அமைதியாய் இசைத்துக் கொண்டிருந்த கடல் திடீரெனப் பொங்கியது. உலகை மடியில் தாங்கிக்கொண்டிருந்த பூமியின் கடல்பாகம் லேசாக அதிர்வுற்றன. நிலத்தின் நடுக்கத்தில் நிலைகுலைந்த கடல் பொங்கி அலையெனத் திரண்டு ஒரு ராட்சத வடிவில் கரையின் ஓரமிருந்த கிராமங்களுக்குள் எட்டியவரை புகுந்தன..
‘ஐயோ.. ஐயோ.. போச்சே போச்சே எல்லாம் போச்சே சுனாமி வந்துடுச்சே… கடல் துரோகி.. கடல் துரோகி.. நாங்க உன்னைக் கும்பிட்ட பாவமா இது? நீ நல்லாயிருப்பியா!!!!!!!!! கடலே நீ நாசமாப் போக……………’
பொங்கும் கடலே மாயமாய் வற்றிப்போகுமளவிற்கு கடலெல்லாம் ஏழைகளின் சாபங்கள் தண்ணீராய் நிறைந்தன…
ஒரு பிடி சோறுக்கே கடலை நம்பி வாழும் கரைவாழ் மக்களின் வீடு போய், உறவு போய், வாழ்வே இன்னும் பல கேள்விக் குறிகளாய் மாறி, நம்பியிருந்த கடலாலேயே அவர்களின் வாழ்க்கை சூன்யமாகுமெனில்; அந்த பெற்ற வயிறும், எறும்பு போல சேர்த்த மனிதனின் மனமும், கடலை சபிப்பதைத் தவிர; மீண்டும் கடலிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு கடலுக்குள் சென்று தன் வாழ்வினை தேடுவதைத் தவிர வேறென்ன அறிந்திருக்கும்?!!!
எப்படியோ அசுர வேகத்தில் வந்தாலும்; ஓரிரு வினாடியில் கரையிலெல்லாம் பரவி திரும்பச் சென்றன அலைகள். சோகத்தின் சுவடுகளின் மீது நின்று கத்தி கதறிய அப்பாவி ஏழைகளின் குரல் கடலெல்லாம் நிறைந்து நிற்க, கரை புகுந்த அசூர அலை தன்னால் அள்ளிக்கொள்ள முயன்றவரை; அள்ளிக்கொண்டு கடலில் புக, அதன் தலைவிரிக் கோலம் ஊரெல்லாம் செய்தியாக புகுந்து கொண்டிருந்தது.
கடல் மட்டும் தனக்கொன்றுமே நடந்திடாதது போலவும், யார் தவறிற்கும் தான் காரணமே இல்லையென்பது போலவும், எப்பொழுதும் போல் சலனமேயின்றி இசைக்கத் துவங்கியது.
திடீரென.., சுனாமி தின்ற கிராமத்தின் ஓரப் பகுதியிலிருந்து அப்பொழுது தான் கேட்டது அந்த ஒரு தாயின் அவலக் குரல்..
‘ஐயோ என் புள்ள.. எம் புள்ள போச்சே.. ஏம் பச்ச புள்ளைய தூக்கி போச்சே, கடல் நல்லாருக்குமா; மோசக்காரி; என்னை கொண்டு போ.. என்னை கொன்று போடு.., நாசமாப் போனவளே.. ஏ கடலே நாங்க உன்னை கும்பிட்டது தவறாடி????????? உன்னை கும்பிடுவது தவிர வேறென்ன குறையடி வைத்தோம்?? தாயே.. கடல்கொண்டவளே – ஏம் பிள்ளையை கொடேண்டி.., அம்மா அம்மா ஏங் குழந்தையை கொடுத்திடும்மா..’
மனதை கவ்வி இழுத்தது அந்த தாயின் ஓலம் கேட்கையில். அவள் கதறிக் கொண்டே ஓடி கடலுக்குள் விழப் போனாள். சாகப் போனார். கணவரும் சொந்தமும் ஓடிச் சென்று அவளை தூக்கி வந்து வீட்டின் வாசலில் பாயில் கிடத்தி மொத்த வீடும் சேர்ந்து அவளை சுற்றி அமர்ந்துக் கொண்டு வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதது.
