உனக்கு விரல் வத்தல்
பிடிக்குமென்று
நிறைய வாங்கிவந்தேன்
போதுமானதை தின்று விட்டு
மீதியை
வீடெல்லாம் கொட்டி இரைத்தாய்
அளவுக்கு அதிகமானால்
எல்லாமே இப்படித் தான்
என்றதில்;
எனக்கும் நீ
ஞானமானாய்!!
———————————–
உனக்கு விரல் வத்தல்
பிடிக்குமென்று
நிறைய வாங்கிவந்தேன்
போதுமானதை தின்று விட்டு
மீதியை
வீடெல்லாம் கொட்டி இரைத்தாய்
அளவுக்கு அதிகமானால்
எல்லாமே இப்படித் தான்
என்றதில்;
எனக்கும் நீ
ஞானமானாய்!!
———————————–
உனக்கு முகம் கழுவி
வாசனை மாவு பூசி
சாமி கும்பிட்டு
திருநீரிட்டு
நிலை கண்ணாடியில் தூக்கியுனை காட்டுகிறேன்
என் அம்மா உன் பாட்டி
எனை ‘அறிவில்லாதவன் குழந்தையை
கண்ணாடியில் காட்டுகிறான் பாரென்று’ திட்டுகிறாள்
நீ கண்ணாடியில் உனை
பார்த்து
உன் நேர்வகிடு முடியழகு பார்த்து
என்னையும் பார்த்து
இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதாய்
நினைத்தாயோ என்னவோ
அப்படி ஒரு சிரிப்பு சிரித்தாய்,
மீண்டும் மீண்டும் நிலைக்கண்ணாடியில்
உனையே பார்த்தாய்;
நான் உன்னை
இன்னும் கொஞ்ச நேரம் கூட
கண்ணாடியில் காட்டினேன்,
நான் அறிவற்றவனாக இருப்பதில்
வருத்தமில்லை,
உன் அழகை உனக்குள் பதித்து
உனை கம்பீரமடைய செய்வதில்
மிக கவனமாக இருந்தேன்!
———————————————-
உன் கால்சட்டை ஈரமானதில்
மண் பூசி வந்து நின்றாய்.
ஐயோயெனப் பதறி
மேல்சட்டையும் மாற்றிவிட்டேன்;
மீண்டும் நீ சென்று
நீரில் மூழ்கி
ஈரமாக வந்து நின்றாய்.
ஈரமாயிற்றே குளிருமோ என்று
அதையும் மாற்றி விட்டேன்
சோறெடுத்து சட்டையிலெல்லாம்
பூசிக் கொண்டாய் –
அதையும் மாற்றி விட்டேன்
அடுத்து மீண்டும் கால் சட்டை
ஈரமானது
அதையும் மாற்றி விட்டேன்
மீண்டும் ஓடி போய்
தண்ணீரில் குதிக்கிறாய் நீ
உன் அப்பா வரும் நேரம் வேறென்று
நினைப்பதற்குள்
வந்து நின்றார் உன் அப்பா;
‘என்ன இது
குழந்தையை இப்படியா
வைத்திருப்பாய் சலி பிடிக்காது,
நாளெல்லாம் என்ன தான் பண்றியோன்னு
அப்படி ஒரு கத்தல்
நீ மெல்ல உள் சென்று
அலமாரியிலிருந்து வேறொரு நல்ல சட்டியை
கொண்டு வந்து என்னிடம் நீட்டுகிறாய்
நான் உன்னையே பார்க்கிறேன்
முறைக்கவில்லை!
————————————————
எனக்காக நீ
காத்திருப்பாயோ இல்லையோ
தெரியவில்லை
உனக்காக நான் நிறைய
காத்திருக்கிறேன்
உன்னோடு மட்டுமே
இருக்கிறேன்
அதை
உன்னைவிட்டு விலகி நின்றெழுதிய
இக்கவிதை சொல்லும்!
————————————–
எப்படியோ..
போகும்போது ஓடிவந்து
டாட்டா காட்டவும்;
வந்தவுடன்
ஓடிவந்து ‘அப்பா’
என்றழைப்பதிலும்
என் உயிரை
எனக்கே மீட்டுத் தருகிறாயென
என்றேனும் நீ வளர்ந்து
இக்கவிதையை படிக்கும் தருவாயில்
ஒருவேளை புரியலாம்!!
————————————-