கண்ணீர் வற்றாத காயங்கள்..

1
த்தம் பிசுபிசுத்த நினைவுகளை
சுயநலத்தினால் –
கழுவிக் கொண்டாலும்
கறைபடிந்த உணர்வோடு திரியும்
இதயத்தில் –
இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளது அந்த

ஈழத்திற்கான ஒருதுளி நம்பிக்கை!!
———————————————–

2
ழம் வெல்லும் வெல்லுமென்று
முழங்கியேனும் கொண்டிருப்போம்;

உள்ளே உறங்கிப் போகும் உணர்வுகள்
அம்மண்ணில் உறைந்த ரத்தத்தை நினைத்தேனும்
ஈரமொடிருக்கட்டும்.

நெஞ்சின் ஈரம் –
நாளை எஞ்சிய உறவுகளையேனும்
காக்கப் போராடத் துணியும்!!
———————————————–

3
.நா. சங்கு வைத்து ஊதியேத்
திறக்காத காதுகள் –
இனி யார் கத்தித் திறக்குமோ?

எனும் பயத்தில் – எழுகிறது
இன்னொரு போராட்டத்திற்கான
ஆயத்தங்கள்!!
———————————————–

4
டைந்த கால்களும்
கிழிந்த இதயமும்
பதறிய கதறலின் ஓலமும்
மண்ணில் புதையுண்ட யாருமே
தோற்கவில்லை;

பார்த்துக் கொண்டும்
கேட்டுக் கொண்டுமிருந்த நாம்
படித்துவிட்டு நகரும் வரை –
தோற்றுக் கொண்டே யிருக்கிறோம்!!
———————————————–

5
மிழகத்தின் நிறைய தெருக்களில்
ஈழத்திற்கானப் போராட்டங்கள்
புகைப்படங்களாகவும் –
ஓவியமாகவும் காட்சி படுத்தப் பட்டிருப்பினும்;

அதை ஒட்டிய கைகள்
காசு வாங்காமல் ஒட்டியிருப்பின்
ஈழவெற்றிக்கான ஒருகொடி
விரைவில் தமிழகத்திலும் பறக்கும்!!
———————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

87 அரைகுடத்தின் நீரலைகள்!!

1
வர்கள் அப்படித் தான் இருந்தார்கள்.
இனிப்பாகவும்
கசப்பாகவும்
புதுசாகவும்
பழமை குறையாமலும்
வாழ்வின் முதல் படியிலிருந்து
கடைசிப் படி வரையிலும்
அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள்.

அவர்களை உறவென்று
சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில்
சிநேகமாய் ஒரு பூவும் –
மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது!!
—————————————————————-

2
வ்வொரு தெருவிற்கு இடையேயும்
நான்கு வீடுகள்
வீட்டில் நான்கு மனிதர்கள்
மனிதர்களின் ஈர விழிகளில் பல
ஏக்கங்களும் கண்ணீருமே இருந்தன;

முடிவில் கூடத் தெரிவதில்லை மனிதனுக்கு
பிறந்ததன் –
பின் இறப்பதற்கான நிர்பந்தமும்,
பழகியதன் – பின்
பிரிவதன் அசாராதன ரணமும்!!
—————————————————————-

3
ட்டக் கல்வி
மருத்துவம்
எந்திரவியல்
விஞ்ஞானம்
எல்லாம் வெங்காயமும் இருக்கிறது;

மனிதத்தைத் சொல்லித் தர
அல்லது வாழ்ந்துக் காட்ட
மனிதர்களிங்கே வெகு குறைவு,

நிறைவில் நான் கூட முழுமையாக இல்லை!!
—————————————————————-

4
பி
றந்த குழந்தைக்கு
பெயர் வைக்கமுடிகிறது;

தமிழில் அல்லது
அவரவர் தாய் மொழியில்
வைப்பது பற்றி –
தெருவில் போகும் நாய்கூட
வருத்தப் பட்டுக் கொள்ளவில்லை.

நாய் ஏன் படனும் –
மனிதர்களே படுவதில்லை!!
—————————————————————-

5
பி
ச்சை எடுக்கிறார்கள்
வயோதிகர் அனாதையுற்றுத்
திருகிறார்கள்,
தெருவெல்லாம் கால்வாய் நீர்
கால்நனைத்து நோய்பரவிப் போகிறது,
எவனோ பேர் சொல்லிச் சம்பாதித்துக் கொள்ள
நிறைய கிராமங்கள் பட்டணமாகி விட்டன,
நல்லவன் கெட்டவனாகவும்
கெட்டவன் நல்லவராகவும் மாறி மாறித் திரிகின்றனர்,
மனிதர்களின் அசிங்கமுகம் ஆங்காங்கே
நாற்றமாகத் தெரிந்தாலும் –
இந்த இளைஞர்களை நம்புகிறது எம் தேசம்!!
—————————————————————-
வித்யாசாகர்

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உன் புத்தகப் பை நிறைய, அந்த கண்ணீரும் சிரிப்பும்!!

நீ பிறந்தாய்
எனக்குள் ஒரு பூ பூத்து
அப்பா எனும் வாசமாய்
உடலெங்கும் கமழத் துவங்கியது..

பின் – நீ வளர வளர
அந்த அப்பாயெனும் வாசத்தால்
நானும் உலகெங்கும் மணம் பரப்பி
மதிப்பால் நிரம்பி நின்றேன்;

இன்றும் –
உன்னிடம் நான் பெற்ற –
பெரும் –
பாடங்கள் ஏராளம், ஏராளம்;

என் குழந்தை பருவ கேள்விகளுக்கு
விடையும் –
வளரும்போது சந்தித்த குழப்பங்களுக்குத்
தீர்வையும்  உன்னிடமிருந்தே நான் பெற்றுக் கொண்டேன்.

அப்படி –
உன் ஒவ்வொரு அழுகையும்
சிரிப்பும் –
என்னையும் சேர்த்து சிரிக்கவும் அழவும் சிந்திக்கவும்
வைக்குமொரு தருணத்தில் தான்
பாடங்களை சுமந்து நீ பள்ளிக்குப் போகத் துவங்கினாய்;

போகும்போது இதயம் வழிய
கண்ணீரோடு போகும் நீ
வரும்போது புத்தகப் பை நிறைய சிரிப்பை மட்டுமே
வாரிக்  கொண்டு வந்தாய்;

இது புரிந்தும் உன்
அழும் விழிகளைத் துடைத்துவிட்டு
எந்த கட்டாயத்தை சாதித்துக் காட்டிட
உன் அழுகையினை மீறியும் உனைப்
பள்ளிக்கனுப்புகிறோமோ’ தெரியவில்லையடா…

ஒரு வேலை எல்லோரும் சுமந்த
ஊமை கனவுகளை போல் –
பதில் அவசியமற்ற இடத்தில் எழும்
கேள்வி போல் – நோக்கம் இன்றியும்
புத்தகங்களுக்குள் உன்னை புதைய வைக்கிறோமோ – எனும்
வருத்தம் ஒவ்வொரு நாள் உன்னை
தனியே விட்டு வருகையிலும் உயிர் கொள்ளும் வதை
என்பதை நீ –
பிற்காலத்தில் புரிவாய்;

என்றாலும் இந்த மூன்று வயதில்
நான்கு வயதில் நீ எதைப் புரிந்து
படிப்பென எடுத்துக்கொள்வாயென

