காற்றின் ஓசை (7) வெள்ளைமனத் தமிழரின் கருப்பு வாழ்க்கை!!

இதற்கு முன் நடந்தது..

விடுதியின் வாசலில் காத்திருந்த கூட்டம் மாலனின் வண்டி வந்து நின்றதும் அலறியபடி ஓடி வருகிறது. மாலன் ஏதோ இடர்பாடுணர்ந்து பதட்டமாக இறங்கி அந்த கூட்டம் நோக்கி நடக்கிறார். அக்கூட்டத்தினர் ஓடி வந்து அவர் காலை பற்றி அழுகிறார்கள்..

“சா…………மி………. சாமி நீ தான் சாமி காப்பாத்தணும்…” மொரிசியஸ் வந்து இப்படி தமிழில் ஒரு அலறலை கேட்டால் எப்படி இருக்கும்?!!

“எழுந்திருங்க.. எழுந்திருங்கம்மா எழுந்திருங்கையா.. “

“நீங்க காப்பாத்துறோம்னு சொன்னா தான் எழுந்திருப்போம்.. உங்க வாயால சொல்லுங்க சாமி………”

‘கடவுளே; என்ன கொடுமை இது, இவர்களெல்லாம் இன்னும் எத்தனை தலைமுறை தாண்டி மாறுவார்களோ…. இவர்களிடம் நான் சாமியில்லை என்று எப்படி சொல்லவோ’ என நொந்துக் கொண்டாலும் அதற்கு நேரம் இதுவல்ல என எண்ணிக் கொண்டு அவர்களின் நம்பிக்கை கொண்டே அவர்கள் சிக்கல் தீர்ப்போம் என எண்ணி “சரி எழுந்திருங்கள் என்கிறார்..

மெல்ல அவர்களை அணைத்து அழையை நிறுத்தும் வரை அமைதி காத்து; ஓரளவு விவரம் புரிந்ததும் ‘ஏறுங்கள் வண்டியில் போவோமென அமரவைத்துக் கொள்கிறார். அவர்களின் வீடிருக்கும் திசை நோக்கி அந்த நள்ளிரவில் பயணப் படுகிறார்கள் மாலனும் உடன் வந்தோரும்..

“சொல்லுங்க என்ன ஆச்சு? ஏன் அப்படி கதறுனீங்க?”

“எங்க மகன் இந்த ஊர்ல இருக்க பொண்ணை காதலிக்கிறான்னு அந்த வீட்டுக் காரங்க வந்து அடிச்சி போட்டுட்டாங்க சாமி”

ஐயோவென தலையில் கை வைத்துக் கொண்டார். மரணம் மட்டுமல்ல ஒருவருக்கு சொல்லாமல் வருவது; காதலும் தான். மரணமாவது ஒரு முறை ஓரிடத்தில் தான் கொல்லும், காதல் இப்படித் தான் ஆங்காங்கே.. அவ்வப்பொழுது எல்லோரையும் கொன்று கொண்டே இருக்கிறதென எண்ணி இருப்பார் போல்..

“எவ்வளவு நாளா இந்த ஊர்ல இருக்கீங்கையா..”

“எங்க தாத்தார் காலத்துல வந்தோமுங்க, நானும் இங்க தான் பொறந்தேன்.. எங்க குடும்பம் மொத்தம் இங்க தான் இருக்கு. நாங்க ஒரு பத்து பதினைந்து குடும்பமா அக்கம் பக்கம்னு இருக்கோம்.. எங்களுக்குள்ளவே பொண்ணு கட்டிக்குவோம் எங்களுக்குள்ளவே கொடுத்துக்குவோம்”

“இரண்டு மூணு தலைமுறைக்கு மேல இங்க இருந்தும் இவ்வளவு ஏழ்மையா தெரியறீங்களே”

“ஏதோ பொழப்பு சாமி.. எங்க பொழப்பெல்லாம் ஒரு பொழப்பா? என்னவோ
உயிரு இருக்கேன்னு வாழறோம்..” மாலனுக்கு மிகையாக வலித்தது இந்த வார்த்தை.

“ஏன் இங்க வந்தீங்க.. எப்போ வந்தீங்க தெரியுமா..?”

“அதலாம் எங்க பெரிய தாத்தாவை தாங்க சாமி கேக்கணும்; எங்களுக்கு கேட்டாலும் அதலாம் சொல்ல மாட்டாங்க” வேறு ஒரு பெண்மணி பதில் சொன்னர்.

“என்ன வேலை ஐயா செய்யுறீங்க”

“எங்களை ஏன் சாமி நீங்க வேற ஐயா ஐயான்னுகுட்டு.. மதலைமுத்துன்னு பேர்சொல்லியே கூப்பிடுங்க போதும்..”

“பரவாயில்லைங்கைய்யா எனக்கு அப்படி வராது. நீங்கள் ஒரு மனிதர் என்பதை தவிர எனக்கு வேறெந்த உயர் மதிப்பும் அடையாளமும் வேண்டாம் உங்களை ஐயா என்றழைக்க”

“நீங்க நல்லா தமிழ் பேசுறீங்களே சாமி..’ என்ன சூரி சரிதானே நான் சொல்றது” இன்னொரு பெண்மணி முதல் பேசிய மதலைமுத்துவின் மனைவியை பார்த்துக் கேட்டாள்.

“ஆமா சாமி நல்லா பேசுறீங்கோ; எங்க குடும்பத்துக்கே தமிழ்னா உயிரு பாருங்க.., அச்சு மாறாம பேச சொல்லும் எங்க பாட்டன், பெரிய பாட்டனும் அப்படி தான்..”

“என் தமிழ் என்னம்மா, உங்கள் முன் நானும் தமிழ் எனக்கு உயிர்னு சொல்ல விரும்பல, பேசுவது எனக்கு தொழில். நீங்க பேசுறீங்களே இரண்டு தலைமுறை தாண்டி.. அதே என் தேசத்தின் வாசம் காலத்தினால் கருகாமல்…., அது தாம்மா பெருசு…”

“உண்மையாவா…!!!”

“நாங்கள்லாம் அங்க நிறைய மாறிட்டோம்; கேட்டால், மாற்றம் வாழ்வின் படிக் கட்டுகள் போலென சொல்லிக் கொள்வோம், மேலேறிப் போய் கொண்டே இருப்பது மட்டுமே எங்களுக்கு குறியானது. வந்தவர் போனவர் என இருப்பவரை விட அதிகம் அவர்களே ஆள்கிறார்கள் எங்களை”

“அப்படியா சாமி..!!??”

“ஆம்; நீங்க தான் நம் மூதாதையர் வாசனைய பத்திரமா வைத்திருக்குறீங்க. நாடு விட்டு நாடு வந்தாலும் தமிழர் நம்மூரில் தொலைத்த பண்பாட்டுப் பொக்கிசங்கள் இன்னும்கூட பழமை மாறாம உங்களை போல் வெளிநாட்டுத் தமிழர்களால் நிறைய காக்கப் படுகிறது.., உங்களுக்கெல்லாம் தமிழ் விருப்பமல்ல, அடையாளம், உயிர். எங்களுக்கு தமிழ்னா.. தமிழ்; தமிழ்; அவ்வளவு தான்”

அவர்கள் சாமி சாமிதான் என்று பேசி மெச்சிக் கொண்டார்கள். வீடு வந்தது. மகன் மயங்கிக் கிடப்பதை பார்த்ததும் கூட்டம் ஒருபுறம் அவர் உடன் இருப்பதை மறந்தும் மறுபுறம் அவருக்கு அவர்களின் பாசத்தை காட்டும் பொருட்டும் ஓ..வென கத்தி அலறிக் கொண்டே இறங்கியது..”

மாலன் எல்லோரையும் அமைதி படுத்தி மகனை தூக்கி வண்டியில் கிடத்த சொன்னார். ஏற்றி வண்டியில் படுக்கவைக்க, தன்னோடு உள்ளவர்களிடம் சொல்லி சிறப்பான மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். அதுவரை நான் இங்கேயே இருக்கிறேன் சென்று வாருங்கள் என்று சொல்லி அமர்ந்துக் கொண்டார். மகனின் தாய் தந்தை ஓடி வந்தார்கள்.

