்பு மாறாம வாழனும் தான், ஆனால், எவன்பா வாழறான்?”

“யாரும் இதில் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்தோ அல்லது குற்றம் சொல்லியோப் பயனில்லை. பிறரை கைகாட்டும் முன் தன்னை பற்றி மட்டுமே ஒவ்வொரு தமிழரும் சிந்திக்கவேண்டும். இது ஒரு காலநகர்தலின், வளர்ச்சி வேகத்தின் இடையே இடைசொருகளாய் நிகழ்ந்துவிட்ட குற்றம். ஆனால் அந்த காலநகர்த்தலின் குற்றத்திற்கு நாமும் காரணமானோம் என்பதே வருந்தத் தக்கது.

கடைசியாய் வெள்ளைக்காரன் விட்டுப்போகும் போது எல்லோரையும் இந்தியர்னு சொல்லிப் பிரித்து, தனியே இலங்கைன்னு சொல்லிப் பிரித்துச் சென்றதில்லாமல், அதற்கு முன்னதாகவே; சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட தேசத்தை,  பின் களப்பிரர்கள், களப்பிரர்களுக்குப் பின் பல்லவர்கள்,  பல்லவர்களோடு இடையாக சாளுக்கியர்கள்விஜயநகர பேரரசுகள், மொகலாயர்கள், மராட்டியர்கள் இடையே வந்து வந்துப் போன டச்சுக் காரர்கள், போர்ச்சுக் கீசியர்கள், பிரெஞ்சு காரர்கள் என்று கொஞ்சம் கொஞ்சம்னு; அவரவர் பங்குக்கு அவரவர் புகுந்து, நான் தான் நாட்டுக்கு ராசான்னு நடந்து போன பாதையில் விழுந்த நம் வீரதீரத்தால், நேரிட்ட மாற்றங்களால் நமக்குள் புது விதைகள் பல நன்மையையும் தீமையுமாய் இரைக்கப் பட்டுவிட்டது.

ஆனால்; அவைகளிலிருந்தெல்லாம் விலகி நின்று நாம் யார்? எப்படி வாழ்ந்தவர்கள்? எங்கு நிற்கிறோம்? இனி எப்படி வாழப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டிய பிறப்பு நம் தமிழ் பிறப்பில்லையா?

270  வருடம் நம்மை முழுமையாய் அடிமை படுத்தி ஆண்ட வெள்ளைக் காரானிலிருந்து எல்லாருக்குமே சென்னைனா வசதியான துறைமுகம் மட்டிமில்லாம  தமிழ்நாடுன்னா வரப் போக வெல்லம் மாதிரியாச்சே!! இவுங்களுக்கு மத்தியிலெல்லாம் நம்ம பண்பும் வாழ்க்கை முறையும் பேச்சு வழக்கும் சற்று மாறத் தானே செய்யும், ஆனால் முற்றும் மாறிவிடுவது தவறில்லையா?

இதுல சமஸ்கிருத கலப்பு, வடமொழி திணிப்பு, ஆங்கில ஆசைன்னு நம்மள சற்று ஒழுங்கும்; நிறைய நாசமும் பண்ணின சக்திகள் நம்மை கடந்து போகவில்லை, தமிழினத்தை தந்திரமாய் மிதித்துப் போயிருக்கிறது..

இதுல வேற தெலுங்கு, சவ்ராஸ்ட்ரம், மலையாலம்னு எல்லாம் சேர்த்துக் குழப்பி நம்ம அடையாளத்தையே நாம் மெல்ல மெல்ல நமக்கே தெரியாமல்; மொழி, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வின் தேவை, தேடுதல்கள் என எல்லாவற்றிலுமே முறைகேடான மாற்றத்தை சந்திக்கும் நிலைக்கு ஆட்பட்டுவிட்டோம்.

என்ன ஒன்னு, என்னதான் யார் வந்து யார் போனாலும் கடைசியா எப்படியோ தமிழர்கள் வாழும் பகுதியென;  தமிழ்நாடுன்னு ஒரு பேரு மட்டுமே நமக்குன்னு மிச்சப் பட்டிருக்கு. ஆனால், அதற்கு வைக்கப்பபட்ட பெயர் பலகைகள் கூட ஆங்காங்கே ஆங்கிலத்தில் வைக்கப்படுகிறதே; அதை பற்றியேனும் சிந்திக்கவேண்டாமா??!!!

“நம் இனத்தை பற்றிச் சிந்திக்க இவ்வளவு தகவல்களை வைத்துக் கொண்டு வெறும் டிக்கெட் மட்டும் இல்லை இல்லை பயணச் சீட்டினை மட்டும் போட்டுக் கொடுத்து காலத்தை கழித்து விட்டேனே சத்யா? சரிப்பா; வேற யாராவது வரதுக்கு முன்ன “ஸ்ரீலங்கா பத்தி சொல்லேன், வேற கஸ்டமர் யாராவது வந்துடப் போறாக..”