என்னை – இதை செய்யப் பணிக்கிறதோயிந்த சமூகம் ?
தெரியவில்லை,

எப்படியோ போகட்டும் அதலாம்; இனி நீ
வீட்டிலேயே இரு,
விரும்பும் போது போ; படி; யென்று
கைகட்டிக் கொண்டுவிட யிலாமல்
நாளையை எண்ணி – இதோ நானும் உன்னோடு
உனக்கான புத்தக பையையும் மதிய உணவுகளையும் சுமந்துக் கொண்டு
நடக்கிறேன்;

பள்ளிக்கூடம் வந்ததும்
உன் கையை விட்டுவிட்டு போ என்கிறேன்,

நீ வேண்டாம்பா
நான் போகலைப்பா என்று அழுகிறாய்,

நான் சற்று முகத்தை கடினமாக
வைத்துக் கொண்டு போ’ என்கிறேன்;

நீ தேம்பியழுத கண்களைத் துடைத்துக் கொண்டு
என்னை திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து
அழுதுக் கொண்டே போகிறாய்;

நான் உன்னை பார்க்காமல்
பள்ளிக் கூடத்து வாசலைக் கடந்து
விருட்டென வீட்டிற்கு நடந்துவருகிறேன்;

நான் உள்ளே அழும் அழையின்
சப்தம் கேட்டு; நாளை நீ படித்து
வாழத் தக்கவனாய் வருகையில்
எனை உனக்குப் புரியலாம்போலென என்
ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்
பூமியில் சிந்திக் கொண்டே எனக்கு
ஆறுதல் சொல்கிறது.

அதேநேரம், நாளை ஒருவேளை நீ
உன் பிள்ளையை உன்னோடு வைத்துக் கொண்டு
அவனுக்கு விருப்பம் வருகையில் மட்டும்
பள்ளிக் கனுப்பினால் –
எனை ஒருவேளை கொடுமைக்காரனென – திட்டவும் செய்வாயோ’ என்று
பயமும் எழுகிறது;

பயத்தை எல்லாம் தூக்கி
மூட்டைக் கட்டிப் போட்டுவிட்டு
நேரமாகிவிட்டதை யுணர்ந்து
அலுவல் நோக்கி ஓடுகிறேன்;

அலுவல் வேலைகளுக்கிடையே யெல்லாம் – உன்
அழுத முகமே ஆங்காங்கு தெரிகிறது;
முகத்திற்கு பின்னே உனக்குள்
உன் விருப்பமின்றி திணிக்கப் படும்
பாடப்புத்தகங்களும் கனக்கின்றன!!
————————————————————————–
வித்யாசாகர்

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் – அவன் இவன்!!

வ்வொரு மனிதரின் ஒவ்வொரு விதமான வாழ்க்கையின் வெவ்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாய் தன் ஏட்டில் பதிந்துக்கொண்டுதான் வருகிறது ஒவ்வொரு திரைப்படமும். அதிலும் எளிய மக்களின் வாழ்தலை சமகாலப் பதிவாக்கும்  அரிய திரைப்படங்கள் தமிழரின் கலைத் திறனை மெய்ப்பிக்கும் சான்றாகவே தற்காலங்களில் வந்துக்கொண்டிருக்கின்றன.

அவ்வகையில், ஒரு எழில்மிகு கிராமத்தில் வசிக்குமொரு குடும்பத்தின் இரு மகன்களையும், அவர்களின்  யதார்த்த வாழ்க்கையினையும் கல்லுக்குள் துளிர்க்கும் இலைபோல் அவர்களுக்குள்ளும் வரும் காதலையும், அதை ஏற்கும் மனிதம் மிக்க மனிதர்களையும், மனிதம் எதிர்க்கும் மிருகப் பிறப்பொன்றின் இறப்பையும் உணர்ச்சிப் பொங்க பொங்க காட்டி, நம் கண்முன் அவர்களை அழவைத்து அதில் நம்மையும் ஒன்றவைத்து, அவர் செய்ய நினைத்த அத்தனையையும் செய்து, அதற்கும் நம்மை தலையாட்டி ரசிக்கவும் வைக்கும் திரு. பாலாவின் இன்னொரு திரைக் காவியம் இந்த “அவன் இவன்” திரைப்படம்.

கல்லை எடுத்து கையில் கொடுத்தால் கூட அதில் ஒரு துளி நடிப்புத் தன்மை இருக்குமெனில்  அதையும் வெளியில் கொண்டுவந்து கல்லையும் நடிக்க வைத்து உலகிற்கு ஒரு மாறுபட்ட திரைப்படத்தை கொடுத்துவிடக் கூடிய தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் இந்த பாலா.

இவரின் படத்தில் மட்டுமே, நடிக்கும் அத்தனைப் பேரும் சிறந்த நடிகர்களாக கருதப்படும் அளவிற்கு ஒவ்வொருவரின் உழைப்பையும் வாங்கி அவர்களின் முகத்தில் தனித்துவ நடிப்பெனப் பூசிவிடுகிறார். இப்படத்திலும் அத்தகைய உழைப்புத் ஒவ்வொரின் நகர்விலும் தெரிகிறது. குறிப்பாக படம் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நம் உணர்வுகளையெல்லாம் கதாப்பாத்திரமே ஆட்கொண்டுவிட, நாடி நரம்புகளை இழுத்து சுண்டிவிட்டுச் செல்கிறது அனைத்துக் காட்சிகளும்.

பேசும் வசனத்தைக் காட்டிலும், இசை வலிமைமிக்க இடத்தைப் பெற்றிருக்கிறது இப்படத்தில். வார்த்தையின்றி வரிகளின்றி சப்தத்தால் நரம்புகளை மீட்டி, காணும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு வாய்; அசையாமல் பேசுமெனில் அதை யுவனின் இசை என்று மெச்சிக் கொள்ளலாம். அப்படி வீரமும் காதலும் கலையும் சிறந்த தமிழரின், ஒருவகை மனிதர்களின் வாழ்வை ஒரு புல்லாங்குழலின் சந்துகளில் புகுந்து வெளிவரும் காற்றின் சப்தமாய் இசைத்துக் கொடுத்திருக்கிறார் இப்படத்திற்கென. நிச்சயம் இந்த “அவன் இவன்” திரைப்படத்தின் வெற்றியில் இசையின் பங்கும் நடித்தவர்களின் பங்கினைப் போல் இன்றியமையாத ஒன்று.

பொதுவாக, நடிகர்கள் முகப்பூச்சு தடவியோ அல்லது முகபாவம் சற்று மாற்றியோ நடிப்பதென்பது இயல்பு, ஆனால் படம் முழுக்க தன் முகத்தையும் பிறப்பின் குணத்தையும் மாற்றி, இயக்குனர் எண்ணிய ஒரு கதாப்ப்பாத்திரத்தை தன் திறமையின் உச்சம்வரை பயன்படுத்தி, தன்னை வெற்றியென்னும் ஒரு வார்தைக்காய் வருத்தி திரைக் காவியத்தின் பதிவில்; தனக்கான ஒரு தனி இடத்தை பதிவு செய்துக் கொண்டார் விசால்.

அவர், அழும்  காட்சியில் நம்மை அழவைத்து, சிரிக்கும்  காட்சியில் அவர் சிரிக்காமல் நம்மை சிரிக்கவைத்து, பார்க்கும் பார்வையில் நடிப்பை நிரப்பி, அசையும் வாயின் கோணத்திற்கேற்ப நம்மையும் திரும்ப வைக்கும், வாய்திறந்து மலைப்பாகப் பார்க்கவைக்கும் வினோத நடிப்பும், இதுவரை திரைத்துறையினர் சிந்தித்திராத அல்லது செய்திராத சாதனைக்குரிய பாத்திரமும் தான் விஷாலின் கதாப்பாத்திரம்.

