“ஏன் நான் உங்களை தொல்லை செய்கிறேனா?”
“ச்ச ச்ச.. போயிட்டு வாங்க, நான் அங்கிருக்கிறேன் பேசுவோம்” கழிவறை கதவு மூடிவிட்டு வெளியே வந்தேன்.
அவள் முகத்தை சோகமாக வைத்தவாறு என் பின்னே வந்து “நான் உங்களை காணோமே என்றுதான் வந்தேன், வாருங்கள் போவோம்” என்று சொல்லிவிட்டு என்னுடனே வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
ஓரிரு நிமிடம் மௌனமாக அமர்ந்திருந்தோம், ஜன்னல் பக்கம் தெரிந்த வெண்பஞ்சு போன்ற மேகங்களையும், எதிரே விமானத்தினுள் இருக்கும் தொலைக்காட்சி மற்றும் ஆங்காங்கே விமானத்தினுள் எழுதப் பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்களையுமெல்லாம் பார்த்துக் கொண்டே அவள் பக்கம் திரும்பினேன் –
“ஏன்.. கழிவறைக்குள் சென்று அழுதீர்களா?” என்றாள்
“அழக் கூடாதென்று முடிவெடுத்து வந்தேன்” என்றேன்
“அதானே பார்த்தேன், தமிழகத்தில் உள்ளவர்கள் எங்களுக்காக அழுதிருந்தால் எங்களின் கண்ணீர்தான் என்றோ துடைக்கப் பட்டிருக்குமே…?”
“பார்த்தீர்களா, இது தான்.., இதுதான் நம் பெரிய குறையே!! நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு. தமிழகத்தை நீங்கள் மேம்போக்காக பார்க்கிறீர்கள். தமிழகம் பலமடங்கு பெரிய மாநிலம். தனி நாட்டுத் தகுதியுள்ள ஓர் மக்கள் சக்தியும் பரப்பளவும் கொண்ட மண் அது. உலக தமிழர்களின் தாய்நிலம், ஆனால் நல்ல அரசியல் வாதிகளை தேடியே தன் தனித் தன்மையினை இழந்துக் கொண்டுள்ளது என்பது தான் வருத்தத்திற்குரிய நிலை.
அப்படியே மீறி உள்ளிருக்கும் அரசியல் வாதிகளே துணிந்து போராட வெளிவந்தாலும்; இந்தியா எனும் ஓர் வட்டத்தால் அவர்கள் முடக்கப் பட்டு விடுகிறார்கள். இந்தியா என்று எடுத்துக் கொண்டால் அது பலதரப்பட்ட ஒருதலைப்பட்ச மனநிலையையும், சுய விருவெறுப்புகள் சார்ந்த கோபத்தையும், பாரபட்சம் பார்த்து பிறரை ஒதுக்கி தன்னை வளர்த்துக் கொள்ள முனையும் அரசியல்வாதிகள் மற்றும் அண்டை மாநிலத்தினரைப் பெற்ற கொடிய வட்டமாகவே உள்ளது. மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தும் என்னால் கொடுக்க முடியாதென்று குடிக்கும் தண்ணீரை கூட தன் பக்கமே அணைக் கட்டி மடக்கிக் கொள்ளும் அற்ப பதர்களுக்கு மத்தியில் ஆளுமொரு வாழுமொரு நிலை தமிழகம் சார்ந்த நிலை.
தமிழர்கள் இப்படி முழு ஆதரவில்லா ஓர் நிலையில் ஆதரவினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய, போராடிப் பெறவேண்டிய அரசியல் தலைவர்களோ சுயநலப் புழுக்களாகவும், தூக்கிவீசப் பட்ட தன்பங்கிற்கான உடமைகளை தூக்கிக்கொண்டும் திரியும் சுயனலமிகளாகவோ இருக்க, இவர்களை நம்பியே தன் உரிமையினை தொலைக்கும் ஒற்றைத் தவறில்; தமிழக மக்களின் பார்வையிலிருந்து முழுதாக அறியப் படாமல் அந்நேரம் மறைக்கப் பட்டுவிட்டது, போர் மற்றும் இழப்பு சார்ந்த செய்திகள் எல்லாம்.
ஏதோ சண்டை என்று அறிந்தவர்களால்; ஏன் சண்டை எதற்கு சண்டை, யாருக்கு இழப்பு, என்ன செய்யவேண்டும் எனும் அடுத்தடுத்த நடவடிக்கைகளையோ தீர்வுகளையோ எடுக்கக் இயலாமல் போனதற்கு; தேவையான விழிப்புணர்வினை ஊடகங்கள் ஏற்படுத்தாமையும், அதற்கு பின்னால் நின்று தக்க பலம் சேர்க்காத அரசியல் தரப்பும் தானே அன்றி ஒட்டுமொத்த மக்களும் அல்லவே அல்ல. அம்மக்கள் இன்றும் ஈழத்து போராட்டங்களை எண்ணி ரத்தம் கொதித்தே திரிகிறது. ஆயினும் –
இப்பொழுதெல்லாம் பாருங்கள்; தமிழருக்கு மத்தியில் வேறு ‘தமிழக தமிழர், ‘இலங்கை தமிழர், ‘மலேசிய தமிழர் என்று பகுதிவாரிய பிரிந்துக் கிடப்பதன்றி அந்தப் பிரிவுணர்வு வேறு வந்துவிடுகிறது. தமிழருக்குள்ளே; தமிழராக மட்டும் நாம் ஒருங்கிணைந்து நில்லாமல்; நமக்குள்ளேயே நாம் குறை சொல்லித் திரிந்து நம் முதுகிலேயே நாம் இட்டுக் கொண்ட பிரிவினை கோடுகள் தான் இன்றும் நம்மை வெவ்வேறு பக்கமாக திருப்பி வைத்துள்ளது என்றேஎண்ணுகிறேன் நான். இதலாம் கடந்து –
‘தன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லையே எனும் வேட்கையில்; என் மக்களுக்காக எதையுமே செய்திட முடியாதவனாக உள்ளேனே எனும் வருத்தத்தில் ‘ஒரு வார்த்தை எதிர்த்துக் கேட்கக் கூட நான் வக்கற்று போனேனே இம்மண்ணில் எனும் வேதனையில், இனி நான் வாழ்ந்து ஆகப் போவதென்ன என்ற ஒரு விரக்தியில், ஈழ விடுதலைக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டு இறந்து போனால் நாலுபேருக்கு அதுவேனும் ஒரு விழிப்பினை ஏற்படுத்தாதா என்று’ தன் உயிரை மட்டுமே விட முடிந்த ஒரு சகோதரன் கூட அதே ஈழத்து மக்களால் அவதூறாக விமர்சிக்கவும் ஏளனமாகப் பேசவும் படுகிறான்.
