39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்..

து ஒரு சொட்டு சொட்டான மரணம்
வட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்டுவதும்
மகிழுந்து வாங்குவதும் அப்படித்தான் – அது ஒரு
சொட்டு சொட்டான மரணம்;

அதிலும் போறாத காலம்
வாங்கிய வண்டி பழுதுபட்டு வீழுமெனில்
பணம் கட்டி மீட்பதைக் காட்டிலும்
உயிர் விட்டொழிதல் கூடுதல் சுலபம்;

வேறென்ன –
வாழ்க்கையில் முதல் முதாலாய்
வாங்கிய மகிழுந்தில் அதிகம் போன இடம்
பணிமனையென்றால் வலிக்காதா?

ஒரு மிதிவண்டியில்
மணி மாற்றும் கதையல்ல அது; மகிழுந்தில்
ஒரு பொருள் மாற்றுவது,
ஓடும் இதயம் நின்று ‘ஐயோ என துடித்துவிடும் வலியது’ என்று
மகிழுந்திற்கோ –
பணிமனைகளுக்கோ எக்காலும் புரிவதில்லை;

அறுத்து அறுத்து சதையை
பிய்த்துக் கொடுப்பதுபோல்
பணத்தைப் பிடுங்கி பிடுங்கி
அழ வைக்கிறது ‘கடனில் வாங்கிய பழைய வண்டியும்
கட்டி  கட்டி ஓய்ந்திடாத வட்டியும்;

உறங்கி விழிக்கையில்
ஒரு பயம் வண்டியைக் குறித்தும் வந்துவிடுவது
நடந்து ஏறி –
பல மலைகளைக் கடப்பதைக் காட்டிலும் வலிது;

திடீரென ஏதோ போய்விட்டது
இத்தனை ஆயிரம் செலவாகுமென்று சொல்லி சொல்லி
ஐந்து பத்து கணக்குப்போல பிடுங்கி
ரத்தம் குடிக்கும்
பணிமனை குறித்த பயத்தில்
திகிலாக அடிக்கடி கனவு கூட வருவதுண்டு

யாரை நம்புவது
நம்ப மறுப்பது என்றே
புரியாதளவு மனிதர்களை – இந்த பணிமனைகளும்
அடையாள படுத்துகின்றன என்பது
தற்காலிகமாக கண்டுநோகும் வலியிலொன்று;

அண்ணாயெனும் வார்த்தைக் கூட அவர்களுக்கு
அடுத்த பணம் சுரண்டலுக்கான ஆயுதமென்றுப் புரியவே
ஒரு மகிழுந்து வீணாகி
இரு மடங்கு செலவாகி – பின்
அரைவிலைக்கு அதை விற்கப் படுதல் கொடுமையில்லையா?

அப்படி எதற்கு இயலாதவனுக்கு
எவரெஸ்டில் ஏறி –
தேனீர் பருக ஆசை? என்று ஒரு கேள்வி
பார்ப்போருக்கு வருவதுண்டு,

இது ஒரு ஆசை அல்ல, கனவு
முட்டி மோதி கட்டும் வீட்டைப் போல
இருபது வருடம் நடந்து நடந்து தேய்ந்த கால்களுக்கு
ஒரு நாளேனும் அமர்ந்துபோகும் ஆயுள் கனவு;

பெரிய மனிதரென்று எண்ணி நம்மைப்
பார்பவர்களுக்கு தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ள
ஆசைப்பட்ட அற்ப அறிவின் விளைவு;

வாடகைக் காருக்கு பணம் தந்து தந்தே
பாதி சம்பளம் போனதாய் எண்ணி வருந்தியதில்
தனைமீறி வந்துவிட்ட சோர்வு;

எங்கு  மகிழுந்து இல்லையேல்
வேலையில்லை என்று திருப்பி விடுவார்களோ என
பாலைவன வாசலில் நின்று பயந்த மனதிற்கு
‘வாங்கித் தான் பார்ப்போமே’ என்று கொண்டிட்ட
அசாத்திய துணிச்சலின் கனவு அது;

அதற்காக,
கனவெனில் என்ன; பணத்திற்கு உடனே கால் முளைத்துவிடுமா
சக்கரம் உருள உருள தேயும் கால்போல
வட்டி கட்ட கட்ட உயிர் சொட்டிப் போகாதா?