என்ன நினைத்தாரோ, அந்த தாயின் கணவர் எழுந்தார் ‘ச்சே………. என் குழந்தையே போனபிறகு நானிருந்து என்ன செய்ய’ என்று சொல்லி ஓடிச் சென்று கடலில் குதித்து; ஆழக் கடல் நோக்கி நீந்தி தற்கொலை செய்துக் கொள்ளப் போனார்.
அவரை ஒரு கூட்டம் மீண்டும் ஓடிப் போய் வாரிவந்து வாசலில் போட்டு குடித்த நீரையெல்லாம் வயிற்றை அழுத்தியெடுக்க; கடல் கண்ணிசைக்காமல் பார்க்கும் ஒரு சாதுவான குழந்தையினைப் போல அவர்களின் அழும் கண்களை பார்த்து பார்த்து அலையாய் பொங்கியது.
அது சற்று தூரம் கடந்த அடுத்த கரைப்பகுதி. சுனாமி வந்து ஒரு ஊரையே கொண்டு சென்ற விளிம்பில் மக்களுக்கோ வீடுகளுக்கோ அப்பகுதியில் சேதமில்லை என்றாலும்; கரையில் வீட்டின் வாசலில் பாய் விரித்துப் போட்டு வைத்திருந்த குழந்தை எழுந்து கரையில் விளையாடிக் கொண்டிருக்க, அதையும் சேர்த்து தன் வெறிப்பல்லுக்கு கிடைத்த வெற்றிலை போல் மடித்து சுனாமி தூக்கிக் கொண்டுச் சென்ற கொடூரத்தின் கதறலும் சோகக் காட்சிகளும் தான் மேலேக் கண்டது. .
அதேநேரம், உள்ளே, கடலுக்குள்ளே, சற்று அக்கரை கடந்த தூரத்திற்கு அப்பால் கரையின் ஓரம் பார்த்தவாறு நீந்தி வந்துக்கொண்டிருந்தன அந்த இரண்டு மீன்களும்..
“ஏய்… சீக்கிரம் வா நானுனக்கு ஒரு பெரிய விருந்து வைத்திருக்கேன்”
“விருந்தா??? கடல்ல நமக்குக் கிடைக்காத அப்படி என்னத்த நீ எனக்கு விருந்தாக்கி விடுவாய் அப்பாவி மீனே???
“போதும் உன் குறும்புத் தனம், வேகமாக என்னோடு வா காட்டுகிறேன்..”
“இரண்டு மீனும் விரைந்து செல்ல, அந்த பெண்மீன் ஓடிச் சென்று, ஒரு துள்ளல் துள்ளி; அந்த அசூர அலை கொண்டு வந்துவிட்டிருந்த அக்குழந்தைக்கு அருகில் போய் நின்றது.
“பார்த்தியா!!!!!!!! இப்படி ஒரு விருந்து உனக்குக் கிடைக்குமா இந்தக் கடலில்???”
“ஐயோ இது மனித குழந்தை இல்ல??????????!!!!!!!!!!!!” அந்த பென்மீனின் தோழிமீன் அதிர்வுற்றுக் கேட்டது.
“ஆமாம், அதனால தான் வினோத விருந்தென்றேன்” அந்த பெண் மீன் சொல்ல
“அடிப் போடி இவள, நீ எல்லாம் ஒரு நல்ல பிறப்பே இல்ல, முதல்ல இந்த குழந்தையைத் தூக்கு கரையில கொண்டுபோய் விடலாம்”
“அதலாம் முடியாது..”
“முடியாதெல்லாம் முடியாது. நீ தூக்குவியா இல்ல நான் வேற யாரையாவது கூப்பிடவா…?”
அந்த தோழிமீன் உறுதியாக கேட்க, அந்த பெண்மீனும் சேர்ந்துத் தூக்கி; இரண்டு மீனுக்கும் நடுவே குழந்தையை கிடத்திக் கொண்டு கரையை நோக்கித் நீந்தின அந்த மீன்கள்.
“நீ ஏம்பா இப்படி இருக்க?” அந்த பெண்மீன் கேட்டது.
“எப்படி..?!”
“நியாயம்.. நீதி.. தர்மம்.. வெங்காயம்.. வெள்ளப் பூண்டுன்னு..”