இருந்தும், அதையும் கூட அவர்கள் வஞ்சிக்கப் பட்டவர்கள், வலியில் பேசுகிறார்கள் என்று சொல்லி, தன்னால் இயன்றதை இனியேனும் செய்வோம் என தமிழ் உணர்வும் இன உணர்வும் நாளுக்குநாள் பெருகி, ஈழம் எம் விடிவு; ஈழம் மட்டுமே எம் லட்சியமென்று தமிழகத்தின் எத்தனையோ தெருக்கள் முழங்கவும், அரசுக்கு எதிராக கூட கொடிபிடித்து பல இளைஞர்கள் ஈழ மக்களின் விடிவிற்கென திரியவும் ஆரம்பித்து விட்டனர். சிறைசென்று போராடவும் துணிந்துவிட்டனர்.
ஓட்டுப் போட செல்கையில் கூட, என் மக்களை காக்காத அரசு ஓர் அரசா? எத்தனை இந்த தமிழகத்திற்கு செய்தாலென்ன அங்கே ஈழத்தில் எம் உறவுகள் கூண்டோடு சுட்டு வீழ்த்தப் பட்டபோது ஏனென்றுக் கேட்க திராணியற்றும், உடன் நின்று உதவும் வேற்று மாநிலத்தவரோடு கைகோர்த்தும் நிற்கும் அரசெல்லாம் எப்படி எங்களின் அரசாகும் என்று கேட்கும் ஒரு எழுச்சிமிகு இளைஞர்களாக இன்றைய சாமானிய இளைஞர்கள் கூட புறப்பட்டு விட்டார்கள்”
“பார்த்தீர்களா, உங்களுக்கே, உங்களின்ட தமிழகத்தை பற்றி ஒரு வார்த்தை சொன்னதும் இத்தனை பேசி, சிபாரிசு செய்து ‘மெச்சிக் கொள்ளும் மனநிலை தான் இருக்கின்றது”
“இல்லை; இது மெச்சுதல் பார்வை இல்லை சகோதரி, எனை நம்புங்கள், இது ஒரு சிநேகமான தன்னிலை விளக்கம். நமக்குள் இருக்கும் பிரிவினை கோடுகளை அகற்றிக் கொள்ள சொல்ல முயற்சிக்கும் விளக்க உணர்வு. காரணம் அவன் அப்படி.., அவன் அப்படியென்று ஒருவர் சொல்வதால் அது நூறு பேருக்கு வலிக்கிறது. அப்படி ஒருவனால் நூறு பேரை குறை சொல்லி சொல்லி தான் நாம் மெல்ல மெல்ல நமக்குள் பெருத்த பிரிவினையினை வளர்த்துக் கொண்டோம்.
ஒவ்வொருமுறை இதுபோன்ற தமிழகத்தை பற்றிய இழிவான சொற்களை வாதங்களை கேட்கையில் படிக்கையில் என்று திருந்துமோ இந்த மக்களெனும் வருத்தமே வரும். வெறுமனே நாலுபேரை கூட்டி ஒருவரை இழிவு படுத்துவதென்பது அத்தனைப் பெரிய கடினமான செயலல்ல. அதனால் இழப்பு என்பது நம்மினதிற்குள் தான் அன்றி வேறில்லை சகோதரி”
“நீங்கள் சொல்வது சரி தான் நமக்குள் வேறு பாடு கூடாது, ஆனால் இது ஒரு பழிச் சொல் கிடையாது, இது எங்கட மக்களின்ட கோபம். அடிப் பட்டு அடிப்பட்டு துடித்தவருக்கு ‘பக்கத்தில் நிற்கும் சகோதர உறவுகள் கூட இப்படி மௌனமாக இருந்து பாதாகம் விளைவித்ததே எனும் வலி; அங்கே வெடிகுண்டு வெடிக்கும் சப்தமும் குழந்தைகள் அலறும் சப்தமும் கேட்க, இங்கே தீபாவளிப் பட்டாசு வெடித்து குதூகலித்துக் கொண்டிருந்ததை தூரமாய் நின்று அறிந்ததன் பேரில் எழுந்த அதொரு ஆதங்கம் அண்ணை”
“மறுக்கவில்லை, அங்கே உயிர்விட்டு துடிக்கும் மக்களை மறந்து ‘மானாட மயிலாட’ பார்க்கும் இழிவுச் செயலென்பது கேவலம் தான், அதற்காக அவர்கள் விழிப்புற்று விடுதலை உணர்வினை தலையில் ஏந்தி, உயிர்விட்டு அலையும் நேரம், நூறுபேரையும் கோழை என்பதோ, ஏளனத்திற்குள்ளாக்கிச் சிரிப்பதோ எட்டு கோடி மக்களையும் அவமதிப்பாகாதா?”