“என்ன சாமி இது நீங்க காப்பத்துவன்னு சொன்னீங்களே, இப்போ மருத்துவம் பார்க்கணும்னு போனா என்னாச்சு எதாச்சுன்னு எல்லாம் பிரச்சனை ஆகாதா ஐயா சாமி உண் கால்ல…” மீண்டும் அவர் காலில் விழ, சாஸ்டாங்கமாக மாலன் அவர்கள் காலில் விழுந்தார்.

அவர்கள் அலறி போய் அவரை தூக்க.. சொல்வதை செய்யுங்கள். நான் இங்கு தான் இருப்பேன். அவருக்கு ஒன்றும் ஆகாது, அது என் பொறுப்பு, நான் கடவுளில்லை இங்கேயே அவரை குணப்படுத்த என்று புரியவைக்கும் நேரம் இதுவல்ல. மருத்துவமனை சிக்கலை என் தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள், நீங்கள் சென்று வாருங்கள் என்று கட்டளை தொனியில் பேச; உடன் வந்தவர் மொரிசியஸ் தீவின் பெரிய ஒரு ஆள் பெயர் சொல்லி, அவர் மூலம் நாங்கள் பேசிக் கொள்வோம் வருந்தாதீர்கள் என்று கூறிவிட்டு அவர்களையும் உடன் அழைத்து செல்கிறார். வண்டி மருத்துவமனை நோக்கி புறப்படுகிறது.

மாலனுக்கு வீட்டில் இருப்பவர்கள் என்னென்ன மரியாதையோ செய்ய முயல்கிறார்கள். அவர் அவர்களை எல்லாம் மறுத்துவிட்டு வீட்டின் பின் புறம் சற்று இருட்டு நோக்கி நடக்கிறார். அந்தளவிற்கு பெரிய வீடெல்லாம் இல்லை அவர்கள் தங்கியிருந்த வீடு. அது ஒரு காடு போன்ற ஆங்காங்கே இடைவெளி விட்டு வாழும் வீடுகளாக நிறைந்த இடம் போன்று தெரிந்தது. வெளிச்சத்திலிருந்து வந்ததால் முழு இருட்டில் அத்தனை பெரிதாக ஒன்றும் விளங்கித் தெரியவில்லை. மெல்ல கண்களின் வழியே வெளிச்சம் படர ஆரம்பித்தது. கிராமமாக இருக்குமென்று எண்ணிக் கொண்டார்.

சற்று தூரம் நடந்து எல்லாவற்றையும் சுற்றி சுற்றி பார்க்கிறார். அவருக்கே ஒரு யோசனை வந்திருக்கும்போல்; அதெப்படி இவர்கள் என்னை தேடி வந்தார்கள் என. உடனே அங்கிருந்து வேகமாக திரும்பி தனக்கு தூரத்தில் நின்றிருந்தவர்களை அழைத்து எப்படி என்னை நோக்கி வந்தீர்கள் என்று கேட்கிறார்.

அடிபட்டு வந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருக்க, யாரோ இப்படி சாமியார் ஒருத்தர் பிரசங்கம் பண்ண இந்தியாவுல இருந்து வந்திருப்பதாகவும், அதும் தமிழர் என்றும், ரொம்ப பெரிய சாமி என்றும் சொல்ல, அரங்கத்தில் தொலைபேசியில் அழைத்து கேட்டதாகவும், அவர்கள் இவ்வாறு இவ்விடம் போகிறார் என்று சொன்னதாகவும், உடனே ஓடி அங்கு வந்ததாகவும் சொல்கிறார்கள்.

மாலன் மனசெல்லாம் என்னவோ அடைத்துப் போயிருந்தது. இங்கும் இத்தனை தூரம் வந்தும் அவதியுறும் தன் இனமானம் நினைத்து போராடிடாத காதல்; தமிழ் வாசம் மாறாத ‘ஏழை தமிழ் குடிகள்; இப்படி தன் உறவுகளையெல்லாம் விட்டு பிழைப்பிற்கென பிற தேசத்தில் வந்து கூட  ஏனோ இப்படி ஒரு ஒதுக்குப் புற வீடும், வெறும் உயிர்வாழ்தலை மட்டும் நடத்தும் முறையும், தன்னை சாமி சாமி என்று அழைக்கும் அழைப்பும்; ஆழ்ந்து சிந்திக்க வைத்தது அவரை.

மனசு கேட்காமல் மீண்டும், வீட்டில் இருந்தவர்களிடம் பூர்வீகம் பற்றி கேட்டுப் பார்த்ததில் ‘அந்த காலத்தில் கோவில் வேலைக்காக வந்துவிட்டதாகவும், கோவில் நாளடைவில் கைமாறி போக வேறு வழியின்றி, கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்பதாகவும், தற்போது மொரிசியஸ் நிலப்பிரபுக்களின் வீட்டில் வேலை செய்வதாகவும், சிலர் வண்டி ஓட்டி பிழைப்பதாகவும் சொல்ல, விக்கித்துப் போனது மாலனுக்கு.

வீட்டின் உள்ளே சென்று பார்க்கிறார். அத்தனை நல்ல பாத்திரங்களோ நல்ல துணிமணிகளோ இருப்பதாக தெரியவில்லை. அவர் உள்ளே போனதும் இரண்டு நடுத்தர வயதுள்ள பெண்கள் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு வெளியே வந்து விடுகின்றனர். மாலனும் சற்று தயங்கி, வந்ததற்கு உள்ளே சென்று பார்த்துவிட்டு வெளியே வருகிறார். அந்த சகோதரிகள் ஆண்களின் உடையை அணிந்து கறுத்த முகமாய் நிற்கிறார்கள். அந்த சட்டை கூட அத்தனை சுத்தமாக இல்லை. ஏதோ இருப்பதை உடுத்திக் கொள்ளும் ஏழ்மை புரிந்து மனதை கசக்கியெடுத்தது.

இன்னும் எந்தெந்த தேசங்களில் என் மக்கள் இப்படி என்னென்ன அவதியெல்லாம் உறுகிறார்களோ என்றொரு அழை; வெள்ளம் உடைத்தாற்போல் வர, மறைக்க மாட்டாமல் விருட்டென முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே இருட்டு நோக்கி நடக்கிறார் மாலன்..

அடர்ந்த அந்த காடுகளின் இருட்டில் அவர் கண்ணீர் கரைந்து கலந்து ஓ…’வென்றொரு சப்தமாக பீறிடுகிறது.. அருகில் இருப்பவர்களிடம் மறைத்துக் கொண்ட அச்-சப்தத்தை இரவில் கத்தும் சில்வண்டுகள் மட்டுமே கேட்டுக் கொள்கின்றன…
——————————————————————————————————————–
காற்று இன்னும் வீசும், அதன் சை வானை இடித்துக் கேட்கும், வெள்ளை மனத் தமிழரின் கருப்பு வாழ்க்கை – தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (6) இருட்டின் வெளிச்சம்

இதற்கு முன் நடந்தது..

லகமெலாம் மேவிய தமிழை பணத்திலும் பதித்துக் கொண்ட நாடு. முப்பதாயிரம் தமிழர்கள் வாழும் அழகிய தேசம். மொத்தம் ஒரு கோடியே மூன்று லட்சம் மக்கள் தொகையில் கனக்கும் பூமி. இந்துமத வழிபாட்டு முறையை முதன்மையாகக் கொண்ட பண்பாடு. எழுநூற்றி எண்பத்தேழு சதுர மைல் பரப்பளவிற்கு நீண்டு, டச்சு, பிரெஞ்சு காரர்களுக்குப் பிறகு ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தியெட்டில் பிரிட்டீசாரிடமிருந்து விடுதலை பெற்று ‘போர்ட்லூயிஸ் என்னுமிடத்தை தலைநகராக கொண்டு ‘இந்தியப் பெருங்கடலின் நட்சத்திரமாக திகழும் மொரிசியஸ் தீவில், ஒரு இருட்டு அறையில், ஓம் என்னும் ஒலி பீரிட்டெழ, தியானத்தில் அமர்ந்திருக்கிறார் மாலன் தாண்டவராயன்.

