1
எனக்குத் தெரியும்
அது நீதானென்று;
ஆம்
அது நீ தான்
நான் சுவாசிக்கும் காற்று..
——————————————–
2
அழகாய் சிரிக்கிறாய்..
நீ சிரிப்பதால்
விண்மீன்கள் உடைந்து விழலாம்..
மேகங்கள் மழையாகப்
பெய்யலாம்..
வானவில்லில் பல வண்ணத்தோடு
உனது முகம் தெரியலாம்..
உன் சிரிப்பிற்குள்
ஒரு உலகமே கூடத் தோன்றலாம்..
எதுவோ
எப்படியோ நடந்துப் போகட்டும்
எனக்கு நீ சிரிக்கிறாய் சிரி, சிரித்துக்கொண்டேயிரு
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்!!
——————————————–
3
உற்றுப்பார்
நீ தொடுமிடத்தில் தான்
நானும் தெரிகிறேன்,
உனக்கும் எனக்கும்
ஆண் பெண் தவிர்த்து
மனசுக்கு வேறு வேறுபாடில்லை..
——————————————–
4
எந்த அலை
உனைத் தொடுமோ
அதன் கடலுக்கு நான் ரசிகன்..
எந்த நீருள்
உனது முகம் தெரியுமோ
அந்த நீருள் நானொரு துளி..
எந்த பூமி
உனைத் தாங்கிச் சுழல்கிறதோ
அந்த பூமியில் நான் வசந்தம்..
எந்த வானம்
உனக்கு குடைபிடிக்குமோ
அந்த வானில் நான் மழை..
மழைதோறும் நீ
நீதோறும் நான்..
——————————————–
5
உன்
விரல்பிடித்து நடந்தால்
ஓராயிரம் கனவுகளை வாங்கலாம்..
உன் உதட்டோர
சிரிப்பு துளி கண்டால் – என்
கனவுகளுக்கெல்லாம் கால் முளைக்கலாம்..
எனது கால்முளைத்த
கனவுகளிலெல்லாம் பார்
நீ மட்டுமே சிரித்துக் கொண்டிருக்கலாம்..
உண்மையில் உன்
சிரிப்பில் சிலிர்ப்பவன் நான்,
எனது சிரிப்பிற்குமுன் உயிர்ப்பவள் நீ..
யாரந்த நீ, என் நீ..
——————————————–
வித்யாசாகர்