43, விளக்குகளை அணை; வெளிச்சம் வரும்!

வீட்டுச் சுவரை இடித்துவிட்டு
கதவுகளை மூடிக் கொள்பவர்கள்,
தெருவில் விளக்கிட்டுவிட்டு
வீட்டிற்குள் வெளிச்சம் தேடி யலைகின்றோம்;

வாசலில் கோலம்போட்டு உள்ளே
கோழி வெட்டும் வீரர்கள்,
பேங்க் லாக்கரில் பணமும் நகையும் சேர்த்துவிட்டு
தெருப்பாடகனுக்கு வெறுங் கையசைக்கும் வள்ளல்களாகின்றோம்;

பட்டுப் புடவைக் கட்டி
அசைவ பாவம்பற்றி பேசுபவர்கள்,
பட்டுப்பூச்சி வாழ்க்கையதை
விதியின் வாளால் கொல்லவே விரும்புகின்றோம்;

நெற்றிப்பொட்டில் அடிக்கும் சாபம்
பணம் கொடுத்தால் அகன்றாப் போகும்?
சற்றும் யோசனை இல்லா ஓட்டம்
இடையேக் கரண்ட்டுப் போனால் கத்துமாட்டம்;

மனிதம் வற்றிப் போன மனமே
மலைக்கப் பெரிதாய் தெரிவது இருட்டோ?
முழுக்க முழுக்க விதிகளை தகர்த்து
சுயநல அரசியல் புரிதல் தகுமோ?

போய்; வீணாய் எரியும் விளக்கினை யணைத்து
இருண்டவீட்டில் வெளிச்சமூட்டு, அல்லது
வெட்டும் மின்களம் செய்து செய்து
முண்டத்தின் தலையில் விளக்கை ஏற்று;

அணுவை உடைத்து உயிரை குடிக்கும்
விளையாட்டொன்றில் விளக்கைப் பூட்டி,
எறியும் வெளிச்சத்தில் எம் எதிர்வரும் நாளில்
பிறக்கும் தலைமுறைக்கு ஆபத்தைக் கூட்டு;

மின்வெட்டு செய்யுமிடம்
வெள்ளைச் சட்டையின் கல்லாப்பெட்டி,
அதை உடைக்கும் அரசியல் படித்துமுடித்தால்
முடிவுக்கு ஆகும் மின்களப் போட்டி;

செய்யவேண்டியதை விட்டுவிட்டு நீ
பகலெல்லாம் லைட்டுப் போடு
யாருமில்லா அறையில் கூட ஃபேன் ஓட ஏசி போடு
பிரிட்ஜ் திறந்து மூடாமல் மூணாம் வீட்டு கதையைப் பேசு

மேடைகளில் யாரோ பேச
வீடுநெடுக வாசலில் டியூப் லைட்டு கட்டு
வேணும்னா குடிசைகளின் கரண்ட்டை நிறுத்தி
கோடிகளுக்கு லைன மாத்து

நடிகருக்கு கட்டவுட்டில் கலர் கலரா பல்ப் மாட்டி
அரசியல்வாதிக்கு டாய்லட் வரை நிற்காத ஏ.சி. யூட்டி
மேடைகளில் மின்னும் பல சீரியல் செட்டுப் போட்டு
கடைகளை, கடவுளை விளம்பரப்படுத்த –

போட்டிபோட்டு மின்செலவு கூட்டு
பகலில் கூட இனி இருண்டு போகும்
இரவில் கூட வியர்த்துக் கொட்டும்
அதை வழித்து வழித்து நெற்றியெல்லாம் கோமாளின்னு எழுதி ஒட்டு!
——————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to 43, விளக்குகளை அணை; வெளிச்சம் வரும்!

  1. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    // மேடைகளில் யாரோ பேச
    வீடுநெடுக வாசலில் டியூப் லைட்டு கட்டு
    வேணும்னா குடிசைகளின் கரண்ட்டை நிறுத்தி
    கோடிகளுக்கு லைன மாத்து //

    எல்லாம் சரிதான் நண்பரே… நம்மால் இப்படி புலம்ம்ம்ம்ம்ம்ப மட்டும்தானே
    முடிகிறது?
    நல்ல கவிதை.

    அன்புடன்

    பவள சங்கரி.
    ——————————————————————————-
    அன்பு வணக்கம் சகோதரி. எல்லோரும் சேர்ந்து புலம்பட்டும். பிறகு அதிலிருந்து ஒருத்தருக்கேனும் சொரணை வராமலாப் போகும். ஒருத்தர் மாறி நடந்தால் பின்னே நிறைய பேர் நடக்க வாய்ப்புள்ளது. மாறுதல்கள் அதிவேகமாக நிகழ்வதில்லை. மெல்ல மெல்லவேனும் இப்படி புலம்பியேனும் மாறுதல்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஏற்படுத்துவோம் எனும் நம்பிக்கை உண்டு. நன்றி தங்களின் கருத்திற்கு!

    வித்யாசாகர்

    நன்றி: தமிழ்த்தென்றல்

    Like

  2. மணிக்கன்னையன்'s avatar மணிக்கன்னையன் சொல்கிறார்:

    மின் தடையைப் பற்றி தங்குதடையின்றி எடுத்துரைத்த தோழமைக்கு நன்றி, தொடர்க தங்கள் சேவை

    Like

பின்னூட்டமொன்றை இடுக