உனக்குத் தான் முந்தைய படத்தில் தனியிடம் தந்தேன் இல்லையா இதில் நான் சொல்வதை மட்டும் செய்யென்று சொல்லிவிட்டிருப்பார் போல் இயக்குனர் பாலா நடிகர் ஆர்யாவை. என்றாலும், தன் திறனில் குறையில்லா ஆர்யா விட்டேத்தியாய் திரியும் சில காட்சிகளிலும் சரி, காதலின் ஈர்ப்பில் மதிமயங்கும் இடமும் சரி, கோபமுறும் குடித்து ஆடும், கண்கலங்கி அழும் அண்ணனின் அழையை பார்க்க இயலாமல் கண்நீர்வடிக்கும் காட்சியிலும் சரி; தன்னை முழுமையாய் படத்தில் ஈடுபடுத்தி தானும் ஒரு நிகரற்ற நல்ல கலைஞன் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

 திரிசா போட்டால் ஓடும்,  ஐஸ்வர்யா நடித்தால் படம் பெரிதாகப் பேசப்படும் எனும் எண்ணங்களை இயக்குனரின் திறமையினால் உடைத்துக் காட்டும்விதமாய் பெயர்பெற்றுவிடாத நாயகிகளுக்குக் கூட பெரிய கதாநாயகி அந்தஸ்து உண்டு என்பதை தன் படத்தின் மூலம் நிரூபிக்க நினைத்திருப்பார்போல் இயக்குனர். அதை நிறைவாய் தன் நடிப்பினால் காட்டிச் சென்றுள்ளனர் இப்படத்தின் கதாநாயகிகளான தேன்மொழி, மற்றும் பேபி எனும் பாத்திரத்தினர்.

உண்மையில், அவர்கள் அசைக்கும் கண்களும் சரி, சிரிக்கும் இதழ்களும் சரி, பேசும் உச்சரிப்பும் சரி, அதை படம் பிடித்த விதமும் சரி; மொத்தமுமே காண காண ரசிக்கத் தக்க அழகு என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. அதுபோல், அவர்கள் வந்து போகும் ஒவ்வொரு காட்சியிலும் மிக இலகுவாக நம் தேசத்து தமிழச்சியை தமிழ்ப்பெண்களை படத்தில் அடையாளம் காட்டிப் போகின்றனர்.

அதிலும் காவல்துறை அதிகாரி கதாநாயகியைப் பார்த்து ஒவ்வொரு முறையும் என்னடா கண்ணு என்னடா கண்ணு என்று அழைக்கையில், ஓடிவந்து நிற்கும் அந்த முட்டைக்கண்ணழகு கதாநாயகியை காணும் போதெல்லாம் அவரை ஒரு சட்டப் பூர்வமாகப் பார்ப்பதைவிட ஒரு படத்திற்கு தேவையான ஒரு பாத்திரமாக மட்டுமே பார்த்து ரசிக்கத் தோன்றுகிறது.

முக்கியமாக, இப்படத்தில் வில்லன் கதாநாயகன் என்று சொல்லுமளவிற்கு யாருமில்லை என்றாலும், முழுக்க முழுக்க சிரிப்பாகவே செல்லும் காட்சிகளுக்கிடையில் மிக சாதாரணமாக ஒரு மாட்டிறைச்சிக்காக மாடுகளை கடத்தி அறுக்கும் ஒரு மனிதமற்ற பாத்திரத்தை காட்டி, அவனின் கோரமுகத்தைப் பல்லிளிக்கவைத்து, அவனை வேண்டுமெனில் வில்லனெ எண்ணிக் கொள்ளலாம் என்று எண்ணவைக்கும் அவர்கூட தன் ஒற்றை கையை பின்னால் கட்டிக் கொண்டு அடிக்கும் காட்சிகளிளும், கீற்று போல் இரு உதடுகளுக்கிடையில் வெற்றிலை பல் தெரிய பார்க்கும் அழகிலும் நடிப்பை துல்லியமாய் இயக்குனர் சொன்னளவிற்கே வெளிப்படுத்தியிருப்பது திறம்தான்.

மேலும், இப்படத்தின் ஒற்றை நாயகர் எனில் அது ஐயா அயனஸின் பாத்திரம். படம் முழுக்க அவரை கண்டுவிட்டு வெளியே வருகையில் தன் தாத்தாவோ தனக்கு சொந்தமான தந்தை ஸ்தானத்து யாரோ ஒருவரை அந்த வில்லன் சித்தரவதை செய்து கொன்ற கோபம் படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் வர, அந்த கோபத்தை காட்சிகளின் நகர்வில் தகிக்கும் விதமாக அமைந்த படத்தின் முடிவே இயக்கத்தின் உச்சம் ஆகும்.

அதிலும், வில்லனை ஒற்றை அடியில் கொன்று விடாமல் தான் கொண்டுள்ள அயனஸ் மீதான பாசம் அவ்வளவும் வெளிப்படும் அளவிற்கு விஷால் அடிக்கும் ஒவ்வொரு அடியும் நம்மை பாசம் உணர வைக்கிறது.

கடைசியில் வில்லன் அயனஸை சித்ரவதை செய்து நிர்வாணப் படுத்தி மரத்தில் தொங்கவிட, காமிரா திரும்பும் இடமெல்லாம் உடம்பில் பட்டை பட்டையாய் தொலுரிய அடித்திருப்பதை காட்ட; கொதித்துப் போகும் ரசிகர்களுக்கு இவனை இப்படி தாண்டா கொல்லனும் என்று புருவம் உயர்த்தி வெறித்துப் பார்க்கும் அளவிற்கு உணர்ச்சிப் பொங்க முடிகிறது படம்.

குறிப்பாக, தனியாக வாழும் ஒரு மனிதரின் வலியையும், சுற்றத்தை அனைத்துக் கொண்ட யாருமே இவ்வுலகில் தனிமைப் படுத்தப் படவில்லை என்கிற கருத்தையும், அன்பு மனதில் நிறைந்திருப்பின், பண்புடன் பழகத் தெரிந்திருப்பின், பிறரின் உணர்வுகளை மதிக்க மனசிருப்பின் யாருமே இவ்வுலகில் அனாதையில்லை எனும் போதனையையுமே மறைமுகமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

அதையடுத்து, சூழ்நிலைகளுக்குக் உடன்பட்டுப் போகும் மனத ஜென்மங்கள் யாருமே நிரந்தரமாய் திருந்தாத பிறப்புகளல்ல எனும் உண்மையையும் திருந்தாத மனிதர்கள் உண்டெனில் அவர்களுக்கான முடிவும் அதே விரைவில் அவர்களை தேடி வருகிறதென்பதையும் கதாப் பாத்திரங்களின் வழியே வழியும் சோகப் பாடலின் மனதுருக்கும் இசை போல் சொல்லிப் போகிறது படம்.

குறிப்பாக, ஒழுக்கம் இல்லா ஆண்களின் மதிப்பு எப்படி மனைவியின் ஒவ்வொரு வார்த்தையினாலும் சுட்டெரித்து தெருநடுவே வீசப் படுகிறது என்பதையும், வீட்டின் வெளிச்சமாக வாழும் பெண்களின் பண்பு சற்று முறை பிசகிப் போனாலும் அது எப்படி அடுத்து வரும் தலைமுறையையே சீர்குலைத்து விடுகிறது என்பதையும் விஷால் ஆர்யாவின் இரு அம்மாக்களான அம்பிகாவும் அவரின் சக்களத்தியாக வரும் நடிகையும் மிக தத்ரூபமாக காண்பவர் ரசிக்கும் அளவிற்கும், கேட்பவர் காதை மூடிக் கொள்ளுமளற்கும் பேசி நடித்துக் காட்டியுள்ளனர்.

அம்பிக்காவிற்கு இது ஒரு புதிய தோரணை அதுபோல் அம்மாவாக இன்னொரு பாத்திர ஆரம்பம் என்றாலும், பேச்சும் பீடியும் கொஞ்சம் உதடு கோண வைத்தாலும், இயக்குனர் இப்படத்தில் காட்ட வருவது அதுபோன்று வாழும் ஒரு குடும்பத்தின் கதையினை மட்டுமே என்பதையும் நாம் புரிந்துக் கொள்ளவேண்டியுள்ளது.

கள்ளென்ன இரும்பை கொடுத்தாலும் மென்று துப்பும் ஒரு சிறப்பு எந்திரம் போல், தான் எதை வேண்டுமானாலும் செய்வேன், எதை வேண்டுமானாலும் முயன்றால் செய்யலாம், என்பதைக் காட்டுமொரு படம் இது என்பதற்கு படத்தில் வரும் ஒரு லாரி ஓட்டுனரிலிருந்து, அரங்கம் அதிர்ந்து போக ஆடும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான ஆட்டங்களே சாட்சி. வெறும் உணர்ச்சி ததும்பும் ஆட்டங்கள் தான் என்றாலும், அந்நிலையில் தானிருந்தாலும் அப்படித் தான் ஆடியிருப்போமோ என்று ஒவ்வொரு இடத்தையும் நம்பவைக்கிறது படம்.

ஐயனஸ், விஷால், ஆர்யா எனும் கதாநாயக வரிசையில் சிறிய பையனாக வரும் இன்னொரு பாத்திரமும் அவனின் நடிப்பும், காட்சிகளை மேலும் நகைக்கத் தக்க உணர்வுகளை கூட்டவும் கதையினை அழுத்தமாக நகர்த்திச் செல்லவும் உதவுகிறது என்பதில் சந்தேகமில்லை என்றாலும் அந்த சிறுவனின் நடிப்பும் பாராட்டத் தக்கது.

ஆக, காட்டு இலாக்கா அதிகாரிகளிலிருந்து காவல் துறை அதிகாரியாக நடித்தவர் முதல் காவலாளிகளாக நடித்த கதானாயகியோடு வரும் பத்மாக்கா வரை மிகச் சிறந்த ஆட்கள் தேர்வு இப்படத்தில் கையாளப் பட்டுள்ளது. அம்பிகா மட்டுமே கொஞ்சம் வசதியாக தெரிந்தாலும், நடிப்பினால் அந்த எண்ணமும் மாறியே விடுகிறது.

ஓரிடத்தில்; ஆர்யாவிடம் அந்த காவல்துறை அதிகாரி வந்து உன் பேரென்ன என்று கேட்க, என் பெயர் “கும்புடுறேங்க சாமி” என்று ஆர்யா சொல்ல, அவர் வாய் பிளந்து அதென்னயா பெயரென்று பார்க்கையில், ‘வேறென்னங்க நாங்களும் இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் உங்களையே பார்த்து ‘கும்பிட்றேன் சாமி கும்பிட்றேன் சாமின்னு சொல்றது’ என்று கேட்குமிடத்தில் ‘மனிதர்களின் வஞ்சகத்தால் பின்னுக்குத் தள்ளப் பட்ட ஒருசார் மக்களின் வலியை, ஒரு தலைமுறையையே தலைதட்டி வைத்து விட்டதன் கொடுமையினை  நாம் உணர்ந்து, புரிந்தேத் தீரவேண்டிய கட்டாயம் அங்கே வலுக கொள்கிறது.

இப்படி, படத்தின் நெடுகிலும் யதார்த்தம் எனும் ஒற்றை சிறகே விருந்துப் பறக்க, பெருங்குறையாய் அழுத்திச் சொல்ல அத்தனை ஒன்றும் இப்படத்தில் இல்லை என்றாலும், விஜையும் அஜித்தும் ஆர்யாவும் பூர்யாவும் விசால் நடிப்புக் கண்டால் புர்ரென்று போவார்கள்’ எனும் வசனத்தை மட்டும் தவிர்த்திருக்கலாம். இது நல்லதையும் கெட்டதையும் நேராக கொண்டு சென்று காட்டும் இடம் என்பதால் இங்கே யாரொருவரையும் மட்டப் படுத்தாமல் அல்லது வேறுமாதிரி மாற்றியேனும் காட்டி யிருக்கலாம்.

படத்தில் இன்னொரு இடை சொருகல் அல்லது திணிப்பு எப்படி வேண்டுமாயினும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால், படத்தின் கதாப் பாத்திரத்தை மிகை படுத்தி, பார்ப்பவரின் உணர்வுகளை சற்று நேரத்திற்கு உறைய வைத்து, பின் மயிர்க்கால் கூச்செரியச் செய்து, உடல் சிலிர்த்துப் போகும் காட்சியும், இசையால் நம்மைக் கட்டிப் போட்டுவிடும் ஓரிடமும் எனில்,  படத்தின் வெளிச்சம் மிக்கதொரு காட்சி எனில் அது சூர்யா வந்துபோகுமிடம்.

முகபாவத்தில், நடிப்பில், திறனில், மனதில், குணத்தில் என எதிலும் குறை அற்றவனாக தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கும் ஒரு வெற்றியாளன் சூர்யா என்பதே நாம் அவர் மேல் கொண்டிருக்கும் அன்பிற்கும் மதிப்பிற்கும் காரணம் என்பதை உறுதிபடுத்துமொரு காட்சி அக்காட்சி. சூர்யாவின் மனதிற்கானத் தோற்றத்தையே அவர் அங்கே வருகையில் அவர் முகம் காட்டுகிறதென்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அதிலும் குறிப்பாக உலகம் அறிந்துக் கொள்ள வேண்டிய அவரின், அல்லது அவர் தந்தை சிவக்குமாருடைய வழிநடத்தலின், அல்லது அவருடைய குடும்பத்தின் சிறப்பு செய்திட்ட இன்னொரு சாதனையின் நேரடி உதாரணம் ஒன்று இருக்குமாயின், அது தான் ‘அகரம் பவுண்டேசன்’.

இன்று  தமிழர்கள் விரிந்து வாழும் உலகில் எந்தளவிற்கு அகரம் பவுண்டேசன்’ பற்றி தெரியப் பட்டிருக்கும் என்பது கேள்விக்குறியக உள்ளபட்சத்தில்; நம் தமிழர்களின் இமை கிழித்து தான் சொல்ல வந்ததை உணர்வுப் பூர்வமாக சொல்லுமொரு ஊடகம் சினிமா என்பதால் அதன் வழியே அகரத்தை உலகின் பார்வைக்கு திறந்து வைக்கவும், அகரம் குறித்த அனைவரின் சுய விமர்சனத்திற்கு சூர்யாவின் பொதுவான பதிலை சூர்யா மூலமே உலக மக்களுக்கு சொல்லவும் இக்காட்சி பாலாவால் சேர்க்கப் பட்டிருக்கிறது. இருந்தும், சூர்யா இங்கே நடிக்காமல் தன் நேர்மையான உணர்வுகளையே இங்கு படப் பிடிப்பிற்கென காட்டிச் சென்றிருக்கிறார் என்பது நாம் அறியத் தக்க உண்மை.

