1
மரம் விரிச்சோடிக் கிடந்தது
காற்றேயில்லை
கயிறு கட்டிலை நம் தாத்தாவோடு நாம்
எரித்திருத்தோம்!
—————————————————————————–
2
மரம் வெட்டி மரம் வெட்டி
மரவெட்டியானான் மனிதன்;
மனிதத்தையும் மரத்தோடு வெட்டியிருந்தான்!!
—————————————————————————–
3
மின்னல் விழுந்து
பனைமரம் எரிந்துபோன கதையெல்லாம்
இப்போது நடப்பதில்லை;
பனைமரம் வெட்டப்பட்டபோதே
மின்னலையும் நிறைய வெட்டிவிட்டோம் நாம்!
—————————————————————————–
4
ஒரு மரம் வெட்டினேன்
காக்கை குருவிகள் வீடிழந்து அலைந்தன,
இன்னும் பல மரம் தேவைப்பட்டது
எனக்கான ஒரு வீடுகட்ட..
—————————————————————————–
5
மழை வரவில்லை அழுதோம்
மழை வந்தது அழுதோம்
மழை;
அழுகைக்கும் பாடுபொருள்!!
—————————————————————————–
6
மழைக்குத் தெரியாது
வந்து வந்து போகும்போது
எத்தனைப் பேர் இருக்கிறோம்;
எத்தனைப்பேர் இல்லையென்று..
—————————————————————————–
7
புயல் வீசி மரங்கள் சாய்ந்து
பல உயிர்கள் அழிந்து
மனிதர் செத்தது மட்டுமே செய்தியில் சொல்லப்பட்டது;
மற்ற உயிர்களுக்கு
கையிருந்தும்
காலிருந்தும்
பசியிருந்தும்
வலியிருந்தும்
வாழ்க்கையிருந்தும்
மனிதனுக்கு பெரிய பொருட்டாக அது தெரியவில்லை
மனிதன் தனக்கான கொலையைத் துவங்கிய இடம்
இப்படி தன்னைமட்டும் பெரிதாகக் காத்த இடமாகயிருக்கலாம்
அல்லது பிற உயிர்களையொரு –
பொருட்டாகக் கூட எண்ணாதக் குற்றமாயிருக்கலாம்..
—————————————————————————–
8
மழை பெய்ததான நினைவு
மண்வெட்டியெடுத்து தரையில் கொத்தினேன்
பாறையென இறுகிய மண்
இன்றையச் சோற்றில் விழ –
குழந்தைகளின் வயிற்றில் கைவைத்துக் கொண்டு
இரவின் இருட்டிற்குள் விழுந்தோம்,
ஒருவேளை மழை நாளைக்கும் வராதுயெனில்
மண்வெட்டிகள் நாளை நிறைய அவசியப்படலாம்
கொண்டுவாருங்கள்..
மழை பின்
மற்றவர்களுக்கேனும் பெய்யட்டும்!!
—————————————————————————–
9
மரத்தை வெட்டி
வீட்டைக் கட்டினோம்
அந்த வீட்டில் பிறந்த குழந்தைக்குத் தெரியாது
அந்த வீடு
மரத்தின் இடமென்று!!
—————————————————————————–
10
நட்சத்திரங்கள் நிறைய இருந்தன
அதில் ஒன்று அம்மாவாகவும்
இன்னொன்று அப்பாவாகவும் தெரிந்தது
நான் தனியாக நின்றிருந்தேன்!!
—————————————————————————–
11
இந்த கடலுக்குத் தெரியும்
நான் பைத்தியம் இல்லையென்று
என் சேலையினை
இந்த கடலின் அலைதான் கிழித்துப்போட்டது!!
—————————————————————————–
12
ஏ கடலே உனக்கு வேண்டுமென்றால்
ஒரு பத்து ரூபாய் தரேன்
என் குழந்தையைக் கொடேன்..
இல்லையேல் இந்தா என் ரவிக்கையை தரேன்
நீ போயி…
—————————————————————————–
13
இடி இடிக்கும்
படுக்கையை சுருட்டிக்கொண்டு
வீட்டினுள் ஓடுவோம்,
இப்போதும் இடி இடிக்கிறது
படத்தில் பார்க்கும்போதே
காதைமூடிக் கொள்கிறோம்..
