1
நீ –
காற்றில் அசைபவள்
கிளையுரசி உடைபவள்
விழுந்ததும் பறப்பவள்
பயணித்துக் கொண்டேயிருப்பவள்;
நான் நின்று
நீ வருவதையும்
போவதையுமே பார்த்திருக்கிறேன்;
கணினி வழி தெரியும்
கண்களிலேயே
உயிர்திருக்கிறேன்;
வாழ்வதை அசைபோட்ட படி
உன்னையும்
நினைத்துச் சிரித்திருக்கிறேன்;
வாசலை
பசியோடு திறக்கக் கேட்காமல்
சந்திக்கவேக் கேட்டிருக்கிறேன்
நீயும் சம்மதித்தாய்
பேசினாய்
பார்க்கிறாய்
இருக்கிறாய்
நீ
இருக்கிறாய் என்பதில் மட்டுமே
உயிர்த்திருக்கிறேன்..
————————————————————
2
கைதொடும்
உனதுணர்வு
மின்சாரம் கொண்டது;
பார்க்கும் தருணங்கள்
யாவும்
தவத்தை உடையது;
பேசும்
அவகாசமெல்லாம்
பாக்கியத்தைப் பொறுத்தது;
உனக்கான எல்லாமே
எனக்குத் தலைமேல்
கிரீடம் இருப்பதற்குச் சமம்!
————————————————————
3
பேச்சில்
பாதி மறைக்கிறாய்,
பேசாமலே
உயிர்த்தீ அணைக்கிறாய்,
நேசத்தின்
எல்லை விரிக்கிறாய்,
நெருங்கி என்
நிஜத்தை தொலைக்கிறாய்;
காற்றில்
பொம்மையும் பூவும்
பரிசென்கிறாய்
கடவுச்சொல்லினும் இரகசியமாகிறாய்;
பேஸ்புக்
டிவிட்டர்
ஜி-பிலஸ்
எங்கு பொத்தான்களைத் தட்டினாலும் உன் முகம் தெரியும்,
தெரியாத நாளிலென் உயிர்பிரியும்..
————————————————————
4
உனக்கானச்
சொற்கள்
மௌனத்தை அணிந்தவை;
வார்த்தைகளைக் களைந்து
இதயத்தை
பார்வையால் அறுப்பவை;
காத்திருப்பிலும்
தவிப்பிலும்
நினைவுகளால் வலிப்பவை;
என்ன செய்ய
உனக்கானச் சொற்களை?
இதோ –
எழுதாமலே விட்டுவிடுகிறேன் போ..
————————————————————
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா.
ஒவ்வொரு வார்த்தைகளும் மிக அற்புதமாக உள்ளது… பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike