சந்திரோதயன் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அந்த இரண்டு மீன்களை கிணற்றில் விடவேண்டி சனியாண்டி விலாசின் பின்பக்கம் போக, அதற்குள் அவரைத் தேடி அந்த உணவகத்தின் முதலாளியும் உடன் இரண்டுப் பேரும் ஓடி வந்தார்கள். வந்து “ஐயா சாப்பிடுவதை விட்டுவிட்டு வந்து விட்டீர்களே..” என்றனர்.
‘இல்லை, இப்பக்கம் காற்று நன்றாக வீசியது, அதோடு இரண்டு பூனைகள் வேறு கத்திக் கொண்டிருந்தன அதான் பார்க்க வந்தேன்”
“பூனைகள் மீன் தலை தின்பதற்காக சுத்தும்க. இங்க இப்படி தான் ஒன்றை அடித்தால் ஒன்றிற்கு உணவு”
“ஒன்றை சார்ந்து தான் ஒருவர் வாழ்கிறோம் என்கிறீர்களா?”
“ஆமாங்க, அப்படியே தான்”
அவர் சிரித்துக் கொண்டார். விலங்குகள் அப்படித் தானே வாழும் என்றும் நினைத்துக் கொண்டார். எனினும், உள்ளே இரண்டு மீன்களை காப்பாற்றி தப்பிக்கவிட்டுவிட்ட நிம்மதி அவருக்கு மிகையாய் இருந்தது.
“என்னங்கையா சரி தானே சொன்னது”
“ஆமாமாம், சரி தான் சரிதான். இருந்தாலும்” அமைதி காத்தார்
“என்னய்யா ஏதோ சொல்ல..” மீண்டும் அவரே தொடர “ஆங் சொல்லுங்க சொல்லுங்க” என்றார் வேலுக்கண்ணு.
“முற்றிலும் சரி யில்லை என்று சொல்லவந்தேன்”
“ஏன்?”
“ஒன்றினை அழித்து ஒன்று பிறப்பது சூத்திரம் என்றாலும், பிற உயிரினங்கள் ஒரு உயிரைத் தின்று ஒன்று வாழ்வது இயல்பு என்றாலும், இரக்கமற’ வெறும் தனக்குத் தெரிந்த அல்லது தன்னால் சொல்ல முடிந்த காரணங்களை மட்டும் சொல்லிவிட்டு, பிற உயிர்களைக் கொன்று தன் உயிரை மட்டும் வளர்த்துக் கொள்வது மனிதரின் அறிவிற்கு அத்தனைச் சிறப்பல்ல. மனிதனுக்கு ஆசை என்பது வேண்டும். ஆனால் அந்த ஆசைக்கு எல்லையும் வேண்டும். ஆசைக்கு எல்லை இல்லையேல் ஆசை நம்மையும் அழித்துவிடும் அன்பரே”
“நிச்சயங்கையா, பழகிட்டோம், உடனே நிறுத்திட இயலாதே, அதிலும் எங்க பிழைப்பே இதுல தானுங்க ஓடுது”
“அச்சச்சோ, மன்னிக்கணும், உங்கள் பிழைப்பில் கைவைக்க என் பேச்சில்லை. மாமிசம் உண்பது இன்று உலக நியாயமாகி விட்டது. அதில் உங்களின் தனிக் குற்றம் ஒன்றுமில்லை. ஆனால் கூட்டத்தில் பங்குண்டு”
“புரியுதுங்க, அதுக்காக வேண்டாம்ன்றீங்களா?”
“உடனே முடியாவிட்டாலும், மெல்ல; இன்று முடியாவிட்டால் நாளை; இந்த பிறப்பில் இல்லாவிட்டாலும் வேறு எந்த ஒரு பிறப்பிலேனும், அப்படி ஒன்று உண்டெனில்; அதிலாவது மனிதன் பிற உயிர்களை கொள்வதை நிறுத்தியேயாக வேண்டும்”
“இதையே நம்பியிருக்கும், மீனே கதி என்று கடலுக்கு ஓடும் ஏழைகள் எல்லாம் பிறகு என்ன செயவார்களையா?”
“முதலில் நீங்கள் ஒன்றை உணரவேண்டும் என் பேச்சு ‘பசிக்கு உண்பவரை பரிகசிப்பதற்கல்ல; ருசிக்கு உண்பவரை தடுப்பதில் மட்டுமே. உண்பவரின் நாக்கை, உயிர் துடிக்க துடிக்க பிற உயிர்களைத் துண்டிப்பவரின் நாக்கை உடனே அறுத்து எறிந்துவிட அல்ல; நம் எழுத்தில் கூர்மை இருக்குமெனில், அதை கொண்டு அவர்களின் ஆசையை அறுத்து, பல உயிர்களை காக்கும் முயற்சி மட்டுமே.
அதின்றி, நீங்கள் ஏன் அசைவம் எனில் மீனை மட்டுமெடுத்துக் கொள்கிறீர்கள்? கோழிப்பண்ணை வைத்திருப்பவரும் கறிக்கடை வைத்திருப்பவரும் என்ன அத்தனை ஏழைகளா? இல்லை, மாமிசத்தை விட்டால் உண்பதற்கு வேறு உணவே கிடைக்க இயலாதவர்களா? அவர்கள் அதுவாக பழகி விட்டார்கள். அவ்வளவுதான். அவர்களுக்கு அதிலிருந்து விடுபட மாற்றுவழி காண்பிக்க இயலுமெனில் காண்பித்தல் சிறப்பில்லையா?
அதேநேரம், வேறு நிலை இல்லாதபட்சத்தில் வயிற்றின் ஈரம் துடைப்பவர்களைப் பற்றி நாம் பேசும் இடம் இதுவுமல்ல ஆனால் அவர்களின் நிலையை காலத்தினால் மாற்ற இதுவும் உதவும் அன்பரே”
“அப்போ, வேறு வழி இல்லையெனில் இறைச்சி உண்பது தவறாகாதா?”
