வாழ்க்கை தீரா வெள்ளைப் புடவைக்கு
நெற்றியில் ஒரு புள்ளி வேண்டும்,
குற்றம் இதென்று உணராது நீளும்
காதல்கொலைக்கு நிச்சயம் மறுபுள்ளி வேண்டும்,
வட்டிக் கடனோடு ஓயாத துயருக்கு
வரும்புள்ளி மரணமென்றாலும் வேண்டும்,
குட்டிச்சுவர் மீது உடைகின்ற புட்டிகளில்
தேசம் தொலையாத புள்ளியது வேண்டும்,
வாழ்க்கை வரமாக அமைகின்ற பாடத்தின்
அறிவை விற்காத சமப் புள்ளி வேண்டும்,
காலம் கணியாத முதிர்கன்னிப் பெண்ணுக்கு
தாலி கனக்காத மணப்புள்ளி வேண்டும்
வாலிபத் திமிருக்கு இறையாகிப்போகும்
கண்களைக் காப்பாற்றுமொரு புள்ளியும் கண்டிப்பாக வேண்டும்
மனிதம் கொல்ல கடவுளை ஆயுதமாக்கும்
கயவர்களின் நாக்கிலிட பெரியதொரு நெருப்புப் புள்ளி வேண்டும்
குத்த குத்த வலிக்குமென்று தெரிந்தும்
மனமுடைய பேசும் வார்த்தைகளுக்கு ஒரு இறுதிப் புள்ளி வைத்து –
வேண்டும் வேண்டுமென்று நீளும்
புள்ளிகளுக்கிடையே நானும் நீளாமல்
நிறுத்தவேண்டி வைக்கிறேன் ஒரு முற்றுப்புள்ளி!!
வித்யாசாகர்
வணக்கம்
வித்தியாசாகர்(அண்ணா)
அருமையான படைப்பு பாராட்டுக்கள் அண்ணா நாம எல்லோரும் தமிழன் நம்மை ஒதுக்கி ஓரம் கட்டும் துரோகிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
வணக்கம்பா. கண்டிப்பாக கரையொதுக்கும் துரோகிகளுக்கு நாம் கைகோர்த்து நின்றாலே போதும்; பாடம் புகும். ஒற்றுமைக்கும் நம் விடுதலைக்கும் நம்மால் இயன்றதை நாம் நிச்சயம் செய்தேயிருப்போம்..
அன்பும் வணக்கமும் புத்தாண்டின் நல்வாழ்த்துக்களும்..
LikeLike