“ஹ்ஹா… பெரிய எட்டுகோடி, எங்கட உயிர்பிரிகையில் இல்லாத எட்டுக் கோடி; செத்துப் பிணமான பின் மேல்விழுந்து அழதென்ன பலன்? அல்லது எரித்துக் கொண்டு தன்னை மாய்த்துக் கொள்வதில் தான் இனி நடக்கப் போவதென்ன?”
“அதை மறுப்பதற்கில்லை, ஈழம் என்றாலே தெரியாத ‘இலங்கை என்று மட்டுமே தெரியும் வரலாறு படித்து வளரும் மக்களுக்கு ஈழத்தின் போர் குறித்த விவரம் கூட தெரியாமல், தன் இன உணர்வுகளைக் கூட பிறர் வந்து புதுப்பிக்கும் அவசியம் என்பது காலமாற்றத்தின் கொடுமையோ அல்லது அரசியல் துரோகத்தின் கேடோ அன்றி வேறில்லை.
என்றாலும், இனியேனும் நாம் சேர்ந்து நிற்போம், நமக்கு மத்தியில் இருக்கும் பழிச் சொல் திரைகளை கிழித்தெறிவோம், பல கைத் தட்டும் ஓசை இதுவென்று உலகிற்கு தமிழர் ஒற்றுமை மூலம் காட்டுவோம் சகோதரி. எனை போன்ற அல்ல; எனை விடவும் மிக நல்ல நல்ல இளைஞர்கள் திறமை வாய்ந்த இளைய சமுதாயம் என்ன செய்வதென்று வழி தெரியாமல் ஈழக் கனவு சுமந்து திரிகிறார்கள் தமிழகத்தில். அவர்களை எல்லாம் சகோதரத்துவமாய் ஒன்றிணைப்போம்.
நெற்கட்டு சுமந்துப் போனாலும் பிரித்துப் பார்க்கையில் நான்கு புற்களின் துண்டுகள் இல்லாமல் இல்லையே; அதுபோல் எண்ணி அக்கறை இல்லா மனிதர் ஓரிருவரை விடுத்து லட்சியத்தோடு கைகோர்க்கும் நிறைய பேரைக் கொண்டு நம் கனவினை வெல்வோம் சகோதரி”
“ஏதோ சொல்கிறீர்கள், உங்கடை பேச்சை கேட்கையில் ஒரு தார்மீக நம்பிக்கை உள்ளே ஊறித் தான் போகிறது. பார்ப்பம், நல்லது நடந்தால் யாரு மறுப்பினும். எல்லாம் ஒரு மண்ணின் மைந்தர்கள் தானே..”
“அதுதான் சகோதரி, குறையில்லா இடமில்லை, அதை நிறையாக்கிக் கொள்பவன் தானே வெற்றியாளன். இப்போதெல்லாம் பார்த்தால் நம் புலிகளை கூட ஏசுகின்றன நம் மக்கள், எப்படித் தான் அவர்களுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை”
“ஏதோ, என்னை வம்பிற்கிழுக்கும் எண்ணமென்டு நினைக்குறன்”
“இல்லை இல்லை சகோதரி”
“எனக்கு நீங்கள் கதைப்பதைப் பார்த்தால் அப்படித் தான் விளங்குகிறது”
“நீங்கள் சொல்வது வேறு, உங்களுக்கான ஆதங்கம் வேறு, ஆனால்; வேறுசிலர் தரக் குறைவாக கூட பேசுகிறார்களே புலிகளைப் பற்றி, நமக்கென உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொரு மாவீரர்களும் நமக்கென மண்ணில் புதைந்த விதைகள் என்றல்லவா பூஜிக்க வேண்டும் நாம்? அவர்களெல்லாம் சொட்டு சொட்டாக தன் உயிரை ரத்தமாகவும் புரட்சியாகவும் சிந்தி கனவுகளுக்கிடையே வீழ்ந்தவர்கள் இல்லையா?”
“ஆம், சரியாக சொன்னீர்கள், அதுமட்டுமல்லாது என்னையும் புரிந்துக் கொண்டீர்கள். நான் கூறியது, கவலைப் பட்டதென்பதெல்லாம் வெறும் என் கோபத்தினைக் கொண்டு மட்டுமல்ல. என்னைப் போல் நொடிக்குநொடி தனிமையினாலும், தனியா விடுதலை தாகத்தாலும் எண்ணி எண்ணி நினைவுகளால் மடிந்துக் கொண்டிருக்கும் எண்ணற்றோர் கொண்டுள்ள கேள்விகளின் வெப்பமது.
ஆனால், உண்மையில் புலிகள் புலிகள் என்று புலிகளை குறை சொல்லியும் பயனில்லை. அன்று அவர்கள் இறங்கி களத்தில் நிற்காவிட்டால். என்றோ எங்களை தொலைத்திருப்பான் சிங்களவன்.
நாங்கள் எல்லாம் அப்போ சிறு கண்ணிகள். எனக்கு நான்கு சகோதரிமார்கள் இருந்தனர், அந்த நாளோடு என்னையும் சேர்த்து அஞ்சிப் பெண்டுகளையும் கரை சேர்க்க எண்ட அப்பன் பட்ட பாடு, ஒ.. சொல்லி மாளாது. இந்த சிங்கள நாய்கள் இரவானால் வரும் பகலில் கூட அரிப்பெடுத்தால் நிற்காது”
“வீட்டுக் குள்ளேயே வருவாங்களா?”
