அடி வாங்கிக்கொண்டு கற்ற
பாடங்களால் அல்ல,
பள்ளிவீதியில்
நாகப்பழம்
அவித்த கிழங்கு
வறுத்த வேர்கடலை
வெம்பிப்போன காட்டுக் கலாக்காய் விற்ற
பாட்டியால்தான் – பள்ளிக்கூடம்
இன்றுவரை நினைவில் இருக்கிறது..
—————————————-
சந்தேகக் கேசில்
பிடித்து உள்ளே போடுமென்றுத்
தெரிந்தும்
காவல்நிலையத்தை தாண்டிப்போய்
இரவு காட்சி பார்க்கவைத்தது
அந்தக் கால சினிமாக்கள்
மட்டுமல்ல,
வயதும் தானென்று
இப்போது புரிகிறது..
—————————————-
நெல் வேகும் வாசம்
மண் நனையும் வெப்பம்
தெருவோர மதிலெட்டிப் பார்க்கும்
செம்பருத்திப் பூக்கள்
கிணற்றடிப் பெண்கள்
மார்கழி கோலம்
திருவிழாக்களில் புதுப்படம்
மாலைநேர மீன் பண்
குல்பி ஐஸ்
இதுபோன்ற எத்தனையையோ
தொலைத்துவிட்டுத்தான் –
நம்மூர் சிட்டியாகிறது..
—————————————-
தும்பிவால் பிடித்து
ரக்கை ஒடித்தது
ஓணானடித்து
குச்சிலே தொங்கவிடுவது,
குருவி அடித்துவிட்டு
துள்ளிகுதித்தது,
காக்கா அடிக்க
உண்டிகோல் செய்ததுயெல்லாம்
யாருக்குமின்று தெரியாவிட்டாலென்ன;
மனதுள் உயிரோடிருக்கிறதந்த
உயிர்கள் துடித்த தருணமெல்லாம்..
—————————————-
வித்யாசாகர்