என்ன சொட்டும்?
என்ன சொட்டும்?
வட்டி கட்டி வண்டி வாங்கியது
எத்தனை மடத்தனம்?

ஆம்; மடத்தனம் தான்
மடத்தனம் தானென்று ஒரு ஐந்து மாதத்திற்கு முன்பு
தெரிந்திருக்குமேயானால்
இந்த வட்டிக்கு வாங்கிய பணத்தில்
இந்த வெளிநாட்டு வாழ்க்கையின் ஒரு வருட வதை
கொஞ்சம்  குறைந்திருக்கலாம்;

என்றாலும், அதெல்லாம் அன்று
வாங்கியப் போது புரியவில்லையே
ஏறி அமர்ந்து கண்ணாடி மூடி
குளிர்காற்று முகத்தில் அடிக்க
பாட்டு கேட்ட சந்தோசத்தின் விலை இன்னதென்று அன்று
எண்ணத் தோன்றவில்லையே;

இன்று மட்டுமென்ன
இன்று என்னதான் புரிந்தாலும் கூட
இன்றும் இதை விற்றுத்தொலைக்க முடியவில்லையே,
மகிழுந்தை ஒரு ஓரம் நிறுத்திவிட்டு –
இருக்கையில் சாய்ந்து யோசிக்கிறேன்,
நீந்திக் கடந்துவந்து நடுக்கடலில் நிற்பவரின் பிரம்மிப்பில்
பெருமூச்சொன்றைவிட்டுத் தீர்த்து மீண்டும் புறப்பட எண்ணுகையில் –

இலவசமாகக் கேட்கிறது அந்த இன்னொரு சப்தம்
சப்தத்தோடு ஆடியது வண்டி
யாரோ தூக்கி குலுக்கியது போல குலுங்கியது
இழுத்து இழுத்து ஓடி நின்று ஓடி
இதோ படாரென ஒரு உதை உதைத்து விட்டதுபோல்
காற்றில் சட்டென அணைந்த விளக்குபோல்
வண்டியும் நின்றுபோனது;

இறங்கி ஒரு ஓரம் நிற்கிறேன்
என் மகிழுந்து தனியே அனாந்தரமாக நிற்கிறது
என் பணமெல்லாம் வட்டிமொத்தமும் சேர்ந்து
காற்றில் படபடவென அடித்து ஒவ்வொரு தாளாக
பறப்பதுபோல்  ஒரு உணர்வு என் கண்முன் காட்சியாகிறது;

நான் அதிலிருந்து ஒற்றைத் தாளைக் கூட எடுத்துக்கொள்ள
விரும்பாமல் ‘எல்லாம் பறந்து போ.. போ’வென்று சபித்துவிட்டு
திரும்பிப் பார்க்காமல் விர்ரென்று நடக்கிறேன்;

எங்கோ என்றோ நான் எவர் பணத்திலேனும்
சிரித்து மகிழ்ந்திருக்கலாம்
அதற்கு இந்த இழப்பு ஈடாகிப் போயிருக்குமென்று’ எண்ணிக் கொண்டு
தெருவைக் கடந்து நிற்கிறேன்
ஒரு அரசு பேருந்து வருகிறது
சட்டைப் பையில் கைவிட்டுப் பார்க்கிறேன் – பயணச் சீட்டு வாங்க
சில்லறை இருந்தது;

கண்களை அழுந்த மூடிக் கொண்டேன்
உள்ளேயிருந்த இருட்டில் –
மகிழுந்திற்கான கனவு கொஞ்சமும் இல்லை..

வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

கடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா)

விடுதலையின் வெப்பம் தணியாத மண்ணினோரம் அலைந்து அலைந்து திரியும் கடலலைகளைப் போய்க் கேட்டால் அதற்குக் கூட மறந்திருக்கும் அங்கே வாழ்ந்தவர்களின் முகங்கள். அப்படி முகம் மறக்கப்படும் இடத்தில் உயிர்பதித்து வாழும் இதயங்களைப் பற்றி படிப்பின் வழியே பேசுகிறது ‘பசங்க’ திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரீனா’ திரைப்படம்.