தியானம் முடித்தெழுந்து இன்றைய தலைப்பு பற்றியும், பேச இருப்பது பற்றியும், கூடியுள்ளவர்களின் ஆர்வம குறித்தும் பேசிக் கொண்டே ஒரு பெரும் அரங்கத்தினுள் மாலன் தாண்டவராயன் நுழைய, அவர் வந்து விட்டதை மேடையிலுள்ளவர்கள் அறிவிக்க, கூட்டம் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு வரவேற்பு கொடுக்கிறது.

மிக அழகிய மண்டபம் அது. அரங்கத்து சுவரெங்கும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்களும், மொரிசியஸ் தீவின் வரலாறை பறைசாற்றும் காட்சிகளும் ஓவியமாய் வரைந்து மாட்டியிருக்க மாலன் தாண்டவராயன் அவைகளை பார்த்து ரசித்துக் கொண்டே மேடை ஏறுகிறார்.

மேடையில் அவருக்கு தக்க வரவேற்பு மரியாதை செய்து அமர்த்தியப் பின் ஒருசிலர் எழுந்து அவரை பற்றி மிக சிறப்பாகவும், முன்பு வேறுசில நாடுகளில் அவர் பேசியது பற்றியும் இங்கே பேச இருப்பது பற்றியும் தெரிவிக்கிறார்கள். இதற்கு முன் சென்ற நாடுகள் குறித்தும், இதுவரை ஏற்படுத்திய விழிப்புணர்வு குறித்தும் மொரிசியஸ் மக்களுக்கு அவர்கள் தெரியப் படுத்துகிறார்கள்.

மாலன் கடைசியாய் எழுந்து காத்திருக்கும் மக்களுக்கு வணக்கம் சொல்லி வணங்கிநிற்க தன் பதில் வணக்கத்தை கர ஓசையில் காண்பிக்கிறது அரங்கம். மாலன், மனிதம் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் வாழ்வியல் குறித்தும் மானுட முன்னேற்றம் குறித்தும் நிறைய பேசுகிறார். எங்கு சுற்றி எங்கு வந்தாலும் மாலனிடமிருந்து தியானம் பற்றி கேட்பதிலேயே மொரிசியஸ் மக்கள் குறியாக இருந்தனர்.

மாலன் அரங்கத்தில் நிறைவாக அமர்ந்திருந்த மக்களை அவர்களின் ஆர்வத்தை கூர்ந்து கவனிக்கிறார். சற்று இங்குமங்குமாக சுற்றி எல்லோரையும் நோட்டமிட்டுவிட்டு “ஒரு பழம் இல்லை இல்லை சர்க்கரை இனிக்கும் என்று வாயால் சொன்னால் காதால் கேட்பவருக்கு இனிக்குமா?” என்றார். மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு ஒரு சிலர் புரியாமல் ஆம் என்றும், நிறைய பேர் இனிக்காது உண்டால் தான் இனிக்கும் என்றும் பதில் உரைக்கின்றனர்.

மாலன் புன்முறுவல் ஒன்றினை பூத்துவிட்டு, தன்னை பின்தொடரக் கேட்டுக் கொண்டு கண்மூடிக் கொண்டார். இரு கால்களையும் சம்மணமிட்டு முதுகை நேராக்கி மேடையின் மீதே கனகம்பீரமாக அமர்ந்துக்கொண்டார். விளக்குகளை அணைக்க சைகை செய்தார். மொத்த வளாகமும் மூச்சு விடும் சப்தத்தை கூட மெதுவாக்கிக் கொள்ளும் முயற்சியில் அமைதியுற்று போனது. அவரையே பார்த்தது. அவர் தான் செய்யுமாறே எல்லோரையும் செய்யுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொண்டார். வளாகத்தின் வாசல்கள் ஜன்னல்கள் மூடப் பட்டு மிக ஆழ்ந்த இருட்டு அங்கே வெகு வேகமாக படரத் துவங்கியது.

மாலன் சுவாசத்தை நன்றாக நீட்டி இழுத்து விட்டுக் கொண்டார். உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றின் அளவாகவே ஓம் என்றொரு சப்தத்தையெழுப்பி அரங்கத்தை நிறைக்க, அந்த கனத்த அமைதியில் ‘இருட்டு நிறைந்த சன்னமான வெளிச்சத்தில், அந்த நீண்ட வளாகத்தின் மொத்த அமைதியையும் விழுங்கிக் கொண்டது அவரின் ஓம்காரம். எல்லோரின் காதுகளிலும் புகுந்து மெல்ல அவர்களின் மூளைவரை அதிர்விக்கவும் செய்தது. மாலன் மீண்டும் மீண்டும் ஓமென்று குரலெழுப்ப அவ்வொலியில் கட்டுண்டவர்களாய் எல்லோரும் மானசீகமாய் கண்மூடி ஓமென்னும் சப்தத்திற்கிணங்க மூச்சினை உள்ளிழுக்க, விட, மாலன் ஓம்காரத்தை நிறுத்திக் கொண்டதும் அந்த அமைதியின் வீச்சினை கடந்து என்னவோ ஒரு புதிய நிலை ஏற்பட்டுவிடப் போவதாய் எதிர்பார்த்து எல்லோரும் அவரையே பார்த்து காத்திருக்க, மாலன் மீண்டும் கண்களை மூடி ஓம்……………… என்று சப்தமிட, எல்லோரும் கண்களை மூடிக் கொண்டு ஓம்……. ஓம் என்றே சுவாசித்துப் பழகுகிறார்கள்.

அரங்கம் முழுதும் பற்றி எரியும் ஒரு தீ சுவாலை போல், ‘ஓமென்னும் சப்தம் எழுந்து அமைதியாகி நிற்க, அங்கே  நிலவிய நிசப்தத்தின் உச்சியில் சென்று அமர்ந்துக் கொண்டார் மாலன் தாண்டவராயன்.

உலகின் மொத்த அசைவுகளையும் மறந்து, தனை எங்கோ ஒரு பனிபடர்ந்த மரங்களின் அடர்த்தியில் வளர்ந்து நிற்கும் ஓர் உயர்ந்த மலையின் உச்சியில் அமர்ந்திருப்பதாய் எண்ணிக் கொண்டார். கடவுள் என்ற ஒரு நிலையில் மட்டுமே தன்னை ஆட்படுத்திக் கொண்டுவிட்டதாய் உறுதி செய்துக் கொண்டார். தானே கண்திறக்க எண்ணும் வரை நெருப்பே வந்து மேலே வீழினும், விஷம் உடம்பெல்லாம் ஏறி கலப்பினும் எல்லாம் அவன் பொறுப்பே என சரனாகதியுற்று, மெல்ல, ஆழ்ந்த இருள் நோக்கி இருளில் தெரியும் வெளிச்சம் நோக்கி வெளிச்சத்தை அடையும் இருட்டினுள் மூழ்கி மூழ்கி மௌனமானார். அந்த நீண்ட பெரும் வளாகமும் மௌனமானது.