ஆக, இப்படி, காலங் காலமாக நிறைய திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு படமும் நமக்கு ஒவ்வொரு நியாயத்தை சொல்லிச் சென்றாலும், இத்  திரைப்படம்; இப்படியொரு வெளியில் காட்டப் படாத மனிதர்களின் வாழ்க்கையை, எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்பாட்டக் கலப்புமின்றி பதிவு செய்து வைத்திருக்கிறது.

பொதுவாக, இப்படத்தை பொருத்தவரை, யார் ஒருவரை மெச்சினாலும் அதிகமாகவே மெச்சல் வேண்டும், அல்லது பாரபட்சமின்றி எல்லோரையுமே பாராட்டவேண்டும். சண்டை காட்சி, ஒளிப்பதிவு, ஒப்பனை, கட்டிடக் கலை, காட்சிப் பதிவிற்குத் தக்க இடத் தேர்வு என அனைத்துமே சிறப்பு.

அதிலும், குறிப்பாக விருது தரும் மையம் இவ்வருடம் இப்படத்தைப் பார்த்துவிட்டு யாருக்கு விருதைத் தருவது என்று குழம்பிப் போனாலும் போகலாம். இல்லை ஒருவேளை அத்தனையையும் சேர்த்து விஷாலுக்கே கொடுத்தாலும் கொடுக்கலாம். ஒருவேளை விஷாலுக்கும் இயக்குனருக்கும் இவ்வருட விருது மறுக்கப் படுமெனில் அதை அத்தனை பெரிய விருதாக அல்லது அத்தனைப் பெரிய விடயமாக நாம் கருத வேண்டியதேயில்லை. காரணம், உழைப்பிற்கு கிடைத்திடாத மதிப்பு; மதிப்பேயில்லை!!
———————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஒரு தோசையும்; தொட்டுக்க நாலு மாத்திரையும்.. (சிறுகதை)

குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள்.

“ஐயோ… தாத்தா!!!!!!!!!!!!!!!!”

”அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு”

“என்னடி சொல்ற???!!!!”

“உண்மையா தாம்மா, வந்து பாரேன்…”

“ஐயோ ஆமா…, என்னங்க அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டாருங்க”

“ஏம்மா இப்படி அலர்ற, ஐயோ அப்பாவுக்கு என்னாச்சு?!!”

“தெரிலிங்க, திடீர்னு மயங்கி விழுந்துட்டாருங்க..”

“குட்டி நீ போ.. போய்; வெளியே சித்தப்பா பேசின்ருக்கான் அவனை கூட்டியா, ராஜா எங்கமா..”

“சித்தப்பா தெரிலையேப்பா” அந்த குழந்தை சொல்லிவிட்டு வெளியே ஓடிபோய் மூன்றாவது கடைசி தம்பியான சுகுமாரிடம் சொல்ல, அவன் அப்பா மயக்கம் என்றதும் வீட்டிற்குள் ஓடி வந்ததான், வந்து அப்பாவை தூக்கி மடிமேல் கிடத்தி கன்னம் தட்டி –

“என்னண்ணே ஆச்சு, அப்பையே சொன்னேன்; அப்பா சொல்றதை கேட்டா தானே”

“ஏய் நீ சும்மா பதறாத, ராஜா எங்க, போய் கூட்டியா”

“சின்னன்னே அப்பவே மேலே போய் படுத்துடுச்சிண்ணே”

“சரி நீ ஒன்னு செய், நீ போய் ஆனந்த் மருத்துவமணைல டாக்டர் போய்ட போறாங்க, கொஞ்சம் சொல்லிவை, அப்பாவ நாங்க பின்னாலேயே கூட்டியாறோம்”

“போன் செய்து சொன்னா…”

“சொல்றதை  செய்டா, அதலாம் மரியாதையா இருக்காது, நமக்கு மட்டுமா அவர் மருத்துவமணை நடத்துறாரு, நேரில் போய் சொன்னா கொஞ்சம் மதிப்பாங்கள்ல”

“சரிண்ணே”

“அதில்லாம அப்பா புது நோயாளி இல்லை சுகு, இப்போ இந்த நேரத்திற்கு ஆவடி போயி தாமதப் படுத்துவதும் அத்தனை சரியில்லை, இங்க கூட்டிப் போகனும்னா அவர் பெரிய டாக்டர் இருந்தா நல்லது, அதான் நீ கொஞ்சம்  நேர்ல போய் பார்த்துச் சொல்”

அவன் அதற்கும் தலையாட்டிவிட்டு ஓடிபோய் வெளியிலிருந்த பைக்கில் பறந்தான்.

“ஏம்மா ரம்யா நீ மேல போய் ராஜாவ எழுப்பி கூட்டியா, அங்கேயே ஏதும் சொல்லாதே தூக்க கலக்கத்துல அதிர்சியாவப் போறான்”

“சரி மாமா” என்று சொல்லிவிட்டு சுகுமாரின் மனைவி வேகமாக ராஜாவை கூப்பிட படியேறி மேலே ஓடினாள். சுதர்மன் உள்ளே எட்டி மணி பார்த்தார் மணி ஒன்பது.

“பிரேமா நீ கார் ஓட்டுவ-ல்ல”

“ஒட்டுவேங்க”

“போய் சாவி எடுத்து வா வண்டிய வெளியே எடு..”

அதற்குள் ராஜா இறங்கி ஓடி வந்தான்.

“அண்ணே அண்ணே என்னண்ணே ஆச்சு அப்பாவுக்கு, அப்பா அப்பா” ராஜா அப்பாவை தூக்கி மடியில் கிடத்திக் கொண்டு கதறினான்.

“டேய்.. டேய்.. புடி அப்படியே அவரை தூக்கு, ஒன்னுல்ல இந்த லூசு பாயசம் கேட்டாருன்னு கொடுத்துச்சாம்”

“நான், ஒன்னும் இல்லீங்க, அப்பா தான் கொஞ்சம் கொடுமான்னு”

“போடி.. போய் வண்டி எடு, ஏம்மா வீட்ட சாத்திக்கோ, குழந்தைங்க வெளியே போய்டாம”

“நானும் வறேன் மாமா, “

“குழந்தைங்களை எங்க, கார் டிக்கியில போட்டுடலாமா?”

“சரி இருக்கேன் மாமா”

“சின்ன பாப்பா அழுதுச்சு ன்னா கொஞ்சம் பால் காய்ச்சி கொடு ரம்யா” பிரேமா கத்திக் கொண்டே ஓடி பொய் வண்டி எடுத்தாள். சுகுமார் பைக் எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினான்.

மூத்தவன் சுதர்மனும் அடுத்தவன் ராஜாவும் அப்பாவை தூக்கி வண்டியில் வைத்துவிட்டு ஏறி அமர, ராஜாவின் மனைவி பார்வதி அவசரமாக ஓடிவந்து அப்பாவின் முந்தைய மருத்துவ விவரங்களை பிரேமாவிடம் கொடுக்க, பிரேமா அவசரமாக அதை வாங்கி சுதர்மனிடம் கொடுத்துவிட்டு வண்டியை திருப்பி நிறுத்த –

சுதர்மன் வெளியே எட்டிப் பார்த்து, ”ஏம்மா வீட்டுக்கு போன் செய்து உங்க அப்பா இருந்தால் அவர்கிட்ட சொல்லி ஆனந்த் மருத்துவமனைக்கு போன் செய்து ஒரு வார்த்தை சொல்ல சொல்லுமா.