“அது என் இயல்பு. எனக்கு என் வாழ்க்கை அப்படித் தான் தெரிகிறது”
“சரி நீ இவ்வளோ பன்றியே………….. உன் குழந்தையை என்ன பண்ணுவ? அது உன்னை மாதிரியே இருக்கும்னு நினைக்கிறியா?”
“அப்படி நினைத்தால் அது என் பெருத்த முட்டாள்தனம். என் குழந்தை என்ன மாதிரியே இருக்கணும்னு எந்த சட்டமும் எழுதப் படவில்லை. அந்த குழந்தை அந்த குழந்தைப்போல வளரனும், அதன் வளர்ச்சிக்கு பெத்தவங்க நாம பலமா இருக்கணும் அவ்வளவுதான்”
“அப்போ உன் குழந்தை உன்னை மாதிரி எல்லாம் நல்லா வளரவில்லை என்கிறாயா?”
“ஏன் அதுக்கென்ன, அது நல்லா தான் வளருது. குழந்தையை நாம வளர்த்தா தான் அது தப்பு தப்பா வளரும். அதை நம் வாழ்க்கையை பார்த்து வளர வைக்கனும். அதோட வாழ்க்கையை அந்த குழந்தை உணர்ந்து வாழ நாம தோழமையான ஒரு வழிகாட்டிப் போலவும் பலமாவும் இருக்கணும் அவ்வளவுதான்..”
“ஆமா நீ மாமிசப் பூச்செல்லாம் தின்னமாட்டியே, தாவரமா தின்னுவியே இப்போ உன் குழந்தை என்ன பண்ணும்”
“அதுவும் வெறும் தாவரம் மட்டுமே தின்னுது”
“அதையும் கெடுத்துட்டியா?”
“இதுல கெடுக்க என்னடியிருக்கு…, ஒரு குழந்தையை வளர்க்கும் உரிமை தான் நமக்கு இருக்கேத் தவிர, அதை வளர்க்கும்போதே தவறா வளர்க்க நமக்கு எந்த உரிமையும் இல்லை”
“அதெப்படி?”
“ஒரு குழந்தையை வளர்க்கும்போதே சிகரெட் பிடிக்க சொல்லி கொடுத்து, குடிக்கப் பழகி சொல்லிக் கொடுத்து வளர்ப்போமா? அது அந்த குழந்தையின் வளர்சிக்கான சுகாதாரக் கேடில்லையா?”
“ஆமாம்..”
“அதுபோலத் தான் இதுவும். வளர்க்கும் போதே பிற உயிர்களை அடித்து சுவைத்து தின்ன சொல்லிக் கொடுத்துவிட்டால் அது என்ன செய்யும் கண்ணில் பட்டதெல்லாம் அடித்து தின்னத் தானே செய்யும்”
“அப்போ மாமிசமே குழந்தைக்கு தரக் கூடாதுன்றியா?”
“ஆமாம். கண்டிப்பாக தரக் கூடாது”
“ஹா ஹா நீ சொல்லுறது எல்லாம் கேட்டா சிரிப்பு தாண்டி வருது”
“ஏன்..”
“நீ இன்னும் எத்தனை வருடம் இப்படி பொத்தி வைப்ப? இன்னும் கொஞ்சம் வளர்ந்தா அது உனக்குத் தெரியாம தின்னதான் போகுது, அப்போ என்ன பண்ணுவ?”