“இருக்கும்போதே விட இயலாதார், இல்லையெனில் என்னையும் தின்று செரிக்க மாட்டீர்களா?” சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டார் சந்திரோதயன்.
“இல்லைங்கையா இது வேணாம்னா பின்ன வேறு பதில் வைத்திருப்பீர்களே அதான் கேட்டேன்”
“இதலாம், இன்றையை மட்டும் தாங்கியோ எண்ணியோ சொல்வதில்லை திரு. வேலுக் கண்ணு, நாமென்ன இப்படியே இருந்து விடுவோமா? ஏழை என்ன ஏழையாக மட்டுமே இருக்க வேண்டுமா? அவர்கள் ஒரு படி மேலே வரவே கூடாதா?
நாளையே இந்திய அரசோ அல்லது நம் தமிழக அரசோ ஜாதி எனும் ஒரு பிரிவை மொத்தமாக அரசு ஆணையிலிருந்தே அகற்றிவிட்டால், அல்லது அரசு சார்ந்த படிவங்களிலிருந்தே நீக்கிவிட்டு இனி ஜாதியை எங்கும் கேட்கவேப் போவதில்லை, எல்லோருமே இனி ஒரே இனம், அன்றி, திறனும் உழைப்பும் பொறுத்தே ஒருவரை ஒருவர் மதிக்கப் படுவர்’ என்றொரு ஆணையை பிறப்பிக்கட்டும்; அடுத்த நூற்றாண்டுகளில் பாருங்கள் ஏழையின் அளவை. வெகுவாகக் குறைந்திருக்கும்.
இந்த ஜாதி மதம் பார்த்து பிறரை ஒதுக்குவது கீழ்மை படுத்துவதென்பது மனோதத்துவ முறைப்படி நாம் சிலரை மட்டப் படுத்தி வைத்திருக்கும் மனிதம் மீறியப் பெருந்தவறு. இதை மீறி ஒரு தேசம் சமத்துவத்தோடு வளர்வதென்பது மிகக் கடினம்.
இவன் இப்படி இவன் இப்படி என்று சொல்லி சொல்லியே நிறைய பேரை ஆண்டுகள் பல கழிந்தும் அப்படியே வைத்திருக்கிறோமே, அவர்களின் கைகளை கட்டியிருப்பது எது?
மீன் பிடிப்பவன் ஏன் கடலாராய்ச்சி செய்யக் கூடாதா, மீன் தான் பிடிக்கவேண்டும் எனும் போல், நீ இந்த ஜாதியை சார்ந்தவன்; நீ இதைத் தான் செய்யவேண்டும், நீ இப்படி, இதற்குத் தான் சரி என்று அரசே தூண்டுகோல் இடுவது மனிதத்தின் கொடிய செயலில்லையா?
அவரவரை அவரவர் வாழ்வுநிலைப் படி, வேறெந்த அதிகார சூழ்ச்சியோ அல்லது அதிகார திணிப்போ இன்றி விட்டுப் பார்த்தால் தானே அவர்களின் உண்மை வளர்ச்சி என்னவென்று தெரியும்?”
சற்று உணர்ச்சிவசப் பட்டவராக முகம் சிவக்கக் கேட்டுவிட்டு நிறுத்த, ஒருவர் உள்ளேயிருந்து ஓடிவந்து ”ஐயா சாப்பாடு எல்லாம் தயாரா இருக்குங்க என்று சொல்ல, அவர் சரி வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்நோக்கி பேசிக் கொண்டே வருகிறார்.
“ஆக, ஏதேனும் ஒரு மாற்றத்தின் பின் நாம் மாறுவோம், நம் நிலை மாறும், நேற்றையினை விட இன்று முன்னேறியவர்கள் தானே நாம்? இன்றிருக்கும் ஏழ்மை ஒரு ஐநூறு ஆயிரம் வருடம் கழித்தேனும் மாறத் தானே வேண்டும்? அன்று அவர்கள் ருசிக்கு நாக்கு தட்டி இதையே தின்ன வருகையில், அவர்களின் பசித்திட்ட கொடுமையினையும் அவர்களுக்கே நினைவு படுத்தி ‘இச்சிறு உயிர்களின் நினைவையும் புகுத்த நாம் இன்றே பேசிவைக்க வேன்டாமா?”
“மாற்றம் வந்தா மாறித் தானே ஆகனும்யா. அதலாம் காலச் சுழற்சியாய் மாறிக் கொள்ளும். அப்படிப்பார்த்தால் என்னல்லாம் உயிர்வதை நடக்குதே நம்மிடம் அதற்கெல்லாம் பதில் வேண்டாமா?”
“நிச்சயம் நம் ஒவ்வொரு அசைவிற்கும் பதில் இருக்க வேண்டும் வேலுக்கண்ணு. பதில் இல்லாமலுமில்லை. அதேநேரம், இதற்கெல்லாம் நான் சொல்வது மட்டுமே வேதமாகியும் விடாதில்லையா? அதுபோல், எதையோ நாம் செய்கிறோம் என்பதற்காக, ஒரு கொலை கொலையில்லை என்றும் ஆகிவிடாது தானே? ஒன்றை செய்கிறோம் என்பதால், இன்னொன்றை மீண்டும் செய்வது நம் மனிதர் சிந்தனைக்கு வளமில்லை.