மொத்த கூட்டமும் அவரின் ஏதோ ஒரு மன அதிர்விற்கு கட்டுப்பட்டு தன் இறுக மூடிய கண்களுக்குள் எதையோ உச்சரித்தபடி தியானத்தில் ஆழ்ந்துக் கொண்டது. மாலன் நேரங்களிலிருந்து கடந்து தனைவிட்டெங்கோ தள்ளி இறைமை எண்ணும் ஒரு ஒற்றை புள்ளியில் ஆழ்ந்துவிட பளிரென மின்னியது இருட்டிற்குள் அந்த வெளிச்சம். வெளிச்சம் மெல்ல உருவம் கொள்கிறது. உருவமெழுந்து தன்னை கடவுள் என்கிறது. கடவுள் ஏதோ பேசுவதாக எண்ணுகிறார் மாலன். மாலனின் வாய் அசைகிறது. “இதோ.. இதோ… கடவுள்.. கடவுள்.., கடவுள் தெரிகிறார்.., கடவுள் எனக்கு தெரிகிறார்.., கடவுள் இதோ எனக்கு மனிதராய் தெரிகிறார்.., கடவுள் மனிதர் தான் பாருங்கள்..”

கூட்டம் படக்கென கண்களை திறந்துக்கொள்ள மாலனின் உதடுகள் மட்டுமே முனுமுனுத்து பார்ப்பவர்களின் பார்வையில் நிறைகிறது. வளாகத்தின் நான்கு புறமும் இருந்த ஒலிப்பெருக்கி அவரின் குரலை அரங்கத்தின் கடைசி நபர்வரை கொண்டு சேர்க்க எல்லோரின் மனசும் விழித்துக் கொண்டு கொட்ட கொட்ட அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. மாலன் கடவுள் தெரிகிறார் என்றதும், மக்கள் வெள்ளம் ஆச்சர்யத்தை பார்வைகளில் அப்பிக் கொண்டு அசையாமல் அவரையே நோக்கி சிலைபோல் உரைந்து போயின. அவர் பேசுகிறார்..

“ஆம், கடவுள்; கடவுள் தெரிகிறார்; இதோ கடவுள் தெரிகிறார், கடவுள் எனக்கு மனிதராகவே ‘வெறும் மனிதராகவே தெரிகிறார்…” அவர் சொல்ல சொல்ல அந்த உருவம் அவருக்குள் நின்று கத்தி சிரிக்கிறது. என்ன நினைத்தாய் என்னை, என்னை பார்த்தால் உனக்கு மனிதனாகத் தெரிகிறதா? நான் ஒன்றும் மனிதனில்லை கடவுள் என்கிறதந்த வெளிச்சம். மாலனின் முகம் இறுகிப் போகிறது. கோபம் கொண்டவரைபோல் தெரியவில்லை யென்றாலும், எதற்கோ சிலாகித்துப் போன, சற்று கொதித்தெழுந்துவிட்ட உணர்வு பிழம்பாய் ‘முகம் சிவந்து முணுமுணுக்கிறார்.

“பரவாயில்லை சொல், கடவுளென்றாலென்ன சொல், பேசு, என்ன வேண்டும் உனக்கென்றேன்” கடவுள் சிரிக்கிறார்.

“சிரிக்காதே பேசு..”

“நானென்ன பேச, உனக்கெதோ வேண்டும் போல் நினைத்து வந்தேன். நீ, என்னையே என்ன வேண்டும் என்கிறாயே??????” மீண்டும் சிரித்துக் கொண்டார் கடவுள்.

“அதுபோகட்டும்.., நீ கடவுளா??” என்றேன்

“இல்லை இல்லை மனிதன் தான் என்றார்” அவர்

“பிறகு கடவுள் என்றாயே? பொய் சொன்னாயா” என்றேன்

“பொய்யில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் அதிக வேறுபாடில்லை, அதனால் சொன்னேன்” என்றார்

“எப்படியில்லை வேறுபாடென்றேன்”

“தனக்குள்ளிருக்கும் தெய்வீகம் மணக்க மணக்க வாழும் மனிதன் கடவுளாகிறான். கடவுள் தன் அடையாளத்தை பூமியில் விட்டுச் செல்லத் துணிகையில் மனிதனாகிறான். மனிதனை உற்றுப் பார் தெய்வீகம் புரியுமென்றார்.

“ஆஹா… உண்மையாகவா.. எங்கே கிட்ட வா உன்னை பார்கிறேனென ‘நான் தியானம் விட்டெழுந்து கண்களை திறக்க நினைக்கையில், ‘கடவுள் ஓடிவந்து என் கண்களின் இமைகளை சேர்த்துப் பிடித்து, ‘திறந்துவிடாதே.. இன்னும் சொல்ல ஒரு ரகசியமிருக்கிறது கொஞ்சம் பொறு என்றார்.

கண்களை அழுத்தமாக மூடி, நேராக அமர்ந்து, இருட்டிற்குள் வெளிச்சமாய் தெரியும் அவரையே மிக நன்றாக உற்று பார்க்கிறேன். அவர் சொன்னார்..

“நகரும் வாழ்வின் ஒவ்வொரு கணமும் என்னை ‘என்னிரண்டு கால்களை விட’ என் ஒரேயொரு நம்பிக்கை தான் தாங்கி நடந்தன. நம்பிக்கையின் கடைதூர எல்லையில் தான் ‘நாமெல்லோருமே தேடும் வெற்றியின் ரகசியங்கள் பொதிந்துக் கிடக்கின்றன.

உலகம் எனக்காக காத்திருப்பதாக சொல்வார்கள், ஆனால் நான் அதற்கு முன்னரே உலகம் எனக்காக மட்டுமே காத்திருப்பதாய் நம்பினேன். எதையோ என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளவே என் சமுகமென்னை வளர்ப்பதாய் நம்பினேன். இந்த பேரண்டம் ஓர்நாள் என் பெயரை தலையில் தாங்கிக் கொள்ளுமென நம்பினேன். இதையே தாரக மந்திரமென ஒவ்வொரு மனிதரும் நம்புங்கள். உலகம் ஓர்நாள் உங்களுக்காகவும் காத்திருக்கும்.

இன்னுமெனக்கு நம்பிக்கை இருக்கிறது.. ஓர்நாள்.. என்றோ ஓர்நாள்.. என் வாழ்வின் முடிவுநாளின் மறுபக்கத்திலாவது என் வெற்றியின் சுவடுகள் உலகெங்கிலும் பதிக்கப் படுமென நம்பிக்கையிருக்கிறது, எனக்கு வயதென்ன தெரியுமா ??? எழுபத்தியிரண்டு. நான் யார் தெரியுமா ? நான் தான் கடவுள்” சொல்லிவிட்டு மறைந்ததந்த கடவுள். கடவுள் போன்ற வெளிச்சம்.

“எங்கே.. எங்கே.. கடவுள்? எங்கே அந்த உருவம்..? யாரது..? யாரது வந்தது..? கடவுளா? மனிதனா..? எழுபத்தியிரண்டு வயதென்றாரே!!! உறங்கிவிட்டேனா? என்ன இது.. என்னாயிற்று… தியானம் செய்கிறேனா அல்லது கனவு காண்கிறேனா.. ஒன்றும் புரியவில்லையே… எங்கிருக்கிறேன் நான்..” படாரென கண்ணை திறந்தார் மாலன் தாண்டவராயன்.

“ஆம், தியானம் தான் செய்திருக்கிறேன்.. பிறகு தியானத்தில் உருவம் வந்ததே கனவு கண்டேனோ அப்போ உறங்கியா போனேன்.. உறங்கினால் பிறகெப்படி அது தியானமாகும்? அந்த பெரியவர் போல ஒருவர்!! யாரது கடவுளா? யாரோ ஒரு முன்னோர் போன்று தெரிந்ததே!!! மனிதனின் தோற்றத்தில் கடவுள் தான் வந்தாரோ??? யாரானால் என்ன கடவுளானாலென்ன மனிதன் தான் வந்தாலென்ன.., கடவுளோ மனிதனோ.. தியானமோ உறக்கமோ.. எவ்வளவு ஆழமான நம்பிக்கை அவருக்கு?!! அதும் எழுபத்திரண்டு வயதில் அந்த மனிதனால் எப்படி தன் வாழ்க்கையை அத்தனை நம்ப முடிகிறது??!!!!! என்னை தான் நம்பு என்கிறாரோ!!!!!!! ஆம்; என்னை தான் சொல்கிறார். எனக்குத் தான் போதனை. போதித்தவன் கடவுள் தானே………???? மாலன் வளாகத்திலிருந்த அனைவரையும் பார்த்துக் கேட்டார்.

