ஏ.. பெண்ணே என்ன உறங்குகிறாயா,
எழுந்து வா வெளியே
வந்து வெளியே தெரியும் வானத்தையும்
நட்சத்திரங்களையும்
வெண்ணிலாவையும் காண அல்ல,
உனையொருமுறை
நான் பார்த்துக்கொள்ள..
——————————————————
தீக்குச்சி சுடும் மனசாகவே
வலிக்குமுன் மௌனமும்
நீயில்லா அந்தத் தெருவும்,
வெடித்துப் பேசுவதை விட
வெறுத்துப் பார்ப்பது கொடூரமென
எனக்கருகிலிருக்கும் மரங்களுக்கு தெரிந்திருப்பின்
அது தன் இலைகளை கூட உதிர்த்துகொண்டிருக்கும்
ஏன் கிளைகளையும் ஒடித்துக் கொண்டிருக்கும்;
என்ன அவைகள்
மீண்டும் துளிர்த்துக் கொள்ளும்
என்னால் நீயின்றி
அழக்கூட முடியாதடி என்
மழைப்பெண்ணே..
எனக்கு கிளையும் நீதான்
இலைகளும் நீதான்
உயிரும் நீ மட்டுந்தான்..
——————————————————
3
ஒவ்வொரு முறை
உனை விட்டுப் பிரிகையிலும்
எனையெங்கோ நான்
விட்டுவிட்டுச் செல்வதாகவே உணருகிறேன்;
நீயில்லாத தனிமையை மட்டும்
கொடூரமென்றெண்ணி
கலங்குகிறேன்,
உன்னோடிருக்கும்
சில பொழுதே உயிர்ப்பின்
மிச்சமென மகிழ்கிறேன்..
கொண்டாட்டமல்ல, நீ தான் எனது
உயிர்க்காற்று போல;
நீ நின்றால்
நானும் நின்றுவிடுவேன்..
4
நீ உடனிருந்தால்
உணவு வேண்டாம்,
நீயிருப்பின்
தூக்கம் வேண்டாம்,
நீ உடனிருக்கையில் உனையன்றி
வேறொன்றுமே வேண்டாம்..
உனது சிரிப்பில் இரவு தீரும்
நீ பார்த்தால் பகலும் போகும்
உன்னோடிருக்கையில் ஒரு யுகமென்ன அது
அதுவாக தீரும்..
நீயென்பது தான்
எனக்கு யுகம்..
நீ மட்டுமே எனது யுகத்திற்குப் பின்னாலும்..
——————————————————
அதோ
அந்த காற்றுதான் எனதுயிர்
நீ சுவாசித்த காற்று..
அதோ
அந்த சிரிப்புதான்
எனது பிரியம்
அதோ
அந்த இடம் தான்
எனக்கு வனம்
நீ பார்வையால் அம்பெய்திய இடம்..
அதோ
அந்த கிணற்றடி தான்
எனது கல்லறை
நீயில்லா தனிமையை நான்
மரணக் கண்களில் காணுமிடம்..
——————————————————
வித்யாசாகர்
பிங்குபாக்: அன்று நீயிருந்த கிணற்றடி.. – TamilBlogs