அந்தம்மா பாவம்
உணவுண்ணும் முன்கூட
அலசி கழுவிவிட்டாள் அந்தக் கழிவறையை;
அடுத்தடுத்து அதை மிதித்து
நோயுக்கு வழிவிட்டோர் நீயும் நானுமில்லையா?
அவருக்கும் நமக்குமிருக்கும்
அதே கைகள்தானே
உனக்கும் எனக்குமாய் தினமும்
கழிவறை துடைக்கிறது?
அவரவர் வேலையை
அவரவர் செய்யின்
எவருக்கு வேலை வரும் எவனெவன்
காலடியோ கழுவ?
நாற்றம் என்று நாம் மூக்கடைக்கும் முன்பே
மூனு குவளை நீரள்ளி விட்டால்
நாற்றத்தை
நோயோடு கொல்லலாமே..(?)
ஒவ்வொரு கழிப்பறையும்
ஒரு தாயின் பட்டினியை
ஒரு பிள்ளையின் பள்ளிப்படிப்பை
ஒரு ஆணின் முன்னேற்றத்தை விழுங்கிக்கொண்டுதான்
நாற்றத்தில் கிடக்கிறதென்பதை –
ஏன் எல்லோருமறிவதில்லை ?
கிழிந்தக் கால்சட்டையை இழுத்து
முடிபோட்டுக்கொண்டும்,
நைந்தப் புடவை ரவிக்கையை
நாலுபேர் பார்க்கக் கட்டிவந்தும்,
மூக்குமுட்டக் குடித்து போதையில் பாதைதொலைத்தும்
இன்னும் எத்தனை தலைமுறையிப்படி
ஒருபக்கம் சாய்ந்தே கிடப்பது?
துடைப்பவனே துடைத்துக்கொள்ள
யாரால் தனிரத்தம் பாய்ச்சி
புதியதோர் மனிதனைச் செய்ய யியன்றது?
முடியாதோர்
முட்டி முட்டியொரு தலைமுறையை
கழிவறைக்குள் அடைத்தலும் தீதென்றுப் புரிகையில்
கழிவறைகள் அன்று
அவ்வப்போதே சுத்தமாகிக் கொள்ளும்..
அதனால் இதொன்றும் ஏதோப் பெரிய மகான்களின்
செயலொன்றுமில்லை
அவரவரது நாற்றத்தை அவரவர் சுத்தம் செய்யுங்கள்,
அதன்பின் திறக்கும் வீடென்ன
நாடுகூட நன்மையில் மணக்கும்!!
——————————————————————————————————-
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
அருமையான விழிப்புணர்வுக்கவிதை இனியாவது திருந்தட்டும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
மிக்க நன்றிப்பா. குறைந்தபட்சம் உபயோகிக்கும் கழிவறைகளை நாம் உபயோகித்தவரை சுத்தமாக வைத்துக்கொள்ளவேனும் நம் மக்கள் விழிப்பு கொள்ளவேண்டும். சில இடங்களில் உள்ளேப் போன வேகத்தில் வெளியேற வேண்டியக் கட்டாயத்தை நாம் தான் நமக்கு ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதை பொதுவாகவே எல்லோரும் புரிந்து நடத்தல் வேண்டும்பா… அதற்குத்தான் இக்கவிதை எழுதப்பட்டது. தங்களின் புரிந்துணர்வு மகிழ்ச்சியைத் தருகிறது..
LikeLike