“கடவுள் தான். கடவுள் தான். மனிதன் கடவுள் தான். மனிதனை கடவுள் தானென நம்பினேன். அந்த மனிதனும் எனக்கு இன்று வரை கடவுளாகவே இருந்து காக்கிறான். நான் நகரும் ஒவ்வொரு நகர்விலும்.. மனிதர்களே எனை சுற்றி சுற்றி கடவுளாக தெரிகிறார்கள், ஒருவேளை அதை போதிக்கத் தான் அந்த பெரியவர் வந்தாரோ??!!” பெரியவர் பற்றி கூட்டத்தில் சொல்கிறார் மாலன்.

அரங்கத்து மக்கள் ஆச்சர்யமுறுகிறார்கள். சிலர் ஏதோ பினாத்துகிறான் கிறுக்கன் என எழுந்து வெளியே போனார்கள். நிறைய பேரால் மாலனை நம்ப முடிந்தது. மனிதனுக்கான, மனிதனை நம்பும், மனிதன் வளம் பெரும் ‘மனிதத்தை தர எண்ணுவது மட்டுமே’ மாலனின் எண்ணமென நிறைய பேருக்கு தெரிந்தும் புரிந்தும் இருந்தது. மாலன் அவர்களுக்கென பேசினார்..

“அந்த மனிதரை நம்புகிறேன் நான், இன்றில்லை, அன்றிலிருந்தே மனிதனை நம்பினேன் நான். மனிதன் தான் கடவுள் என்பதை இன்றும் கண்டேன். நீங்களும் நம்புங்கள், மனிதனை நம்புங்கள், மனிதனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை நம்புங்கள், மனிதனின் நம்பிக்கை மனிதனை வளர்க்கும், மனிதனை தெய்வமாக்கும்” மாலனுக்குள் அந்த வெளிச்சம் மீண்டும் தெரிந்தது. கண்களை உடனே மூடிக் கொண்டார்.

இதோ.. இதோ… அதே வெளிச்சம், நம்பிக்கை உள்ளே வலுக்கொள்ள வலுக்கொள்ள தெரிகிறதந்த வெளிச்சம். இருட்டில் தெரிந்த வெளிச்சம் இப்போது பிரகாசிக்கிறது.. ஒரு பெருத்த வெளிச்சமெழுந்து எனக்குள்ளே பரவி அமிழ்கையில் வெளிச்சத்திற்கு மத்தியில் வெளிச்சம் இருட்டாகிறது. இருட்டிற்கு மத்தியில் மீண்டும் வெளிச்சம் ஆலகாலனாய் பெருத்து பரவி விசாலமாய் என்னுள்ளே உலகம் வரை வளர்ந்து நிற்கிறது. என்னை ஆரத் தழுவிக் கொள்கிறது. அந்த வெளிச்சத்திற்கு தெரிகிறது என்னை. மனிதனை வளம் பெற செய்தால் கடவுள் அங்கே வென்றுவிடுமென அந்த ஆரத்தழுவியதில் போதிகிறதந்த வெளிச்சம்.

கடவுள் என்ன எதற்குள்ளோ அடங்கிப் போன ஒன்றா? இல்லையே எல்லாமுமானது இறை எனில் உயிர்களுக்குள் வெளிச்சமாய் கடவுள் இல்லாமலெப்படி? பிறகு கடவுள் உயிர்களுக்குள் இருக்குமெனில் ‘முதல் அந்த உயிர்களை மதிக்கக் கற்றுக் கொள். நீ மதிக்கும் உயிர்களின் அன்பில் கடவுள் எழும். அது நீ வேண்டுவதை நீ எண்ணுவதை நீ எண்ணியபடி செய்து தரும். நீ வேண்டுவதை நீ எண்ணுவதை நீ உனக்குள்ளேயே வைத்திருப்பதை உனக்குள்ளேயே நீ கடைந்து பார்த்து நீயே எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள உன்னை பழக்குவதே கடவுளுத்துவம் இல்லையா?

அந்த கடவுளின் இருப்பை நாமும் எப்படி எப்படியோ வடித்துப் பார்க்கிறோம், இப்படியும் என்னை வைத்துக் கொள் என்று சொல்லவே இந்த வெளிச்சம் எழுகிறதோ!!! உண்மையில், வெளிச்சம் வேறில்லை இருட்டு வேறில்லை. வெளிச்சமும் இருட்டும் வேறு வேறில்லை. அதிகம், குறைவு தான் உண்டே அன்றி முழுமையாக வேறில்லை. சட்டென பார்க்கையில் வேறு வேறாக புரிகிறது நமக்கு, சற்று பொருத்து அமைதியாக பார்த்தால் இருட்டிற்குள்ளும் வெளிச்சம் உண்டென தெரியும். மனிதரும் கடவுளும் கூட அபப்டித் தான். வேறு வேறில்லை. இருட்டும் வெளிச்சமும் போல் கடவுளும் மனிதரும் கூட ஒன்று தான். இரண்டும் ஒன்று தான். உற்று பார்த்தால் மனிதனுக்குள்ளும் இருக்கும் கடவுளை காணலாம்…..”

அவர் வாய் முணுமுணுத்து அடங்கி கண்கள் திறக்க, திறந்து எல்லோரையும் பார்க்க அரங்கம் அமைதியாய் முகம் முழுதுமான ஒரு புது உணர்வையும் பல கேட்கத் தெரியாத கேள்விகளையும் நிரப்பிக் கொண்டு அவரையே பார்க்கிறது. அவர் அரங்கத்தை நோக்கி ‘என் அன்பு உறவுகளே, கடவுளை பார்த்தீர்களா’ என்றார். அவர் மன அதிர்வினுள்  முழுக்க முழுக்க ஈர்த்திருந்த யாவரும் ‘அவர் உணர்ந்ததை உணர்ந்ததாகவே எண்ணியிருக்கக் கூடும் போல். யாருமே ‘இல்லை’ என்று சொல்லவில்லை. ‘கண்டிப்பாக எங்களாலும் பார்க்க முடியும், நாங்களும் பார்ப்போம்’ என்றது கூட்டம்.

மாலன் மக்களை பார்த்து தன் இரண்டு கைகளையும் நீட்டினார். உணர்ச்சி உணர்ந்து உரக்க கத்தி சொன்னார். இந்த நம்பிக்கை போதும். இந்த நம்பிக்கை தான் இறைமையை உணர செய்யும். இது தான் கடவுள் நோக்கிய பாதை. இதை அறிய தான் தியானம் செய்யுங்கள்” என்று சொல்லி நிறுத்திக் கொண்டார். எழுந்து நின்று எல்லோரையும் வணங்கி இது போதுமா? நிறுத்திக் கொள்ளட்டுமா? என்றார். கூட்டம் எழுந்து நின்று தன் சந்தோசத்தை தன்னைதானே நம்ப வைத்த நன்றியை கைதட்டி மனப் பூர்வமாக மாலனுக்கு தெரிவித்தது.

மாலன் கரகோசத்தின் சப்தம் அடங்கும் முன்னே மீண்டும் அமர்ந்து பேசினார். அவரை எதிர்த்து வந்த கரவொலிகளை அமைதி வாளெடுத்து வீசுகிறது அவர் பேச்சு அந்த அரங்கத்தின் மீது.