நட்பின் வாசமருந்துவிடாத காலத் தாமரையின் இதழ்கள் ஒவ்வொன்றிலும் சிறந்த நண்பர்களாக பதிகிற பாத்திரப் படைப்புகள் நிறைந்த சிறந்த குழந்தைகளுக்கான இன்னொரு திரைப்படமிந்த ‘மெரீனா’

காதல் பறித்தாலும் பறிக்காவிட்டாலும் ஒரு கட்டத்தில் வாடிப்போகுமொரு மலர்; அதை வாசமுள்ளவரை நுகர்ந்து, வாடிய பின் அதிலிருந்து தெளிந்தும் கொள்வோர் வாழ்க்கையின் அடுத்தப் பக்கத்திற்கு அநிச்சையாய் நகர்ந்துக் கொள்கின்றனர் என்னுமொரு பாடத்தை காட்சிகளாக உள்ளடக்கி முடிகிறது இம்மெரினா திரைப்படம்.

படிப்பு ஒன்று மட்டுமே வரையறைக் கடந்த புகழ், படிப்பு ஒன்று மட்டுமே மறந்தாலும் மதிப்பை சேர்க்கும் உழைப்பு, படிப்பு மட்டுமே பிறப்பிடத்துக் கோடுகளை அழித்து வெற்றியின் சாட்சிகளோடு ஒருவரை மற்றவரிடத்தும் சரிசமமாக்கி நிற்கவைக்கிறது’ அதை வயிற்றிற்கு ஒரு வேளைச் சோறு வேண்டி உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ‘உயிர்பொக்கிஷமாய் கொடுக்க திரைப் பிரயத்தனம் கொண்டு உருவாக்கிய அரிய முயற்சியின் நற்பலனிந்த ‘மெரினா’ திரைப்படம்.

காதல் லீலைகள், காமக் குற்றங்கள், கடவுள் பிரச்சாரங்கள், கட்சிப் போராட்டங்கள், குடிசைவாசிகளின் கண்ணீரில் நனைந்த பல இதயங்களின் வாழ்ந்த தடங்கள் என அனைத்தையும் மிதித்துக் கொண்டு கடக்கும் உப்புக் காற்றின் அசைவுகளுக்கிடையே இன்றும் அனாதையாய் விழும் பிணங்களின் மரணவலிக்கு காரணமானவர்களைப் பிடித்து; முதியோரைக் காப்பாற்ற இயலாத பிள்ளைகளை மனசாட்சியின் கூண்டில் நிறுத்தி காரி உமிழ்கிறது. அவர்களின் கை கொண்டே அவர்களின் குற்றத்தின் கண்களில் குத்தும் விரல்களென ஒரு முதியவரின் பாத்திரத்தின் மூலம் வீரியம் கொள்கிறது இந்த ‘மெரினா’ திரைப்படம்.

சாதாரண மக்களின் கதையை படைப்பாக்கிச் செல்வதன் மூலம்’ இக்காலத்தின் ஒரு மூலப் பதிவு நிலைக்கப்பெறுமென்றும், அவர்களின் வாழ்க்கையை நல்ல திசை நோக்கி முடுக்கிவிட்ட பயனும் திரைப்படத்திற்கு மிஞ்சுமென்றும் நம்பியிருக்கிறார்போல் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். அவரின் நம்பிக்கையை குறையின்றி காப்பாற்றி இருக்கின்றனர் சிறுவர்களாக நடித்த குழந்தை நட்சத்திரங்கள். அந்த தாத்தாவக நடித்த ஐயாவும் சரி, பாட்டுக்காரராக வந்தவரும் சரி, தபால்காரராக வந்தவரும் சரி பாத்திரங்களின் நடிப்பு பிசகாத ஒரு இடத்தை தனது தனித் திறனாலும் தக்கவைத்துள்ளனர்.

பெரிதாக சொல்லுமளவிற்கான கதாநாயக நாயகியின் அவசியமொன்றும் அத்தனை இப்படத்தில் இல்லை என்றாலும் சோற்றுத் தட்டில் வைக்கும் ஒரு பகுதி இனிப்பு போல தன் பங்கினைத் திரமாக செய்துள்ளனர் சிவகார்த்திகேயனும், ஓவியாவும்.

