கண்ணில் விழும் தூசிபோலல்ல
கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல்
நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்;
அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும்
திருப்பியடிக்க இயலாத என் கையில்தான்
எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்..
கையை வெட்டியெறிவதை ஏற்காது
உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள்
தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது..
வீட்டை எரிக்க இயலா வன்மத்தில்
பாரபட்ச நெருப்பு பற்றியெரிய
வீட்டிற்குள்ளேயே உயிர் புதைத்துக் கொள்கிறோம்,
வாசனைதிரவியங்களை மேலடித்துவிட்டு
எங்கே நாற்றம்’ எல்லாம் பொய்யென்று
நாடகமாடுகிறது அரசியல் நாற்காலிகள்..
இங்குமங்குமாய் கால்பரப்பி
கோடு தொடவே பயந்து
எல்லைமீறல் குற்றமென்று நம்பி
இன்னும் –
தூரநின்று கல்லெறிபவர்களாகவேயிருக்கிறோம் நாங்கள்;
இனி துணிந்து ஒரு தீர்மானம் எடுப்பதற்குள்
யாரிருப்போமோ இல்லையோ ஆனால்
எங்களின் உணர்வுகள் விதைகளாய் எமது
அடிநெஞ்சிலெங்கும் விதைக்கப்பட்டிருக்கும்..
நாளைய தலைமுறையின் கோபம்
அந்த விதைகளிலிருந்து
மீண்டும் மீண்டும் முளைக்கும்,
நாற்றமெடுத்த எங்களின்
பிணத்து மீதிருந்தேனும்
விடுதலைக்கான கிளர்ச்சி துளிர்த்தெழும்,
கூட்டு கூட்டாய்
விஷகுண்டுகளில் பொசுங்கிப்போன
எம்முறவுகளின் ஓலம் நினைவையரிக்கும்,
மானத்தில் சூரியனைச் சுடுமெம் பெண்களை
நிர்வாணப்படமெடுத்த கைகளையும்
நெஞ்சில் மிதித்த கால்களையும்
ஒடித்தெறியவேனும்
எம் மண்ணில் எமக்கான விடியல் பிறக்கும்..
—————————————————————-
வித்யாசாகர்
//இங்குமங்குமாய் கால்பரப்பி
கோடு தொடவே பயந்து
எல்லைமீறல் குற்றமென்று நம்பி
இன்னும் –
தூரநின்று கல்லெறிபவர்களாகவேயிருக்கிறோம்// இதுதான் உண்மை..
ராணிமோகன்
LikeLike
என்னசெய்வது, நமது சுற்றமும் சூழலும் நமை அப்படித் தான் ஆக்கிவருகிறது. ஒரு கட்டத்தில் தேசஉணர்வு கூட மண் மீதான பற்றும் வலியும் சேரச் சேர குறைந்துப் போகுமோ என்று பயம் வருகிறது. எதுவாயினும் அதை எஞ்சியிருக்கும் மனிதம் தீர்மாணித்துக் கொள்ளட்டும். நாம் மனிதத்தை நமக்குள் பெருக்கி வருவோம்..
LikeLike
வணக்கம்
வித்தியாசார்(அண்ணா)
//நாளைய தலைமுறையின் கோபம்
அந்த விதைகளிலிருந்து
மீண்டும் மீண்டும் முளைக்கும்//
அருமையான படைப்பு உருகவைக்கும் வரிகள். இது இப்போதே முளைத்து விட்டது. எம் மாணவர்களின் உணர்வுப் போராட்டாம் பல வடிங்களில் கிளைபரப்பி வளரஆரம்பித்துவிட்டது, அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
மிக்க நன்றிப்பா. ஆம் இனி அவர்கள் ஓயமாட்டார்கள். இன்று ஓய்ந்தாலும் நாளையொரு தினத்தில் பொங்கியெழுவார்கள். இதற்கு முன்புவரை அது ஒருசிலரின் பிரச்சனையாக மட்டுமே இருந்த ‘தமிழரின் இரண்டாம்பட்ச வாழ்வுநிலையின் விடுதலையானது’ இனி அவர்களின் பிரச்சனையாக உருவெடுத்துவிட்டது. இன்றில்லாதுப் போனாலும் எந்த அரசியல் சூழ்ச்சிகளையும் தோற்கடித்துவிட்டு நாளை அவர்கள் வெல்வார்கள்.. இளைய சமுதாயத்தின் நியாயமான போராட்டம் வெற்றியையுடையது..
LikeLike
m..m.. ithu maathiri innum ..innum koluththip pottutte irunga… nanri..!
LikeLike