1
அந்த தெருமுனை
திரும்பும் போதெல்லாம்
உன் நினைவு வரும்;
நீயுமங்கே நின்றிருப்பாய்
நானுனை திரும்பிக்கூட பார்க்காமல்
போவேன்,
நீயும் பார்க்கமாட்டாய்;
நாம் பார்க்காவிட்டலென்ன
காதல் நம் தெருவெல்லாம் பூத்திருக்கும்..
————————————————————–
2
காற்றடிக்கும்
கண்களை நீ சிமிட்டும்
நினைவு வரும்..
நிலா காயும்
நீ தெருவில் வந்துநிற்க
பூக்கள் சிரிக்கும்..
மேகம் நகரும்..
உன் தாவணி காற்றில் பறக்க
பட்டாம்பூச்சிகள் பறந்தோடி வரும்..
நீயெனைக் கொஞ்சம் நினைப்பாய்
நானுன் நினைவுகளில்
மழையெனப் பெய்து கிடப்பேன்!
————————————————————–
3
காற்றாடி விடும் கூட்டமென்றால்
உனக்கு நிறைய பிடிக்கும்
அறுந்த காத்தாடிகளின் பின்னே நீ
ஓடுவாய்,
நானுமுன் பின்னாலேயே ஓடிவருவேன்
காற்றாடி ஓரிடத்தில்
உன் கைக்குள் அகப்படும்
நீ அதையெடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவாய்
நீ போகும்வரை நான்
தூர நின்று உனையே பார்ப்பேன்,
காற்றாடி காற்றிலும் உன் கைக்கிடையிலும்
இங்குமங்குமாய் ஆடும்
கசங்கும்
காற்றாடி போலவே
உன் பார்வையில் படாமல் – நானும்
இதயம் கசங்கிப் போவேன்..
காற்றாடி பற்றியோ இதயம் பற்றியோ
நீ கவலைப்படுவதேயில்லை;
உனக்காக –
நிறைய காற்றாடியினைப் போல
நிறைய இதயங்களும்
ஆங்காங்கே அறுபட்டுக் கிடக்கிறது..
————————————————————–
4
நீயும் நானும்
ஒருவரையொருவர்
கைகோர்த்துக் கொண்டு தெருவில் நடப்போம்
நம் பேச்சிலும் நடையிலும்
சிரிப்பிலும் துளி கூட
காதல் கலந்திருக்கவில்லை
பாட்டில் படத்தில் கதைகளில் நிறைய
காதலிருந்தது
பார்ப்போரெல்லோரும் நம்மை காதலிப்பதாய்ச் சொன்னார்கள்
காதல் –
நம் சிரிப்பில் பேச்சில் நடத்தையில்
துளி கூட ஒட்டவில்லை,
நட்பு கைவீசிக்கொண்டே நம்
வாழ்வின் தூரம்வரை வந்தது..
————————————————————–
5
உனக்கும் எனக்கும் அப்படியொரு
ஈர்ப்பிருக்கும்
உன் சிரிப்பினில் ரசம்
பார்வையில் கனிவு
பேச்சினிலினிமை
உன்னோடிருக்கும் நாட்களின்
தருணசுகமே சுகம்..
ஆனால் இதெல்லாம் எங்கு
எனைக்
காதலிக்கத் தூண்டுமா என்று அஞ்சி
உனைவிட்டு தூரமேயிருந்து
உன்னிடம் பேசுவேன் –
நீ அதையெல்லாம் உடைத்தெறிந்து
காதலென்னடா காதல்
நட்பாயிருப்போம் வா
நாட்களை அன்பில் விழுங்குவோம் வா
நாளுக்கு நாள் –
வெற்றியின் உச்சியை உழைத்துத் தொடுவோம்
வாவென்றுச் சொல்லி
என் தோள்மீது சாய்ந்துகொண்டாய்,
நானுன் தோழனாக மட்டுமே உனைத்
தாங்கிக்கொள்ள –
காதலைக் காற்றினில் தொலைத்துக் கொண்டிருந்தேன்!!
————————————————————–
வித்யாசாகர்