எனையும் அம்மா அம்மா
என்று தான் அழைப்பாய்,
பார்ப்பவர்கள் –
எங்கனா அப்பான்னு வருதாப்
பாரென்பார்கள்;
நானும் –
உனக்கு அம்மாப் போலென்று
நான் – அதை கூட ரசிப்பேன்!
எனையும் அம்மா அம்மா
என்று தான் அழைப்பாய்,
பார்ப்பவர்கள் –
எங்கனா அப்பான்னு வருதாப்
பாரென்பார்கள்;
நானும் –
உனக்கு அம்மாப் போலென்று
நான் – அதை கூட ரசிப்பேன்!
உன் சின்ன சின்ன
பற்களும் –
அலைந்து ஆடும்
கண்களும் –
எச்சில் ஒழுகும்
சிரிப்பும்-
எனக்கு முத்தமிட்டு கைதட்டி சிரிக்கும்
உன் ஜாலமும் –
இத்தனை அழகென்று
உனக்கு எப்படி பதிந்து வைப்பேன்!!
என் துணிகளெல்லாம்
பழசானால் –
கரிகந்தை என்பதில்
யாருக்குமே சந்தேகம் இராது;
ஆனால் –
உன் துணிகள் உனக்கு
சிறுத்து விட்டாலும்
அதை கையில் தூக்கி நிறுத்திப் பார்த்தால்
என்றைக்குமே நீ அதில் –
தெரிவாயடா!!
நீ பிறந்த தேதி
உனக்கு பெயர் வைத்து
உன்னை முதன் முதலாய்
அழைத்த நாள்,
நீ முழுச் சட்டை போட்டது
காலூன்றி நடந்தது
சப்தம் எழுப்பி பார்த்தது
அம்மா என்று அழைத்தது
அப்பா என்று அழைத்த குரல்
உயிர் வரை உள்சென்றது –
இன்னும் எத்தனை எத்தனை எத்தனை???
அத்தனையும் –
உனக்கான இடத்தில் பத்திரமாக
வைக்கப் பட்டுள்ளது என்பதை –
உனக்கொரு பிள்ளை பிறந்தால் அன்றி
உனக்குத் முழுதாய் தெரிய வாய்ப்பில்லை!
முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல – ஈழம்!
காற்றின் அசைவுகளில்
ஏக்கமாகப் படிந்த கறையது
ஈழ விடுதலை;
ஈழவரலாற்றில்
ரத்தத்தால் தொய்ந்த பகுதி
முள்ளிவாய்க்கால்!
அழகிய ஆனந்தபுரத்தை
சுடுகாடாக்கி –
சமாதியின்றி பல போராளிகளை
செய்திக்கு – மரணப் படையலிட்ட பெருந் துயரம்
முள்ளிவாய்க்கால்!
சதைகிழிந்து
உறுப்புகள் சிதறி
உடல் துண்டிக்கப் பட்டு
அரை உயிரில் மிச்சப் பட்ட இனத்தையும்
ஈ மொய்த்து நோய் தின்ற கொடுமை
முல்லிவைக்கால் கொடுமை;
போர் கடந்து
போர் முறை கடந்து
கர்ப்ப வயிறு கிழித்து
முதியோர் கால்கள் நறுக்கி
அப்பாவிப் மக்களையும்
போராளிகளையும்
எம் தலைவர்களையும்
சிங்களனின் கோழைத் தனத்தால்
சதியில் வீசிய நச்சுக் குண்டினால்
கொன்று குவிக்கப் பட்ட வன்முறை கொடுமை
வேறெங்கு நடந்திருக்குமோ தொழர்களே;
கூடின்றி – பறந்து பறந்தே
கால்கள் ஒடிந்தும் –
இறக்கம் சுரக்கா இதயமென்ன
இரும்பாலானதோ சிங்களனுக்கு?
தமிழனுக்கு தனிநாடு கிடைப்பதில்
என்ன தகராறோ பிறத்தானுக்கு??
தட்டிப் பறிக்க துணிந்த போது
தீவிரவாதி பச்சை குத்திய
நீதிபதிகளுக்கு –
என் சகோதரிகளின் கற்பு
காற்றில் பறந்தாலென்ன;
கடையில் விற்றாலென்ன ‘என்றானதோ??
பார்வை முழுக்க மரணத்தையும்
நினைவு முழுக்க துரோகத்தையும்
வாழ்க்கை முழுக்க –
இரண்டாம் பட்ச இனமாய் வாழும் வலியையும் கொண்ட
எம் – தமிழன் என்றாலே தீண்ட தாகாதென்று
த்தீக் – கங்கெனக் கனன்ற சிங்களருக்கு
துணை போன தேசங்கள் எம் தமிழரிடம்
என்ன பகை கொண்டதோ???
லட்சாதி லட்ச உயிர்களை ஒருவன்
கொன்று குவிக்கையில் – எதிர்த்து
நிறுத்த இயலா உலக நாடுகளுக்கிடையே –
‘உயிர்பிச்சை கேட்டு சமாதனம் செய்ய வந்தவனை’
வலுவேத்தி ஆயுத உதவி புரிந்த
தோழமை தேசம் எந்தெந்த தேசமோ; தெரியவில்லை;
கரை உடைந்தோடிய
ரத்தக் காட்டாறும்,
எரிந்து சாம்பலான
உடல் புகுந்த நெருப்பின் வீச்சும்
தனை சுட்டிடாத – மமதையில்
நீதியுரைத்த மானுடமே……
மனிதமற்றுப் போனாயோ நீ????
போகட்டும் –
கண்ணீரில் மையெடுத்து –
வெறும் கவிதையெழுதும் தருனமில்லையிது தோழர்களே..
இரத்தத்தில் உணர்வூட்டி
முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்றடிக்கும்
பறையிது உடன் பிறப்பே;
குட்ட குட்ட குனிபவனல்ல
தமிழன் –
தருணம் காத்து உயரத்தில்
எட்டிப் பறக்க இருக்கும் வீர ஜாதி –
எம் ஈழ ஜாதி!
கை கோர்தத் தேசமெல்லாம்……………
(எமை வேரறுக்க) கைகோர்த்த தேசமெலாம் –
என்ன சதி தீட்டுமோ தீட்டட்டும்
அதையெல்லாம் உடைத்தெறிந்து – ஈழம்
வெற்றிமுரசு கொட்டும் நாள் –
வெகு தொலைவிலில்லை தோழர்களே!
ஈழமென்ன வெறுங் கனவா?????
ஈழமென்ன வெறுங் வெற்றுக் கனவா –
நாலு நச்சு குண்டில் – மாயும் சமாதியடைய?????
ஈழம் எம் விடிவு;
ஈழம் எம் வேட்கை;
ஈழம் எம் மூச்சு;
ஈழம் எம் விடுதலை;
ஈழம் எம் தேசம்;
எம் இரத்தம் சொறிந்த மண்ணின் தாகம் – ஈழம்!
முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல தோழர்களே!
————————————————————————————————
வித்யாசாகர்