“ஆம்; நான் சொன்னதற்கெல்லாம் காரணமுண்டு கேளுங்கள். நம் கண்முன்னே இருந்து, நம்மை, வாழ்வின் ஒவ்வொரு தடங்களிலும் வீரியக்கால் பதிக்க உதவும் ஒவ்வொரு மனிதனும் நமக்கு கடவுள் தானென நம்புங்கள். நான் அப்படித் தான் நம்பினேன். மனிதர் அத்தனை போரையும் கடவுளெனக் கண்டேன். என் காட்சிகளில் கடவுளை தேடிக் கிடைக்காத ஏக்கங்களே தெரியவில்லை. எல்லாமே கடவுள், எல்லாமே கடவுள் செயலென நம்பியதால், கேட்டதெல்லாம் மனிதரிடமிருந்தே கிடைத்தது. என்னை கேட்டால் மனிதனே முதன்மை என்பேன். மனிதனை தாண்டிய கடவுள் ஒன்றும் பெரிதில்லை. தன்னோடுள்ள சகமனிதருக்காய் வாழ துணிகையில் தான் வாழ்க்கையே அர்த்தமுறுகிறது. எனவே, வாழ்க்கையின் எதிர்பார்ப்புக்களையும், தனக்கான சுயநல வாழ்வினையும் உடைத்தெரியுங்கள். வேண்டுமெனில் தன்னை காத்துக் கொள்ளுமளவு, பிற மனிதனை பாதிக்காதளவிற்கு சுயநலம் கொள்ளுங்கள். பிறருக்காய் விட்டுக் கொடுத்து வாழுங்கள். வேறொன்றுமில்லை வாழ்க்கை விட்டுக் கொடுப்பதன்றி.

உங்களுக்காக நானிங்கு வேறொன்றினையும் சொல்லக் கடமை பட்டுள்ளேன். என் வளரும் பருவத்தில் நிகழ்ந்த அத்தனை நல்ல மாற்றங்களுக்கும், தீயதை நான் பிறருக்கு விட்டுத் தரமுடிந்தே காரணமன்றி வேறில்லை என்றால் நம்புவீர்களா?

நான் முதன் முதலில் வெண்சுருட்டு புகைக்கையில் என் நண்பனும் புகைத்தான், நான் புகைக்கையில் வலிக்காதது என் நண்பன் புகைக்கையில் வலித்தது. அவனை திருத்த என்னையும் திருத்திக் கொண்டேன். நண்பனுக்கு அது புரிகையில் நண்பனுக்கு நான் தெய்வமானேன்.

நண்பர்களால் கற்ற வெற்றிலைபோடும் பழக்கத்தை என் மனைவியை சந்திக்கும் முன் அவளுக்கு வாய் நாற்றம் உறுமோ அவளுக்கு என் அருகே வர உருத்துமோ என்றெண்ணி அதையும் நிறுத்திக் கொண்டேன். மனைவிக்கு அது தெரிய வருகையில் ‘மனைவியின் பார்வையில் நல்ல கணவனானேன்.

தவறென்று தெரியும் முன்னே கற்ற கெட்ட வார்த்தைகளை, நல்லவர் முன் பேசுகையில் மாற்றி திருத்திக் கொண்டேன். அங்ஙனம், பிறர் மனம் நோகுமோ, அவருக்கு தீங்கு இழைத்து விடுவோமோ, அவருக்கு பாரமாகிப் போவோமோ, அவர் நமை எண்ணி வருந்துவாரோ, அவருக்கு உதவி செய்ய இயலாதவனாய் ஆவேனோ, என் வளர்ச்சி.. என் ஆடம்பரம்.. என் அலங்காரம்.. எவரின் கண்களையேனும் உருத்துமோ என்றெல்லாம் ‘பிறருக்கென என்னை செதுக்கிக் செதுக்கி வர, நாளடைவில் ஒழுக்கமென்றால் என்னவென்று கற்றேன்.

அதோடும் நின்றுவிடவில்லை, கீரை கற்றை பிடுங்குகையில் இடையே வந்த புல்லினைப் போல, வாழ்வின் உன்னதங்களை தேடி தேடி அலைந்த முழு நேர தேடலில், தேடுதலுக்கிடையே கிடைத்த அத்தனை தீய பழக்கங்களையும் பிறரை அழிக்கும் இகழும் கெடுக்கும் தீய குணங்களையும் கூட மறைக்காமல் யதார்த்தமாக காட்டிக் கொள்கையில், மனது போலவே வாழ்ந்து வந்ததில் ‘உலகம் ச்சீயென அதை பார்த்து முகம் சுழித்துக் கொள்கையில், அவைகளையும் உலகிற்கென விட்டுக் கொடுக்கையில், இருப்பதை இருப்பதாக மட்டுமே என்னை வெளிப் படுத்திக் கொண்டதில் ‘உண்மையின் வெளிச்சமானேன் ஓர்நாளில் உறவுகளே” அரங்கம் அவர் பேசும்போதே சோவென கைதட்டியது.

“பணம் பொருள் வீடு சொத்து புகழ் என எது கேட்டாலும் கிடைக்கிறது. எதை எப்பொழுது அடைய எண்ணினாலும் அடைய முடிகிறது. பிறகென்ன, நாமும் கேட்பவருக்கு கொடுக்க இயன்றதை இயன்றவரை கொடுப்போம், கொடுக்க கொடுக்க ‘இரைக்கும் கிணறு சுரப்பது போல் சுரக்காமலா போகுமென’ எண்ணி கேட்டவருகெல்லாம் கேட்டதை கொடுத்ததில், மீண்டும் மீண்டும் கிடைத்தது, மீண்டும் மீண்டும்  கிடைத்ததில் மீண்டும் மீண்டும் கொடுத்தேன். தன்னிடம் இருப்பதை விட பிறருக்கு கொடுத்து மகிழ்ந்ததில், பொருள் சொத்து பணம் என எதன் மீதும் அத்தனை பற்றற்று விட்டுக் கொடுத்ததில் எல்லோரின் பார்வையிலும் வள்ளலானேன்.

கொடுக்கக் கொடுக்க கிடைப்பதை உணர்ந்ததில் கொடுத்துக் கொண்டே இருந்தேன், கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது இன்றும். மனிதர் மட்டுமின்றி பிற உயிர்களுக்கும் கொடுத்தேன், பிற உயிர்களையும் நேசித்தேன். என் மீதமர்ந்த ஒரு கொசுவினை அடிக்கக் கூட யோசித்தேன். அதே நேரம் கொசு வராத சூழலை அமைக்க முயற்சித்தேன். கால் வைக்கையில் நகரும் எறும்பினை கண்டால் மாறி வேறு பாதையில் செல்ல எண்ணினேன். கடிக்கும் பாம்பு போவதை கண்டாலும் போகட்டுமென நான் தூர ஒதுங்கிக் கொண்டேன். ஒரு பூ பறிக்கவும், இலைகளை பறித்தெறியவும், ஒரு மரத்தை வெட்டவும் வருத்தப் பட்டேன். யாரையுமே வருத்தமுற வைக்காது வாழ முயற்சிக்கையில் ‘இந்த பேரண்டம் என்னை ஆரத் தழுவிக் கொண்டது. இந்த பேரண்டம் எனக்காகவே சூழ்ந்து நின்று எனை காத்தது. இன்றுவரை இந்த பேரண்டம் எனை எந்த இடத்திலுமே ஏமாற்றி விடவில்லை. இந்த பேரண்டம் எப்பொழுதும் என் நலத்திற்கென்றும் சேர்ந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதன் இயக்கத்திற்கு இங்கே கூடியிருக்கும் நீங்களும் கூட ஓர் சாட்சி” கைதட்டும் கூட்டத்தை ஒரு நொடி சுற்றி பார்க்கிறார் மாலன்.

“ஆம்; மேடையில் சப்தமெழுப்பிப் பேசினால் கைதட்டுகிறீர்கள். இறங்கி கீழே வந்து நிற்பதற்குள் முன்டியடித்து வந்து நூறு பேர் கைகொடுத்து மெச்சுகிறீர்கள். புகழாரம் சூட்டுகிறீர்கள். பத்து பேராவது விமானநிலையம் வரை வந்து வழியனுப்பி வைக்கிறீர்கள். விமானம் விட்டு இறங்கினால் மாலைபோட்டு வரவேற்பு அளிக்கிறீர்கள். எப்படி கிடைத்தது எனக்கிதலாம்???