ஐயா ஜெயப்பிரகாஷ் அவர்கள் ‘பசங்க’ திரைப்படத்தில் நெஞ்சில் குத்திக் கொண்ட மதிப்புக்கு நிகரான ஒரு மெடலை இப்படத்திலும் விட்டுச் செல்லவில்லை. அவர் வந்துசெல்லும் ஒரு இறுதிக் காட்சியில் ‘யாரும் இத்தேசத்தில் அனாதையில்லை, உங்களுக்கு அரசு இருக்கிறது. அரசு அத்தனையும் கொடுத்து இருக்கிறது. கொடுத்ததை எடுத்து உடுத்தி தனை திருத்திக் கொள்ளும் திறனும் பெற்றவர்கள் நீங்கள் பிள்ளைகளே, படிப்பை சுமக்கும் வயதில் உழைப்பை உங்களுக்குள் திணிக்காதீர், படிக்க மறவாதீர், படிப்பு உங்களையும் எங்களையுமென சேர்த்து நம் எல்லோரோடு நம் நாட்டையும் வளர்க்கிறது’ வாருங்கள் பாடசாலை செல்வோமென்று மிடுக்காக அழைக்கிறார்.

ஆக சிறுவர்களின் குறும்பு, வளர்பவர்களின் திறன், வறுமையின் கொடூர முகம், சரியாக வளர்க்காததன் குற்றம் என ஒரு உளவியல் சாட்சியினை சில காட்சிகளாக முன்வைத்து எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்பும், அவர்களைப் பற்றிய அக்கறையும் மிக முக்கியம் என்பதை மனதில் அழுத்தமாக பதியவைக்கும் இதுபோன்ற திரைப்படங்களை நன்றியுடன் திரையரங்குகளில் சென்றுக் காண்போம்.

இனி வரும் சமுதாயம் படிப்பினால் வெகு விரைவாக நகர்ந்து வாழ்வின் சிகரத்தை எல்லோருமாக எட்டிப் பிடித்துக் கொள்ள இப்படி ஒவ்வொரு கல்லாக திரைப்படத்தின் மூலமும் நகர்த்துவோம்.

நன்றிகளுடன்..

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..

1
ன்று நாளை என
வாங்க செருப்பில்லாமலே தேய்ந்த கால்கள்
சில்லறையில் வாங்கிய ஊறுகாய் தவிர்த்து
குழம்பு காணாத சோறு
வளையிடாமலேயே வணக்கமிட்ட கைகள்
தைத்த ஆடை உடுத்தாமலேயே சுருங்கிய தோல்
பொட்டலம் பிரிக்கையில் மட்டுமேப் படித்த படிப்பு
பாதுகை கைகடிகாரம் அலைபேசி வானொலி மிதிவண்டி
ருசியான உணவு என –
இன்னபிற எல்லாமே கனவாகவே போன வாழ்க்கை;

இறந்த பின் மட்டும் இயந்திரத்தில் எரியுமுடல்!!
——————————————————

2
ரு குருடி
ஒரு முடவன்
ஒரு விதவை
ஒரு மலடன்
ஒரு அனாதை
ஒரு பரதேசி
ஒரு நோயாளி
ஒரு முதிர்கன்னி
இவர்களைச் சுற்றியிருக்கும் நம் உலகில்
கேட்கும் சிரிப்புச் சப்தம் அசிங்கமானது;

அல்லது அவர்கள் தொலைத்த சிரிப்பிற்கு
காரணமானது!
——————————————————

3
சு
டுகாட்டில்
நிறைய மண்டையோடுகள் கிடந்தன
எதிலுமே ஜாதியில்லை மதமில்லை;

அதை எரித்தவர் மேல்
திணிக்கப்பட்டிருந்தது
ஜாதியும் மதமும்!
——————————————————

4
பி
ச்சையெடுப்பது தவறெனில்
கொடுப்பதும் தவறு –
கோசம் எழுப்பினார்கள்;

சற்று தூரத்தில்
ஒரு வயது முதிர்ந்த பாட்டி
மயக்கத்தில் கிடந்தாள்..