தவறு எங்கிருந்தாலும் திருத்திக் கொள்ள வேண்டுமென்பதே நம் எண்ணம். அது லட்சாதிலட்சம் பட்டுப் புழுக்களைக் கொன்று நெய்திடும் பட்டுப்புடவையில் இருந்தாலும் சரி, வீடு கட்ட ஒரு மரம் வெட்டி கிழிக்கும் ஒற்றை பனை ஓலையில் இருந்தாலும் சரி, பிடித்தறுத்து வலுக்கட்டாயமாய் துடிக்க துடிக்க கொன்று தின்னும் பிற உயிர்களாயினும் சரி. தவறு தவறு தான். ஒவ்வொன்றாய் இயன்றளவில் திருத்திக் கொள்ள முயல்வதில் நம்மை மனிதராய் மெய்ப்பிப்போமே?
ஆயிரம் கோடி ஆண்டுகளாய் தழைகள் தின்று பிழைத்திருந்த மனிதன் நெருப்பைக் கண்டதும் ‘என்று பிற உயிரைக் கொன்று சுட்டுத் தின்று ருசி கண்டானோ, ஒவ்வொன்றையாய் தின்ன ஆரம்பித்தானோ; அன்றிலிருந்தே நம் வாழ்வும் குறைந்து போயிருக்கிறது என்பதை, விடை தேடி அலைவோமானால் ஆங்காங்கே தெருவிற்கு தெரு பெருத்திருக்கும் நம் மருத்துவமனைகள் சொல்லும்”
அவர்கள் பேசிக் கொண்டே வந்து உள்ளே அமர்ந்தார்கள். அருகில் உணவுண்ண வந்த மக்கள் அவர்களையே பார்த்துக் கொண்டும், அவர் சொல்வதைக் கேட்டு சிந்தித்தவாரும், சிலர் அவர்களுக்குள் அவர்களாக விவாதித்துக் கொண்டுமிருந்தனர். மேஜையில் சந்திரோதயன் கேட்ட அசைவ உணவுகள் வேறு எல்லாமே மேஜைக்கு வந்து வெகுநேரமாகிவிட்டமையால், அவைகள் குளிர்ந்திவிட்டிருக்க அந்த கடை முதலாளி வேலுக்கண்ணு அதைத் தொட்டுப்பார்த்துவிட்டு சற்று வருத்தமுற்றார்.
“எல்லாமே ஆரி போச்சீங்களே ஐயா, அப்படியே வைத்திருக்கீங்களே”
“பரவயில்லைங்கையா உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் தோழமை வயிற்றைவிட மனதை நிறைத்துவிடுகிறது, எனக்கு அது போதும். தவிர நான் அத்தனை சூடாகவோ அல்லது நாக்கு ருசி பதைக்கவோயெல்லாம் உண்டு பழகுவதில்லை”
“என்னங்கையா என்னை போய் நீங்க ஐய்யான்னு கூப்டுகிட்டு, சும்மா வேலுக்கன்னுன்னு கூப்பிடுங்க”
“மதிப்பவரை மதித்தல் அழகு, நிறைவும் கூட தானே?”
“அது தப்புங்க”
“அப்போ நீங்களும் என்னை சந்திரோதயன் என்று அழைக்கலாமே? பார்க்கப் போனால் நீங்கள் என்னை விட வயதில் பெரியவர்”
“அப்படி இல்லீங்க, நீங்க”
“மரியாதை என்பது எல்லோருக்கும் பொது வேலுக் கண்ணு ஐயா. அது மனிதரை மனிதராய் பார்க்கும் பண்பு. பரஸ்பரம் புரிந்து நட்பின் மேலதிகத்தில் பெயர் விட்டு அழைத்தாலும், அல்லது பார்க்கும் பிறர் பார்வைக்கு மதிப்பு கூட்டும் வகையில் ஐயா என்று அழைப்பினும் ஒன்றே. ஏற்றத் தாழ்வுகளை நாம் தான் தொழில் சார்ந்தும் பணம் அந்தஸ்து சார்ந்தும் ஏற்படுத்திக் கொண்டோம். பிறரை மதிக்க தெரிந்த நீங்கள் எத்தனை உயர்ந்தவர் தெரியுமா? உங்களை சந்தித்ததில் உண்மையை சொன்னால் நான் தான் பெருமை கொள்ள வேண்டும்”
சந்திரோதயன் சொல்லி நிறுத்தியது தான் தாமதம், வேலுக்கண்ணுவின் கண்களில் நீர் பூத்துக் கொண்டது, உணர்ச்சி வயப் பட்டு சந்திரோதயனின் கைகளை ஆத்மார்தமாகப் பற்றிக் கொண்டார். சந்திரோதயனும் பதிலுக்கு அன்பு தெரிவிக்கும் வகையில் அவரின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு பேசினார்.
“அன்பும் பிறரை மதிக்கும் பண்பும் மனிதரிடத்தில் இருக்கும் பெரிய ஆயுதமையா. அந்த இரண்டு ஆயுதங்கள் தான் நமக்கேத் தெரியாமல் நம்மை ஆட்டுவிக்கவும் ஆள்விக்கவும் செய்கிறது. நம்மை வளர்க்கவும் மேன்மையுறவும் வைக்கிறது. அறிவு திறன் எல்லாம் அதன் பின் தேவைப்படுகின்றன. அறிவும் திறனும் அவ்விரு ஆயுதங்களை பயன்படுத்தும் பாடு பொருட்கள், அவ்வளவுதான்” என்றவர் சொல்லி நிறுத்த அவரின் கூரிய விழிகளை பெரு மதிப்புடன் நோக்கினார் வேலுக்கண்ணுவும்.
பிறகு அவர் சாப்பிட அமர, வேலுக்கண்ணு பரிமாற, அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த சிலர் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் சமநிலைப் புரிதலோடு தோழமைக் கொண்டது பார்ப்பவரை பூரிக்கச் செய்தது.
