40, இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம்!

ண்ணிற்கு சண்டையிட்ட வாள்களின் ரத்தம்
இன்னும்  காய்ந்திடாத மனத்திரையில்
விரிகிற காட்சிகளில் மரணமின்னும் நிகழ்கிறது
மரணத்தின் பெயர்தான் கொலையில்லை;

சொற்களின் வசியத்தில் அசைகின்ற தலைகளில்
சரிதவறு சிந்திக்கப்படாத அங்கீகரிப்பில்
நடக்கின்றன கொலைகள் –
உயிர்போதலுக்குப் பெயர் மரணம் மட்டுமே;

மண்ணுக்கும் பெண்ணுக்கும் வீங்கிய இதயம்
தனக்கென்று துடித்து துடித்தே சுடுகாடுமுட்டும்
அழுது புலம்புதலில் அடுத்தவன் ரத்தமோ கண்ணீரோ
போனது போனபடியே நகர்கிறது காலம்;

யாருக்கு யாருண்டு
யாரின் அசைவில் யாருக்கு வலிக்கிறதிங்கே
யாருமில்லா தனியுலகில் எவர்குறித்து யெண்ணியழ –
இத்தனை  இத்தனைச் சுயநலமோ?!!!

சோற்றிற்கு சண்டையிட்டு சொத்துக்கு கொலைசெய்து
பாட்டிற்கு கடல்தாண்டி படத்திற்கு வீடு விற்று
வேலைக்கு லஞ்சம் கொடுத்து ஏழையின் ரத்தமருந்தி
காதலுக்கு வீடுவிட்டு கட்டியவளை தெருவில் நிறுத்தி

ச்சி……….. மனிதர்களா நாம்?

மனிதம் நிரம்பிய –
உணர்விற்குத் தக வாழ்க்கையையா வாழ்கிறோம்?

பிறர் நல அக்கறையின்றி பிறப்பவர் யாருமிலர்
பிறர்நல னெண்ணாதார்  இறப்பதில் வருத்தமுமில்லை
பிறருக்கு ஈயாதான் இருப்பதில் ஏதுமில
உயிர் அது இழுத்து இழுத்து ஒருவீட்டில் விளக்கெரிய –

வீடு சுற்றியொரு அடர்ந்த இருட்டுப் படருமெனில்
விட்டுத் தொலையதை;

கனக்கும் சுடு காடுதனில் –
துளிர்க்கட்டும் புதிய மனிதம் உனக்கும் எனக்கும் பிறருக்குமாய்..
—————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s