1
எப்படியேனும் நாளையிலிருந்து
குடிக்கக்கூடாது என்றெண்ணும்
குடிகாரனைப்போலத்தான் – நானும்
நாளைக்கேனும்
தமாதமின்றி வேலைக்குப் போகவேண்டுமென்று
தினமும் எண்ணிக்கொள்கிறேன்..
——————————————————————–
2
உளி அடித்த சப்தம்
பாறை உடைந்த வலி
மனிதர் சிந்திய வியர்வை
குழந்தை அழுதக் கண்ணீர்
காக்கை குருவிகள் விட்ட உயிர்
மரம் பிடுங்கிய இடத்திலிருந்து –
வாழ்க்கையை தொலைத்தப் பூச்சிகள்
ஒரு காலையில் இறந்துபோன யானை
விபத்தில் இறந்த அவனோ அவளோ
இத்தனையும் நடந்த இடத்திற்கு
ஒற்றைப் பெயர் வைத்தனர்
கோயிலென்று..
——————————————————————–
3
கலதரிசனம் கண்டு
பூரிக்கமுடியவில்லை
காலடியில்
பிச்சைக்காரி!
——————————————————————–
4
கோயில்வாசலைக் கூட
தாண்டவில்லை சாதி,
பெரிதாகவும் சிறிதாகவும்
உள்ளேயும் வெளியேவும்
ஏக தாண்டவம் ஆடுகிறது;
சாமிக்குத்தான்
செம வேட்டை..
——————————————————————–
5
கண்ணைக் குத்திவிடுமென்று
பயந்தவன்
தட்டில் காசு போட்டான்,
குத்தாதென்று
தெரிந்தவன்
வாசலில் பிச்சைப் போட்டான்,
சாமி தட்டிலும் இருந்தது
வாசலிலும் நின்றது..
——————————————————————–
6
தினமும்
மூட்டையைச் சுமந்துக்கொண்டுதான்
பிள்ளைகள்
பள்ளிக்கூடம் போகின்றன,
முட்டைபோடும் பாவம்
அவர்களைச் சேராதுபோகலாம்..
——————————————————————–
7
கடைக்கு கடை
ஆக்கிரமிப்பு,
மளிகை வாங்க வரிசையில் நின்ற
தமிழன் சொன்னான்
விட்டுக்கொடுத்தானாம்..
——————————————————————–
8
காசு
பணம்
பொருள்
உடம்பு
ஏதேனும் கொடு;
எதைவேண்டுமோ செய்யுமிந்த
மனித இனம்..
——————————————————————–
9
மதுக்கடையோரம்
மென்றுத் துப்பிய
எலும்புச் சில்லுகளை தேடி போனது
இரண்டு பூனைகள்;
எனக்கு பயம்
எங்கு ஒரு துளி மதுவோ
அல்லது சிகரெட்துண்டின் எச்சிலோ
பூனைகளின் உதட்டில் பட்டுவிடுமோ’ என்று!
——————————————————————-
10
மதுக்கடையோரம்
நடந்துச்செல்லும் பள்ளிமாணவர்களில்
ஒருவருக்கு அந்த நாற்றம்
பிடித்துவிட்டால்கூட போதும்;
அந்த ஒரு மாணவனிலிருந்து
சரிய துவங்கும்
நாளைய நம்
முழு சமுதாயத்தின் ஒழுக்கமும்..
——————————————————————-
11
பள்ளிக்கூடத்தையும்
அருகே மதுக்கடைகளையும்
ஒரே தெருவில் வைத்திருக்கும் மனிதர்களால்
முரணாகவே
உருவாகிறதிந்த சமுதாயமும்..
முடிவில்
மதுக்கடைகளை மூடுவதற்கு
சுடுகாடுகளைத் தாண்டியே
போராட வேண்டியிருக்கிறது..
——————————————————————-
12
மதுக்கடைகளில்
வேலைச் செய்யும்
சிறுவர்களின் வாழ்க்கையை
அங்கே குடிக்கச்செல்லும் பல
போராளிகளின் கண்களும்
பார்க்கத்தான் செய்கின்றன,
பல கல்வியாளர்களின்
கண்களிலும்
அந்தப் பிஞ்சுகளின் எதிர்காலம்
வெறும் சாராய நாற்றமாகவே தெரிகிறது..
——————————————————————-
13
குடித்துவிட்டு
ஒருவன்
பேருந்திலேயே வாந்தியெடுக்கிறான்
அந்த பேருந்து
தான் அரசு பேருந்தாக இருந்ததில்
வெட்கப்பட்டுக் கொண்டது..
——————————————————————-
14
போதையில்
பாதை விளங்காமல் சென்று
லாரியில் இடித்த இளைஞனை
சாகடித்தது லாரியா?
போதையா?
குடித்த இளைஞன்
குற்றவாளியா?
அல்லது விற்கும் அரசு
குற்றவாளியா ?
கேள்விகளைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்
குடி நம் கண்களை
குத்திக்கொண்டுதான் இருக்கிறது..
——————————————————————-
15
உழைத்து
குடித்து
சரிவதைவிட,
உழைக்காமல்
குடிக்காமல்
சாகலாம் போல்;
அப்போது
சாவது பெரிதாகத் தெரியும்
குடி ஒருவேளை
மலிந்துபோகலாம்..
——————————————————————-
வித்யாசாகர்