“குளிகிறன்னு தெரிந்தால் கூட விடமாட்டினும், எல்லாருக்கும் முன்னமை வைத்தே எல்லாம் நடக்கும். இதுபோல் வெளியில் தெரியாமல் கூட எத்தனையோ கதைகள் நடந்ததுண்டு. நிறைய பேர் சொல்ல பயந்து சொல்ல மாட்டினும். உயிருக்கும், உயிரை விட மானத்திற்கும் பயந்து பயந்தே மடிந்த குடும்பங்களும் பயித்தியமாகிப் போனவர்களும் கூட எண்ணற்றபேர் உண்டு.
ஆனால், இதை எல்லாம் ஏனென்டு கூட கேட்க இயலாது, கேட்டால் சுட்டுட்டு போய் கொண்டே இருப்பான். தெருவில் ஆர்மி வரான் என்றாலே அடி வயறு கலங்கும் எங்களுக்கெல்லாம். உயிர்போனால் கூட பரவாயில்லை. மானம் போகும் என்று முன்னமே தெரிந்தால் அதை விடக் கொடுமை வேறில்லை அண்ணை. அதை எல்லாம் அனுபவித்த பாவிகள் நாங்கள்.
சொன்னா நம்ப மாட்டியல், சின்ன சின்ன குழந்தையை கண்டால் கூட இந்த நாய்கள் விடுவதில்லை. செட்டிய கழட்டிட்டு பார்ப்பானுகள், ஆணா பொண்ணா என்று. பொண்ணுன்னா போகட்டுமென்டு விட்டுப்போவினும், ஆணென்றால் அங்கடையே வேடிவைத்துக் கொள்ளுவினும்.
“குழந்தைக்கா?????????!!!”
“ஓம்….”
“குழந்தைக்கு பாம் வைப்பானுங்களா?”
“ஓம் அண்ணை, கழற்றிட்டு பார்ப்பானுகள், பொண்ணா இருந்தா களத்துக்கு வாராதுன்னு விடுவினும், ஆணென்றால் புலியாகி விடுமாம் வளர்ந்தால். அப்படியே அதுக்கு பாம் வைத்து கண்ணெதிரே சாகடிப்பானுகள்”
“ச்ச நம்பவே முடியலையே?”
“இதுக்கே திகச்சிட்டா? இவனுங்க செய்ததை எல்லாம் கேட்டா உலகம் மன்னிக்காது. இதுக்கெல்லாம் கடவுள் ஒரு நாள் கூலி கொடுக்காம விடம்மாட்டான். பச்சமண்ணு னு கூட பார்க்காம சுட்டுப் போடுற பசங்க தானே இவனுங்க. நினைச்சா வயிறு எரியுது, என் கண்ணு முன்னாடியே சென்ஜானுங்களே”
“என்ன செஞ்சாங்க?”
“என் கூட எங்கட ஊர்ல இருந்தே வந்தவ ஒருத்தி, அழகுன்னா அப்படி ஒரு அழகு எதிரிக்கு கூட துரோகம் நினைக்காதவ அவ. அவளையும் விட்டு வைக்கவில்லை அந்த ஆர்மிக் காரர்கள். சொன்னால் வெட்கக் கேடு இந்த ஆர்மி காரனுண்ட செயலெல்லாம்”
“என்ன செய்தார்கள் என்று சொல்லுங்களேன் சகோதரி, அவர்களின் இழிசெயலை உலகிற்கு தெரிவிப்போம், நியாயத்தை உலக தமிழர்கள் எடுக்கட்டும்”
“வேறென்ன, நம்மட விடுதலைப் புலிகள், நம் வீடு தோரும் வந்து நீ வா நீ வா என்டு கொண்டுபோய்க் கொண்டே இருந்தால் கடைசியாக யார்தான் போறது? ஒருகட்டத்தில் எல்லோருமேப் போனோம். விடுதலை ஒன்னு தான் குறி என்று மொத்த தமிழரும் ஆனோம். அந்த நிலையிலும் எண்ட அப்பன் மானம் ரோசம் குடும்பம்னு பார்த்துத் தான் எங்க அஞ்சு பேரையும் வளர்துச்சு. அதே எங்கட வளர்ப்பு போலவே வளர்ந்தவள் தான் அவளும். பேரு மலர்விழி.
சாந்திரம் ஆறு மணி ஆகும்னாலே எங்கட அப்பன் எங்களை அஞ்சு போரையும் காட்டுக்கு கூட்டி போய்விடும். பகலென்றாலும் பேசலாம் கத்தலாம் யாரையேனும் அழைக்கவேனும் செய்யலாம். இரவில் யாரை அழைப்பது என்ன செய்வது, நேரா வீட்டில் வந்து யாரை பிடிக்குதோ கொண்டு போறது, எங்காச்சும் வெச்சு கொன்னுட்டு வேலையை முடிச்சிட்டு தூக்கிப் போட்டுவிடுவது. மறுநாள் எங்கேனும் பிணம கிடக்கும்.
கேட்டா, புலிகள் எதிர்க்க வந்தார்கள் சுட்டோம்னு செய்தி போடுறது. அதுக்கு பயந்துக் கொண்டு எங்கட அப்பன் எங்களை இரவானால் காட்டுக்கு கொண்டுபோய் விட்டுவிடும். பாவம் அந்த கிழவன், தன்னோட வயசான காலத்துல எப்படி எல்லாம் கஷ்டப் பட்டுது. நாங்க அஞ்சு பேரும் குமரியாயிட்டோம். அதுல நாங்க மூத்தவ மூணு பேரும் மாப்பிள்ளை பார்க்க இருந்தோம். அதுக்கு பயந்தே அந்த கிழம் திரியும்.