நான் எண்ணிக் கொள்கிறேன், நான் என்றோ விட்டுக் கொடுத்தவைகள் தான் இன்றிப்படி மொத்தமாய் கிடைக்கிறதென்று. உண்மையை அறுதியிட்டுக் கூற எனக்கென்ன தயக்கம், எப்படி எல்லாம் நான் நடக்கும் என்று நம்பினேனோ அப்படி எல்லாம் நடக்கிறது. இருட்டில் கண்ட வெளிச்சம், மனிதரில் கண்ட தெய்வீகம் இன்றுமென்னை வழி நடத்துகிறது” அவர் சொல்லி நிறுத்த, அரங்கத்தில் கரகோஷம் ஒலிக்க..

“உங்களிடம் ஓர் கேள்வியை முன்  வைக்கிறேன். இப்பொழுது என்னை நீங்கள் பார்க்கிறீர்கள், உங்களை நான் பார்க்கிறேன். எத்தனை வெளிச்சம் இருக்கிறது நம் முன்னே? இருட்டின் எண்ணமே நமக்குள் இப்பொழுது இல்லை இல்லையா?”

ஆமென்று சொல்லும் அளவு அங்கு அரங்கம் முழுக்க வெளிச்சம் நிலவியது. எழுந்து நிற்பவர் நடப்பவர் என எல்லோரின் முகமும் மிக நன்றாகவே தெரிந்தது.

“இதே, நாம் விளக்கனைத்த போது எப்படி குபீர் இருட்டு சூழ்ந்திருந்தது எண்ணிப் பார்த்தீர்களா? அந்த இருட்டை உடைக்க நமக்கு பொறுமை தேவை பட்டதில்லையா? அப்படி கடவுளை உணரவும் பொறுமை தேவை. இப்போது புரிகிறதா இருட்டின் வெளிச்சம்????????!!!” எல்லோரும் ஆம் என்பது போல் கைதட்ட

“சில விடயங்களை நீங்களே சிந்தித்து பாருங்கள். நான் சொல்வதை முழுதுமாக நம்ப வேண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. என் கருத்துகள் எனக்கு சாதகமானதாக இருக்கலாம், வேறு இடத்தில் அது மாறுபடலாம். எனவே ஒரு அளவையினை இது தான் சரி எண்ணும் எண்ணத்தினை நிர்மாணித்துக் கொள்ளாது, இயல்பாக எதிலும் சிந்தித்து செயலுருங்கள்.

உங்களை சிந்திக்க தூண்டிவிடுவது மட்டுமே என் பணி. சரி, கடைசியாக ஒன்று சொல்லி முடித்துக் கொள்கிறேன், முதலில் சொன்ன கேட்ட அதே விஷயம் தான். யாரவாது இருட்டினை கண்கொட்டாமல் உற்று பார்த்திருக்கிறீர்களா?

அப்படி பார்த்தவர்களுக்கு அதிலுள்ள வெளிச்சம் நிறைவாகவே தெரியுமில்லையா. அப்படி இருட்டிற்குள் இருக்கும் வெளிச்சம் தான், அந்த வெளிச்ச்த்தை தெரிந்துக் கொள்வதில் தான் வாழ்வின் சூழ்சுமமே அடங்கியுள்ளது. எங்கு இருட்டிருக்கிறதோ அதனருகில் வெளிச்சமும் இருப்பதுபோல் எங்கு தவறிருக்கிறதோ அதன் மிக அருகில் தான் சரியென்ற அர்த்தமும் இறக்கிறது. அல்லது பிறக்கிறது. அநீதியை கையிலெடுக்கும் அதே தூர இடைவெளியில் தான் நீதியும் இருக்கிறது. எனவே, தர்மம் காக்க நினைப்பவர்கள் அதர்மத்தை வேரறுக்க வேண்டியதில்லை. வெளிச்சம் வந்தால் இருட்டு விலகுவது போல் தர்மம் செய்யுங்கள் அதர்மம் தானே விலகும்.

இருட்டும் வெளிச்சமும் அவைகளை கொண்டுள்ள இடத்தை பொறுத்தே இரு வேறாக தெரிகிறதேயொழிய இரண்டும் இயல்பில் வேருவேரில்லை. இயற்கை படி அது இரண்டும் ஒன்றே. சற்று பெரியது சிறியது அவ்வளவு தான். வெளிச்ச்ம் கூடுமிடத்தில் இருட்டு குறைகிறது, இருட்டு நிலவுமிடத்தில் வெளிச்சம் குறைகிறது, ஆனால் எங்கும் ஏதும் இல்லாமல் போவதில்லை. இந்த சாரத்தின் அடிப்படையில் தான் நம் வாழ்வின் அத்தனை நடப்புகளும் நடக்கின்றன. ஒன்றிற்கொன்று இடம் கொடுத்தே ஒன்று தவறென்றும் ஒன்று சரியென்றும் இடத்திற்குத் தக்க கணிக்கப் படுகின்றன.

எனவே, இங்கிருக்கும் அத்தனை பேரிடமும் ஒன்றினை நினைவில் கொள்ளக் கேட்கிறேன், எப்பொழுதுமே ‘நான் தான் சரி என்ற அளவுகோலினை விட, என்னால் யாருமே எந்த உயிரினமுமே இயன்றளவு நோகவேண்டாமெனும்’ ஒற்றை ஆயுதத்தை கையிலெடுத்துக் கொள்ளுங்கள். வாழ்வின் கோபம் ஆசை பகைமை வஞ்சித்தல் சுயநலமென அனைத்தையும் பிறருக்காய் விட்டுக் கொடுங்கள்.

இருட்டிற்குள் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயல்வதை விட, இருட்டிற்குள் இருக்கும் வெளிச்சத்தையாவது இருட்டிற்குள் இருப்பதாய் நினைத்துள்ளவர்களுக்கு புரிய வையுங்கள். அவர்களுக்கு உங்களால், ‘அவர்களின் வெளிச்சம் புரியவருகையில், நீங்கள் வெளிச்சத்திற்குள் நிற்பவர் என்பதை உலகம் தானே கண்டு கொள்ளும்” என்று மாலன் பேசி நிறுத்த அரங்கம் அவர் சொன்னதை எல்லாம் புரிந்துக் கொண்டதையும் அவரை போற்றும் வகையிலும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தது. அதன் பின்னும் அவரை கூட்டம் விட்டபாடில்லை. நிறைய பேர் தியானம் குறித்துக் கடவுள் குறித்தும் கேட்கிறார்கள். தன் சுய அனுபவத்தை சொல்லி கலந்தாய்வு செய்கிறார்கள்.

முடிவாக, விடைபெரும் நேரம் வந்துவிட, மாலன் எல்லோரையும் புன்முறுவலோடு பார்க்கிறார். ஒரு கண்ணெதிர் கதாநாயகனாக எல்லோருக்கும் மாலன் தெரிந்தாலும் அவரின் வசீகரம் இளமை அனைத்தையும் அவரின் ஞானமான பேச்சு மறைத்துக் கொண்டுவிட ஒரு யோகியை பார்ப்பதை போல் மாலனை பார்க்கிறார்கள் மொரிசியஸ் தீவினர்.

மாலன் எல்லோரையும் விடைபெறும் மனதாக பார்த்து “கடைசியாக ஒன்றினை சொல்லி விடைபெற எண்ணுகிறேன், ஆரம்பத்தில் சொன்னதை தான் முடிவிலும், மீண்டும் மீண்டும் சொல்கிறேன், ‘தன்னை தன் சகமனிதர்களுக்காய் விட்டுத் தருவதன்றி வேறில்லை வாழ்க்கை, வணக்கம்!” என்றவர் சொல்லிவிட்டு எழுந்துநின்று எல்லோரையும் வணங்கி விடைபெற, கூட்டம் அவரை அன்பினால் தாங்கி இதயத்திற்குள் ஏந்திக் கொள்கிறது.