பிச்சைப் பாத்திரத்தில்
அவள் அனாதை என்று எழுதப்பட்டிருக்கவில்லை..
——————————————————

5
தே
னிரில் முக்கி பொறையும் பன்னும்
தின்றுக் கொண்டிருந்தன பிள்ளைகள்

அப்பா ஒரு குவோட்டரில் மூழ்கி
ஆஃபில் வெளிவந்து
ஒரு ஃபுல்லோடு ஆடி ஆடி வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார்

அம்மாவிற்கு பசி நெஞ்சிலும் இருந்தது

அவளைப் பற்றிக் கவலைப் பட
அவள்கூட இல்லை

அவளுக்கு பிள்ளைகளே பெருங் கவலை
அவர்களை அவள்
தான் செய்த
இரண்டாம் பாவமாக எண்ணிக் கொண்டிருந்தாள்

அவர்களுக்கு ஒரு மினர் தேனீரோ
ஒரு முழுதாகக் கிடைத்த பன்னோக் கூட
பெரிதாக இருந்தது

அதெல்லாம் தெரியாமலே
அடுத்தத் தெருவரை பேசிக் கொண்டது ஊர்
அதுக ‘குடிகாரன் பிள்ளைகள்’ என்று

கொடுக்க வக்கில்லாதவர்கள் அவர்கள்

பாவம்
குழந்தைகளின் வயிற்றில்
பன்னும் தேநீரும் மட்டுமே எழுதப் பட்டிருந்ததைப்
பற்றி அவர்களுக்கு எந்த கவலையுமில்லை

அம்மாவிற்கு அது கூட இல்லை…
தாலியை சுமப்பதற்குப் போராடவே
பெரியவளானவள் அவள்

அப்பா வரும் தெருவைப் பார்த்து
ஓடிக் கொண்டிருந்தாள்

அவளுக்கு அப்பா மட்டுமே உலகம்
குடித்தாலும் கொன்றாலும்
அவர் மட்டுமே கடவுள்

பாழாய்ப்போன கடவுளும்
சமூகமும்..

போகட்டும்
யார் எப்படி வேண்டுமோப் போகட்டும்
யாரைப் பற்றியுமே கவலையில்லாத அப்பா

அப்பாவிற்கு தான்
அவளும்
அவர் கையிலிருந்த பாட்டிலும்
வேறு வேறாகவேயில்லை..
——————————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | 3 பின்னூட்டங்கள்

33) கவிதையில்லாத பொழுது..

ரு நெடுமரத்தின் இலைகள்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து
வேரறுபடும் நிலை;

மண் வாரி முகத்திலெறிய
நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய்
உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்;

உயிர் முடிச்சவிழ்ந்து
துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில்
ஒரு விளக்கு அணைந்த இருட்டு;

அனல் காற்றில் வெப்பமேறி
வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட
விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் வலி;

மழை சொட்டி சொட்டி நனைந்த வீட்டில்
பற்றியெரியும் –
பாலூட்டப் படாத வயிறு;

பொக்கைவாய் பற்களில் மெல்லக்
கனவுகளின்றி –
மரணத்தின் பசியூறும் தருணம்;

கடல்மீன்கள் வறுபடும் வாணலியில்
வறுபடாமலே –
துடிக்குமென் உயிர்;

அஞ்சறைப் பெட்டி திறந்து சில்லறை தேடி
ஒற்றை ரூபாய் நாணயமெடுத்து நெற்றியில் ஒட்டி
நான் படுத்துக் கொள்ளுமொரு காலை;

இப்படி வலியின் வாசல்களெல்லாம்
தேடியலைந்த கண்களுக்கு –
இதுவரைக் கிடைக்கவேயில்லை – அந்த ஒரு கவிதை!!
—————————————————–
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

32) விடியும் உரக்க மொழி.. (இசை – ஆதி)

ழை கொட்டினால் மழை செய்தியாகிறது.
காற்று அதிவேகமாக வீசுகையில் புயல் செய்தியாகிறது.
அரசியல்வாதிக்கு ஒரு தீங்கென்றால் அல்லது ஒரு நடிகருக்கு ஒரு துன்பமென்றால், அவ்வளவு ஏன் ஒரு பிரபல ஆசாமிக்கு தொண்டையில் மீன்முள் குத்திக் கொண்டால் கூட அது அன்றைய தினத்தின் தலைப்பு செய்தியாக ஜோடிக்கப்படுகிறது. எல்லாம் செய்தி தான். வருத்தமில்லை, அது அவர்களின் மேல் மக்கள் காட்டும் ஈடுபாடென்று வைத்துக் கொள்வோம்.