எங்களை கொண்டு வந்து காட்டுல பதுக்கி வெச்சிட்டு சோறு கொண்டார போகும். திரும்பி வரும் வரை எங்களுக்கு சோறு வருமா அப்பா வருவாரான்னு நிலை இருக்காது. சிலநேரம் உயிர் போனா போகுதுன்னு துணிந்துவிடத் தோணும். ஆனால் எங்கட அண்ணனுங்கள் விடமாட்டார்கள். நாங்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள். நாமெல்லாம் கெளரவமா வாழ்ந்த குடும்பம். நமக்கு ஆர்மியை எதிர்த்தெல்லாம் ஒன்டும் செய்ய இயலாதுன்னு சொல்லி அடக்கிடுவானுகள்.
ஒரு பக்கம் புலிகள்னு பயம் வரும், ஒரு பக்கம் சிங்களனுக்கும் பயப்படனும்”
“புலிகளுக்கு ஏன் பயப்படனும்?”
“ஒரு பயந்த்-தே(ன்), அவுங்களும் மனுசாலு தானே? போராட பொருள் என்ன வானத்திலிருந்தா வரும்? எங்களிடம் இருந்து கேட்பாங்க, கொஞ்சம் மனசு வந்து கொடுப்போம் கொஞ்சம் மறைச்சி வைப்போம். மறச்சோம்னு தெரிஞ்சா அவர்களுக்கு கோபம் வரும்.
அதும், அதுகள பார்க்கவே கண்ணு தாங்காது, புலிகள் என்டால் என்ன கிழமெண்டா நினைச்சியள், எல்லாம் வாலிபக் குமாரர்கள், படிக்கும் வயதில் துப்பாக்கித் தூக்கப் பணிக்கப் பட்டவர்கள். பாவம், இளசுகளா வரும் சிலநேரம், அக்கா கொஞ்ச சோறு போடுங்கக்கான்னு வந்து நிக்கும், வயிறு பத்தி எரியும். இப்படி திரியுதுகளே ன்னு மனசு தவிச்சி போகும். அதுகளுக்காகவாவது உயிரை விட்டுத் தொலைப்போம் போ’ன்னு இருக்கும்.
வாங்கடி செல்லங்களான்னு சோற போட்டாலும் திங்கும், கஞ்சிய ஊத்தினாலும் குடிக்கும்க பாவம். இது வேணும் அது வேணும்னு கரைசல் எல்லாம் கிடையாது. இருக்கறத தின்னுப்புட்டு போவுங்க பாவம். அபப்டியெல்லாம் கஷ்டப் பட்டு, அங்க இங்க பயந்து எங்கட அப்பன் ராத்திரிக்கு ஆனா சோறு கொண்டு வரும். அதை வேற எவனா பார்த்தா எங்க போற யாருக்கு சோறு கொண்டு போறன்னு அதை அங்கனையே சுட்டு போட்டாலும் கேட்க கேள்வியில்லை.
அப்படி காட்டுக்குள்ளையும் வீட்டிற்குள்ளேயும்னு பொத்தி பொத்தி வெச்சி தான் எங்களை எங்க அப்பன்மாறுங்க எல்லாம் வளர்த்தாங்க, இந்த ஆர்மிக்கு பயந்து. அப்படி எங்க கூடவே இருந்து பக்கத்து வீட்டுல வளர்ந்தவ தான் அவ, மலர்விழி.
என்ன செவேல் னு இருப்பா தெரியுமா? நல்ல ஆம்படையான் கிடைச்சான் அவளுக்கு, அவரும் ஒரு கட்டத்துல புலிகள் கூட சேர்ந்து போராட காலத்துக்குப் போயிட்டாரு. அந்த நேரம் பார்த்து இவ கற்பமாயிட்டா, போர் உக்குரத்துல இருக்கு. திடீர்னு ஓர் நாள் ஆர்மி காரனுக ஊர் உள்ள புகுந்துட்டாங்கன்னு தெரியவர; புள்ளைய காப்பாத்தனுமேன்னு எங்க எங்கயோ ஓடினாள், ஓடி ஓடி அளந்ஜால் பாவம், அவளையாச்சும் விட்டானுன்களா? தேடி பிடுச்சி கொண்டானுங்க பாருங்க, பாவிங்க…”
“கொன்னுட்டாங்களா?!!!!”
“அதை ஏன் கேட்குறீங்க. அவளை ஒரு கற்பவதின்னு கூட பார்க்காம கொன்னு கர்ப்பழுச்சி அவ வயித்த கீறி அவ வயித்துல வளர்ற குழந்தையை எடுத்து சுட்டுப் போட்டாங்களாம். கேட்டால் தமிழனோட சிசு வயித்துல கூட வளரக் கூடாதுன்னு சொல்லிப் போனாங்க படுபாவிங்க”
அவள் சொல்லி நிறுத்தினாள். எனக்கு மனசையே யாரோ போட்டு பிசைந்தாற்போல இருந்தது. “உண்மையாவா சொல்லுறீங்க?”
“என்னை யென்ன வேலை கெட்டவன்னு நினைச்சியிலா, மரத் தமிழச்சி நானு, என் நாக்குல பொய் வராது” நாக்கை வெளியே நீட்டிக் காட்டினாள்.