என்றாலும், சந்திரோதயன் வாங்கியதை எல்லாம் அந்தளவிற்கு விரும்பி சாப்பிட வில்லை. மாமிசங்களை எல்லாம் ஒதுக்கிவைத்தார். நல்லக் கண்ணு பொருக்கி பொருக்கி எடுத்து வைத்து; இதை மட்டுமேனும் சாப்பிடுங்கள் என்று சொல்லி கோழிக் கால் மசாலாவினை எடுத்து அவர் தட்டில் வைத்து மேலும் இரண்டு பரோட்டா போட்டுக் கொண்டு வரச் சொன்னார்.
சந்திரோதயன் தட்டிலிருந்த கால்களை எடுத்துக் கடிக்க கடிக்க உள்ளே இதுவரை கணக்கில் இல்லாமல் அழிந்த அத்தனை உயிர்களின் நினைவும் மனதை வந்து உறுத்தின.
நிமிர்ந்து வலப்புறம் இருந்த கோழிகள் அடைக்கப் பட்ட ஒரு இரும்புச் சல்லடைப் பெட்டிகளைப் பார்த்தார். கேட்போருக்கு உடனே பிடித்து அறுத்து கேட்கும் விதம் செய்துத் தர அவைகள் வைத்திருக்கப் பட்டது.
அதையும் பார்த்து தன் கையிலிருந்த அந்த கோழிக்கால் துண்டையும் பார்த்தார். இந்தக் கால்கள் இன்னும் எத்தனை ஓட இருந்தனவோ. எங்கெங்கு தன் வாழ்க்கையை சுற்றிச் சுற்றி வாழ்ந்துத் தீர்க்க இருந்தனவோ.., அத்தனையும் மனிதனின் ருசி எண்ணும் ஒரே உணர்வுக்கு ஆட்பட்டு கொள்ளப் பட்டதை எண்ணி எண்ணி வெறுமை நிறைந்த மனதினோடு சவ்வ்க்கு சவ்வ்க்கு என்று மென்று ஒரு மருந்தினைப் போல அதை விழுங்கினார்.
நேற்று தன் உறவுகளோடு சுற்றித் திரிந்த ஒரு கோழியின் மாமிசமானது உள்ளேச் செல்ல செல்ல நரமாமிசம் உண்ணும் அரக்கனைப் போல, தன்னைத் தனக்கே மனக்கண்ணில் அடையாளம் காட்டியது அந்த கோழியின் கால் கறி.
அதற்குள் இன்னொருவர் வேகமாக சந்திரோதயன் பக்கம் வந்து நின்றார். வணக்கம் சொன்னார். அருகில் இருந்த இருக்கையினை காட்டி இங்கே அமரலாமா என்று கேட்டுக் கொண்டு அமர்ந்தார். சந்திரோதயனும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து ஆவலுடன் அவரைப்ப் பார்க்க. புன்னகைக்க – சற்று கோபமும் பரிகாசமும் கலந்த கண்களை அசைத்து –
“கால் எப்படி இருக்கு?” என்று கேட்க
“எனக்கு காலுக்கு ஒரு குறையும் இல்லையே நண்பரே!!” என்றார் சந்திரோதயனும் பரிகாசமாக
“ஓ…., சிரிக்கவேண்டும் தான், உங்கள் நகைச்சுவை மிகப் பிரமாதம், நான் கோழிக்கால் எப்படி இருக்கிறதென்று கேட்டேன், அதிலும் நம்ம சனியாண்டி விலாஸ் கிட்ட எந்த கொம்பனும் போட்டிக்கு நிக்க முடியாது. அப்படி ஒரு ருசி..” ஒரு உள்ளர்த்தத்தோடு அவர் பேசுவது சந்திரோதயனுக்குப் புரிந்தது.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அப்படியா?” என்றார்.
“என்ன அப்படியா கால கடிச்சீங்கள்ல”
“ம்ம்.. ஆமாம் ஆமாம், மனிதனின் கண்ணீருக்குக் காரணமான ‘மரணத்தின் வாசம்’ சற்றுத் தூக்கலாகத் தான் இருக்கிறது”
“அதலாம் நீங்க பேச தகுதியற்றவர், தின்னாதவங்க பேசுற பேச்சு இல்லையா அது”
“சரி தான்..”
‘’என்ன சரி தான்; பெருசா உயிர் உயிர் னு உயிர்கொல்லாமைக்காக உருகிவிட்டு, உருகி உருகி எழுதிட்டு இப்படி வகை வகையா வாங்கி சாப்பிடுகிறீர்களே; குரு துரோகத்தைக் காட்டிலும் மாணவ துரோகம் தவறில்லையா?”
“தவறு தான். பிறைரை செய்யாதே என்று சொல்லிவிட்டு நான் செய்வதும், அல்லது நான் செய்வதை பிறரிடம் இருந்து மட்டும் செய்ய விடாது தடுக்கப் பார்ப்பதும் தவறுதான்”
“அப்புறம் மேஜை முழுக்க கோழியா இருக்கே?”
“அட என்னப்பா நீ, நானென்ன ‘மீனும் மீனும் பேசிக் கொண்டன’ என்று தானே எழுதினேன். கோழியும் கோழியும் பேசிக் கொண்டன எழுதவில்லையே???!!!”
அந்த நாபருக்கு கோபம் கண்களில் தெறித்தது. அதைப் பொருட்படுத்தாது சந்திரோதயனும் லேசாக சிரித்தவாறே, ‘நானும் மனிதன் தானே? என்றார்.
