தூக்கம் விரிச்சோடியக் கண்களுள் சுமக்கிறேன்
எனது கனவுகளை..
மாத்திரையில்லா முதிர்ச்சி
கண்ணாடியணியாத இளமை
காதல் சறுக்காத படிப்பு
தோல்வியில் அசராத அறிவு
காலத்தைக் குறைத்திடாத இயற்கை யென
எல்லாம் சேர்ந்ததொரு
மண்ணின் மீதான அக்கறையில்
விரிகிறதென் கனவுகள்..
ஆயினும் –
மின்சாரமில்லா தெருவில்
எரியும் லாந்தர் விளக்கின்
சிமினிச் சுற்றி சூடுபட்டு விழும்
ஈசல்களைப் போலவே
கால் உடைந்து ஊனமாகி
விழுமென்
கனவுகளை எழுத்துக்களாய்க் குலுக்கி
இங்கிரைக்கிறேன்;
மைக்செட் போட்டுவிட்டு
வெறும் வாயை அசைப்பவனாக
வரிகளுள் நீளும்
எனது கைகளின் அசைவிலும்
எப்படியோ –
ஏதோ வார்த்தைகள் சிக்கிக்கொள்கிறது,
சிக்கியதைச் சிக்கியவாறு
கிறுக்கிவைத்தாலும் படிப்பார்களெனும்
நம்பிக்கையைக் காட்டிலும் –
படிக்கிறார்கள் என்பதால் கிறுக்காத நாட்களையும்
சேர்த்துச்சுமந்து
சிலுவை பாரத்திற்கு மேல் விழுந்த
சாட்டையடியை வாங்கிக் கொண்டு
நடப்பவனைப் போலவே நடக்கிறேன்;
ஒரு சாட்டையடி
ஒரு கவிதையின்றி கடக்கும்
ஒரு நொடிக்குச் சமமெனில் –
ஒரு நாளைக்கு
ஒரு வாழ்க்கைக்கு –
எத்தனை நொடிகள்
எத்தனை அடிகள்…. (?)
சாட்டைகள் இன்றுவரை
சலிக்கவில்லை
கனவுகளும் –
கவிதையில்கூட முடிவதில்லை..
அதொரு மூடும் கண்களை
எதிர் நோக்கி
எங்கோ
இருட்டிலும் வெளிச்சத்திலுமாய்த்
திரிந்துகொண்டேயிருக்கிறது..
நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடும்
சிறுவனைப் போல –
அதன்பின்னே
ஓடிக்கொண்டே இருக்கிறேன்,
காலில் குத்தும் முற்களைப் போல
மனதைக் கிழிக்கும் சொற்களின் வழியே
ரத்தம் கசிந்துக் கொண்டே இருக்கிறது..
தவம் வலுக்க வலுக்க
கனவுகள் நீள்கிறது
கவிதைகள் ஆங்காங்கே முடிகின்றன..
——————————————————
வித்யாசாகர்
”எனக்குத் தொழில் கவிதை ” அந்த வரகவியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..!
LikeLike