1
இதயங்கள் உடைவதாய் சொல்கிறோம்
இல்லையென்று யாறும்
சொல்லிவிடாதீர்கள்,
ஒருநாள்
எதிர்ப்பார்த்திருந்த அவள் பேசுவாள்
அழுவாள்
ஏதேதோ சொல்வாள்
கூடவே அதையும் சொல்வாள்
இல்லையென்பாள்
ஒன்றுமே இல்லையென்பாள்
மன்னித்துவிட மனதால்
கெஞ்சுவாள்
மற என்பாள்
அப்படியெல்லாம் ஆனது
பிழை என்பாள்
பூக்களெல்லாம் மரத்திலிருந்து
உதிரத் துவங்கும்
இலைகள் பரிதவிக்கும்
உனை நேசித்த மரங்கள் கூட
உனக்காக அழும்..
தலை சுற்றும்
உலகம் லேசாக இருளத் துவங்கும்
யாரோ தூர பேசுவதுபோல் கேட்கும்
ஓடி வந்து அவர்கள்
உன்னருகே பார்க்கையில்
அங்கே உன் இதயம் உடைந்து கிடக்கும்..
இல்லையெனும் சொல்
எத்தனை கனம் மிக்கதென
அவளுக்கு தெரியாது,
உனக்குத் தெரியும்
தெரிந்தென்ன பயன்…?
—————————————————–
2
நீயென்ன
மேசையின்மேலிருக்கும்
பூங்கொத்தா..?
பட்டதும் மெல்ல
வடுக்களை விட்டுவிட்டு
ஆறிவிடும் விபத்தின் வலியா
போகட்டுமென
விட்டு விடவும்
மறந்துவிடவும்..?
நீயென் உயிரடிப் பெண்ணே
உனை மறப்பதெனில்
நான்
இறப்பதென அர்த்தம் தெரியாதா?
வேண்டுமெனில் எட்டித்
தொட்டுப்பார்
உன்னருகே கொஞ்சம் தேடிப்பார்
என்னிதயமெப்போதும்
உனைச் சுற்றியே இருக்கும்,
யாரேனும் கேட்டால் மட்டும்
சொல்லிவிடுகிறேன்
உனை மறந்தேனென்று..
—————————————————–
3
எனது இதயத்தினுள்
எட்டிப் பார்க்கிறேன்
எல்லாம் உனைப்பற்றிய
அழுகையின் சத்தமாகவே தெரிகிறது..
சடாரென தலையை
வெளியே எடுத்துக்கொண்டு
சரசரவென எல்லாவற்றையும்
அழித்துவிடுகிறேன்;
அழிந்தோடும் உனது
பெயரெங்கும் குருதியெனப் பாய்கிறதென்
கண்ணீர்.. கண்ணீர்..
—————————————————–
வித்யாசாகர்
பிங்குபாக்: இதோ என் இமைக்குள் நீ.. – TamilBlogs