அப்பா யெனும் வனம்..

மிதிவண்டியில்
அரை பெடல் அடித்த
நாட்களவை..

எங்களின் கனவுகளையும்
வாழ்வின் ரசனைகளையும்
அப்பாவின் கண்களின் வழியே கண்ட நாட்களது;

மதில்சுவற்றில் எட்டி செம்பருத்தியையும்
கறிவேப்பிலையையும் தின்றுவிட்டு
தெருநடுவில் சாணம்போட்டுப் போகும் மாடுகளை
மந்தையாக விரட்டிவிடும் அப்பா தான்
எங்களுக்கெல்லாம் மருது பாண்டியும்
மதுரை வீரனும்;

அப்பாவோடு இருந்த நாட்கள்
உண்மையிலேயே நந்தவன நாட்கள்,
அவர் பூப்பது பற்றி பேசினால்
கேட்கையில் நாசிக்குள் மணக்கும்,
அவர் பார்ப்பது பற்றி பேசினால்
நினைக்கையில் நெஞ்சுக்குள் இனிக்கும்
அப்பாவிற்கு மட்டுமே தெரிந்த மந்திரமது;

அதெப்படியோ தெரியவில்லை
கையெழுத்து போடத் தெரியாதவர் தான் என்றாலும்
எங்களின் தலையெழுத்தை
தெரிந்துவைத்திருந்தவர் அப்பா மட்டுந் தான்
அப்பாவொரு அறிவினுடைய வனம்
அன்பின் ஆழ்கடல்
அப்பா மட்டும் யாருக்கும் இறக்கவே கூடாது;

அந்த மீசை மாதிரி அழகு
அவர் தொப்பை போல விளையாட்டு
அவர் தோள்மேல தூக்கம்
அவர் கூட அமர்ந்து சாப்பாடு
அவர் நடக்கும் போது வீரம்
எங்களுக்கு ஒண்ணுன்னா துடிக்கும் துடிப்பு
அப்பப்பா.., அப்பாக்கள் எப்போதுமே
அப்பாக்கள் தான்;

அப்பாவிற்கு மட்டுந்தான்
நினைத்ததும் ஆயிரம் சிறகுகள் முளைக்கிறது,
அப்பாக்களால் மட்டுமே
ஆண்கள் எனும் தணல் உள்ளத்தே
நீர் வார்த்ததைப் போல் அணைகிறது,
பொதுவாகப் பெண்களுக்கு
அப்பா தான் முதல் தாய்,
ஆண்களுக்கு அப்பா தான் முதல் தோழன்;

சாமியைப் போல் அவர்
கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும்
மதித்தாலும் மதிக்கவிட்டாலும்
கேட்டாலும் கேட்கவிட்டாலும்
திட்டினாலும் கோபித்துக்கொண்டாலும்
நம்மை குழந்தைகளாக மட்டுமே
பார்க்கும் அப்பாக்கள் அப்பாக்கள் தான்,
அப்பாக்கள் மாறுவதேயில்லை
எனக்கும் அவளுக்கும்
எனக்கும் அவனுக்கும்
அப்பாக்கள் ஒரு மாதிரி தான்;

வாழ்க்கை தான் கணப்பொழுதில்
மாறிவிடுகிறது,
திடீரென மறையும் நட்சத்திரத்தைப்போல
அப்பாக்களும் மறைந்துவிடுகிறார்கள்,
மனது மட்டுமென்னவோ
அப்பாக்களுக்கு மகனாகவும்
அப்பாக்களுக்கு மகளாகவுமே
தன்னை எண்ணிக்கொண்டு உயிரோடு நகர்கிறது..
—————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக