நீ தான்
நீதான் எனக்குள்
இத்தனைப் பெரிதாக இருக்கிறாய்..
உனக்காக மட்டும்தான்
என் இதயம்
நினைவின் கனத்தோடு துடிக்கிறது..
ஒரு தொடுதல்
ஒரு பார்வையில்
நீ மட்டுமே உள்ளே கனவாக விரிகிறாய்..
நிலம் சொந்தம்
நீர் சொந்தம்
வானமும் வானத்திற்கப்பாற்பட்ட
அனைத்துமென
நித்தம் நித்தம் இந்த வாழ்க்கையை எனக்கு
சொந்தமாக்கித் தருபவள் நீ தான்..
நீ உடனிருக்கையில்
மட்டுமே நான்
மூச்சை உள்ளிழுக்கிறேன் வெளியே விடுகிறேன்
நீயற்று வாழ்கையில்
மூச்சு போகிறது
அதுவாக வருகிறது; நான் ஏதோ
ஏதோ ஒன்றாக அசைகிறேன்..
அசைகிறேன்
அசைகிறேன்
நீயில்லாத நான்
ஏதோ ஒன்றாக
உயிரற்றும்
உயிரோடசைகிறேன்..
———————————————————–
வித்யாசாகர்