ஆனால் செய்திகளுக்குப் பின்னே உணர்சியவப் பட்டு ஓடியாடி அலைந்த தெருவெல்லாம் தன்னைத் தேய்த்துக் கொண்டதோடு மட்டும் நின்றுக் கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் –

மரணம் கூட புதைபட்ட மண்ணுக்கும் புதைத்தவருக்கும் மட்டுமே கண்ணீரோடு பதிவாகிறதே’ அது வருத்தமில்லையா ?

இந்த ஒருதலைபட்சமானது சமநிலைப் படுதலே விடுதலை தேசத்தின் உயர்வில்லையா ?

அப்படியெனில் அந்த சமநிலைக்கான விடுதலையை எங்கு எப்படி யார் சென்று முழுமையாக பெற்றிட இயலுமென்று, எவரெவர் வாயோ பார்த்துக் கொண்டிருக்கையில், வந்தவர் போனவர் எல்லாம் வாய்க்கரிசி போட்டுவிட்டு தனக்கான இடமொன்றை பத்திரப் படுத்திக் கொள்கிறார். கடைசியில் ஏமாளியாய் நிற்குமினம் தமிழினம் ஆகிறதே…,

இந்நிலை மாற நாம் என்னதான் செய்திடல் வேண்டும் ?

எனில், இந்த கேள்வி முதலில் நம் ஒட்டுமொத்தப் பேரின் மனத்திலும் எழவேண்டும். நம் சமுதாயத்தை கட்டமைக்கும் பங்கு நமக்குரியது. நம் வாழ்க்கையை நாம் தான் தீர்மானிக்கிறோம். பின் நமது வெற்றி தோல்வி இரண்டிற்கும் நாம் தான் பொருப்பென்று நாம் உறுதியாய் நம்மை நம்புதலும் எம் தோல்வியை புறந்தள்ள எமக்கான ஆயுதமாக அமையும்.

யோசித்துப் பாருங்கள், எத்தனை மக்களை நாம் நம்மினத்திலிருந்து வெறும் ரத்தமாக சதையாக தொலைத்திருக்கிறோம்? அது ஒரு ‘மனதில் மாறா பிணக்குவியலின் காட்சி’ என்பது எல்லோருக்கும் தெரியுமென்றாலும், அந்தப் பிணக்குவியலுக்குள் தன் தாயையும் தந்தையையும், தங்கையையும் மகளையும், மனைவியையும் பிள்ளையையும் கணவனையும் இழந்தவர்களின் நிலையென்ன?

காற்று மாறி மாறி வீசிடுகையில் அவர்களையெல்லாம் நாம் நாட்களின் வேகத்தில் மறந்து நமக்கென்ன என்றெண்ணி நம் மக்களின் இழப்பை மறத்தல் தகுமா?

நம் ஒற்றுமை உணர்வை மெல்ல மெல்ல இப்படியெல்லாம் இழத்தல் சரியா?

ஒருக்கிலும் சரியல்ல உறவுகளே. நம் ஒன்றுசேர்தலில் நமக்கான பலம் இரட்டிப்பாக இருக்கிறது. தமிழர் ஒரு தேன்கூடினைப் போல் ஒருங்கி நின்று அவரவர் பங்கிற்கு அவரவர் பணிகளை சிறப்புற செய்தல் வேண்டும். அப்படியொரு ஒருங்கினைதலை, ஒற்றுமையினை, ஒற்றுமைக்கான உணர்வினை வலியுறுத்தவே வருகிறதிந்த வலியில் சுட்டெடுத்த பாடல்..

விடியும் பொழுது உறக்கமெதற்கு
உலகையாள ஒன்று சேரு…

வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்