“வேறென்னண்ணே, நாம வாழ்ந்த மண்ணு, அதில்லாம நாம் வியர்வை சிந்தி உருவாக்கின மண்ணு, அதை நாம தான் காக்க வேணும், அதுக்கு என்ன வழின்னு பார்க்கணும்”

“அதென்ன உருவாக்கின மண்ணு? “

“ம்ம்.., அங்கே நாம் உருவாக்கின மண்ணும் இடங்களும் கூட உண்டுண்ணே. அது நாம் வாழ்ந்த இடம் என்பதில்லாம காட்டினை அழித்து உருவாக்கின உழைப்பும் அந்த மண்ணில் உண்டுண்ணே.., இந்த நூற்றாண்டுல சுதந்திரம் வேண்டி ரத்தம் சிந்தினோம், இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் ரத்தத்தை வியர்வையாய், உயிராய் – விட்டு ஊர் அமைத்து, விவசாயம் செய்துக் கொடுத்தோம். எல்லாவற்றையுமே செய்தோம்; இழந்தோம்; இழந்ததை எவனோ அனுபவிக்க, தமிழர் ஏமாளியாயினர்”

“அதை பத்தி சொல்லுங்களேன்…?
—————————————————————————————————————
தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கொழும்பு வழியே ஒரு பயணம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை – 7)

  1. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 6) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

  2. munu.sivasankaran சொல்கிறார்:

    சீரிய தேடல்… ஒரே இடத்தில் நின்றுவிடாமல் கதைப்போக்கிலேயே கூறிச்சென்றால் இன்னும் சிறப்பாய் அமைந்துவிடும்..!

    அருமையான முயற்சிக்கு பாராட்டுக்கள்..!

    அடுத்த நாளுக்கு ஆர்வத்தை தூண்டுங்கள்…நன்றி..!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி ஐயா. கதைபோக்கு முடிவு செய்யப் பட்ட படியே எழுதப் பட்டு வருகிறது, வெளியில் பரவலாக தெரியாத சில வரலாற்றுப் பக்கங்களையும் கடந்து நம் கதையினை நகர்த்தும் எண்ணம், விரைவில் திருப்புமுனைக்கு வருவோம். தங்களின் தொடர் கருத்தளிப்பிற்கு நன்றி.. ஆர்வம் கூட்ட முயற்சிக்கிறேன்!!

      Like

  3. faizakader சொல்கிறார்:

    தமிழ் குடும்பம்.காமில் எழுதுவது நீங்கள் தானா…?
    அருமையான முயற்சிக்கு பாராட்டுக்கள்..!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் தோழமை. நம் சம்மதத்துடனே மட்டுமே நம் விருப்பத்திற்கிணங்கவே அங்கு நம் பதிவுகள் இடப் படுகிறது. தெரிவிப்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றியும் மகிழ்வும் கொண்டேன்..

      Like

  4. arul சொல்கிறார்:

    அதிர்ச்சித் தகவல்: கேரளாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்!

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_15.html

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      இப்பதிவு சார்ந்த கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் அல்லாது; உங்களின் சுய படைப்புக்களின் விளம்பரத்திற்கென்றோ தெரிவிப்பதற்கென்றோ பதிவதெனில், ‘நீங்களுமிங்கே கவிதை எழுதலாம்’ என்றொரு பக்கம் உண்டு அங்கே பதிந்துக் கொள்ளுங்கள். தங்களின் இன உணர்வு மிக்க ஆக்கங்களை உங்களின் வலைப் பக்கத்தில் கண்டேன். புரிந்துணர்விற்கு மிக்க நன்றி!!

      Like

  5. வித்யாசாகர் சொல்கிறார்:

    // அன்பிற்குரிய தம்பி விஜய் ஆனந்த் எழுதியது: தமிழினத்தை
    தந்திரமாய் மிதித்துப் போயிருக்கிறது//அழகாகவும் ஆழமான சிந்தனைனை தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது மிக்க நன்றி அண்ணா..//

    நல்லதுப்பா. ஒவ்வொரு வார்த்தைகளையும் பார்த்து பார்த்துக் கோர்கிறேன். கோர்க்கப் பட்டதெல்லாம், உங்களைப் போன்றோரின் வாய்வழி வார்த்தையில் மட்டுமே மாலையாகிறது.. விஜய்!!

    Like

  6. வித்யாசாகர் சொல்கிறார்:

    //ஆசிரியை உமா எழுதியது: மிக அருமை! தெளிவான சிந்தனைக்கு வழி வகுக்கிறது. நன்றி! தொடர்ந்து படிக்கிறேன் ..//

    மிக்க நன்றி உமா. கருத்து பகிர்வு என்பது நல்ல படைப்பு செறிவினை கொடுக்கும், என்றாலும் நம்மாலே பிறரை மேம்படுத்த இயலாமையில் யாரிடம் போய் கருத்து கூறுங்கள் என்று கேட்க?

    இருப்பினும், இது ஒரு இனத்தின் மாற்றத்தை நோக்கி எழுதும் பதிவு. உறவுகள் தன கருத்துகளைப் பதிந்துக் கொள்வின், இன்னும் படைப்பின் மெருகு கூடலாம்.

    உங்கள் அனைவரின் அன்பிலும் வாழ்த்திலும் மட்டுமே நன்றியுடன் – மிளிரவும் வளரவும் செய்பவனாகிறேன்!!

    Like

  7. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை – 8) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

  8. nalayini thiyaglingam சொல்கிறார்:

    தமிழர்கள் ஒவ்வோருதரும் தமிழில் பேசினாலே தமிழ் இனம் அழியாமல் இருக்கும் .அருமையான அறிவுரை….!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s