தாமதமாகி விட்ட காரணத்தினால் இன்னுமொரு நாள் மொரிசியசில் தங்குவதாக முடிவு செய்கிறார்கள் மாலன் குழுவினர். இரவு மூன்றுநட்சத்திர விடுதி ஒன்றில் தங்க முடிவு செய்கிறார்கள். அந்த விடுதி நோக்கி விரைகிறது மாலனின் வாகனம். வெளியிலிருந்து வீசிய சில்லென்ற குளிர் காற்றினில் நனைய எண்ணிய மாலன் பக்கவாட்டு ஜன்னலை திறந்துவிடுகிறார். மொரசியஸ் இரவின் இருட்டில்  ஒளிவிளக்குகளின் வண்ண வெளிச்சங்களும் சேர்ந்து ரம்யமான ஒரு சூழலை காட்ட, எதையெதையோ சிந்திக்க வைக்கிறது அந்த இருட்டின் வெளிச்சம். சிந்தனையில் நிறைந்து லேசாக கண்களை மூடுகிறார் மாலன்.

அங்கே, மாலனுக்காக ஒரு கூட்டம் விடுதியின் வாசலில் காத்து நிற்கிறது. கூட்டத்திற்கு என்ன சொல்லப் போகிறோமென்ற சிந்தனையெல்லாம் இன்றி ஏதோ ஒரு நிறைவோடு உறக்கத்தில் ஆழ்கிறார் மாலன்.., வாகனம் வெகு வேகமாய் காற்றினை கிழித்துக் கொண்டு விடுதியை நோக்கி விரைகிறது..

————————————————————————————————–

மாலன் விழிப்பார்… இருட்டிற்குள்ளிருந்து இன்னும் நிறைய வெளிச்சம்  வரும்.. காற்றின் ஒசை – தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!

ன் குடிசை வீட்டு சகோதரிக்கு கூட
காட்டு கலக்காவும், எருக்கம்பூ மாலையும்
மாவிலையும், களிமண்ணும்
காசு வாங்கித் தரும் பண்டிகைக்கு –

தெருவெல்லாம்
மனக்கட்டை மீது கடவுளை செய்து சுமந்து நடக்கும்
மாணவக் கடவுள்களுக்கு –

நம்பினால்;
நான் பிடித்து வைக்கும் பிடி மண்ணில் கூட
அந்த தெய்வமே இறங்குமென,
‘என் முன்னோர் நம்பிய நம்பிக்கைக்கு

அன்னை தந்தையே என் உலகம் என சுற்றிக் காட்டி
விலங்குகளுக்குள்ளும்,
அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கும் இறைமையை உணர்த்தும்
தும்பிக்கை நாதனை கொண்டாடும் இந்த சிறப்பு விழாவிற்கு –

ஏழை பாழை வீட்டில் கூட
நல்லசோறு பொங்கும் பிள்ளையார் சதுர்த்திக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் தோழர்களே!
—————————————————————————————-
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவள் நகம் கடித்து பசியாறு!!

இன்று (10.09.2010) காலை 7.30 ~ 9.00 மணியளவில், தாயகத்தில், நன்றே நடந்துமுடிந்த திருமணத்தை முன்னிட்டு ‘சகோதரன் சுரேஷ் மாசிலாமணி, சகோதரி தேவிபாலா சுரேஷ் தம்பதியருக்கு’ இவ்வாழ்த்துக்கள் கவிதையினால் நிறைகிறது!!

———————-***————————-

வள் நகம் கடித்து பசியாறு
கதை பேசி நாட்கள் கட
காதலித்து வருடங்களை குடி
கண்ணியமாய் வாழ்ந்து முடி!

சிறு பிரிவுக்கும் வருத்தம் கொள்
பிரியாமை அற்று இரு
நெருக்கத்தில் நோன்பு கொள்
ஈர்ப்பில்; அன்பில்; விருப்பத்தில்; இனைந்து மகிழ்!

கோபம் வைத்துகொள்
தவறை மற
தண்டனை அறு
போதனையை புன்னகையில் செய்!

பூப்போல பவனி வா
புத்துணர்வில் ஆடை உடுத்து
உரிமையை புரிதலில் பாவி
விட்டுக் கொடுக்கும் அவசியமின்றி காதலி!

காத்திரு
காணாத காலத்தை சபி
கண்ணியம் காத்து கண்ணியம் பெறு
கடமையில்; வாழ்வதும் ஒன்றென்று புரி!

ரிசு தா
முத்தத்தின் ஆழத்தை பரிசாக்கு
அன்பின் வார்த்தைகள் வாரி இரை
எதிர்பார்ப்பிற்கு இடம் ஒழி!

றவினில் ஒற்றுமை வளர்
நீ நான் தவிர்
எல்லாம் ஒன்றென நினை
நாம் என்பதில் குடும்பம் நிறுவி!

லம் வாழுமளவில் வாரிசு பிறப்பி
போதுமென்று பூரித்து போ
இல்லாமைக்கு ஏங்காதே
இருப்பதில் இன்பம்கொள்;எஞ்சியதை கொடுத்து மகிழ்!

மிழில் பேசி புழங்கு
தமிழில் மட்டுமே பெயர் வை
தமிழரின் அடையாளம் விடாதிரு
தமிழனாய் பிறந்ததில்; வாழ்வதில்; பெருமிதம் கொள்!

வாழ்க்கை வளமாகும்
இன்பம் உன் இடமாகும்
நலமும் வளமும் உன் வீடு நிறையும்
செல்வங்கள் பதினாறும் உனக்கும் சொந்தமாகும்
ஊருலகம் உம்மிரண்டு பேர் சொல்லும்
நீடு வாழ காலம் தாங்கும்
உமை பெற்ற வயிறு பேருவகை கொள்ளும்
இவ்வனைத்திற்குமாய் என் வாழ்த்துக்களும், இறை அருளும் எப்பொழுதும் இருக்கும்!
———————————————————————————–
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கண்ணியப் பெருநாள்; ரமலான் திருநாள்!!

ள்ளிருக்கும் சிரிப்பை
வெளியே கொணரும் ரமலான்;
மனதிற்குள் நிறைந்துள்ள தெய்வீகத்தை
முகத்தில் காண்பிக்கும் ரமலான்!

முப்பது நாள் நோன்புதனில் – ஏழையின்
பசியினை போதிக்கும் ரமலான்;
ஐந்து வேலை தொழுகையில் – மனித
ஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலான்!

ல்லாது உண்ணாததை விடுத்து – எல்லாம்
இருந்தும் உண்ணாமையில் ‘தீரம் தரும் ரமலான்;
நினைப்பதை நடத்தும் உறுதியை – மனதில் நிறைக்கும் திடத்தை
ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் ரமலான்!

சுத்தம் சுகாதாரம் ஒழுக்கம் காத்து – அதை
சுற்றத்திற்கும் ‘வாழ்ந்து கற்பிக்கும் ரமலான்;
உடலின் புத்துணர்ச்சியை ஒவ்வொரு நாளும் கூட்டி
மருத்துவகுண சிறப்பினையும் நோன்பினில் காண்பிக்கும் ரமலான்!

றைபொருள் இறையென விடாது
உயிர்பொருள் அவனென எண்ணியதில்
‘அல்லா’ எல்லாமுமாய் நின்று அருள்பாலிக்கும் ரமலான்;
ஏற்றத் தாழ்வினை கடந்து – இறையன்பில் கூடிநின்றோருக்கு
மறையின் மகத்துவத்தை புரியவைத்திட்ட ரமலான்!

ல்லார் இல்லாததை மறந்து
இருப்போர் இயன்றதை வழங்கி
உள்ளத்தில்; உலகின், வாழ்வின் சிறப்பென இந்நாளை
கொண்டாடி மகிழும் ‘குதூகல ரமலான்;

கோடான கோடி பேரின் மகிழ்வில் பிறக்கும்
இறைதூதர் பணித்திட்ட ‘கண்ணியப் பெருநாள்; திருநாள்; ரமலான்!
——————————————————————————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்