“இல்லை இல்லை நான் உங்களை சந்தேகமா கேட்கலை. இந்தளவுக்கு செய்ய முடியுமான்னு தான்…” முடிக்காமல் இழுத்தேன்.
“இதை விட எல்லாம் செய்தவர்கள் சிங்களவர்கள். எங்கட கதை கேட்டால் செத்தப் பொணம் கூட எழுந்து உட்கார்ந்துக் கொள்ளும். நானெல்லாம் பொருத்து பொருத்துப் பார்த்து வேற வழில்லாம துப்பாக்கி தூகியவள் தான்.
இவனுங்களை ஏழேழு ஜென்மத்துக்கும் நாங்க மன்னிக்க மாட்டோம். அணு அணுவா எங்களை சாகடிச்ச இவனுங்களும் அணு அணுவா சாகணும். அப்பாவி மக்கள் மீது எங்கள் கோபமில்லை. அது சிங்களமாவே இருந்தாலும் ஆவிகளும் பெண்டும் குழந்தைகளும் தானே. அவிகளை ஒன்டும் செய்யக் கூடாது, ஆனால் இந்த ஆமிக் காரர்களுக்கு புரியவேண்டும். வெடித்தால் எப்படி வலிக்கும், வெட்டினால் எப்படி வலிக்கும், சுட்டால் எப்படி வலிக்கும் என்று புரியவேண்டும்.
இன்னும் என்ன எல்லாம் செய்வானுங்கன்னு கேட்டால் செய்ய இனி ஒன்டுமே யில்லை என்று சொல்லும் அளவுக்கு செய்து விட்டார்கள். முற்றுமாய் நாங்கள் வாழ்ந்த அடையாளத்தையே எங்கு மாற்றிவிட்டார்கள். எங்களை கொண்டுபோய் காட்டில் விடுவினும். காட்டில் வசித்த சிங்களமாரை நாங்கள் நாகரீகமாய் வசித்த ஊரில் குடிவைக்கிறானுகள். இவனுகளை எல்லாம் யார் தட்டிக் கேட்பது. எங்களுக்கெண்டு இருந்த ஒற்றை தலைவரும் எங்கிருக்கிறார் எப்போது வருவார் என்று தெரியாது. ஆனால், கண்டிப்பாக வருவார் என்று நம்பிக்கை மட்டுமே இன்றும் எங்களை உயிராக வைத்திருக்கிறது.
இன்றில்லை என்றாலும், ஒர்தினம் நாங்கள் வெல்வோம். எங்கட ரத்தத்திற்கு அந்த மண்ணு பதில் சொல்லியே ஆகவேண்டும். எங்கட உயிர் விட்டு ஊறிய மண்ணில் ஓர்நாள் எங்கட கொடி பறக்கும்!!!!!!!!!!!!!எங்கள் எதிரிகள் எங்கட கண்நீருக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்”
நரம்பு புடைத்து ஒரு வெறி தலைக்கேறி வீரதீரத்தோடு அமர்ந்துக் கொண்டது எனக்குள். அந்த எரியும் கனல் தீயினை கண்ணில் புதைத்துக் கொண்டு – அவர் சொல்வதையே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் தலையாட்ட தலையாட்ட என் புரிதலுற்ற ஆர்வம் அவளுக்கு நம்பிக்கையை கொடுத்தது.
“பிறகு ஏன் இப்படி பட்டவர்களை எல்லாம் விட்டுவிட்டு இப்படி விமானம் ஏறி எங்கோ போகிறேனேன்னு உங்களுக்குத் தோணும், ஆனால்…”
அவள் வேறேன்னவோ சொல்ல வந்தாள், அதற்குள் ஒலிப் பெருக்கியில் ஆங்கிலத்தில் அறிவிப்பு வர அதை நோக்கி கவனித்தோம். விமானம் கீழ் சாய்ந்து இறங்குவது போல் அங்குமிங்குமாய் ஆடியது. சற்று நேரத்தில் விமானம் செல்லும் வழியினிடையே ஓரிடத்தில் தரை இறங்க உள்ளதாகவும். அங்கு ஒரு மணிநேரம் நின்று ஆளெடுத்துப் போகுமென்றும், அறிவிப்புச் சொல்ல, விமாணப் பணிப்பெண் வந்து எல்லோரையும் நேராக அமரும் படியும். கச்சை பட்டி அணியவும் சொல்லிப் போனாள்.
இருவரும் நேராக அமர்ந்து சற்று அமைதியானோம். உள்ளுக்குள் அவள் சொன்னது சொல்ல வந்தது எல்லாமே எண்ணி ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. இருக்கையில் பின்சாய்ந்து கண்களை மூடிக் கொண்டேன். விமானம் மெல்ல தரையிறங்கியது..
————————————————————————————————————-
தொடரும்..
மிகவும் வலி, கோபம், வருத்தம்….கண்ணீர் சிந்து வதை தவிர வேற
எதுவும் செய்ய முடிய வில்லையே! இறைவா!!!
//இன்றில்லை என்றாலும், ஒர்தினம் நாங்கள் வெல்வோம். எங்கட ரத்தத்திற்கு அந்த மண்ணு பதில் சொல்லியே ஆகவேண்டும். எங்கட உயிர் விட்டு ஊறிய மண்ணில் ஓர்நாள் எங்கட கொடி பறக்கும்!!!!!!!!!!!!! எங்கள் எதிரிகள் எங்கட கண்ணீருக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்”// நிச்சயம் நடக்கும்!
LikeLike
மிக்க நன்றி உமா எனக்கு அந்த நம்பிக்கை தீரமாக இருக்கிறது..
