1
உப்பில்லாது
சோறு,
சோறில்லாமல்
உணவு,
உணவென்றால்
அதிலும் அளவு,
அளவுக்கு கூடுதல்
மருந்து,
மருந்துக்குக் கூட
கொடுக்காத இனிப்பு,
இனிப்பா?
சர்க்கரைக் கூட இல்லாமல்
தேனீர்,
தேனீர் இல்லாமல்
விடிகாலை,
விடிகாலை கூட
இல்லாமல் ஓர்நாள் –
அந்த ஓர்நாள் ஒருவேளை இனிக்கலாம்..
—————————————–
2
பச்சைக் காய்கறி கூட
பல்லிடுக்கில் குத்துமென்று
சுகர் வந்ததும் தான் தெரிகிறது;
உப்புமா தின்னக் கூட
பயம் வரும்னு
பிரசர் வந்தால்தான் தெரிகிறது;
பலகாரம் கசக்கும்
பாகற்காய் அடைக்குமென்று
கொழுப்பு கூடினால்தான் தெரிகிறது;
அட –
படுப்பதிலும்
எழுவதிலும் கூட
சந்தேகம் வருமென்று’
உள்ளே வலிப்பதிலும்
வலியோடு நடக்கையிலுமே புரிகிறது!
—————————————–
3
ஒரு மருத்துவர் சொல்கிறார்
பச்சிலை வேண்டாம்
மாத்திரைப்போடு என்று
வேறொருவர் சொல்கிறார்
ஹோமியோபதியா ?!! ஆபத்து
நாட்டுமருந்து திண்ணென்று
இன்னொருவர் பார்த்து
எதனா போடு
எதனா தின்னு
தினமும் இங்கு வந்து போ
சோதித்தால் தான் உடம்பு –
எப்படி இருக்கென்று தெரியுமென்கிறார்
வீட்டிற்கு வந்து
தலையில் கைவைத்து
அமர்ந்துகொள்கிறேன்,
யாரைப் பார்ப்பது
எங்கு போவது
எதை நம்பி எதைத் தின்பது;
எல்லோருக்கும் தேவை
பணம்,
பணம் மட்டும்;
பணத்தை பகிர்ந்து
எல்லோருக்கும் கொடுத்துவிட்டு
இந்த உயிரையும் கொஞ்சம் விட்டுவிட்டால் தேவலை!!
—————————————————————————
வித்யாசாகர்
வாழ்க்கையில் ஒவ்வொருவரும்
கடந்து வந்த, அல்லது கடக்க போகும்
நிதர்சனத்தை, கவிக்கே உரிய பாணியில்
சித்தரித்திருப்பது மிகவும் அருமை
LikeLike
புரிதல் என்பது வாழ்தலை இன்னொரு தளத்திற்குக் கொண்டுசெல்கிறது தோழி.. தங்களின் புரிதல் வலியின் அனுபவ ஆழத்தில் மெய்யுணரும் உங்களின் அனுபவ பாடத்தை பறைசாற்றி நிற்கிறது. இயற்க்கை ஒரு புள்ளியிலிருந்து எல்லோரையுமே மறு புள்ளிக்கு மாற்றுவதை இயல்பாக வைத்திருக்கிறது. நமையும் நன்மைச் சார்ந்து மாற்றுமென்று நம்புவோம்..
LikeLike