“அதுக்கெல்லாம் வாய்ப்பே கொடுக்கக் மாட்டேண்டி நான், அதுக்கு பிடிக்குதுன்னு சொன்னா அதை தடுக்க எனக்கென்ன உரிமை இருக்கு. இப்போ நாம வளர்க்கும்போது கொடுத்து வளர்க்கக் கூடாது. நாளைக்கு அது வளர்ந்தப் பிறகு அதுக்கு எது சரி எது தவறுன்னு புரிய ஆரம்பித்த பிறகு, எனக்கு இது வேணும் எனக்குப் பிடித்திருக்குமான்னு சொன்னா நான் மறுக்கக் ஒன்றும் போவதில்லை. குழந்தைகள் அவர்களின் விருப்பம் சிந்தனைகளை கொண்டு வளரனும், அப்போதான் அந்த குழந்தைகளால் நாளைக்கு சமுதாயத்தில் புதிய மாற்றங்கள் வரும். அவர்களின் வாழ்க்கைக்கான கட்டமைப்பு அமையும்”
“கொடுக்கக் கூடாதுன்ற, கொடுபேன்ற, ரெண்டும் நீ தாண்டி சொல்ற”
“நான் சொல்லவந்ததை உனக்கு சரியா சொல்லலைன்னு நினைக்கிறேன். நாம சின்னவயசிலேர்ந்து வளர்கிறோம், அப்படி வளர்கையில், அதன் சம்மதமில்லாமல் ஏன் பிற உயிர்களை கொன்று உண்ணும் வழக்கத்தையும் அதுகளுக்கு சொல்லித் தரனும்? அதை செய்யவேண்டாம். ஒருவேளை அது வளர்ந்து, உலக நடத்தையோடு சேர்ந்து நிற்கையில் ‘அதற்கும் ஆசை வந்து உண்ணவேண்டுமென்று கேட்டால் அது அக்குழந்தையின் சுதந்திரம். அதை என்னால் தடுக்க இயலாது”
“அப்படி வா வழிக்கு, அப்போ அது தின்னாமையா போய்டும்..”
“ஆனால் ஆது என் குழந்தை..டி. அதற்கு சரி எது, தவறு ஏதென்று தெரியும். எனவே என் குழந்தை எது சொனனாலும் அதை நான் தலைமேல் ஏற்பேன்..”
இரண்டு மீனும் பேசிக் கொண்டே கரைக்கு வந்தன, கரையின் அருகாமையில் இருந்து குழந்தையை சுனாமியில் இழந்த ‘அந்த வீட்டின் வாசலிருந்து ஒருத்தி மட்டும் கடலையே வெறித்துப் பார்த்தாள்.
சடக்கென அதிர்ந்தாள். கடலிலிருந்து இரண்டு மீன்கள் கரைநோக்கி நீந்திவருவதையும், மேலே எதையோ ஏற்றி வருவதையும் கண்டு ஓடி வருகிறாள்..
அருகே வர வர அந்த மீன்கள் சுமந்து வருவது ஒரு குழந்தை என்று தெரியவர, அந்த பெண் எழுந்து கடலை நோக்கி ஓடுகிறாள்.
கடலை நெருங்க நெருங்க அந்த மீன்கள் சுமந்து வருவது அந்த வீட்டின் குழந்தையைத் தான் என்பது தெரிந்துவிட அவள் பதறினாள், குழந்தையை பார்த்ததும் பேச நாவிழந்து, செய்வதறியாது ஓடிச்சென்று அந்த மீன்கள் கொண்டுவந்து கரையிலிட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீர்ர்ர்ர்ரென்று கத்தினாள். எல்லோரும் கடல் நோக்கி ஓடி வர அந்த தாயும் மயங்கிக் கிடந்த தந்தையும் எழுந்து ஐயோ ஏம் பிள்ளையென்று ஓடி வருகிறார்கள்.
“குழந்தை.. குழந்தை.. செல்வா.. செல்வா.. எங்கள் செல்வம்.., எங்கள் வீட்டின் செல்வமே, வெளிச்ச மேயென்று எல்லாம் சொல்லி வயிற்றில் அடித்துக்கொண்டு கத்துகிறார்கள் எல்லோரும் மாறி மாறி.
ஐயோ ஐயோ என குழந்தையை பார்த்து கதறுகிறாள் தாய். குழந்தை வயிறு முழுக்க தண்ணி குடித்து வாயிலும் மூக்கிலும் நுரைதள்ளி, மலம் கழித்து பற்கள் இடுக்கிக் கடித்து கடல்மண் அப்பி விகாரமாக கிடந்தது. வயிறு மட்டும் உப்பி உப்பி சுருங்கியது. உடம்பில் ஒரு கடைசி துடிப்பு இருப்பதாக கணித்தார்கள் அவர்கள்.
என்றாலும், யாருக்கும் என்ன செய்வதென்றெல்லாம் யோசனை வரவில்லை. ஒருவர் மட்டும் சுதாரித்து ‘நேரத்தை கடத்தாதீங்க மருத்துவர்கிட்ட கொண்டுபோய் காட்டுவோம்’ என்கிறார்.
