பிணம்தின்னும் சாமியிடம்
வரம் கேட்கும் பூதங்கள்,
மலமள்ளி மூத்திரம் துடைத்தும்
மனதால் மணக்கும் சாமிகள்;
அறுந்தக் கழுத்தில் ரத்தம் கசிய
கண்ணீரால் கழுவும் தெரசாக்கள்,
தாயைப் போல கருணைப் பொங்க
ஆலயம் தொழும் தெய்வங்கள்;
நீதி தேடி ஒதுங்கிடாது சேவை-
யாற்றும் தேவதைகள்,
பாவமூட்டையை தான்சுமந்து
வியாதியை போக்கும் சகோதரிகள்;
காலவிளக்கை ஊதிவிட்டு; கருணையில்
தலைகோதும் ஏழைவீட்டின் வெளிச்சங்கள்,
மாயைதனை விளக்கி; மூடம் மறுத்து
அன்பே ஞானமென்றுப் போதிக்கும் அன்னைகள்;
காலையும் மாலையும் உழைத்து
கன்னிப்பருவம் தொலைத்தும் காசுக்குச் சாயாத தராசுகள்;
வெள்ளை ஆடையுடுத்தி ரத்தக் கரைபடிந்தும்
மனதில் அழுக்கில்லா தோழிகள்;
கற்றுப் பல தேர்ந்து; சொட்டும் வியர்வை நனைக்க
சற்றும் சளைக்காது உழைக்கும் தேனீக்கள்;
கல்லாதோரானாலும் கால்கழுவி, பாகுபாடு கரையகற்றும்
பெரிய மனசுள்ளத் தாயிகள்!
—————————————————————————————————-
வித்யாசாகர்