“அப்போ என்ன மயித்துக்கு அடுத்தவனுக்கு அறிவுரை எல்லாம் சொல்லிக்குனு” என்று எண்ணி இருப்பான் போலும் அந்த வாலிபன். அத்தனை கோபத்தின் உயிரோட்டம் அவன் கண்களில் நரம்புவழியே சிவக்க, அமர்ந்திருந்தவன் வெடுக்கென எழுந்துக் கொண்டான். அவனின் நியாய உணர்வினை புரிந்துக் கொண்ட அவர் –
“அமைதி கொள்ளுங்களப்பா. என் எழுத்து உண்மை. என் எழுத்து பொய்யுரைப்பதில்லை. இது சாப்பிடுவது ஒரு ஆய்வின் காரணமாக மட்டுமே. இப்படி அமருங்கள் சொல்கிறேன்”
“பின்ன என்னங்கையா, உங்களோட புத்தகங்கள் படித்து எங்களோட ஒரு குழு மொத்தமே இனி அசைவம் சாப்பிடக் கூடாதுன்னு முடிவு செய்திருக்கோம்”
“ஓ…, ரொம்ப நல்லது செய்தீங்க. துடிக்க துடிக்க அறுத்து உயிர் கொன்ற பாவத்தை எல்லாம் மசாலாவில் போட்டு மறைத்து சுட சுட வைத்து தின்னும் மாமிசத்தின் ரத்தம் ஊறிய பச்சை வாசத்தை என்று மனிதன் சகித்துக் கொள்ள, சகித்து தின்றுவிட துவங்கினானோ அன்றிலிருந்து தான் மனிதருக்குள் வன்மையும் குரோதமும் ரத்த வெறியுமே தலை தூக்க ஆரம்பித்திருக்கும்.
பிறகு, எல்லாம் தெரிந்தும் ஏன் நான் இங்கே அமர்ந்திருக்கிறேன் என்று உங்களுக்கு ஒரு கேள்வி தோணும், இல்லையா?”
“உங்கள் எழுத்தை; நம்பி வாசித்தமையாலா என்னவென்று தெரியவில்லை பொய்யென்று அறிகையில்; வெறும் கேள்வியல்ல எடுத்து எதையேனும் வீசும் கோபமே வருகிறது..”
“இது ஒரு பரீட்சை மாதிரி தம்பி. நானென்ன இரத்தம் சுவைப்பவனா? மனிதரின் மிருக குணத்திற்கு கூட சூழலே காரணம் மனிதனல்ல’ என்று எண்ணி மன்னிப்போம் மறப்போம் என்று வாழ்பவன். பிறகென்ன உயிர் குடிக்கவா எண்ணுவேன்?
இது ஒரு சோதனை. அவ்வளவு தான். உலகமே அசைவத்தின் நாக்கு சுவைக்குள் இப்படி ஊறிக் கிடக்க திடீரென நான் வந்து நிறுத்து சாப்பிடாதே என்று தொண்டை குழியில் கை விட்டு நிறுத்தினால் அது எத்தனை சரியாக இருக்கும் எங்கனம் ஏற்கப்படும், அல்லது ஏற்கப் படும் அளவிற்கு எப்படிச் சொல்லுவது என்று பார்க்க இதைப் பற்றி உணர்வாக தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியம்.
மக்கள் இதனை இத்தனை ஆர்வமாக சாப்பிடுவதற்கான காரணம் என்ன? அதன் பின் விளைவுகள் என்ன? அவர்களை உண்ண வேண்டாமென்று சொல்லுமுன் உண்ணாமல் இருக்க முடியுமா முடியாதா? என்று பார்க்க ஆதாரம் தேடும் ஒரு சோதனை.
எலிக்கு பதில் என்னை பயன்படுத்துகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதின்றி, ஓடியாடி விளையாடிய பொழுதில் நிறைய மாமிசம் தின்றவன் நான். எங்கள் வீடு அசைவம் நிறைந்த வீடு. அசைவ மனத்தில் வயிறாரும் குடும்பம் எங்கள் குடும்பம்.
அங்கனமிருந்தும் சரி தவறு அலசி அசைவம் உண்பதை நான் நிறுத்திக் கொண்டாலும், அன்று அம்மா ஊட்டிவிட்ட அந்த மீன்குழம்புச் சோற்றின் வாசம் உள்ளே மிச்சமிருக்கிறதில்லையா, அதன் வன்மத்தை எனக்குள் மீண்டும் உணர்த்தி மறுபதிவு செய்துக் கொள்ளும் முயல்வு இது.
உள்ளே இருக்கும் அசைவ ஆசையின் அடிவேரினை இப்பொழுதுணரும் ரத்த வாசத்தால் பிய்த்து எரியத் துடிக்கிறேன் அன்றி வேறில்லையப்பா. எனினும் உங்கள் பார்வையில் நான் தவறு தான். அதை ஒப்புக் கொள்கிறேன், உன் கோபத்தையும் மதிக்கச் செய்கிறேன். எனினும் என் ஆய்விற்கான தேவை இன்றோடு நிறைவு பெற்றது. இதோடு உடல்கட்டை வேகும்வரை இவைகளை தொடமாட்டேன்”என்று சொல்லி விட்டு அவரின் தோள்மேல் கைபோட்டு மன்னிப்பீர்களா என்னை என்று கேட்க.
அவன் பதறி போனான். பதற்றம் நீக்க அவர் அவனிடம் அன்பாகப் பேசி, உன் பேரென்ன என்று விசாரித்து, நலம் விசாரித்து, இதர விவரங்கள் புத்தகம் படிக்கும் விவரங்கள் என்று பல விடயங்களைப் பற்றிப் பேசி கட்டி அவனை அணைத்துக் கொண்டார். பின் கடைசியாக, எல்லோரையும் பார்த்து –
“ஆக, இதலாம் இந்த மறுப்பினை எல்லாம் இன்று ஆரம்பித்தால் தான், நாம் நம்மையே கொன்று தின்றுமுடிக்கும் முன், விலங்குகளைத் தின்பதை நிறுத்த இயலும். அதற்கு எல்லாம் பக்கமுமான வழிகளை ஆராய்ந்து தெரிந்துக் கொள்வதற்குத் தான் கடினப் பட்டு இவைகளை மனதில் தோணும் போதே மருந்தென்றெண்ணி உண்டுக் கொண்டேன்.