LikeLike
உங்கள் பதிவைப் படித்தவுடன் ரத்தம் கொதிக்கிறது.
LikeLike
//நெற்கட்டு சுமந்துப் போனாலும் பிரித்துப் பார்க்கையில் நான்கு புற்களின் துண்டுகள் இல்லாமல் இல்லையே; அதுபோல் எண்ணி அக்கறை இல்லா மனிதர் ஓரிருவரை விடுத்து லட்சியத்தோடு கைகோர்க்கும் நிறைய பேரைக் கொண்டு நம் கனவினை வெல்வோம் சகோதரி”//
அருமையான, தெளிவான முற்போக்கு சிந்த்னைகள். ஒரு நல்ல தமிழ் சமுதாயப் பிரதிநிதியாக தங்கள் வாதங்கள்! இவையெல்லாம் ஒரு நாள் சாத்தியமாகக் கூடும் என்று நம்பிக்கையூட்டும், சக்தி வாய்ந்த எழுத்து அம்புகள்! நல்ல நோக்கம் கருதி பயணிக்கும் தங்கள் பயணம் இனிதே தொடரட்டும்! வாழ்த்துக்கள் ஐயா.
LikeLike
ஒளிப் பெருக்கியில் – ஒலிபெருக்கியில்
அமர்ந்துக் கொண்டாள்.- அமர்ந்து கொண்டாள்
தொலைகாட்சி – தொலைக்காட்சி
குதூகளித்து – குதூகலித்து
கவிஞர் வித்தியாசாகர் அவர்கட்கு வணக்கம்,
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் ; தமிழகத்தில் சர்வசாதாரணமாக மேலுள்ளபடி பயன்பாட்டிலுள்ளது. மிகப்பெரிய கவிஞரான தாங்களே இவ்வாறுதான் பயன்படுத்துகிறீர்கள். எனினும், ஈழத்தில் அதன் பின்னுள்ளதுபோலத்தான் பயன்பாட்டிலுள்ளது. இதில், எது சரியானது என்பதைத் தயவுசெய்து அறியத்தரமுடியுமா?
மேலும், ஒரு தமிழகத்தமிழனாக , ஈழம் சம்பந்தமான தமிழகத்தின் நிலைப்பாட்டை, அப்பெண்ணுடனான உரையாடல்வழி தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால், ஒரு ஈழத்தமிழனாக என்மனதிற்தோன்றும், தமிழகம் சார்ந்த நியாயங்களை இதில் முன்வைக்கவிரும்புகிறேன்.
முதலில், தமிழீழம் விழித்துக்கொள்ள எவ்வளவு காலம் பிடித்தது என்று பார்ப்போம். 1948 இலிருந்து 1982 வரை தமிழீழமும் தமிழரசுக்கட்சியென்றும் தமிழ்க்காங்கிரஸ் என்றும் பிளவுண்டுதான் கிடந்தது.
இந்தக்காலப்பகுதியில் ஒருசில சிங்களக்கட்சிகள்கூட, கொம்யூனிச சாயத்துடன் ஆங்காங்கே செல்வாக்கும் பெற்றிருந்தன. இந்த 34 ஆண்டுகள் தாமதத்துக்காக காரணிகளை நோக்கினால், தமிழக ஒப்பீட்டளவில் அவை வெகு சொற்பமே!
அங்கு முதன்மையான பிரச்சினையாக மொழி ஒன்றுதான் இருந்தது. அதாவது, ஒரேயொரு மொழிக்கெதிராகவே போராடவேண்டியிருந்தது. நாளடைவிலேயே அங்கு அத்துமீறிய குடியேற்றங்கள் வரத்தொடங்கின. அதாவது நிலப்பிரச்சினை. இன்னும், சாதி மதம் போன்றவைகள் இருந்தாலும் அவ்வளவு பாரிய அளவில் இல்லையென்றே கூறலாம்.
ஆனால், தமிழகத்தைப்பொறுத்தவரை – அப்பப்பா….! ஒன்றா? இரண்டா? நாளும் ஒவ்வொரு புதுப்புதுப் பிரச்சினைகள். எந்தப்பெரிய பரப்பளவு! கன்னடம், மலையாளம் ,தெலுங்கு என்று திராவிடமொழிகளின் சுரண்டல். அதாவது, காவிரி, பெரியாறு, கிருஷ்ணா என்ற தில்லுமுல்லுக்கட்சிகளின் அடவடித்தனங்கள். பார்ப்பனர்களின் ஆதிக்கம். வடமொழி ஊடுருவல். ஹிந்தித்திணிப்பு. மார்வாடிகளின் அட்டகாசம். இனி, உள்ளூர்க்காரர்களின் கட்டப்பஞ்சாயத்துக்கள்.
மேற்தட்டு, கீழ்த்தட்டு வர்க்கப்போராட்டங்கள்….. இப்படி; இவை நானறிந்தவைகளிற்சில.
இன்னும் எத்தனை எத்தனை… சொல்லிமாளாது அவ்வளவும்.
இத்தனைக்கும் முகங்கொடுத்தபடியே –
முத்துக்குமரன் தொடங்கி கிருஷ்ணமூர்த்தி வரை தன்னால்முடிந்தளவு ,
தமிழுக்குப்புதுரத்தம் பாய்ச்சும் தமிழகத்தை யாரும் காறித்துப்புவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இதை யாருக்காகவும் யான் எழுதவில்லை ; உள்ளபடி என்மனதிற் தோன்றிய கருத்துக்கள் இவை.