அந்த கூட்டம் துடிப்பு தான் நிக்கலையே எப்படியும் குழந்தையை காப்பாற்றி விடுவார் மருத்துவர்’ என்று கடலை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே ஓடியது.
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டு கடவுள்கள் தான் ஒன்று கடல், இன்னொன்று மருத்துவர். கடல் சிலரைக் கொன்றுபோட்டாலும் பின் பலரை வாழவைக்கிறது, மருத்துவரும் வாழவைத்து விடுவாரென்ற’ மனிதநம்பிக்கையை சுமந்துக் கொண்டே அந்த கூட்டமும் மருத்துவமனை நோக்கி ஓடியது.
கரையில் குழந்தையை விட்டுவிட்டு சற்று தூர நின்று இவைகளை பார்த்துக் கொண்டிருந்த அந்த இரண்டு மீன்களும் சிரித்துக் கொண்டு கட்டி பிடித்துக் கொண்டன..
பார்த்தியா ஒரு குழந்தை தான் மனிதகுலத்தின் வீட்டிற்கே உயிர். வெளிச்சம். அது இல்லைனா அந்த குடும்பமே நிராகதியாகிவிடும். அது தான் நமக்கும் அந்த மனிதர்களுக்கும் உள்ள வித்யாசம்.
“அதலாம் சரி தான்; ஆனால் அந்த வலி அவர்களுக்கு நம்மை கொள்ளும்போது இல்லையே?” அந்த பெண்மீன் கேட்டது.
“இல்லாமல் எல்லாம் இல்லை…”
“நீ தான் சொல்லிக்கனும். நம்மை கொன்று தின்று தின்றே அவர்கள் பழகிவிட்டார்கள். அது அவர்கள் சுபாவம் போல்; துடிக்க துடிக்க நம்மை பிடித்து அறுத்து இப்படி ஒரு இனத்தையே அழிக்கிறதே இந்த மனித ஜனங்கள்.. ச்ச!!!”
“போடி இவளே.. நீ இயற்கையை என்னன்னு நினைத்த? அவரவர் தவறுக்கு அவரவருக்கு தண்டனை கிடைக்கும்”
“கூண்டோட நம்மை அழித்த பிறகா?”
“அப்படி இல்லடி, சரி விடு, திரும்ப திரும்ப ஏன் அதையே பேசுவானேன், ஆனா, ஒன்னு மட்டும் உறுதியா கேட்டுக்கோ.. ‘இந்த கடல் உள்ளவரை நாமலும் அழிய மாட்டோம். கடல் இல்லாத அன்று மனிதரும் இருக்க மாட்டார். ஆக மனிதர் இருக்கும் வரை நாமும் இருப்போம். ஒர்தினம் மனிதருக்கு புரியும் நாமும் ஓர் உயிர்தான், நமக்கும் அறுத்தால் வலிக்கும்தான், நாமும் உயிர்பயமெல்லாம் உள்ளவர்தான், நாமும் இறப்பதற்கு துடித்துத் தான் போகிறோம் என்று புரியும். நமக்குள்ளும் உறவுமுறையும் வாழ்க்கைநெறியும் உண்டென்று புரியவரும். அன்று மனித இனம் நம்மை தின்பதை விட்டுவிடும். அதற்கு பின் நாம் சுதந்திரமாய் நீந்தி கடலை வலம் வருவோம்..
அந்த தோழிமீன் தன் பகல் கனவோடு அந்த பெண்மீனைப் பார்த்து சொல்ல, அதை அந்த பெண்மீனும் நம்பி சிரித்துக் கொண்டே அதன் வால்பிடித்துக் கொண்டு கடலுக்குள் ஆழ ஆழ நீந்திப் போனது..
அதேநேரம், கரையிலிருந்து ஒரு மீனவக் கூட்டம் கடலை வணங்கி, சுனாமி வந்த சேதி கூட தெரியாமல் கடலின் வேறொரு கரையிலிருந்து அம் மீன்கள் இருக்கும் திசை நோக்கி கடலுக்குள் புகுந்தது..