“சொல்லிடறே(ன்) மாமா, அப்பா கண்ணையே திறக்கலையே… மாமா”

“அதலாம் நம்மப்பாவுக்கு ஒன்னும் ஆகாதும்மா”

“ஆகாது மாமா…, ஆனா”

“சீக்கிரம் வண்டிய எடு பிரேமா”

குறுக்கு வழியே புகுந்து ஆனந்த் மருத்துவமனை வந்தார்கள், அப்பா வாயை ஆ’ வென்று பிளந்துக் கொண்டு கண்மூடி படுத்தவாறு லேசாக கடினப் பட்டு இழுத்து இழுத்து மூச்சை விட்டுக்கொண்டிருந்தார். அவரின் அவஸ்தை நிறைந்த முகம் பார்க்க பார்க்க சுதர்மனுக்கும் ராஜாவுக்கும் கண்கள் தன்னையறியாமல் கலங்கியது.

 சற்று நேரத்திற்குள் மருத்துவமனை வந்து விட, வண்டி நின்று இறங்குவதற்குள், சுகுமார் ஓடி வந்தான். சுதர்மனும் ராஜாவும் அப்பாவை தூக்கப் போக “நீ விடுண்ணே, நீ போய் மருத்துவரை பாரு” என்று சொல்லிவிட்டு அவன் தூக்கிக் கொண்டான். சுதர்மன் உள்ளே போவதற்குள் மருத்துவரே எழுந்து வெளியே வந்தார்.

 “டாக்டர் அப்பா திடீர்னு..”

 “சுதர்மன் நீங்க தானே?”

“ஆமா டாக்டர்”

 “இதுக்கு முன்னாடி இப்படி வந்திருக்கா?”

 “இருக்குங்க”

 “இதற்கு முன் எங்க பார்த்தீங்க”

“ஆவடில குடும்ப மருத்துவர் ஒருத்தர் இருக்காரு அவர்தான்..”

 “ஓ… பரவாயில்லை பரவாயில்லை”

 மருத்துவர் அப்பாவின் கண்களை திறந்து பார்த்தார். மார்பில் ஸ்டெதாஸ்கோப் வைத்துப் சோதித்துவிட்டு “ராஜகுரு போன் பண்ணாரு, ஒன்னும் ஆவாது பதட்டப் படாதீங்க, சிஸ்டர் வார்ட் நர்ஸ் கூப்பிடுங்க, நேரா மேல கொண்டுப் போகச் சொல்லுங்க “

 ரு பத்து நிமிடம் கழித்து. அப்பாவை கொண்டு போய் மேலே படுக்க வைத்து சுகர் பிரெசர் எல்லாம் பரிசோதித்து விட்டு, ஒரு ஊசி போட, சற்று நேரத்திற்கெல்லாம் அப்பா முனு முணுத்துக் கொண்டே கண்ணைத் திறந்தார்.

பிள்ளைகள் மாறி மாறி அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

 “என்னாச்சு டாக்டர் அப்பாவுக்கு, பயப்பட ஒண்ணுமில்லையே?”

 “சுகர் பேசென்ட் தானே?”

 “ஆமா டாக்டர்”

 “மயக்கம் வந்தா மிட்டாய் ஏதேனும் கொடுத்திருக்கலாமே”

 “பாயாசம் சாப்பிட்டு தான் டாக்டர் மயக்கமே வந்திருக்கு”

 “நல்லா விசாரிச்சி பாருங்க முழுசா அவர் அதை குடித்திருக்க மாட்டார், ஏன்னா அவர் லோ பிரெசரால தான் மயங்கி இருக்கார், அதில்லாம சைலன்ட் அட்டாக் வேற வந்திருக்கு”

“சைலன்ட்……..???????????”

“ம்ம், எப்படின்னு சொல்றேன், இருந்தாலும் அடுத்தமுறை இப்படி வந்தா ரொம்ப கவனமா இருக்கணும்”

“கண்டிப்பா டாக்டர்”

“முதல்ல நீங்க ஆளுக்காளு பதட்டப்பட உணர்ச்சிவயப் பட்டதுல அவருக்கு பிரெசர் இன்னும் ஏறிட்டிருக்கு. அதிக பிரெசரால இதய அழுத்தம் வந்திருக்கு. பொதுவா டையாபட்டீஸ் உள்ள நோயாளிக்கு பிரேசர் கூடினா அது விரைவா கிட்னியை பாதிக்கும், இதயத்தையும் பாதிக்கும்”

 “இல்லை டாக்டர், அப்பாக்கு முன்பு ஐ சுகர் தான் இருந்தது”

 “நீங்க சொல்றது சரி தான் சுதர்மன், ஆனா டயபட்டீஸ் நோயாளிக்கு சில நேரம் இப்படி சரியான ஆகாரம் இல்லாமல், மாத்திரை மட்டும் போட்டு, கூடவே தன் சக்திக்கு மீறின வேறு ஏதேனும் வேலைகளில் ஈடுபட்டார்களென்றால், அதி வேகமான எனர்ஜி லாசால சிலநேரம் சுகர் குறையவும் வாய்ப்புமுண்டு. அதனால தான் டயபட்டீஸ் உள்ளவங்க எப்போ மயங்கினாலும் ஒரு மிட்டாயோ அல்லது கொஞ்சம் சர்க்கரைத் தண்ணியோ கொடுக்கனும்னு நாங்க ரெகெமன்(ட்) பண்றோம்.

 அப்படி கொடுப்பதால, ஒருவேளை அவுங்களுக்கு ஐ சுகர் இருந்தாலும் இனிப்பு சாப்பிடுவதால சுகர் கொஞ்சம் கூடும் அதனால் உடம்புக்கு கெடுதல் நேரும்; ஆனா உயிருக்கு ஆபத்து இருக்காது. ஆனா லோ சுகர் இருந்து காலம் கடத்தினீங்கனா அது அவருடைய உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். உண்மையில் அப்பா இன்று பிழைத்தது தெய்வாதீனம் தான்”

“அச்சச்சோ!!!” பிரேமா வாயில் கைவைத்துக் கொண்டாள்.

“அதே மாதிரி பெரியவங்க ன்னாலே கூடுதல் கவனமும் வேணும். இதுபோல சந்தர்ப்பங்கள்ல அவர்களை அதிகம் உணர்ச்சிவசப் படுத்தவோ, தூக்கி இறக்கும் போது அதிகம் அழுத்தவோ வேகாமா தூக்கவோ இறக்கவோ கூடாது. அதுலையும் அப்பாவோட, பழைய விவரங்கள்லாம் பார்த்தபிறகு தான் அவருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதும், இதய நோயாளி என்றும் தெரிய வந்தது.

இது மிக ஆபத்தான ஒரு கட்டம். டயாபட்டீஸ் ஒண்ணு இருந்தாலே பத்து நோய் இருப்பதற்கு சமம். அதனால், கண்ணு கிட்னி இதயம் மூளை நரம்புகள் தோள் என எல்லாமே ‘கால்நகத்திலிருந்து தலைமுடிவரை ஒவ்வொன்னா பாதிக்கும், அதில்லாம, டயபட்டீஸ் உள்ளவங்களுக்கு கொலஸ்ட்ராலும் சேர்ந்திருந்தா அது இன்னும் ஆபத்து”

“என்னாகும் டாக்டர்?”