ஆக, தமிழீழத்துக்கே 34 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
அப்படிப்பார்த்தால், தமிழகத்துக்கு இன்னும் காலம் இருக்கிறது விழித்துக்கொள்ள. காலம் கனியும். அதுவரை பொறுத்திருப்போம்.
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!
அன்புடன்
சிவம் அமுதசிவம்
LikeLike
அன்பு வணக்கம் ஐயா, மிக்க நன்றியானேன். நான் கூற விழைந்தமைக்கு தங்களின் கருத்துப் பகிர்வும் பலம் சேர்ப்பதில் கதைப்போக்கு படிப்போரிடையே நம்பிக்கை பலத்தை கூட்டச் செய்கிறது.
எனினும், மக்களின் மத்தியில் பிரிவுணர்வு வராமல் மிகத் துரிதத்தோடு ஈழத்திற்கென எல்லோரையும் ஒற்றுமையுடன் கிளர்ந்தெழச் செய்ய; அவர்களை அவர்களுக்குப் புரியவைக்கும் இச் சிரியவனின் முயற்சியே இது.
இரவு விடிகாலை மூன்று மணிக்கு எழுந்து அல்லது இரண்டு மூன்று மணிவரை தூங்காமல் விழித்திருந்து எழுதும் சொட்டா வியர்வையின், தூங்கிடாத உறக்கத்தின் உழைப்புகள் இப்பதிவுகள் எல்லாம். இடையே ஏற்படும் நேரமின்மையின் அவசரம் மற்றும் அயர்ச்சி தான் எழுத்துப் பிழைகளுக்குக் காரணம் வகுக்கிறது அன்றி வேறில்லை.
தவிர, எவ்விடத்தி லாயினும் தமிழ்; தமிழே. அதை அவரவர் விருப்பம் தக்க மாற்றுகையில் அது காலப்பிழையாக பின்னாளில் உருவெடுக்க வாய்ப்புள்ளது. எனவே மாற்றத்திற்கு மிகுந்த கவனம் தேவைபடுகிறது. நம் தளத்தில் ஏற்படும் பிழைகளை மெல்ல மெல்ல நேரமெடுத்து திருத்திவிடுகிறேன். மொத்தப் பதிவுகளும் முடிந்தபின் அல்லது புத்தகமாக்கும் முன் மீண்டும் மீண்டும் வரும் மாதிரிப் படிவங்களில் எழுத்துப் பிழைகள் தட்டச்சுப் பிழைகள் மற்றும் கருத்துமாற்றம் ஏதும் தேவைப்படின் செய்து திருத்தி விடுவோம்..
மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் தாங்கள் கொண்டுள்ள மதிப்பிற்கும் பொது மன நோக்கிற்கும்!!
பேரன்பு கொண்டவானாய் தொடர்கிறேன்..
LikeLike
வணக்கம். நல்ல நோக்கத்தில் ஈழப் பாறையை எழுதுகோலால் நெம்பும் முயற்சி..! பாராட்டுக்கள்..! மாசற்ற உழைப்பு. மாற்றுக் கருத்து இல்லை. நாளைய வரலாற்றை நடப்பில் பதிவு செய்யும் காலப் பதிவு! கவனம்..! இருவேறு மாநிலத்தின் தமிழ்ச் சொல்லாடலை உங்கள் கதைப்போக்கில் கையாள வேண்டியுள்ளது. குறிப்பிட்ட மொழித் திறன் உள்ளவர்களிடம் கொடுத்து பிழைத் திருத்தியபின் புத்தகமாக்கினால் முத்திரைப் பதிக்கும் உங்களின் இந்த ‘நித்திரை குலைத்த முயற்சி என்பதில் ஐயமில்லை!
எனினும், வாசலுக்கு அழைத்து வரும் குழந்தையைக்கூட வாரித் தலைசீவி வட்டப்பொட்டுத் திருத்திதானே அழைத்து வருவோம்..! பிள்ளைப் பேறைவிட பெருவலி உள்ளதல்லவா உங்கள் உழைப்பில் உருவான படைப்பில்!!! பேறுகால ஆயாசமிருப்பின் செவிலியர் இல்லையா சீர்படுத்தி அனுப்ப..? ஆதங்கத்தின் அரற்றல் வேறில்லை ! நன்றி..!
LikeLike
மிக்க நன்றி ஐயா. கண்டிப்பாக கதை முடிந்து படைப்பாக வெளிவர பதியும் முன் நல்ல தேர்ந்த மொழித் திறனுள்ளவருடன் கொடுத்து சரிபார்த்துக் கொள்கிறேன். இப்பொழுதும் நிறைய சகோதர சகோதரிகள் படித்து தனியாகவும் மின்னஞ்சல் செய்து வருகிறார்கள். எல்லோரின் நிபந்தனை படியும் கருத்துரை படியும் மாற்றம் வேண்டுமெனில் முடிவில் செய்துக் கொள்வோம். தங்களின் தொடர் கருத்துப் பதிவு இப்படைப்பின் இத்தனை தூரப் பயணத்திற்கான உறுதுணை என்பதையும் மகிழ்வோடும் நன்றிளோடும் தெரிவிக்கிறேன்!!
LikeLike
பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 13) | வித்யாசாகரின் எழுத்து பயணம்
ஈழத்தின் என்றுமே இறந்திடா வரலாறு வரிகளிலே வலம் வருவதைப் படிக்கையில் உள்ளத்தினுள்ளே தாய்த்திரு நாட்டின் மீது பற்று பற்றி எரிகிறது
அழகு அருமை வாழ்த்துக்கள் அண்ணா!!
LikeLike
மிக்க நன்றி மா.. வாழ்க..🌿
LikeLike