புத்தகத்தில் குட்டிப்போடும்
மயிலிறகு தந்தவளே..,
ஒரு பருக்கை மீறாம
உண்ணச் சோறு போட்டவளே..,
பத்தோ அஞ்சோ சேமிச்சு
பலகாரம் செஞ்சவளே,
பழையப் புடவை தொட்டில்கட்டி
வானமெட்ட சொன்னவளே..
மழைப்பேஞ்சி நனையாம
எனைமறைச்சி நின்னவளே..,
எங்கிருக்க சொல்லேண்டி
வெறும்பயலப் பெத்தவளே..?
நீ அடிச்ச அடி
திட்டினத் திட்டு
எல்லாமே அன்று வலிச்சதடி,
இன்று அடிப்பியான்னு
அழுது நிக்கிறேன்
மறுக்காம வாடியம்மா..
தூங்கினா கனவு வரும்
தூங்க உன் மடி வேணும்
கனவில் நீ வருவாய்னு
சுடுகாட்டில் படுத்திருக்கேன்
உன்பாதைப் பாத்திருக்கேன்
உயிர்மூச்சு தந்தவளே – ஒருவாட்டி வாயேம்மா..
உனக்கென்ன நாலு புள்ள
ஒன்னில்லைன்னா ஒன்னு அழும்
என்னபெத்த நீயொருத்தி
இல்லாம நா(ன்) எதுக்கு ?
என்னையுந்தான் கூட்டிப்போடி,
கண்ணீரில் கரையாம
உன்கூட பிணமா – படுத்திருப்பேன்,
மூச்சடுக்கி மண்ணுக்குள்ள
நீயிருந்தா உயிர்த்திருப்பேன்,
என்னம்மா இல்லாம –
எனக்கெதுக்கு உயிர்மூச்சு (?)
நீ விட்ட இடம்
தொட்ட மரம் – எனைப்போல தனியாச்சு,
பெத்தபுள்ள ஆசைக்கூட
கேட்காம குறைஞ்சாச்சு,
எனை பெத்தவளே வாயேண்டி
வரும்வரை நான் வெறும்பேச்சு..
————————————————
வித்யாசாகர்