“மூளையைத் தாக்கி, நரம்புகளை தாக்கி, கை கால்களை செயலிழக்கச் செய்து தற்காலிக அடைப்பு அல்லது நிரந்தர அடைப்பினை உண்டாக்கி உடலின் பெரும்பகுதியை செயலிழக்கச் செய்து வாழ்க்கையையே முடக்கி விடுகிறது இந்த சர்க்கரை வியாதி. அதில்லாம, எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பும் சர்க்கரையும் கூடுதல் உள்ளவர்களுக்கு எந்த நேரம் வேணும்னாலும் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கு. சிலநேரம் இவர்களுக்கு அட்டாக் வந்தா, அது அவுங்களுக்கே சரியா விளங்குவது கூட இல்லை, சிரிச்சுக்குனே இருப்பாங்க, நல்லாதான் பேசுவாங்க ஆனா திடீர்னு ரத்த குழாய்கள் இரண்டு மூன்று இடங்களில் அல்லது சிலவேளை பல இடங்களில் கூட அடைப்பேற்பட்டு இதயமே நின்றுவிடும்.  இதை சைலன்ட் அட்டாக்னு சொல்லுவோம்”

“ரொம்ப நல்லதா போச்சி மருத்துவரய்யா அது ரொம்ப நல்ல சாவுல்ல, சிரிச்சிக்குனே போய்டலாம்” அப்பா அசைந்து கண்திறந்து படுக்கை பிடித்தபடி பேசிக் கொண்டே எழுந்தார்.

“அப்பா!!!” என்று பதறிக் கொண்டு மூன்று மகன்களும் பெரிய மருமகளும் ஓடிப் போய் அவருக்கருகில் அமர, மருத்துவர் அவரை எழுந்திருக்க மறுத்துவிட்டு, அவரை படுக்க வைத்து ஸ்டெதாஸ்கோப் வைத்து மார்பில் முதுகில் எல்லாம் சோதித்துப் பார்த்தார். பார்த்துவிட்டு அப்பாவை நோக்கி –

“ஏன் துரை ஐயா வயசான காலத்துல இப்படி கஷ்டப் படுத்துறீங்க பிள்ளைகள?”

“அய்யய்யோ எங்களுக்கு அப்படியெல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல டாக்டர்”

“நீங்க சும்மா இருங்க சுதர்மன், ம்… நீங்க சொல்லுங்க, வாக்கிங் ஏதும் போறதில்லையா? காலாற ரெண்டு வேலையும் கொஞ்சம் நடக்கறது தானே வீட்டுக்கும் தெருவுக்கும். பொதுவா இதுபோன்ற நோயாளிகளுக்கு நடக்கறதுதான் முதல் மருந்து, அதுக்கப்புறம் தான் மாத்திரையெல்லாம்”

“இனிமே நடந்து என்னங்க செய்ய, சீக்கிரம் போய் சேர்ந்தா பிள்ளைங்களாச்சும் நிம்மதியா இருக்குங்க”

“அப்பா!!!!!”

“நீங்க அதலாம் சொல்லாதிங்க துரைசாமி. அவுங்க எவ்வளோ பாசமா இருக்காங்க நீங்க கொஞ்சம் கவனமா இருக்க வேணாம்?”

“என்ன டாக்டர், நானும் இன்னும் எவ்வளவு வருசத்துக்கு தான் இப்படி உப்பில்லாம இனிப்பில்லாம புளிப்பில்லாம சாப்பிட்டு உயிர் வாழறது. இன்னைக்கு கூட பெரியவ கொஞ்சம் பாயசம் ஆசையா கேட்டேனேன்னு கொடுத்தா, அதையும் பசங்க பார்த்தா வருத்தப் படுவாங்களேன்னு ஒரு மினர் குடிச்சிட்டு வெச்சிட்டேன். நாக்கு செத்து போச்சி டாக்டர், எது சாப்பிடவும் பிடிக்கலை” அப்பாவை அப்படிச் சொல்ல சுதர்மனுக்கு கண்ணே கலங்கியது. எல்லோருமே வருந்தினார்கள். மருத்துவர் அசரவில்லை –

“மருந்து சாப்பிட மட்டும் இனிக்குதாக்கும், அதலாம் இப்போ சொல்லி பிரயோஜனமில்லை. வயசுல ஒழுங்க இருக்கணும், உணவுன்னா எப்பவுமே ஒரு அளவிருக்கணும், கட்டுப்பாடு வேணும். கிடைக்குதேன்னு எதை வேண்டுமானாலும் வைத்துல போடக் கூடாது. எண்ணெய் பலகாரங்கள் உண்பதில் இன்னுமதிக கவனம் வேண்டும். தவிர குடி புகைன்னெல்லாம் பழக்கமிருந்தா கடைசியில் இதுதான் கதி.

ஆனா, எல்லாத்தையும்விட இன்னைக்கு நடந்தது தாங்க அதிசயம்” சொல்லிவிட்டு மருத்துவர் மூன்று மகன்களையும் திரும்ப திரும்ப பார்த்தார்.

பார்த்துவிட்டு “அதுவரையும் அந்த ஒரு மினர் பாயாசத்தை கொடுத்து எப்படியோ இவர் உயிரை காப்பாத்துனீங்க, இல்லைன்னா இவ்வளவு நேரமெல்லாம் கஷ்டம்” மருத்துவர் பேசி நிறுத்த சுதர்மன் திரும்பி பிரேமாவை நன்றியுடன் பார்த்தார்.

“நீங்க ஒண்ணு பண்ணுங்க வாரத்துக்கு ஒரு முறை இந்த சுகர் பார்க்குற மெசின் வாங்கி வைத்து வீட்லையாவது சுகர் செக் பண்ணி பாருங்க. இயன்றளவு டயாபட்டீச முதல்ல குறைங்க. இப்பல்லாம் முப்பது வயது துவங்கிவிட்டாலே சர்க்கரை ப்ரெஷர் கொலஸ்ட்ரால் என எல்லாத்தையும் ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது எல்லோருக்குமே நல்லது”

“நல்லது டாக்டர்.. அப்படியே செய்றோம். என்று சொல்ல மருத்துவர் வேறு சில மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தார்.

வாங்கிக் கொண்டு, எல்லோரும் ஏறி வண்டியில் அமர, சுகுமார் ஸ்கூட்டரில் அவர்களுக்கு முன்பாகப் பறந்தான். அப்பா சுதர்மனின் மடியில் சாய்ந்தவாறு படுத்துக் கொள்ள, பிரேமா வண்டி எடுத்தாள் கொஞ்ச தூரம் போனதும் நிறுத்தி –

“என்னங்க வண்டிய நீங்க ஓட்டுங்க, நான் பார்வதிக்கும் ரம்யாக்கும் பேசி விவரம் சொல்லிட்றேன்'”

“நீங்க இருங்கண்ணே நான் ஓட்றேன், இல்லைன்னா அண்ணி போன் கொடுங்க நான் அவுங்களுக்கு சொல்லிட்றேன், நீங்க ஓட்டுங்க”

“ஏண்டா உன் போனெங்கே”

“அவசரத்துல வந்துட்டன்ண்ணே, மேல் வீட்ல இருக்கும்”

“சரி இந்தா இதுல பண்ணு”

அவன் அலைபேசியை வாங்கி வீட்டில் பார்வதிக்கும் ரம்யாவிற்கும் விவரம் சொல்லிவிட்டு சுதர்மனிடம் தர, அப்பா அயர்ந்து படுத்திருந்தார், எல்லோரும் தனக்குத் தானே ஏதேதோ யோசித்தவாறு அமைதியாக இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் அப்பா லேசாக வாயைத் திறந்து பேசத் துவங்கினார்

“டாக்டர் சொன்னதும் தவறில்லை சுதர்மா”

“ஏன்பா???!!!”

