அடுப்பு எரிகிறது..
நான் வெளியே கூவிச் சென்ற
கீரைகாரரிடம் கீரை வாங்க வாசல் நோக்கி போகிறேன்
நீ அடுப்பினை பார்க்கிறாய்..
அடுப்பில் நெருப்பு சிவப்பாக கனன்று எரிகிறது
உனக்கு நெருப்பு அதிபுதிது
முதன் முதலாக இன்றுதான் அடுப்பின் சிவந்த –
நெருப்புத் துண்டுகளை பார்க்கிறாய்,
நெருப்பு சிவக்க சிவக்க – நெருப்பின் மேல்
உனக்கு ஆசை வருகிறது
நெருப்புத் துண்டங்களை ஒரு தின்பண்டம் போல்
பார்க்கிறாய் நீ..
திரும்பி வெளியே இருந்து வரும் என்னையும்
பார்க்கிறாய்
நான் கீரைவாங்கி உள்ளே வருவதற்குள்
நீ என்ன நினைத்தாயோ ஓடி –
நெருப்பை அள்ளி வாயில் போட்டுக் கொள்ள எண்ணி
விரைகிறாய்
நான் பதறி உன் அருகில் வருவதை கண்டு நீ
எங்கு நான் அந்து உனை தடுத்துவிடுவேனோ என்று
துருதுருவென ஓடி – ஒரு கை நெருப்பள்ளி…………………..
கை கருகிய வலியில் வாரி மேலெல்லாம்
இறைத்துக் கொள்கிறாய் –
நான் நெருப்பை சபிப்பேனா???
அடுப்பை சபிப்பேனா????
என் உயிர்; வலியில் கண்ணீராய் சொட்டி
பூமியையெல்லாம் நனைக்கிறது
நீ வாரியிரைத்த நெருப்பின் துண்டுகளை
மிதித்து கொண்டு உனைத் தூக்கிப் பார்க்கிறேன்
நெருப்பிற்கு நீ குழந்தையென்று தெரியவேயில்லை!!!!
——————————————————————————————–
வித்யாசாகர்
