—————————————————————————–
14
பூகம்பத்தின் போது
என் வீடும் உள்ளே போனது,
என் வீட்டின் கனவுகள்
அந்த பூகம்பத்தைச் சபித்திருக்கும்!!
—————————————————————————–
15
மழை வந்துபோனது
கொசு நிறைய ஆனது
காய்ச்சலும் வந்துபோனது;
வட்டி கட்டவேண்டியது மட்டும்
தீரவில்லை இன்னும்..
—————————————————————————–

16
மழைவந்து மழைவந்து
காய்கிறது
ஏழையின் வயிறு;
ஏழையின் வயிற்றிலேறி
மிதித்துச் செல்கின்றன; சில
பணக்கார மிருகங்கள்..
—————————————————————————–
17
மரத்தை வெட்டும்போதேல்லாம்
கீழே சாய்கிறது
மனிதம்;
மனிதன் மரத்தோடுச் சேர்த்து
மறைமுகமாய் தன்னையும் எரிக்கிறான்..
—————————————————————————–
18
இடி இடிக்கிறது
பனைமரங்கள் கருகுவதில்லை
இடியை மரத்தோடு வெட்டியிருந்தோம்;
இயற்கை மரத்தின்வழி முடியத் துவங்கியது!!
—————————————————————————–
19
பூகம்பத்தில் அறுந்தது
சில தொப்புள் கொடியும்
சில தாலிகளும்..
பூகம்பம் மீண்டும் வரும்
தாலிகளும் அறும்
உபயம்; நீயும் நானும்..
—————————————————————————–
20
பூ பூத்தது
உதிர்ந்தது
அது வாழ்ந்ததன் குறிப்பு நம்மிடமில்லை;
நம்மைநினைத்து தலைகுனிந்துக் கொள்கின்றன
மலர்கள்..
—————————————————————————–
21
குளிருக்கு கோணியைப் போர்த்தி
மூடிக்கொண்ட சிறுவனால்
மழையை மூடமுடியவில்லை;
மழை; ஓட்டையின் வழியே
மரணமாகவும் சொட்டியது..
—————————————————————————–
22
வெய்யிலில்
விறகு வெட்டினோம்,
மழையில் நனைகிறது அடுப்பும்
அடிவயிற்றுப் பசியும்
மனிதனின் சுயனலத்தனமும்..
—————————————————————————–
23
ஏசி கழிப்பிடத்தில் சூடில்லை
சல்லி உடைக்குமிடத்தில்
வெற்றுடம்பைச் சுட்டது சூரியன்;
ஏற்றத்தாழ்வுகளை எப்படிக் களைவது ?
ஏசியை கழிப்பறையிலேனும் நிறுத்திக் கொள்
அல்லது
வெற்றுடம்பை மனிதத்தால் மூடு!
—————————————————————————–
24
உள்ளங்கையைக் குவித்து
மழைநீர் சேமிக்கிறது குழந்தை
காய்ச்சல் வருமென்று
கன்னத்தில் அரைகிறாள் அம்மா;
ஐயோ பாவமென்று
மழையை நிறுத்திக் கொள்கிறார் கடவுள்;
இன்னொரு கன்னத்தையும் காட்டி
அடித்தால் பரவாயில்லை – ஆனால்
மழை கண்டிப்பாக வேண்டுமென்கிறது குழந்தை..
பயந்துப்போனார் கடவுள்; கண்ணீர்
மழையாகக் கொட்ட
மீண்டும் கைநீட்டியது குழந்தை மழையில்!
—————————————————————————–
25
பிணங்கள் என்று சொல்லி
ஒன்றாகச் சேர்த்தே தூக்கிவந்தனர்
புயலில் சிக்கி இறந்தப்பின்
கோமணம் கட்டியிருந்தவனையும் கோட்டுசூட்டு போட்டவனையும்..
ஆனால் அதற்குமுன்னரே அவர்கள்
தங்களைத் துண்டுபோட்டுக்கொள்ள
கத்தியை –
ஜாதியிலும் மதத்திலும் இனத்திலும்
ஏன் பணத்தில் கூட செய்துவிட்டிருந்தனர்..
—————————————————————————–
வித்யாசாகர்

