——————————————————————————————–
மீன்கள் பாவம் மடிந்துக் கொண்டே இருக்கின்றன மனிதர்களால். தன் ஒவ்வொரு உயிரையும் மனிதரின் நாவில் ஊரும் ஒருதுளி எச்சில்சுவைக்காக மெல்ல மெல்ல இழந்துக் கொண்டிருந்தன. அந்த மீன்களின் வலி, துடிப்பு, வாழ்க்கை என ஒன்றையுமே நாம் சிந்திக்காதவரை ‘மனிதன்; மனிதமிருந்தும் மிருகம்போல்தான் ஆசையால் சிருத்தே போகிறான்..
——————————————————————————————-
தொடரும்.. (மீன்கள் இன்னும் நிறைய பேசும்..)
வணக்கம்….வாசகரை சிந்திக்கத் தூண்டுவதே உங்கள் எழுத்தின் நோக்கமாய் எண்ணி என் கருத்தை பதிகிறேன்..! நம் இந்தியத் திருநாட்டில் அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லாத அடித்தட்டு மக்கள் 60 விழுக்காடோ கூடவோ இருப்பதாகக் கூறும் புள்ளிவிவரங்களை படித்தப் பின்னும்கூட நம்மால் மட்டுமே இப்படி மேல்தட்டு சிந்தனையோடு படைப்புகளை உருவாக்க முடியும்…! “இரண்டு உடைகளுக்குமேல் வைத்திருப்போர் எவராயிருந்தாலும் அவர் அடுத்தவர் உடையை அபகரித்துக்கொண்டவரே..” என்ற மகாத்மா பிறந்த நாட்டில்தான் நாமும் பிறந்திருக்கிறோம்! எத்தனைப் பட்டுப்பூச்சிகளை கொன்றபின் ஒருபட்டுப்புடவை உருவாக்கப்படுகிறது என்பது நாம் அறியாததா என்ன..? பூச்சிக்கொல்லி மருந்திடாமல் நம்மால் ஒரு பூண்டைக்கூட விளைய வைக்கமுடியாதே…! மனிதனின் இயற்கைக்கு மாறான இதுபோன்ற கருத்துக்கள்தானே உலக உருண்டையின் பேரழிவுக்கு காரணமாய் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்..! சர்வவைல் என்ற உயிரினங்களின் வாழ்வாதாரங்களின் மீது எதிர்மறையாய் இயங்க மனிதனுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது..?
LikeLike
வணக்கம் ஐயா, தங்களின் சிந்திக்கத் தக்கக் கருத்திற்கு நன்றி உரித்தாகட்டும். தங்களின் கேள்விக்கான இப்பதில், நிறைய பேருக்கானது. தங்களுக்கானதாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
முதலில், பசிக்கு உண்பவரை விமர்சிக்கும் எழுத்து அல்ல நம் எழுத்து மற்றும் இத்தொடரும் என்பதை புரிய வேண்டுகிறேன். அவர்களை கடந்து ருசிக்கு உண்பவரின் நாக்கை, உயிர் துடிக்க துடிக்க துண்டிப்பவரின் நாக்கை அறுக்க; நம் எழுத்தில் கூர்மை இருக்குமெனில், அதை கொண்டு அவர்களின் ஆசையை அறுத்து, சில உயிர்களை காக்கும் முயற்சி மட்டுமே.
அதின்றி, நேற்றை விட இன்று முன்னேறியவர்கள் தானே நாம்? இன்றிருக்கும் ஏழ்மை ஒரு ஐநூறு ஆயிரம் வருடம் கழித்தேனும் மாறுமல்லவே; அன்று அவர்கள் ருசிக்கு நாக்கு தட்டி தின்ன வருகையில், அவர்களின் பசித்திட்ட கொடுமை மறவாத நினைவில் ‘இச்சிறு உயிர்களின் நினைவையும் புகுத்த நாம் இன்றே எழுதவேன்டாமா?
எதையோ; நாம் செய்கிறோம் என்பதற்காக கொலையை கொலையில்லை என்றும் சொல்லிட இயலாதே? ஒன்றை செய்கிறோம் என்பதால், இன்னொன்றை மீண்டும் செய்வதா மனிதர்க்கழகு?