“நான் ஆரம்பத்துல எல்லாம் ஒழுங்காவே இல்லை தானே. குடிப்பேன், பாக்கு போடுவேன், நேரத்துக்கு சாப்பிட மாட்டேன், புகை பிடிப்பேன், சரியா தூங்க மாட்டேன்”

“நாங்க அப்படி பார்த்ததே இல்லையேப்பா”

“ஒரு கட்டத்துல தவறுன்னு தெரிய மாத்திக்கிட்டேன்பா. இன்னும் சொல்லப் போனா, உங்கம்மா வந்தபிறகு தான் என் வாழ்க்கையின் நிறைய விஷயங்கள் மாறுச்சி., மகராசி அவளும் போய்ட்டா. நீங்க எல்லாம் வயசுல ஒழுக்கமா இருக்கீங்கப்பா, உங்களுக்கெல்லாம் பிற்காலத்துல ஒரு நோய் நொடியும் இருக்காது”

“உங்களுக்கென்னப்பா குறை நாங்கலாம் இருக்கோமே”

“நீங்கல்லாம் இருந்தாலும் எனக்கு உப்பில்லா சோறு தானே ராஜா?”

“இல்லைப்பா டாக்டர் கோதுமைல வேணும்னா எண்ணெய் ஊத்தாம தோசை எல்லாம் சுட்டு தரலாம்னு சொன்னாருப்பா” பிரேமா சொல்ல சிரித்துக் கொண்டார் துரை சாமி. “என்ன, ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்’ கொடுக்க சொன்னாரா?”

அவர் சொல்லிவிட்டு சிரிக்க, யாருக்கும் சிரிக்கத் தோணவில்லை. அப்பாவை நினைத்து மனதால் வருந்தின அந்த பிள்ளைகள். தன்னால் முடிந்தால் கூட நோயை தான் ஏற்றுக் கொண்டு அப்பாவை நோகாமல் பார்த்துக் கொண்டிருக்கும். முடியாத மனங்கள் கண்ணீரால் நனைந்தன. வாகனம் விரைந்து வீட்டை நோக்கிப் போனது. ராஜா அப்பாவின் ஒரு கையை பாசமாக எடுத்து தன் மடியில் வைத்து அழுந்தப் பிடித்துக் கொண்டான்.

அப்பா அவனையே பார்த்துக் கொண்டு வந்தார். இருட்டை கிழித்துக் கொண்டு தெருவில் அடித்த வண்டியின் வெளிச்சத்தை கடந்து கடந்து வாகனம் வீடு நோக்கிப் போக, இரவு நேரத்தின் நிலா மேலிருந்து ‘தாய் தந்தையை கவனித்திடாத பிள்ளைகளுக்கு உதாரணமாய் இவர்களை காட்ட தன் வெளிச்சத்தில் குறித்துக் கொண்டது.

என்றாலும், உடம்பு சரி எனும் வரை தான் மனிதனால் எல்லாம் சாதனையயையுமே செய்ய இயலுகிறது. உடம்பு தோற்கின் மனதும் தோற்கிறது. இதை நாம் நன்றாக இருக்கும் போதே புரிந்துக் கொள்ள வேண்டும்.

புகைப் பழக்கம், குடி, வேறு எந்த போதையாயினும் சரி, உழைப்பின்றி உண்ணும் உணவாயினும் சரி பின்னாளில் வருத்தத்தையே தரும் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அளவோடும் நேரத்தொடும் போதுமான உணவுகளை உண்டு, நேரத்திற்கு தூங்கவும் இயலாதோருக்கு ஒரு தோசையோ ரொட்டியோ உடன் நாலைந்து மாத்திரையோ நிச்சயம் உண்டென்று எண்ணிக் கொண்டே கண்களை மூடினார் துரைசாமி.

திடீரென மார்பு மீண்டும் அடைத்தது அவருக்கு. மாத்திரை வாங்கி போடவோ வெளியில் சொல்லவோ முயற்சிக்கிறார் இயலவில்லை. மேலும் தீவிரமாய் நெஞ்சை இழுத்துப் பிடிக்கிறது. ஓரிரு நொடியில் முகம் புடைத்து வியர்க்கிறது. முகத்தை துடைத்துக் கொண்டு கவிழ்ந்தார் போல் படுத்துக் கொண்டார். கைகால்களை எட்டியுதைத்து படபடவென அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது; இப்படிப் பட்ட செல்வங்களை மேலும் மேலும் தொந்தரவு செய்வானேன், என்றாயினும் போகும் உயிர்தானே போகட்டுமென்று எண்ணிக் கொள்கிறார்.

மார்பு அடைக்க அடைக்க கைகால்கள் விரைக்கினறன. கால்களை இறுக்கி இடுக்கிக் கொள்கிறார். உள்ளூர நாக்கை கடித்துக் கொள்கிறார். எல்லாம் அவஸ்தையையும் தன் பிள்ளைகளுக்கு தெரியவேண்டாமேயென்று தனக்குள்ளேயே தாங்கிக் கொள்கிறது அந்த ஜீவன். அவர்கள் அப்பா முடியமால் கண்ணயர்ந்துப் படுத்திருப்பதாய் மட்டுமே அறிகிறார்கள்.

அவரின் உதடுமட்டும்  சுதர்மனை எண்ணி முணுமுணுத்தன. கையினால் ராஜாவை அழுத்தமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார். பேரப் பிள்ளைகள் பார்வதி ரம்யா எல்லோரையும் நினைத்துக் கொண்டார். மேலும் தீவிரமாக அடைக்க உடல் முழுக்கப் பரவிய மரணவலியால் துடிதுடிக்கத் தோன்றியது. அடக்கிக் கொண்டு லேசாக கண்திறந்து பிரேமாவை பார்த்துக் கொண்டார்.

சுகுமாருக்கு ஒரு குழந்தை பிறந்து பார்க்கவே இல்லையே என்று எண்ணுகையில் கண்ணீரின் ஒரு துளி கன்னத்தில் வழிந்தது. மனைவியையும் பெற்றோரையும் நன்றியோடு நினைத்துக் கொண்டார். கண்மூடிக் கொண்டே இன்னொரு கையினால் எட்டி சுதர்மனைப் பிடித்துக் கொள்ள; சுதர்மன் அவரை சற்று தூக்கி சரியாக படுக்கவைக்க ‘உயிர் சடாரெனப் பிரிந்து அவருக்குத் தெரியாமல் நின்றுவிட்ட அவரின் இதயத்தின் மீதேறி வெளியேப் போனது.

அது தெரியாமல் எல்லோரும் அப்பாவை நினைத்துக் கொண்டே வீடு போயினர். வீடு அழுகையில் நிறையும் முன் குழந்தைகளின் புன்னகையில் சற்று சிரித்துக் கொண்டது!!

——————–* முற்றும் * ——————–

_வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்