உடம்பெல்லாம் நரைத்து சிரித்த
ரோமங்களுக்கிடையே –
வலித்துக் கொண்டன – உன்னோடில்லாத
அந்த தனித்த நாட்களெல்லாம்;
ஊரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை
தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன –
நாம் பிரிந்து தவித்த அந்த
விசும்பலின் சப்தங்களெல்லாம்;
நெருப்பில் சிவந்து தகித்த அனலாய்
எரியுதடி – உன்னோடில்லாத நாட்களின்
இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய
நம் இளமையும் துள்ளலும்;
எட்டி தூரவைத்த கால்களிங்கே ஓய்ந்து
தரையில் வீழ்கையில் – மிச்சம் மீந்ததென்ன
நீயும் நானும் சேர்ந்திடாத நாட்களின்
வெறுத்து வாழ்ந்த சலிப்பு நினைவுகள் தானே..?
ஒருவேளை –
விடுமுறையில் வந்து போனதை
ஊரார் வேண்டுமெனில் கணக்கில்
வைத்துக் கொள்வர்; கொள்ளட்டுமேடி –
நீயும் நானும் வாழ்ந்ததெல்லாம்
‘சீக்கிரம் வந்து விடுங்களென’
நீ போட்டக் கடிதத்திலும்’இம்மாதக் கடைசியில் வந்துவிடுவேனென’
நானெழுதிய கடிதப் பொய்யிலும் தானே;
இப்படி ஆசைகளை மூட்டைகட்டி
இருபது வருட வாழ்வை தொலைத்து –
வீடு திரும்பினால் –
பிள்ளைகள் பேசிக் கொண்டன
‘பொறுப்பில்லாத அப்பாவாம் நான்;
பணத்திற்காய் ஓடுகிறேனாம்;
நான் – எனக்காய் வாழ்ந்தாவது போனேனா???
இல்லையென என் பிள்ளைகளுக்கு நான்
பாடையில் போன பிறகு தான் புரியுமோ?
உன் கனவையும் என் கனவையும் சேர்த்து
நான் அங்கு தொலைத்ததால் தான்
இவர்களின் வாழ்க்கையை – இங்கு பெற்றேனென
புரிந்துக் கொள்ளும் முன் –
என் மீது – புள் பூண்டு முளைத்துப் போகுமோ???
முக்கிப் பெற்ற மூன்று பிள்ளைகளுக்குக் கூட
எனை அப்பா என்று நீ –
தொலைபேசியில் சொல்லித் தெரிந்தது தான்
நான் பெற்ற சாபமோ?
நிஜத்தில் –
காற்றும் வானமும் மட்டுமேடி
உன்னையும் – என்னையும் அறிந்திருக்கும்,
தொலைபேசியில் நீ அழைத்தப் போதெல்லாம்
நீ கேட்டுத் தர முடியாத – முத்தங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..?
தொலைபேசியில் பெருமூச்சு விட்டே
கழிந்த வருடங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..?
ஆசைப்பட்டு – ஆசைப்பட்டு
பட்டு.. பட்டு.. பட்டுப்போன
கனவுகளெத்தனை – ஒன்றாயிரண்டா..?
அத்தனையும் வாழ்ந்துத் தீர்க்க
இன்னும் ஜென்மமெத்தனை பிடிக்குமோ
பிடிக்கட்டுமேடி;
இதோ மரணக் கயிறு வந்து
கழுத்தை இருக்கும் கடைசி இறுக்கத்தின்
அழுத்தம் வரை –
உனக்காய் நானும்; எனக்காய் நீயும்
மட்டுமே வாழ்ந்தது வாழ்க்கையடி; வாழ்க்கையடி!!
—————————————————
வித்யாசாகர்

