“மன்னியுங்கள் ஐயா, உங்களை புத்தகத்தில் படித்ததற்கு மாறாக நேரில் பார்க்கையில் கோபம் வந்துவிட்டது”
“பரவாயில்லை மாறன். கோபம் வந்ததால் தான் நீங்கள் சரி. அதற்கெல்லாம் நான் வருந்தமாட்டேன். மனதிற்கு புரியும் வரைதானே கோபமெல்லாம். போகட்டும் அதை விடுங்கள், உண்மையில் எனக்கு இருக்கும் வருத்தமெல்லாம் ‘இந்த உயிர் கொள்ளல் என்பது ஒரு கொடுமையான விஷயம்’ என்பதை உலக மக்களிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பேன் எனும் தவிப்பு மட்டுமே.
நன்றாக ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் உலக அழிவின் அத்தனை காரணங்களுக்கும், உலக வக்கிரங்கள் அனைத்திற்கும், உலக அழிவின் அத்தனை அவசியத்திற்கும் கூட, இந்த உயிர் கொன்று உயிர் தின்று உயிர் வளர்க்கும் அவலம் தான் காரணமோ’ என்றொரு சந்தேகமே எனக்கு பெருமளவில் இருக்கிறது”
அவர் பேசிக் கொண்டிருக்க –
ஒருவர் மீண்டும் வந்து இடையே புகுந்து “நான் கூட எதற்கு நமக்கந்த பாவமென்று தான் வெள்ளி சனி செவ்வாய் கிழமைகளில் கவுச்சியே உண்பதில்லை என்றார்.
அதற்கவர் சிரித்துக் கொண்டு. “சாப்பிட துணிந்து விட்டீர்கள். பிறகு கிழமை வேறு, நாள் வேறா? தவறினை என்று செய்தாலும் தவறு தானே? சாப்பிடுவது சரியெனப் பட்டால் என்று வேண்டுமாயினும் சாப்பிடுங்கள், தவறென்று புரிந்தால் மொத்தமாய் உடனே நிறுத்தி விடுங்கள். பிறகு அதுவேறு இதிலெதற்கு கடவுளையும் துணைக்குக் கூப்பிடுவானேன்? நாம் செய்யும் பாவம் நம் நெஞ்சை குத்துமெனில் கடவுள் சொன்னாலும் அதை செய்ய மறுப்போம் தோழரே”
“எல்லாத்துக்கும் ஆமாம் போட முடியாது, இருந்தாலும் ஏதோ சொல்றீங்க இனி யோசிப்போம்” என்று சிரித்துக் கொண்டே மழுப்பிவிட்டு அவர் அங்கிருந்து நகர்ந்து போனார். சந்திரோதயன் அதைப் பொருட்படுத்தாது –
“உங்களுக்கு நிறைவாக நான் இன்னொரு உண்மையினையும் சொல்லிவிட்டு விடை பெறுகிறேன்.
மேற்கூறிய காரணங்களால் அசைவ உணவுகளை சற்றேறக் குறைய நான் ஆறேழு மாதங்களாக உண்கிறேன். காரணம் ஒன்றை பிறருக்கு சொல்கையில் அது முற்றிலும் எத்தனை சரி என்றும் அல்லது எவ்வகையில் நல்லது என்றும் எனக்கு அறிந்திருக்க வேண்டிய அல்லது உணர்ந்திருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
அதை உணர நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனத்தில் ‘இந்த ஆறுமாதத்தில் மட்டும் என் உடம்பில் எல்.டி.எல். எனும் கெட்டக் கொழுப்பு பெருமளவில் கூடியுள்ளதாகவும், சர்க்கரை அளவிற்கதிகமாக இருப்பதாகவும், ரத்தக் கொதிப்பும் கூடி விட்டதாகவும்; ஏன் இதயம் கூட பாதிக்கப் பட்டு இருக்கலாம் என்றும், அல்லது கிட்னி விரைவில் பழுதடையலாம் அடைந்திருக்கலாமென்றும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
அதிலும், சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மாரடைப்பு வந்தால் அந்த நோயாளிக்கே அது வருவது கூட தெரியாத அபாயம் உள்ளதாம். பேசிக் கொண்டே இருக்கையில் இதய குழாய்கள் அந்த கெட்ட கொழுப்பினால் அடைபட்டு இதயமே நின்று போகுமாம்”
அவர்கள் அவர் சொல்லும்போதே வாயை பொத்திக் கொண்டனர்.
“அதனால் எனக்கொன்றும் பயம் எழவில்லை. என் பயமெல்லாம் என் மக்களின் மீதானது. இந்த சமுதாயத்தின் மீதானது. இந்த நாற்பத்து நான்கு வருடங்களாக கெடாத உடம்பு இந்த ஆறே மாதத்தில் பழுதடைய காரணமென்ன?”
“அட என்னங்க, எங்க அப்பன் தாத்தா எல்லாம் இன்னைக்கும் ஒரு சுட்ட கருவாடாச்சும் இல்லாம சோறு தின்ன மாட்டாங்க நீங்க என்னடான்னா????” ஒருவர் சலித்துக் கொண்டார்.
“அப்பன் பாட்டன் கதை வேறு. அவர்கள் அன்றைய இயற்கை சூழலுக்குள் வளர்ந்த விதம் வேறு. இன்றைய நடைமுறை என்பது வேறு. இன்றைக்கு சந்தைக்கு வரும் அத்தனை கோழிகளுக்கும் அதிகபட்சம் ஆர்மோன் சம்மந்தப் பட்ட ஊசி போட்டு வளர்க்கப் படுகிறது. அதே ஆர்மோன் மனிதருக்குள்ளும் கேடுகளை விளைவிக்க வாய்ப்புக்கள் பலவாறு உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.