தவறு எங்கிருந்தாலும் திருத்திக் கொள்ள வேண்டுமென்பதே நம் எண்ணம். அது பட்டுப்புடவையில் இருந்தாலும் சரி, கிழிக்கும் பனை ஓலையில் இருந்தாலும் சரி, பிடித்தறுத்து வலுக்கட்டாயமாய் துடிக்க துடிக்க கொன்று தின்னும் பிற உயிர்களாயினும் சரி. தவறு தவறு தான். ஒவ்வொன்றாய் இயன்றளவில் திருத்திக் கொள்ள முயல்வதில் நம்மை மனிதராய் மெய்ப்பிப்போமே?
ஆயிரம் கோடி ஆண்டுகாய் தழைகள் தின்று பிழைத்திருந்த மனிதன் நெருப்பைக் கண்டதும் என்று பிற உயிரை கொன்று ருசிக்காக தின்ன ஆரம்பித்தானோ; அன்றிலிருந்தே நம் வாழ்வும் குறைந்து போயிருக்கிறது என்பதை, விடை தேடி அலைவோமானால் ஆங்காங்கே தெருவிற்கு தெரு பெருத்திருக்கும் நம் மருத்துவமனைகள் சொல்லும்.
எனினும், நாம் எழுதுவதால்; நம் எண்ணங்கள் மட்டுமே உலக நியாயமாகிடாது. நம் சிந்தனைகளை உங்களைப் போன்ற அறிவாளிகளின் மத்தியில் பதிந்து நம்மையும் சீர் செய்து கொள்வது தானே விலைக்கு மட்டுமே காத்திராத நம் எழுத்தின் நோக்கம்.
சரிதவறினை அறிந்து சரி செய்துக் கொள்வோம். இன்னும் இதற்கடுத்த பதிவுகளில் வாழ்வாதாரப் படியான பயணங்கள் உள்ளன. அதில் இதுபோன்ற யோசனைகளுக்கான பதில்களும் உண்டு.
மீனின் வழியே முடிந்தவரை; பிற உயிர்களின் வலியையும் பேசுவோம். மெல்ல மெல்ல நடந்து நாளை நாம் ஒட்டுமொத்தமாய் பேச பேச; நம் வலியும் தானே குறையும்!!
LikeLike
அருமையான பதில் திரு வித்யாசாகரே!
ஆழமாக சிந்திக்க தூண்டுகிறது.
மானதிட்குள் ஒரு மாற்றத்தையும் ,
விழிப்புணர்வையும் எற்படுத்தி
வைக்கிறது உங்கள் எழுத்து.
பாராட்டுக்கள்!!
LikeLike
மிக்க நன்றி உமா. எழுத்தால் இணைந்திருப்பதில் புது யுகம் படைப்போம். அங்கே எல்லோரும் எல்லாமும் பெற்று இனிமையோடு வாழட்டுமே. கற்பனை தானே; அதை நன்மைக்காய், நலம் நோக்கிச் செய்வோம். ஐயா திரு. சிவசங்கரனும் ஆழம மிக்க சிந்தனையாளர். என்னில் உள்ளதை கொண்டுவரும் வித்தை அறிந்தவர். அதன் நோக்கமே இந்தக் கேள்வியும் இருக்கும். கலந்துப் பேசாததன் விளைவுதான்; காணாமால் போவதன் காரணமும்!!
LikeLike
நல்ல கற்பனை.
LikeLike
மிக்க நன்றி தோழர். தங்களைப் போன்றோர் தொடர்ந்து நம்மைப் படித்தும் உடன் இருந்தும் வருவது, இன்னும் எழுதுவதற்கான பலத்தினையும் தருகிறது!
LikeLike
போங்க உங்களை பாராட்டி பாராட்டியே எனக்கு அலுத்துபோச்சு. இன்னும் ஒரு சுனாமி வந்தது போல இருந்திச்சு.
LikeLike
வரவேண்டாம் சுகந்தினி. அந்த கதறல் உள்ளே கண்ணீராய் மீதமிருந்த வலியின் காரணமே இந்த உருவாக்கம். ஒரு குடும்பத்தில் ஒருவர் இருந்து ஒருவர் இறப்பதேன்பது; இறப்பதைவிடவும் கொடுமை என்பதை நாமறிவோம்! எனினும் தங்களின் எப்பொழுதிற்குமான அன்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுகந்தினி!!
LikeLike