குளிக்கையில்
சோப்பிடுகையில்
கழுற்றில் சிக்கித் தான் கொள்கிறது;
நேற்று உன் படிப்பிற்கென
அடகுவைத்த
அந்த தாலிக் கொடியின் நினைவு..
———————————————————-
கால்கள் சுடுகின்றன
மீறி மிதிக்கிறேன்
எனக்குச் செருப்பு வாங்கும் பணம்
உனக்கு
உடுப்பு வாங்க மீறுமென..
———————————————————-
அது –
குவளை குவளையாக
குடிக்காமல் சேமித்த
தேனீருக்குரிய பணமென்று
உனக்கெப்படித் தெரியும் ?
உன் தோல்வியுற்ற தேர்வின் பாடம்
என் நெஞ்சுக் குழியை
அடைத்ததை எங்கறிந்தாய் ?
வேறென்ன செய்ய
இனி தேனீர் நிறுத்தமே
உன் பாடந்தனைச் சுமக்கும்..
———————————————————-
முகம் துடைக்கும்
வியர்வையின் போது
உன்னையே நினைத்துக் கொள்வேன்..
கொளுத்தும் வெயிலும்
சுமக்கும் கூடையும் பெரிதல்ல
உனக்கான கனவு என் கண்களில் விரிகையில்
வலிக்கும் வலி பெரிது..
———————————————————-
வித்யாசாகர்
///எனக்குச் செருப்பு வாங்கும் பணம்
உனக்கு
உடுப்பு வாங்க மீறுமென..///
நல்ல வரிகள்… நன்றி…
LikeLike
விரும்பிய ஒரு பொருளை வாங்கி உண்ணுகையில் குழந்தையின் நினைவு வந்து அதைவாங்கி மடியில் கட்டிக் கொள்ளும் பெற்றோர்களைப் பார்க்கிறோம். முன்பொரு சமயம், ஒரு இருபது வருடம் முன்பு எங்கள் வீட்டிற்கு வாழைக்காய் விற்கும் பாட்டி ஒருவர் கூடை சுமந்து வருவார். கால வீங்கி இருக்கும். பா அம்மா இருவரும் அவர் மீது நிறைய பரிவு காட்டுவார்கள். அந்த பாட்டிக்கு சாப்பிட ஏதேனும் பண்டம் தருவர். அந்த பாட்டி அதை கொஞ்சம் எங்கள் முன் தின்றுவிட்டு மீதியை மடித்து கூடையில் வைப்பார். நமக்கு சில நேரம் ஏன் தருகிறோம் என்று கூட இருக்கும், அவர் தின்பாரா கொஞ்சம் இளைப்பாறுவாரா என்று நோக்கினால் அவர் மடித்து கூடையில் வைப்பார். அந்த மனது எத்தனைக் கடலைவிடப் பெரிது என்று பார்க்கையில் அதைவிடப் பெரிதாக அவரின் குழந்தைகள் மீது அவருக்கான அக்கறை பெரிதாகத் தெரிந்தது. நாளடைவில் அம்மா ‘நீ சாப்பிடும்மா உன் குழந்தைகளுக்கு வேறு தருகிறோம் என்று சொல்லி தனியாக இன்னொரு பொட்டலம் மடித்துத் தருவார்..
அதுபோன்ற மனசு தன் குழந்தைக்கென தவிக்கும், கல்லுடைக்கும், கூடை சுமக்கும், வெய்யிலில் அமர்ந்து பழம் விற்கும், வீடுகளில் வேலை செய்தும் பட்டினியாய் இருந்தும் ஒரு காலனி அணியக் கூட ஏன் செலவென்று நினைத்து, ஒரு தேனீர் அருந்தச் சென்று ஐயோ மூனு ரூபாயா என்று ஒரு குவளைத் தண்ணீரைக் குறித்துச் செல்லும் தாயுள்ளங்களுக்கு தந்தையின் மனதிற்கு பெற்றோரின் அக்கறைக்கு இந்த கவிதைகளும் உங்களின் பாராட்டும் சமர்ப்பணம்..
நன்றியும் வணக்கமும்!!
LikeLike
கொளுத்தும் வெயிலும்
சுமக்கும் கூடையும் பெரிதல்ல
உனக்கான கனவு என் கண்களில் விரிகையில்
வலிக்கும் வலி பெரிது..
LikeLike
தாய்மையின் உணர்வு உள்ளே புடவை வாசமகவும், என்றோ அழுத கண்ணீராகவும் நிறைந்துப் போயிருக்க, பெண்மை மனதிற்குள் மணத்துக் கொண்டேயிருக்கிறது. அதன் உணர்வு பூறிக்கும் உங்களின் கருத்திற்கு நன்றியும் வணக்கமும்…
LikeLike
வணக்கம் ..நேத்து வீட்டுக்காரம்மாகிட்ட போன்ல பேசிகிட்டு இருக்கும்போது உங்க இந்த கவிதைய படிச்சு காமிச்சேன்..! புரிஞ்சுகிட்டு நல்லா இருந்துதா சொன்னாங்க..! நானு இன்னும் இன்னும் எதிர்ப்பாக்குறேன்..!
LikeLike
நன்றி ஐயா, உங்களைப் போன்றோரின் எதிர்பார்ப்புகளில்தான் மீண்டும் மீண்டும் திறக்கிறது என் வலைதளத்தின் வாசல். முடிவிலிங்கே ஏதோ ஒன்று உங்களின் எதிர்பார்ப்பையும் நிறைத்திருக்கும் அல்லது வேறொன்று அற்றேனும் போயிருக்கும்..
LikeLike