உடைந்த கடவுள் – 27

கோவிலின் வெளி வாசலில்
வரிசையாய்
அமர்ந்திருக்கிறார்கள்

ஒவ்வொருவர் தட்டிலும்
சோம்பேறித்தனமும்
அதை மறைக்கும் கதைகளும்
நிரம்பிக் கிடந்தன;

வாழ்க்கையை தொலைத்தவர்களும்
தொலைப்பவர்களும்
ஒரு வேலை சோற்றிற்காய்
கை ஏந்தி அமர்ந்திருந்தார்கள்.

நன்றி மறந்த மானுடத்தால்
அவதியுறும் மனித தெய்வங்கள்
அப்பா அம்மா எனும் அன்பை
நினைவிலிருந்தே அகற்றி விட்டு
அரைகாசு கால் காசிற்குமாய்
வயோதிகம் கடந்து காத்திருந்தது;

போன பத்துபேரில்
ஒருவர் புதிது போல் கோவிலுக்கு
தர்மம் செய்வதாக எண்ணி
திரும்பி வந்து
ஒரு நாணயத்தை எடுத்து
கண்ணில் பட்ட ஒரு தட்டை பார்த்து எறிந்தார்,

தட்டில் விழுந்த
காசின் சப்தம்
எத்தனை பணம் என்பதை சொல்லவில்லை
அந்த சப்தம்;

சில்லறை என்பது மட்டும்
புரிந்தது அந்த
வரிசையில் அமர்ந்திருந்த ஒரு
குருட்டு அம்மா கிழவிக்கு!
—————————————————————————-

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 26

கோவிலில்
நிறைய உண்டியல்கள்
இருந்தது;

எதிலும் பணத்தை போட
விழையவில்லை நான்,

வெளியே வருகையில்
கிழிந்த கால்சட்டையும்
என்னை ஒழுகிய தலையுமான ஒரு
சிறுவனை அவசரமாக
பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போனார்
அவரின் தாய்.

அவரை அழைத்து
இதில் இவ்வளவு பணம் உள்ளது
குழந்தைக்கு நல்ல கால்சட்டை
எடுத்துக் கொள்ளுங்கள் என்று
கொடுத்தேன்;

கோவிலில் மணி அடிக்கும்
சப்தம் –
காதில் நிறைவாக கேட்டது!
———————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

2) GTV – மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சியில்; நம் கவிதை!

அன்புடன் வித்யாசாகருக்கு….

எனது நிகழ்ச்சியில் இடம்பெற்ற உங்கள் கவிதைகளில் ஒன்று…… கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும்.
நன்றி.

என்றென்றும் வாழ்த்துக்களுடன்
றேனுகா
—————————————————————————–

எதை எண்ணி நான் எழுதினேனோ; எனினும் எனக்குள் வெற்றியின் உறுதியை தரும் தருணமாக உங்களின் இப்பேருதவிக்கு நன்றியறிவிக்கிறேன் றேனுகா.

என் மகிழ்ச்சியின் காரணம், என் படைப்பு சென்றடைந்ததை விட, இச்சிந்தனை உலக தமிழரளவில் ஒருசிலரின் சிந்தனையிலேனும் இருத்தப் பட்டிருக்கும் என்பதேயன்றி வேறில்லை!

வித்யாசாகர்

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அன்பு நிறைந்த குவைத் வாழ் தமிழர்களுக்கு!!

அன்பு வணக்கம்.. உறவுகளே..,

குவைத் ‘முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றமும்‘ மற்றும் ‘உதவும் கைகள்‘ அமைப்பும் இணைந்து நடத்தும் ரத்த தான முகாமிற்கு மனதார்ந்த நன்றியை தெரிவித்து, தங்களையும் கலந்துதவி சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன்.

நாம் கொடுக்கும் ரத்தம் ஒரு மணி நேரத்தில் மீண்டும் நம் உடம்பில் ஊறிப் போகும் ஆற்றலை பெற்றுள்ளவர்கள் தான் நாமெல்லோரும். பிறகு அந்த ரத்தம் வேறொரு உயிர் காக்கும் உதவியை செய்யுமெனில்; அதில் நம் ஒரு சொட்டு ரத்தமேனும் இருக்கட்டுமே.

குறைந்தது ஆறு மாதம் வரை வேறெங்கும் ரத்தம் கொடுத்திடாதவர்கள், தனக்கு தெரிந்து ‘பிறரை பாதிக்கும் எந்த ஒரு வியாதியும் இல்லாதவர்கள் மேலும் பலவீனமோ அதிக வயதில் முதிர்ச்சியோ அற்றவர்கள் கலந்துக் கொள்ளளாம், பிறரை வாழ வைக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு அழைப்பிதழ் இணைக்கப் பட்டுள்ளது. நேரம்: காலை எட்டு மணியளவிலிருந்து மதியம் ஒரு மணிவரை இருந்தாலும், உடல் சுகாதார சோதனை செய்ய வேண்டியிருப்பதால் மதியம் 12 மணிக்குள் வர கேட்டுக் கொள்ளப் படுகிறது. மேலும், அழைப்பிதழில், அவசர நோக்கில் ஏற்பட்ட சில தட்டச்சுப் பிழைக்கும் மன்னிப்பு கோருகிறோம்.

வாகன வசதிகள் செய்யப் பட்டுள்ளது. பாஹீல், மங்காப், பர்வானியா, அப்பாசியா போன்ற இடங்களில் வசிப்பவர்கள் மேற்குறிய தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளளாம்.

மிக்க அன்போடும்.. பெருத்த நன்றிகளுடனும்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

25 சில அப்பாக்கள் உறங்குவதில்லை..

ரு ஜாமின்ரி பாக்சும்
பத்து நோட்டும்
ஆறு புத்தகமும்
ஒரு அரிச்சுவடியும்
வாய்ப்பாடும் வாங்கித் தந்தார்
என் அப்பா.

நான் படித்து
பட்டதாரியாகி
ஒரு அரசு வேலையில் கூட
சேர்ந்துவிட்டேன்;

என் பிள்ளைக்கு
கணினியும்
போக்குவரத்து கட்டணமும்
மாதமொருமுறை ரொக்க பணமும்
போகவர செலவுக்கும்
புதிது புதியதாய் ஆடைகளும்
வயதுக்கு காதலும் கொடுத்து
படிக்க வைக்கையில் –

அவன் படிப்பு
என் வருமானத்தை பார்த்து
சிரிக்கத்தான் செய்கிறது;

அவன் படித்து முடிக்கும் வரை
எங்கு என் வேலை இருக்குமோ? பறிபோகுமோ?
என்ற என் கவலை வேறு,

காசுகொடுத்து வர
சேர் ஆட்டோ கூட சுமையாக தெரிய
நடந்தே தேய்ந்த என் கால்களின்
வலி என் மனைவிக்கு கூட தெரியாது,

அலுவலில் சட்டை பிடிக்காமல்
சண்டையிடும்
அதிகாரிகளின் பயம்
வீட்டின் நான்கு சுவர்களாகவே
எனை சுற்றி நின்றும்
சிரிப்பது போல காட்டிக் கொள்வது
ஒரு கனமான வேதனை,

இரவு கூட எத்தனை
நரகத் தனமானது,

நாளை
என்ன எல்லாம் காத்திருக்குமோ
எப்பொழுது உறக்கம் வருமோ
கடனெல்லாம் அடைத்துவிடுவேனா
எல்லாம் கரைசேருமா… என நிறைய பாரம் – உள்ளே
யாருக்குமே தெரியாமல்
மிரட்டத் தான் செய்கிறது,

முன்பெல்லாம்
வயதில் பெரியவர்கள் இறந்தால்
இதயம் வேகவே இல்லை ‘என்னெல்லாம்
வைத்திருந்தாரோ’ என்பார்கள்;
என்னவெல்லாம் வைத்திருந்திருப்பார் அவர்?
எனக்குப் புரிந்தது – அவரின் வேகாத மனதின்
பாரம்;

அதலாம் மறந்து
ஏதோ ஒரு நம்பிக்கை என் பிள்ளைக்காகவும்
மிச்சமிருக்கத் தான் செய்தது;

அவன் அதைபற்றியெல்லாம்
கவலை பட்டிருக்கவேயில்லை,
காதலியை பார்க்க காத்திருக்கும்
காத்திருப்பை மட்டும்
எனக்கு தெரியாமல் நாட்குறிப்பில்
எழுதிக் கொண்டிருந்தான்;

தூர நிற்கும் நான்
அவன் கண்ணிற்கு கூட
தெரியவில்லை தான் !!!
—————————————————————–

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்