அதிலும், முக்கியமாக இறைச்சிகளை விட; அவற்றை செய்யப் பயன்படுத்தும் எண்ணெய் உயிர்கொள்ளும் தீவிரவாதிக்கு சமமாம். வெறும் ருசி அறிந்த நாக்கு தன் உடல்நலத்தைப் பற்றி யோசித்தலும் மிக அவசியம் என்பதை நான் அனுபவ ஆய்வு ரீதியாக புரிந்து வருகிறேன். மாமிசம் என்றில்லை காய்கறி உண்பவர் என்றாலுங் கூட உண்பதில் ஒரு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் வெகு கட்டாயம் அனைவருக்கும் வேண்டும்”
“ஐயா அப்போ உங்களுக்கு உடம்பு…” என்று வேலுக்கண்ணு ஏதோ இடையில் நுழைந்து கேட்கவர, சந்திரோதயன் அதற்கு முன்னதாக “உடம்பென்ன ஆகும், வாயில் வைக்கும் வெல்லக் கட்டி கூட நாம் கரை என்றால் தான் கரைய வேண்டும் என்கிறார் விவேகானந்தர்.
அப்படி அந்த வெள்ளக்கட்டி நாம் சொல்லும் வரை கரையாதிருக்கும் உடல் தானே நமக்கெல்லோருக்கும் இருக்கு வேலுக்கண்ணு ஐயா. அதனால் வருத்தமெல்லாம் வேண்டாம், ஒருசில மாத உணவு கட்டுப்பாடு மற்றும் தினமும் கொள்ளும் நடைப் பயிற்சியில் வெகுவாக அவைகளை குறைத்துவிடலாம்.
அடுத்த ஆறு மாதத்தில் முற்றிலும் இல்லாவிட்டாலும் கொழுப்பின் விகிதமும், ரத்தக் கொதிப்பும் குறைய வெகுவாக வாய்ப்புண்டு” என்று சொல்லிவிட்டு அருகில் அமர்ந்திருந்தவர்களை திரும்பிப் பார்த்து “பொதுவாக முப்பது வயதினை தாண்டிவிட்டாலே சற்று உடல்நலம் பற்றிய எச்சரிக்கையாய் இருப்பதும், வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வதும் நல்லதுய்யா” என்று சொல்லிவிட்டு எல்லோரிடமிருந்தும் விடைபெறுவதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து நின்றார்.
பின் சற்று நேரம் நின்றுக் கொண்டே வேறேதேதோ பேசினார்கள். ஒருவக்கொருவர் தனக்கு தோன்றியதைப் பற்றியெல்லாம் கேட்டும் சொல்லியும் பகிர்ந்துக் கொண்டு சிரித்தும் கொள்ள, பிறகு ஏன் இன்றும் வந்து இத்தனை அசைவ உணவுகளை தயார் செய்யச் சொன்னீர்கள்’ என்று வேலுக்கண்ணு கேட்க, ஒரு ஒரு வகை ருசியையும் பார்த்து வருகிறேன். எது மனிதரை அதிகம் ஆட்டிப் படைக்கிறது என்று தெரிந்து வருகிறேன்.
இதலாமென்ன ஒரு தினத்தில் நான் வந்து சொல்லி நிறுத்து என்று சொல்ல உடனே நீங்கள் நிறுத்தி விடும் காரியமா? இன்று சொல்லிவைத்தால் நாளை எவரையேனும் ஒருத்தரை தொடும். அந்த ஒருத்தர் புரிதலுக்கு என் சில சுயபரிசோதனை எனை எரிக்கும் எனில்; எரிக்கட்டும். வெளிச்சம் தரும் விளக்கில் திரியாய் எரிய ஒரு உயிர் போனால் போகட்டுமே” என்று சொல்லி நிறுத்த, சுற்றி இருந்த அவர்கள் உணர்ச்சிவசப் பட்டனர்.
பின் ஆசுவாசப் பட்டு, மிக்க மரியாதையும் அன்பையும் அவரிடத்தில் காட்டினர். சற்று நேரத்தில் வாங்கியதை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு, வலுக்கட்டாயமாய் அதற்குப் பணமும் கொடுத்துவிட்டு, சந்திரோதயன் அங்கிருந்து புறப்பட்டார்.
அவர் வெளியே வருகையில் ஒவ்வொன்றாய் அவர்கள் கேட்டது பேசியதெல்லாம் நினைவில் ஊறிக் கொண்டே இருந்தது. அந்நேரத்தில், திடுக்கென சொல்லிவைத்தாற்போல் அந்த கிணற்றில் விட்ட இரண்டு மீன்களின் நினைவும் அவருக்கு வந்தது. ஒரு நொடி நின்று அந்த கிணற்றின் அருகில் சென்று எட்டிப் பார்த்தார். அவைகள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.
ஏதேனும் அவைகளுக்கு உண்ண கொடுக்கவேண்டுமே என்றெண்ணி அக்கம்பக்கம் சுற்றி தேட, ஒரு ஓரத்தில் ஓர் எச்சில் இலை வீசப் பட்டிருந்தது. அதைப் பிரித்து, அதில் மிச்சம் வைக்கப் பட்ட கொஞ்சம் சோற்றை அள்ளி அந்த மீன்களை நோக்கி கிணற்றில் வீசினார்.
அம்மீன்கள் அதை எட்டிப் பிடித்துக் கொண்டு அண்ணாந்து மேலே பார்த்தன. இனி தன் வாழ்நாளையெல்லாம் அவரின் நன்மைக்கு வேண்டியே பிரார்த்தித்துத் தீர்க்க எண்ணின போலும் அம்மீன்கள். அவர் அதையெல்லாம் எதிர்பார்த்திராதவராய் தோள் பையை கழற்றி மடித்து தன் கக்கத்தில் வைத்துக் கொண்டு தெருவின் ஓரமாய், பின்னால் வரும் வண்டிகளுக்கு வழிகொடுத்தாற்போல் நகர்ந்து நகர்ந்து எதை எதையோ யோசித்தவராய் நடந்துப் போனார்.
இம்மீன்களுக்கு மட்டும் உள்ளூர; என்றேனும் ஓர் நாள் இந்த மணித ஜென்மம் தன்னை கொன்று தின்பதை மெல்ல மெல்லவேணும் நிறுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை நிறைவாய் இருந்தது.
இருப்பினும் அது அவைகளின் பகல் கனவெனப் பட்டிருக்கும் சனியாண்டி விலாசின் உள்ளே பத்து அறுத்த மீன்களை அள்ளிப் பெரிய எண்ணெய்ச் சட்டியில் மசாலா தடவி போட்டு வறுத்துக் கொண்டிருந்த மணித இனத்திற்கு!! வெளியறையில் அமர்ந்து அவைகளின் வாழ்நாள் கனவுகளை தன் நாக்கு ருசியினால் தின்று தீர்த்துக் கொண்டிருக்கும் இதர மனிதஜென்மங்களுக்கு!!
——————————————————————————————-
வித்யாசாகர்
வணக்கம்…! நம்பிக்கையின் நடுப்புள்ளியில் நிற்பவர் நீங்கள்..!நாங்கள் இங்கும் அங்கும் சுற்றிக்கொண்டிருகிறோம்..! தங்களுடைய சலனமற்ற விளக்கம் உங்களின் தனித்தன்மையைக் காட்டுகிறது..! சால்புக்குமுன் தலைவணங்குகிறேன்! இணைகோடுகளுக்கு இடையில் இடைவெளிக் குறையலாம்…இணைந்துவிடுவதில்லை..!
கமல் அவர்களின் கவிதை வரிபோல் உங்களின் யன்னல் வட்டமாய் இருக்கிறது..! எங்களின் யன்னல் செவ்வகமாய் இருக்கிறது..! ஆனால் கலிலியோவின் உலகமோ கோளவடிவில் இருப்பதாய் கூறுகிறார்கள்..! கருத்துக்கள் அவரவர் யன்னல் பார்வையைப் பொறுத்துதானே…! தங்களின் முடியாத தேடலில் வெளிச்சம் பெற காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்..! நன்றி..நன்றி..!
LikeLike
மிக்க நன்றியும் வணக்கமும் ஐயா. மிக்க வலிமையான வார்த்தைகள் சிந்தனையினால் நம்மிந்த படிப்பினை பலமடையச் செய்தீர்கள். உண்மையில் பார்வைகள் மாறுபடுகின்றன தான் என்றாலும், இது ஒரு சங்கல்ப முறை போல எண்ணுகிறேன். நல்லது என்பதை நடக்க வேண்டும் என்பதை மீனுட்ம் மீண்டும் நடக்கும் எனும் விதத்தில் நம்புவோம், அது நடக்க வாய்ப்புள்ளது என்கிறது அறிவியலும். அதன் பலனை நம்புவதோடு அல்லாமல் மிகையாய் வாழ்வில் அடைந்தும் வருகிறேன். எனவே எனக்கான நம்பிக்கை முழுதும் ஒரு நல் மாற்றத்தினை எதிர்க்கொண்டே உள்ளது.
பொதுவாக என்னைப் பொருத்தமட்டில் உலகம் ஒரு தண்ணீர்போல, அது தங்கும் இடத்தின் நிறத்தையேப் பிரதிபலிக்கிறது! எவ்வாறு உலகைப் பார்க்கிறோமோ அவ்வாறே அது நமக்குத் தெரிகிறது!!
LikeLike
சனியாண்டி விலாஸ், கோழியும் கோழியும் பேசிக் கொண்டன, மிக நகைச்சுவை உணர்வோடும், சிந்திக்கத் தக்கவும் இருந்தது.
ஒரு சின்ன வருத்தம், “மீனும் மீனும் பேசிக் கொண்டன” தவிர்த்து மனிதனும் மனிதனும் தான் பேசிக் கொண்டனர்.
இருந்தாலும் மிக உண்மையான வார்த்தைகளை அற்புதமாக படைத்து உள்ளீர்கள்.
நன்றிகளும்! பாராட்டுக்களும்!!!
LikeLike
பாராட்டிற்கு நன்றி உமா. இதில் வருத்தப் பட ஒன்றுமில்லை. இது சிந்தனையின் பகிர்விற்கு ஒரு களம். இப்படி எண்ணங்களைப் பகிர்வது ஒரு பார்வை. நமக்கு நாம் பேச ஒரு வியூகம் வேண்டும், அதற்கென அமைத்தது தான் இந்த ‘மீனும் மீனும் பேசிக்கொண்டன. இனி சற்று இடைவெளிவிட்டு மீண்டும் பேசும்!!
LikeLike
மதிப்பவரை மதித்தல் அழகும் நிறைவும் கூட தானே இது நன்றாக இருக்கு.
LikeLike
மிக்க நன்றி சுகந்தினி. இது புரிபவருக்கே புரிகிறது. சிலர் மதிப்பை கூட பயம் என்று எடுத்துக் கொள்வதால் இக்காலத்தில் மதிப்பவன் கூட பயித்தியமாகிறான், பார்ப்பவர் பார்வையில், எது தெரிகிறதோ; தெரியட்டும், நாம் சரியாகவே இருப்போம். மதிப்போரை என்றுமே மதிப்போம்!!
LikeLike